போடி அருகே கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்த வாலிபரால் பரபரப்பு
- தன்னை கடித்த பாம்புடன் விவேக் போடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
- சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்ததால் விவேக்கிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மல்லிகாபுரத்தைச் சேர்ந்தவர் விவேக் (வயது 25). இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார். இன்று தேவாரம் அருகே உள்ள திருக்கோட்டை பகுதியில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அங்குள்ள சிமெண்ட் கற்களை அகற்றிக்கொண்டு இருந்தபோது உள்ளே பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு சீறிப்பாய்ந்து அவரது வலது கையில் கடித்து விட்டது. இதனால் வலியால் அலறி துடித்த விவேக்கை அருகில் இருந்தவர்கள் ஆறுதல்படுத்தினர்.
உடனடியாக அவரை கடித்த பாம்பையும் உயிருடன் பிடித்தனர். தன்னை கடித்த பாம்புடன் விவேக் போடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். இதை பார்த்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்ததால் விவேக்கிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அவர் தெரிவிக்கையில், தன்னை கடித்த பாம்பு எந்த வகை என டாக்டரிடம் தெரிவிக்கவே அதை கையில் பிடித்து வந்தேன். வலியால் நான் துடித்தபோது பாம்பை அருகில் இருந்தவர்கள் உயிருடன் பிடித்தனர் என்றார். இச்சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.