தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டம்- முழு விவரம்
- தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது.
- தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங் களவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முன் னாள் எம்.எல்.ஏ. வழக்கறி ஞர் இன்பதுரை கலந்து கொண்டனர்.
இதேபோல் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் பங்கேற்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.
மேலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் சண்முகம், ம.தி.மு.க. சார்பில் பொதுச் செய லாளர் வைகோ, துரை வைகோ எம்.பி., பா.ம.க. சார்பில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க. சார்பில் துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இங்கு வந்திருக்கும் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை நான் தெரி வித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாடு அரசின் சார்பில் உங்கள் எல்லோரையம் வருக... வருக... என்று நான் வரவேற்கிறேன்.
தமிழ்நாடு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதை உணர்த்துவதற்காகத் தான் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இன்றைக்கு தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய அரசு 2026-ம் ஆண்டில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக் கையை மறுசீரமைப்பு செய்ய இருக்கிறது. பொதுவாக இதை மக்கள் தொகையை கணக்கிட்டுதான் செய்வார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு.
அந்த இலக்கில் நமது தமிழ்நாடு வெற்றி பெற்று இருக்கிறது. பல பத்தாண்டு களாக வெற்றிகரமான குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன் முயற்சிகள் மூலமாக நாம் இதை சாதித்து இருக்கிறோம்.
இப்போது இருக்கின்ற 543 பாராளுமன்ற தொகுதிகள் தொடர்ந்தால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் நமது தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாடு மொத்தமாக 8 பாராளுமன்ற தொகுதிகளை இழக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது இனி 39 எம்.பி.க்கள் கிடைக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள்.
பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு தற்போதைய விதிதாச்சாரத்தின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும்.
ஆனால் தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.
இந்த 2 முறைகளிலுமே நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.
இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை இல்லை. நமது தமிழ் நாட்டின் உரிமை சார்ந்த கவலை. தமிழ்நாட்டின் இந்த முக்கியமான பிரச்சினையில் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் எல்லோர் முன்பும் நான் வைக்கிறேன்.
எல்லா கட்சிகளும் கட்சிகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் அது தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவத்தை, எண்ணிக்கையை குறைத்துவிடும். எனவே இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்.
மக்கள் தொகை அடிப்ப டையில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற பேரவையின் இடங்கள் குறையும் என்று சொல்வது மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் கொள்கையை முனைப்பாக செயல்படுத்தி நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென் மாநிலங்களுக்கு தரப்படுகிற தண்டனையாகத்தான் அமையும்.
இதை முன்கூட்டியே உணர்ந்து தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
தமிழ்நாட்டின் உரிமை, கூட்டாட்சி கருத்தியலோடு கோட்பாடு, தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக் கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக, திடமாக அப்போதே நாம் வலியுறுத்தி இருக்கிறோம்.
இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தென்னிந்தியா வுக்கே அபாயகரமான செயல். இதில் நமக்குள் கருத்து மாறுபாடு நிச்சயமாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். இருக்கக்கூடாது என்று விரும்புகிறேன்.
இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தென் மாநிலங்களின் அரசி யல் உரிமைக்கும் இது அச்சு றுத்தலை ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கின்ற அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான நேரடி தாக்குதல்.
இப்படி ஒரு சமநீதியற்ற அமைதியான தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலில் தமிழ் நாட்டின் குரல்வளை நெரிக்கப்படும்.
தமிழ்நாட்டின் நலன் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலன் ஆகிய வற்றை பாதுகாப்பதில் நம் மாநிலத்துக்கு இறுக்கக்கூடிய பலம் குறைக்கப்படும.
39 எம்.பி.க்கள் இருக்கும் போது நாம் எழுப்புகிற குரலையே ஒன்றிய அரசு மறுக்கின்ற நிலையில் இந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ, குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டுக்கு கிடைக் கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும் என்பதை எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
எனவே நமது நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுத்தாக வேண்டும்.
எதிர்காலத்தில் நடைபெற இருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுசீரமைப்பை நாம் கடுமையாக ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.
எனவே உறுதியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி நான் அந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
இந்தியநாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீர மைப்பை இந்த அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது.
நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதி நிதித்துவம் குறைக்கப்படு வது முற்றிலும் நியாயமற்றது.
எந்த வகையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்கு விக்கும் வகையில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறு தற்போதும் இந்த வரையறை 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் படும் என்று பிரதமர், நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.
மேலும் நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அப்படையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.
தொகுதி மறு சீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதே சமயம் கடந்த 50 ஆண்டுகளாக சமூக பொருளாதார நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்தியதற்கு தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக்கூடாது எனவும், அனைத்துக்கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.
இக்கோரிக்கைகளை தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கையாக அனைத்து கட்சி கூட்டம் முன்வைக்கிறது. இக்கோரிக்கைகளையும் அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்லவும் மக்கள் மத்தியில் இப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இந்த தீர்மானத்தின் மீதான உங்களின் கருத்தை அனைத்து கட்சி தலைவர்களும் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் உங்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிைய தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சி சார்பிலும் வந்திருந்த பிரதிநிதிகள் இதில் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கருத்துக்களின் அடிப்படையில் அரசின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
அதன் பிறகு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பில் டெல்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு கொடுக்கிறார்கள்.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ கத்துக்கு ஏற்படும் பாதிப்பு களை விளக்கவும், அரசின் சார்பில் திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.