தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2024-08-31 05:12 GMT   |   Update On 2024-08-31 05:12 GMT
  • சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
  • காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்:

கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாகவும் கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீரானது வினாடிக்கு 5,208 கன அடியில் இருந்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 576 கன அடியாக அதிகரித்து உபரி நீரானது வெளியேற்றப்பட்டதாலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்த நீரானது நேற்று தமிழக-கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வர தொடங்கியது.

இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,500 கன அடியாக இருந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீராலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இன்றும், நாளையும் பள்ளிகள், கல்லூரிகள் தொடர் விடுமுறை காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.

அவர்கள் பரிசலில் சென்று சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News