தமிழ்நாடு (Tamil Nadu)

பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Published On 2023-04-21 09:37 GMT   |   Update On 2023-04-21 09:37 GMT
  • பவானிசாகர் அணையில் இருந்து இன்று கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
  • இன்று முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி வரை தொடர்ந்து 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர்அணை. இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.30 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 326 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பவானிசாகர் அணையில் இருந்து இன்று கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்கால் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி வரை தொடர்ந்து 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன் மூலம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், மற்றும் பவானி வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News