தமிழ்நாடு (Tamil Nadu)

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Published On 2023-09-02 05:55 GMT   |   Update On 2023-09-02 05:55 GMT
  • நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வருகிறது.
  • தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.81 அடியாக உள்ளது. அனைத்து வினாடிக்கு 1,927 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் சத்தியமங்கலம் அருகே நீர் கசிவு காரணமாக கீழ்பவானி வாய்க்காலுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீர்கசிவு ஏற்பட்ட இடத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் மாலை தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News