தமிழ்நாடு (Tamil Nadu)

வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் தி.மு.க. அரசு படுதோல்வி- ராமதாஸ் குற்றச்சாட்டு

Published On 2024-10-17 07:13 GMT   |   Update On 2024-10-17 07:13 GMT
  • சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை.
  • கள்ளச்சாராய விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக கூறுவது அரசின் தோல்வியை காட்டுகிறது.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசு முதன்மை வாக்குறுதியாக அளித்த ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்காததால் ஆசிரியர்களுக்கு செம்பம்பர் மாதம் 10 நாட்களுக்கு பின் சம்பளம் வழங்கியது. கல்வி, சுகாதாரத்தை செயல்படுத்த நிதி ஒரு தடையில்லை. மொத்த உற்பத்தியில் கல்வி, சுகாதாரத்திற்கு 3 மடங்கு நிதி ஒதுக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது. 2030 ஆண்டு பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு 4,15 லட்சம் கோடியாகவும், சுகாதாரத்துறைக்கு 1.61 லட்சம் கோடியாகவும் இருக்கும். தற்போது 1.56 லட்சம் கோடியாகவும், சுகாதாரத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது கல்வித்துறைக்கு ரூ.44 ஆயிரம் கோடியாகவும், சுகாதாரத்துறைக்கு ரூ.20,198 கோடியாகவும் உள்ளது. பள்ளிகல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை சீரழிய போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததே காரணம். எனவே ஆசிரியர்களை நியமிக்கவில்லை. முதன்மை மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 1 லட்சம் கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ. 50 ஆயிரம் கோடியாக வரும் ஆண்டில் உயர்த்தவேண்டும்.

சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்து விட்டது. வெள்ளதடுப்பு பணிகளை முடிக்காததால் மழையினால் மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும்.

விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் 195 டாஸ்மாக் கடைகள் உள்ளது. விழுப்புரத்தில் 109, கள்ளகுறிச்சியில் 86 கடைகள் உள்ளது. தற்போது கொந்தமூர், நல்லாவூர், வெள்ளிமலை ஆகிய இடங்களில் 3 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது கண்டிக்கதக்கது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறும் அரசு புதிய கடைகளை திறக்கப்பட உள்ளதை ஏற்க முடியாது. இது அரசின் தோல்வியை காட்டுகிறது. வெள்ளிமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக கூறுவது அரசின் தோல்வியை காட்டுகிறது. அப்படியும் இக்கடைகள் திறந்தால் நானே அக்கடைகளுக்கு பூட்டு போடுவேன்.

முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்தி 152 அடியாக உயர்த்தலாம் என்று 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் இன்னமும் உயர்த்தப்படாமல் இருக்க கேரள அரசு ஒத்துழைக்காததுதான் காரணமாகும்.

மத்திய அரசு பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசும் 3 விழுக்காடு அகவிலைப்படி வழங்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News