search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்விற்கான பயிற்சி 412 மையங்களில் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #NEETExam #Sengottaiyan
    சென்னை:

    எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாஸ்காம் பவுண்டே‌ஷன் இணைந்து பொது நூலக இயக்க மண்டல மாநாடு சென்னை தரமணியில் இன்று நடத்தியது.

    இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விரைவில் ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்கப்படும். 13 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் உள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களிலும் கொண்டு வரப்படும்.


    நீட் தேர்விற்கான பயிற்சி மையங்கள் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும். 412 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும்.

    கீழடி அகழ்வாராய்ச்சி பணி நிறைவடைந்த பிறகு அந்த பொருட்களை காட்சிபடுத்தி அரசு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா போல அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.

    கடந்த ஆண்டு கடைசி நேரத்தில் நீட் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டதால் போதிய மருத்துவ இடம் தமிழ்வழி மாணவர்களுக்கு கிடைக்கவில்லை.

    ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நீட் பயிற்சி அளிப்பதால் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #NEETExam #TNMinister #Sengottaiyan
    தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பா.ஜனதாவின் ஆசைக்காக மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார். #ThambiDurai #BJP
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 23 நாட்கள் காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுத்தோம். தற்போது காவிரி நீர் தமிழகம் வந்துள்ளது. இதே போல் பாராளுமன்றத்தில் தமிழக உரிமைக்காக போராடுவோம்.

    தேர்தல் கூட்டணி பற்றி தலைமை கழகம்தான் முடிவு செய்யும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி விட்டோம்.

    8 வழிச்சாலை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியாக கையாளுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    பா.ஜனதா தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வருகிறது. அது பா.ஜனதாவின் ஆசைதான். ஆனால் ஆசைக்காக மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.



    அமித்ஷா தமிழகத்தில் ஊழல் என்று கூறுகிறார். ராகுல்காந்தி பா.ஜனதாவில் ஊழல் என்றும், ஸ்டாலின், அ.தி.மு.க.வில் ஊழல் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் ஆட்சியை பிடிக்க தங்கள் இஷ்டம்போல் பேசி வருகிறார்கள்.

    ஆளும் கட்சி மீது ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    தமிழகத்தில் சமுதாயம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை திராவிட கட்சிகளால்தான் காப்பாற்ற முடியும். தேசிய கட்சிகளால் காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு தம்பித்துரை கூறினார். #ThambiDurai #BJP


    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி வருகிறது. இதற்காக உயர்மட்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டு வருகிறது.

    இதற்கு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது தமிழகம் உள்பட சில மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. இதனால் மேலும் 3 ஆண்டு காலம் பதவி பறிபோவதால் அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது.

    ஆனால் மத்திய அரசு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது. அதனால் பாராளுமன்ற தேர்தல் நடக்கும்போது சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

    இதுபற்றி நேற்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு பா.ஜனதா அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் எனவே பிரச்சனைகளுக்காக குரல் எழுப்ப வேண்டும். மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    பா.ஜனதா அணியில் இணையலாம் என்று சிலரும், பா.ஜனதா அணியில் இணையக்கூடாது சிலரும், ஜெயலலிதா பாணியில் தனித்தே போட்டியிட வேண்டும் என்றும் பெரும்பாலானவர்களும் கருத்து தெரிவித்தனர்.

    இதையடுத்து தேர்தல் கூட்டணி உள்பட முக்கிய வி‌ஷயங்களில் முடிவுகள் எடுக்க உயர்நிலை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரது கருத்துக்களை பெற்று உயர்நிலைக் குழுவானது முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

    சமீப காலமாக பா.ஜனதாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் உறவு சுமூகமாக இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வி‌ஷயத்தில் மத்திய அரசு மிகவும் காலதாமதம் செய்து விட்டதாக அ.தி.மு.க. தரப்பில் கருத்து நிலவுகிறது.

    இதே போல் நீட் தேர்வு வி‌ஷயத்திலும் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. இது மக்கள் மத்தியில் தமிழக அரசு மீது அதிருப்தி ஏற்படச் செய்துள்ளது.

    மேலும் தமிழகத்தில் நடைபெறும் தொடர்ச்சியான வருமான வரி சோதனைகளும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக ஊழலில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருப்பதாக அமித்ஷா பேசிய பேச்சு அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜனதா நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார்கள். எனவே கூட்டணி தொடர்பான அ.தி.மு.க. நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து நிலவுகிறது.

