தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் தண்ணீர் தேங்கும் 243 இடங்களில் டிராக்டர் நிறுத்தி வைப்பு

Published On 2024-10-18 06:33 GMT   |   Update On 2024-10-18 06:33 GMT
  • பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • சாலையோரம் தேங்கிய மழை நீரை அகற்றவும், லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

சென்னை:

சென்னையில் பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் ஈடுபட்டனர். இதனால் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

500-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய நீரை வெளியேற்றினார்கள். கடந்த 3 நாட்களாக பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீரை ராட்சத மோட்டார் பம்பு செட் மூலம் வெளியேற்றினார்கள். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது.

ஓரிரு இடங்களில் மட்டும் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் மழைநீர் வடிந்தாலும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் நீடிக்கிறது.

1819 இடங்களில் ராட்சத மோட்டார் பம்பு செட்டுகள், டிராக்டர்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற தாழ்வான பகுதிகளில் நிலையாக வைக்கப்பட்டுள்ளது. பருவமழை முடியும் டிசம்பர் மாதம் வரை இவை அந்தந்த இடங்களில் தொடர்ந்து செயல்படும்.

இதுகுறித்து துணை கமிஷனர் (பணிகள்) கூறியதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கிய மழைநீர் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. ஆனாலும் தொடர்ந்து மழைநீர் கால்வாய் மற்றும் கழிவு நீர் கால்வாயில் இருந்த அடைப்புகள் எடுக்கப்பட்டு தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது. 243 இடங்களில் டிராக்டர் மோட்டார் மூலம் தண்ணீர் அடைப்பு உள்ள பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

தாழ்வான பகுதியில் மீண்டும் மழைநீர் தேங்கக்கூடும் என்பதால் அங்கு டிராக்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2 மாதம் வரை இந்த பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள்.

பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் வெளியேறும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர சாலையோரம் தேங்கிய மழை நீரை அகற்றவும், லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பணி முழுவீச்சில் தற்போதும் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News