தமிழ்நாடு

வீட்டுக்குள் இறந்து கிடந்த கிராம நிர்வாக அலுவலர்- போலீசார் விசாரணை

Published On 2023-08-06 05:43 GMT   |   Update On 2023-08-06 05:43 GMT
  • பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மல்லீஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
  • தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து மல்லீஸ்வரன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர், மண்கரடு, செல்வநகரை சேர்ந்தவர் மல்லீஸ்வரன். இவர் கடந்த ஒரு வருடமாக ஈரோடு மாவட்டம் மைனாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

இதற்காக மல்லீஸ்வரன் தாளவாடி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். தினமும் காலை வேலைக்கு சென்று மாலை வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று தாளவாடி வட்டத்தில் உள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முகாம் நடைபெறு வதையொட்டி முகாம் பொறுப்பு அலுவலர்கள் பணியில் உள்ளனரா என்று தெரிந்து கொள்வதற்காக தாளவாடி வருவாய் அலுவலர் மதிவாணன் கிராம நிர்வாக அலுவலர் மல்லீஸ்வரனை போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.

ஆனால் மல்லீஸ்வரன் போனை எடுக்கவில்லை. உடனடியாக மதிவாணன் இது குறித்து தாளவாடி தாசில்தார் ரவிசங்கரிடம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மதிவாணன், துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் மல்லீஸ்வரன் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றனர். வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் பதில் ஏதும் வராததால் இது குறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மல்லீஸ்வரன் ஒரு அறையில் வாந்தி எடுத்தவாறு மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மல்லீஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து மல்லீஸ்வரன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் கிராம நிர்வாக அலுவலர் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News