செய்திகள்

பிரிட்டன் பாராளுமன்றம் அருகே கத்திகளுடன் வந்த நபர் கைது: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமா?

Published On 2017-04-27 16:33 GMT   |   Update On 2017-04-27 16:33 GMT
லண்டனில் பாதுகாப்பு மிகுந்த பிரிட்டன் பாராளுமன்றத்தின் அருகே கத்திகளுடன் வந்த நபரை, சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
லண்டன்:

லண்டனின் மையப்பகுதியான வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் பிரிட்டன் பாராளுமன்றம் உள்ளது. இப்பகுதியில் கடந்த மாதம் 22-ம்தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், தாக்குதல் நடத்திய தீவிரவாதி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. அதேசமயம், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டன. குறிப்பாக, பாராளுமன்றத்திற்கு வரும் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

இந்நிலையில், பாராளுமன்ற வீதியில் போலீசார் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 20 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர் வைத்திருந்த தோள்பையில் 2 கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த இரண்டு கத்திகளும் கைப்பற்றப்பட்டன. அந்த வாலிபர் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தெரிவித்துள்ளது.

Similar News