திருவள்ளூர் அருகே இன்று காலை லாரி தாறுமாறாக ஓடி மோதியதில் 100 ஆண்டு பழமையான கோவில் இடிந்தது
- கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலைேயாரம் இருந்த பழமையான ஸ்ரீகருமாரி அம்மன்கோவில் மீது மோதி நின்றது.
- 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் இடிந்ததால் பக்தர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள ஒதிக்காடு கிராமத்தில் திருவள்ளூர்- செங்குன்றம் சாலையோரம் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீகருமாரியம்மன் கோவில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர்- செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது கோவிலை அகற்றுவதற்கு கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கோவில் அகற்றப்படாமால் நெடுஞ்சாலை ஓரத்திலேயே இருந்து பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. கோவில் முன்பு புற்று ஒன்றும் உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வெங்காயம் லோடு ஏற்றிய லாரி ஒன்று திருவள்ளூர் வழியாக செங்குன்றம் நோக்கிச் சென்றது. ஒதிக்காடு பகுதியில் வந்தபோது எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருக்க டிரைவர் லாரியை திருப்பினார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலைேயாரம் இருந்த பழமையான ஸ்ரீகருமாரி அம்மன்கோவில் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் கோவிலின் முன்பகுதி முழுவதும் இடிந்து தரைமட்டமானது. கோவில் முன்பு இருந்த புற்றும் இடிந்தது. மேலும் லாரியின் முன்பக்க சக்கரம் உடைந்து தனியாக ஓடியது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் விஜயகுமார் உயிர் தப்பினார். விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் இடிந்ததால் பக்தர்கள் கவலை அடைந்து உள்ளனர். திருவள்ளூர்- செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது கூட கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் அப்படியே இருந்த நிலையில் லாரி மோதியதில் தற்போது சேதம் அடைந்து இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேதம் அடைந்த கோவிலை உடனடியாக சீரமைக்க கிராமமக்கள் முடிவு செய்து உள்ளனர்.