தமிழ்நாடு

ஆட்சி, அதிகாரத்தை வைத்து பயமுறுத்தும் செயல் விஜய்யிடம் பலிக்காது- நடிகர் சௌந்தரராஜா

Published On 2025-03-02 10:11 IST   |   Update On 2025-03-02 10:11:00 IST
  • வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
  • தேர்தலுக்கு இன்னும் காலம், நேரம் இருக்கிறது.

மதுரை:

மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியில் யானை மலை அடிவாரத்தில் குடை வரை கோவிலாக அமைந்துள்ள நரசிங்கம் பெருமாள் கோவிலில் தமிழக வெற்றிக்கழக ஆதரவாளரும், நடிகரும், தனியார் அறக்கட்டளை தலைருமான சௌந்தரராஜா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரிலும், அதன் தலைவரும் நடிகருமான விஜய் பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபட்டார். மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது இதே மகிழ்ச்சியுடன் எப்போதும் இருக்கவேண்டும் என்றும், வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து பேசிய அவர் கூறியதாவது:-

மக்களுக்கு சந்தோஷத்தை கொடுத்து மண்ணுக்கு தேவையான ஒரு ஆட்சியை கொடுப்பதற்கான வழியை தமிழக வெற்றிக் தழகத்தின் தலைவர் விஜய் கையில் எடுத்திருக்கிறார். பேசும் பொருள் ஆனால் தான் அது கழகம், கலகம் வந்தால்தான் தீர்வு கிடைக்கும். எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கூறிய குறைகளை ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை நிறைவேற்றவில்லை. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள், நேர்மையாக அரசியல் செய்ய விரும்புபவர்கள் விஜய்யை விரும்புகிறார்கள்.

தேர்தலுக்கு இன்னும் காலம், நேரம் இருக்கிறது. கூட்டணி கட்சியினர் சீட்டுக்காக காத்திருக்கிறார்கள், சீட்டு கிடைக்கவில்லை என்றால் நல்லவர்கள் எங்களை தேடி வருவார்கள். அரசியலை பொறுத்தவரை நேர்மையான விமர்சனத்திற்கு பதில் சொல்லலாம் என்பதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார்கள். தவறு செய்பவர்களை சுட்டிக்காட்டுவதற்காக பாசிசமும் பாயாசமும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. எங்கள் மீது குற்றம் சுமத்த வேண்டிய காரணம் என்ன? அச்சுறுத்துவீர்கள், அவமானப்படுத்துவீர்கள், ஆட்சி அதிகாரத்தை வைத்து பயமுறுத்துவீர்கள். இதெல்லாம் விஜய் அண்ணனிடம் பலிக்காது.

அவரவர்கள் அவர்கள் கட்சியை வளர்ப்பதற்கு அடுத்தவர்களை வீழ்த்துவதற்கான வேலையை பார்க்கிறார்கள். இந்த கட்சிதான் மீண்டும் மீண்டும் ஆள வேண்டுமா, அ.தி.மு.க., பா.ஜ.க., தி.மு.க., காங்கிரஸ் தவிர வேறு கட்சிகளே இல்லையா? மக்களுக்கான பணியை செய்தால் உங்களை விமர்சனம் வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க., அ.தி.மு.க. என மக்களுக்கு நல்லது செய்தால் ஆட்சி பிடிப்பதற்கு எதற்கு போட்டி வருகிறது? மக்கள் யாராவது நிம்மதியாக இருக்கிறார்களா?

மதுரையில் ஒத்தக்கடை நரசிங்கம்பட்டியில் பாறைகள் உடைக்கப்பட்டு இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டது, அதற்கு தீர்வு கிடைத்ததா? தீர்க்க வேண்டிய, திருத்தப்பட வேண்டிய விஷயம் தமிழ்நாட்டில் நிறைய இருக்கு. கூட்டணி என்பது வியூகம்தான், அவரவர் கருத்தை கூறுவார்கள். இது அனைத்திற்கும் இப்போது பதில் சொல்வது பொருத்தமாகாது.

எத்தனை ஆண்டு காலமாக என் தாய் ஒரே கட்சிக்குதான் சாகும் வரை வாக்களிப்பேன் எனக் கூறிவந்தார். தற்போது முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதாக கூறியிருக்கிறார். இது ஒரு சான்று, இதேபோல் ஓராயிரம் சான்று உள்ளது. தமிழக வெற்றி கழகத்தை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News