    கூட்டத்தில் மொத்தம் உள்ள 50 எம்.பி.க்களில் 40 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 3 பேர் தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    துணை சபாநாயகர் தம்பித்துரை, அன்வர் ராஜா, எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியன், சத்யபாமா உள்பட 8 எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. #ADMK
    8 வழி சாலை திட்டத்துக்கு ஆதரவு அளித்த ரஜினிக்கு அ.தி.மு.க.வின் நாளேடான புரட்சித் தலைவி நமது அம்மா பாராட்டு தெரிவித்து உள்ளது. #ADMK #Rajinikanth
    சென்னை:

    எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் “நாட்டுக்கு நலம் பயக்கும் திட்டம்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார்.

    மேலும் கழக அரசின் கல்விப் புரட்சியையும் அவர் வெகுவாக பாராட்டியும் இருக்கிறார். இதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

    உச்சி வெயில் அடித்தாலும், ஓங்கி மழை கொட்டினாலும், அத்தனைக்கும் காரணம் ஆளுங்கட்சிதான் என்று எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிற உள்நோக்கம் கொண்ட சக்திகளுக்கு மத்தியில் அரசியல் சுய லாபங்களை தவிர்த்து, தமிழக அரசின் நன்நோக்கத்தை ரஜினிகாந்த் உரைகல்லாக நின்று உரசிப் பார்த்து வரவேற்று இருப்பது பாராட்டுக்குரியது.


    ஏற்கனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவர விவகாரத்திலும், அரசின் மீது அபாண்ட பழிபோட்டு அரசியல் லாபம் தேட தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வெறிகொண்டு அலைந்த நிலையில் அப்போதும் ரஜினிகாந்த் களத்தின் உண்மையை உள்வாங்கி நிஜத்தையே பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    காவிரி உரிமையை வென்றெடுத்தது, ஸ்டெர்லைட் ஆலைக்கு முற்று வைத்தது, ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு விடை கொடுத்தது, பிளாஸ்டிக் அரக்கனுக்கு தடை போட்டது, நீர் நிலைகளை தூர் வாரியது, நீராபானம் கொண்டு வந்தது, சட்டம்-ஒழுங்கை பேணிக் காப்பதில் சமரசம் கொள்ளாமல், ரவுடிகளை வேட்டையாடி, அமைதியை நிலைநாட்டுவது என்றெல்லாம் திடமாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதை நோக்கி அழைத்து செல்லும் எடப்பாடி பழனிசாமி அரசின் தூய்மையான தொண்டுள்ளத்திற்கு இது போன்ற உச்ச நடிகர்களின் பாராட்டு என்பது மேலும் ஊக்கத்தை தரும் தானே.... வரவேற்போம்... வாழ்த்துவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #Rajinikanth
    தமிழகத்தின் சூப்பர் முதல்வராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கூறினார்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி டாஸ்மாக் குடோனில் இருந்து கடந்த மாதம் 1-ந் தேதி மதுபான பாட்டில்களை ஏற்றிய லாரி சென்றது. வெள்ளபொம்மன்பட்டி பிரிவில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் லாரியை மறித்து தீவைத்தனர். இதில் மதுபாட்டில்களுடன் லாரி எரிந்து நாசமானது.

    இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு வேடசந்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கு விசாரணைக்காக வேல்முருகன் இன்று வேடசந்தூர் வந்தார். கோர்ட்டில் ஆஜராகி விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சனைக்காக போராடியவர்கள் மீது பொய்வழக்கு போட்டு தமிழக அரசு சிறையில் அடைக்கின்றது. எங்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம். தமிழகத்தில் இதுவரை இல்லாத மோசமான ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார்.


    காவல் துறையை கையில் வைத்து கொண்டு காட்டு தர்பார் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தின் சூப்பர் முதல்வராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார். அதற்கு தமிழக அரசும் துதிபாடி வருகிறது. பாரதிய ஜனதா உதவியுடன் தமிழக அரசு கைகோர்த்து போராட்டம் நடத்தும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Velmurugan #BanwarilalPurohit
    காமராஜர் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்றால் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.
    திசையன்விளை:

    திசையன்விளையில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    1967-ல் தி.மு.க., காமராஜரை தோற்கடித்தது. அதன்பிறகு தேசிய கட்சிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர். இன்று வரை அதே நிலை தொடர்கிறது. தி.மு.க.,அ.தி.மு.க. என்று மாறி மாறி ஆட்சி நடத்துகிற ஊழல் ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காமராஜர் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்றால் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

