தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-07-08 06:08 GMT   |   Update On 2024-07-08 06:08 GMT
  • ஒன்றிய பிரதமர் மோடி, 7, 8 முறை தமிழ்நாட்டுக்கு பிரசாரத்திற்கு வந்தார்.
  • தி.மு.க. எந்த தேர்தலை சந்தித்தாலும் தமிழக மக்கள் வெற்றியை கொடுத்து வருகிறீர்கள்.

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி இன்று காலை தும்பூர் பகுதியில் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

நேற்று மாலையிலிருந்து விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் சுற்றி சுற்றி அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறேன். உதயசூரியன் வாக்கு பெட்டியில் எப்படி முதல் இடத்தில் இருக்கிறதோ, அதேபோல வாக்கு எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தலின்போது முதல்-அமைச்சர் 40 பாராளுமன்ற தொகுதிக்குச் சென்று வாக்கு கேட்டு பா.ஜ.க.வை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும், அடிமை அதிமுகவையும் ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும், இந்திய கூட்டணி ஜெயிக்க வேண்டும் என பிரசாரம் செய்தவர்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒன்றிய பிரதமர் மோடி, 7, 8 முறை தமிழ்நாட்டுக்கு பிரசாரத்திற்கு வந்தார். நீங்கள் ஆயிரம் முறை வந்தாலும் சரி தமிழ்நாட்டில் உங்களால் காலூன்ற முடியாது. தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு அந்த இடத்தை தர மாட்டார்கள். அன்னியூர் சிவாவை குறைந்தது ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

தி.மு.க. எந்த தேர்தலை சந்தித்தாலும் தமிழக மக்கள் வெற்றியை கொடுத்து வருகிறீர்கள். 3 ஆண்டு முன்பு தி.மு.க. ஆட்சி அமைந்தால் பெட்ரோல் விலை குறைப்பேன் என முதல்-அமைச்சர் தெரிவித்தார், ஆட்சி அமைந்த உடன் பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்தார். பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் மூலம் பயன் பெற்றிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் 3 லட்சம் மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுவருகின்றனர்.

இன்றைக்கு அனைத்து வட மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள். 7 வருடத்திற்கு முன்பு இந்த நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியது தி.மு.க. தான். இன்று வட மாநில தலைவர்கள் புரிந்து கொண்டு தற்போது நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர்.

நீட் தேர்வு நடத்தும் கட்சியான பா.ஜ.க.வுடன் சேர்ந்து பா.ம.க. தேர்தல் கூட்டணி அமைத்திருக்கிறது எனவே அவர்களை நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News