செய்திகள்

ரயானி நிறுவன விமானங்கள் பறக்க தடை: மலேசியா அரசு அதிரடி

Published On 2016-06-15 00:32 GMT   |   Update On 2016-06-15 00:32 GMT
மலேசிய அரசின் சிவில் விமானப்போக்குவரத்து துறை, ரயானி ஏர் நிறுவன விமானங்கள் பறக்க தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கோலாலம்பூர் :

மலேசியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ‘ரயானி ஏர்’ என்ற தனியார் விமான நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த விமான நிறுவனம், குறிப்பிட்ட ஒரு மதத்தின் கோட்பாடுகள் அடிப்படையில் இயங்கி வந்தது.

இந்த விமான நிறுவனம் போயிங் 737-400 ரக விமானங்கள் இரண்டை இயக்கி வந்தது. இவ்விரு விமானங்களும் தலா 180 பயணிகளுடன் பயணிக்கத்தக்கதாகும்.

அந்த விமானங்களில் பயணிகளுக்கு ஹலால் உணவுதான் வினியோகிக்கப்பட்டு வந்தது. மதுபானங்கள் வழங்கப்படுவது இல்லை. விமானத்தின் சிப்பந்திகளும் கண்ணியமாக உடை அணிந்திருப்பார்கள்.

இந்த நிலையில் திடீரென மலேசிய அரசின் சிவில் விமானப்போக்குவரத்து துறை, ரயானி ஏர் நிறுவன விமானங்கள் பறக்க தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சிவில் விமான போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டதால்தான் ரயானி ஏர் விமானங்கள் பறப்பதற்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிவில் விமானப்போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பு சோதனை, நிர்வாகம் குறித்த கவலைகளால், ரயானி ஏர் நிறுவனத்தின் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது. 

Similar News