உலகம்
அமெரிக்க Gold Card Visa: ஒரே நாளில் 1000 அட்டை விற்பனை

அமெரிக்க Gold Card Visa: ஒரே நாளில் 1000 அட்டை விற்பனை

Published On 2025-03-25 10:28 IST   |   Update On 2025-03-25 10:28:00 IST
  • அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கு சமம்.
  • எந்த நேரத்திலும் அமெரிக்காவில் இருக்க உரிமை உண்டு.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கோல்டு கார்டு விசா (தங்க அட்டை விசா) திட்டத்தை அதிபர் டிரம்ப் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.

இந்த விசா 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.43 கோடி) வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த கோல்டு கார்டு விசாவில், கிரீன் கார்டு விசாவைவிட அதிக சலுகைகள் உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு அமோக வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தக மந்திரி ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது:-

டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு விசா திட்டத்தின் கீழ் ஒரேநாளில் ஆயிரம் கோல்டு கார்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோல்டு கார்டு வாங்குவதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.


இதன் மூலம் கிரீன் கார்டு வைத்திருப்பது போன்று கோல்டு கார்டும் பயனுள்ளதாக இருக்கும். இது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கு சமம். இத்திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்த திட்டம் 2 வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இதற்கான மென்பொருளை எலான் மஸ்க் உருவாக்கி வருகிறார். 5 மில்லியன் டாலர்களை செலுத்துவதன் மூலம் அமெரிக்காவில் காலவரையின்றி, அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் இருக்க உரிமை உண்டு. அவர்களது பின்புலம் சரிபார்க்கப்படுகிறது.

அவர்கள் தீயவர்களாகவோ அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவோ இருந்தால் அமெரிக்கா எப்போதும் அதை ரத்து செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News