    ஆன்மீக அரசியல் தான் காமராஜர் ஆட்சி. காமராஜரை தோற்கடித்த இந்த தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என அமித்ஷா கூறியுள்ளார். ஊழல் இல்லாத கட்சி என்றால் ரஜினியின் ஆன்மீக அரசியல் கட்சி தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


    தமிழ்நாட்டில் சிலை திருட்டை தடுக்க மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். சிலை திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். சிலை திருட்டை தடுக்க சிறப்பு காவல்படை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் அரசு பாகுபாடு பார்க்கக்கூடாது. இந்து ஏழை மாணவர்களுக்கும் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அதற்காக இந்து மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேட்டியின் போது தென்மண்டல பொதுச் செயலாளர் கார்த்தீசன், மாவட்ட துணைத்தலைவர் சண்முகவேல், ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக திசையன்விளையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்தார். #ArjunSampath #Rajinikanth
    கூடிய விரைவில் ஜெயக்குமாரும் அமைச்சர்களும் ஜெயிலுக்கு போவது உறுதி என்று காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். #Kamarajarbirthday #EVKSElangovan
    சென்னை:

    சென்னையை அடுத்த புழலில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்து இருக்கிறார் என்று பெருமையோடு சொல்லும் வகையில் வாழ்ந்து இன்னும் வழிகாட்டியாக இருப்பவர் பெருந்தலைவர் காமராஜர்.

    யார் காமராஜர்? என்று கேட்டால் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், விஞ்ஞானிகளாக உயர்ந்து இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் வடிவில் தான் காமராஜர் உள்ளார். காங்கிரஸ்காரர்களால் மட்டுமே பொற்கால ஆட்சியை தர முடியும்.

    நாங்கள் எல்லாம் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து வலதுபுறமாக திரும்பி பொதுக்கூட்ட மேடையில் இருக்கிறோம்.

    கூடிய விரைவில் தமிழக அமைச்சர்கள் சிலர் குறிப்பாக ஜெயக்குமார் போன்றவர்கள் இந்த வழியாக போலீஸ் வேனில் வருவார்கள். இடது புறமாக திரும்பி ஜெயிலுக்குள் செல்வார்கள்.

    காங்கிரசுக்கு சமாதி கட்டுவதாக பேசுகிறார்கள். கோடி கோடியாக கொள்ளையடிக்கும் அவர்களுக்கு தெரிந்தது உண்மைகளை புதைப்பது தான். அதனால் தான் காங்கிரசுக்கு சமாதி கட்டுவோம் என்கிறார்கள். அது முடியுமா உங்களால்?

    தம்பிதுரை தமிழ்நாட்டில் தேசிய கட்சிக்கும் இடமில்லை என்கிறார். அவரைப் போன்றவர்கள் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்தது காங்கிரசின் தயவால் என்பதை மறந்துவிடக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.



    விழாவில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு பேசியதாவது:-

    காமராஜரை போன்ற எளிமையான தலைவர்களை காங்கிரசில் மட்டுமே பார்க்க முடியும். தியாகம் செய்து வளர்ந்த கட்சி காங்கிரஸ்.

    தமிழகத்தில் தொண்டர்களின் தலைவராக இளங்கோவன் இருக்கிறார். அவரிடம் இருந்து மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பையும், தொண்டர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் தகுதி படைத்த தலைவர் இளங்கோவன் தான்.

    மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் வங்கியில் போடுவேன் என்றார். ஆனால் வங்கிகளில் இருக்கும் பணத்தை தான் பிடுங்குகிறார்கள். பா.ஜனதா ஆட்சியின் சாதனை என்பது மக்கள் படும் வேதனைதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வீ.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், நாசே.ராஜேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் பாலமுருகன், கடல் தமிழ்வாணன், எம்.பி.குணா, உள்பட பலர் கலந்து கொண்டனர். #Kamarajarbirthday #EVKSElangovan
    ரஜினி ஆதரவு அளித்துள்ளதால் 8 வழிச்சாலை சூப்பர் வழிச்சாலையாக அமையும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். #Rajinikanth #Udhayakumar #ChennaiSalemGreenExpressway
    மதுரை:

    அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி மதுரையில் தொடங்கி உள்ளது.

