தமிழ்நாடு

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றது: சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு

Published On 2024-06-29 08:29 GMT   |   Update On 2024-06-29 08:29 GMT
  • அனைத்து துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்களும் நடைபெற்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
  • மகளிர் உரிமைத் தொகையை ஏற்கனவே 1 கோடியே 15 லட்சம் பேர் பெற்றுவரும் நிலையில், மேலும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அதனை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் வெளியானது.

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 நாட்கள் தொடர் அமளி மற்றும் தர்ணாவில் ஈடுபட்டதால் இந்த சட்டசபை கூட்டத் தொடர் பரபரப்புக்கு பஞ்சமில்லாமலேயே காணப்பட்டது. தொடர் அமளி காரணமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து கடந்த 26-ந்தேதி அன்று சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனால் 27-ந் தேதியில் இருந்து இன்று வரையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தொட ரில் பங்கேற்கவில்லை. கடைசி நாளான இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையை விதிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

வருவாய் துறை, தொழில் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்களும் நடைபெற்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மகளிர் உரிமைத் தொகையை ஏற்கனவே 1 கோடியே 15 லட்சம் பேர் பெற்றுவரும் நிலையில், மேலும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அதனை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் வெளியானது.

இப்படி பல்வேறு அறிவிப்புகள் மற்றும் பரபரப்புடன் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. 9 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் காலவரையறையின்றி சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News