தமிழ்நாடு

அதிமுக போராட்டக்களத்தின் மறுவடிவம்தான் த.வெ.க. மாநாடு - ஆர்.பி.உதயகுமார்

Published On 2024-10-28 10:50 GMT   |   Update On 2024-10-28 10:50 GMT
  • விஜய் கட்சியால் அதிமுகவிற்கு எள் முனையளவு கூட எந்த பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு இல்லை.
  • திமுகவை எதிர்த்து முதல் ஆளாக எடப்பாடி பழனிச்சாமி போராடி கொண்டிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

த.வெ.க. மாநாட்டில் உரையாற்றிய விஜய், பாஜக மற்றும் திமுகவை நேரடியாக தாக்கி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழ்நாடே திமுவுக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதற்கு அதிமுக முன்னெடுக்கிற போராட்டங்கள் எப்படி ஒரு சான்றாக சாட்சியாக இருக்கிறதோ அதே மாதிரி தான் த.வெ .க.வின் மாநாட்டையும் நாங்கள் பார்க்கிறோம்.

விஜய் கட்சியால் அதிமுகவிற்கு எள் முனையளவு கூட எந்த பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் நாங்கள் இப்போது ஆளும் கட்சி இல்லை. திமுகவை எதிர்த்து முதல் ஆளாக எடப்பாடி பழனிச்சாமி போராடி கொண்டிருக்கிறார்.

அதிமுக போராட்டக்களத்தின் மறுவடிவமாக தான் தவெக மாநாட்டை நாங்கள் பார்க்கிறோம். எங்கள் எண்ணங்கள் ஒன்றாக இருக்கிறது. எங்கள் எதிரிகள் ஒன்றாக இருக்கிறார்கள். மக்கள்நலன் என்ற சிந்தனை ஒன்றாக இருக்கிறது. தவெக மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை சுட்டிக் காட்டி பேசியதை அதிமுக வரவேற்கிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டியதை தமிழ்நாட்டு மக்கள், இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இளைஞர் சமுதாயம் கொதித்து போய் விஜய் மாநாட்டுக்கு சென்றுள்ளனர்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News