    நேற்று மாலை நடைபெற்ற விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

    இன்று காலை கொட்டும் மழையில் நனைந்தபடி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 1,000 இளைஞர்கள் சைக்கிள் பேரணியில் புறப்பட்டனர்.

    மதுரை மாவட்டம் முழுவதும் 5 நாட்கள் அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.

    பேரணியில் சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. அரசு தமிழக மக்களுக்கு தொடர்ந்து சிறப்பான திட்டங்களை தந்து வருகிறது.

    மக்கள் உரிமைகளை பெற்றுத்தருவதில் அ.தி.மு.க. அரசு என்றைக்கும் சளைக்காமல் செயல்பட்டு வருகிறது.

    காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பேணி பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    மத்திய அரசுடன் அ.தி.மு.க. அரசு இணக்கமாக செயல்படுவதால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

    எய்ம்ஸ் மருத்துவமனை, சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் பெரும்பாலான மக்கள் பயன் அடைகின்ற மகத்தான திட்டமாகும்.


    8 வழிச்சாலை திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். இதன் மூலம் சூப்பர் வழிச்சாலையாக இது அமையும்.

    தமிழகம் வந்த பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா ஊழல் தொடர்பாக பேசியது அவரது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு தான். பாரதிய ஜனதா கூட்டத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை அமித் ஷா பேச மாட்டார்.

    பாரதிய ஜனதா தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளத்தேவையில்லை.

    ஜெயலலிதா பேரவை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த சைக்கிள் பேரணி வருகிற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அது போல இந்த அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற ஜெயலலிதா பேரவை தொடர்ந்து பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சைக்கிள் பேரணியில் சரவணன் எம்.எல்.ஏ., வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  #Rajinikanth #TNMinister #Udhayakumar #ChennaiSalemGreenExpressway
    திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை அழிக்க டிடிவி தினகரன் நினைக்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். #EdappadiPalanisamy #dinakaran
    மதுரை:

    மதுரையில் பாண்டிகோவிலில் இன்று நடைபெற்ற அதிமுக அரசின் சாதனை சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றிபிரச்சாரத்தினை தொடங்கிவிட்டோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மக்களின் முழு ஒத்துழைப்போடு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. 

    கட்சி வலிமைபெற ஒற்றுமை அவசியம். தினகரன், அதிமுகவுக்காக உழைத்தவரா? அவருக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்?, திமுகவுடன் சேர்ந்து கொண்டு அதிமுகவை அழிக்க நினைக்கிறார் டிடிவி தினகரன். ஆட்சியை பிடிக்க நினைக்கும் துரோகிதான் தினகரன். ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவுகளை தூள் தூளாக்கி விட்டோம். கொல்லைபுறமாக சிலபேர் ஆட்சியை பிடிக்க முயல்கிறார்கள். கட்சியை உடைக்க நினைத்தவர்களின் சூழ்ச்சியை முறியடித்து ஒற்றுமையாக நிற்கிறோம்.

    காவிரி பிரச்னைக்கு நல்ல தீர்வை அதிமுக அரசு பெற்றுத் தந்திருக்கிறது. அப்போது கேட்டும் கிடைக்காத காவிரி நீர், தற்போது கேட்காமலேயே வந்துகொண்டிருக்கிறது’ எனக் கூறினார். #EdappadiPalanisamy #dinakaran
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான் என்று கோவையில் தமிழருவி மணியன் பேசியுள்ளார். #tamilaruvimanian #edappadipalanisamy #rajinikanth

    கோவை:

    தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். லோக் ஆயுக்தா சட்டத்தை கூர்மைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்க மாநில இளைஞரணி சார்பில் கோவை காந்தி பார்க் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காந்திய மக்கள் இயக்க நிறுவன தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது-

    மதுவற்ற தமிழகம், ஊழலற்ற நிர்வாகம் ஆகிய இரண்டையும் லட்சியமாக கொண்டு காந்திய மக்கள் இயக்கம் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி தொடங்கப்பட்டது. இன்று வரை அந்த லட்சியத்தை நோக்கி பயணித்து வருகிறது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன் அம் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி உள்ளது.

    அதன் பின்னர் அங்கு பெருமளவு குற்றங்கள் குறைந்து இருப்பதாகவும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து இருப்பதாகவும் அம் மாநில அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடையால் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. அதனை இழக்க அரசு தயாராக இல்லை என்பதாக உள்ளது.

