சுதந்திர தினத்தை முன்னிட்டு சாக்பீஸ் துண்டுகளில் தேசிய கொடி வரைந்து மாணவர் சாதனை
- போடியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற மாணவர் பி.எஸ்.சி. சிற்பக் கலை படித்து வருகிறார்.
- பிரேம்குமாருக்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
நாட்டின் 76-வது சுதந்திரதின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் போடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரேம்குமார் என்பவர் சாக்பீசில் தேசிய கொடியை சுமந்த இளைஞரின் உருவத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற மாணவர் பி.எஸ்.சி. சிற்பக் கலை படித்து வருகிறார். இவர் சாக்பீசில் ஒரு செ.மீ அகலம், 3.5 செ.மீ உயரத்திலும், 2 மி.மீ உயரம், 9 மி.மீ அகலத்திலும் இளைஞர் ஒருவர் தன் கைகளில் தேசிய கொடியை தலைக்கு மேல் ஏந்தியபடி நடப்பது போன்ற உருவத்தை வடிவமைத்துள்ளார்.
இதனை சிற்பமாக செதுக்க 45 நிமிடங்கள் ஆனதாக அவர் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் இதனை பதிவிட்டுள்ளார். பிரேம்குமாருக்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து மாணவர் பிரேம்குமார் தெரிவிக்கையில், வருங்கால இந்தியா இளைஞர் கைகளில்தான் உள்ளது என்பதை விளக்கும் வகையில் இந்த சிற்பத்தை வடித்துள்ளேன். 77-வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் மக்கள் கொண்டாட தயாராகி வரும் நிலையில் நாட்டு மக்களுக்காக இதனை சமர்பித்துள்ளேன் என்றார்.