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது மதுக்கடையை மூடினால் ஏற்படும் இழப்புக்கு மாற்று திட்டம் தயார் செய்து கொடுத்ததோடு 16 லட்சத்து 800 மாணவர்களிடம் கையெழுத்து வாங்கி கொடுத்தோம்.

    ஆனால் மாற்று ஏற்பாடு எதுவும் அரசு எடுக்கவில்லை. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு போராட்டம் நடந்து வருகிறது. இது ஒட்டு மொத்த தமிழகத்தை பாதிக்கும் பிரச்சினை அல்ல.

    ஆனால் டாஸ்மாக்கிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி இருந்தால் டாஸ்மாக் கடையை மூட வழி பிறந்து இருக்கும்.

    சட்ட பேரவையில் தி.மு.க.வுக்கு 98 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 106 எம்எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் 8 வழி சாலை பிரச்சினையில் ஒன்றிணைந்து தங்கள் பணியை தீவிரப்படுத்தி இருந்தால் இந்த ஆட்சிக்கு தலை வலி ஏற்பட்டு இருக்கும்.

    ஆளும் கட்சியுடன் எதிர்கட்சி ரகசிய ஒப்பந்தம் செய்து உள்ளது. ஊழல் படிந்த கட்சிகள் கூட்டு பேரம் நடத்தி உள்ளது.

    குட்கா முதல் முட்டை வரை ஊழல் நடைபெற்று உள்ளது. இந்த ஆட்சியின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    பின்னர் நிருபர்களிடம் தமிழருவி மணியன் கூறியதாவது-

    ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான ஆட்சி என்பது தான் எங்கள் இலக்கு. தமிழகத்தில் மாற்று அரசியல் என்பதற்கு காலம் எங்கள் கண் முன் காட்டுவது ரஜினிகாந்த் தான். தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான, பொருளாதார வளர்ச்சி அமைய வேண்டும் என்றால் ரஜினியை ஆதரிக்க வேண்டும்.


    காந்திய மக்கள் இயக்கத்திற்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக காந்திய மக்கள் இயக்கத்தை கலைத்து விட்டு ரஜினியுடன் இணையும் என்பது வதந்திதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் டாக்டர் டென்னிஸ் மற்றும் இளைஞர் அணித்தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் ஆ.கணேசன், எம்.கந்தசாமி, கே.கந்தசாமி, வாசு, குருவம்மாள், சுரேஷ்பாபு, ராஜீவ், கிருஷ்ணமூர்த்தி, கோவை மாவட்ட நிர்வாகிகள் துரை சந்திரன், திருமலை, ராஜன், சற்குணன்,உள்பட திராளானோர் கலந்து கொண்டனர். #tamilaruvimanian #edappadipalanisamy #rajinikanth

    பா.ஜ.க.வினர் அ.தி.மு.க.வை பலவீன படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #admk #bjp

    திருச்சி:

    திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காமராஜர் பிறந்தநாளையொட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்வி தொடர்பான அதிகாரத்தை மாநில பட்டியலில் இணைக்க வேண்டும். இந்தியா முழுவதும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். காவல் துறையில் போதிய ஜனநாயக உரிமை இல்லை. 8மணி நேர பணியை உறுதிப்படுத்த வேண்டும். வார விடுமுறைக்கு அனுமதிக்க வேண்டும்.

    ஊழல் தொடர்பாக தமிழக முதல்வர் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கையை வெளியிட வேண்டும். ஊழலை ஒழிப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு , அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த 4 ஆண்டுகளாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திருத்தம் மட்டுமே செய்துள்ளார்கள் .

    டி.டி.வி. தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்து பேசியதற்கு வாழ்த்துக்கள். காந்தி மார்க்கெட் வெங்காயமண்டி தொழிலாளர்கள் 260 பேரின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அரசு, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ஜ.க.வினர் அ.தி.மு.க.வை பலவீன படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்தி வருகின்றனர். 

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #admk #bjp

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #dinakaran #Corruption #edappadipalanisamy

    திண்டுக்கல்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கோமா நிலையில் உள்ளது. இந்த ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. சத்துணவு முட்டையில் மட்டும் ஊழல் இல்லை. எல்.இ.டி. பல்பு உள்பட அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது.

    அமைச்சர் தங்கமணி பொய்யான தகவல்களை தந்து கொண்டு இருக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த வெற்றியை போல வருகிற பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதியிலும், சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும்.

    அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக உருவெடுப்போம். மத்திய அரசு தமிழக அரசை ஊழல் ஆட்சி என குற்றம் சாட்டுகிறது. ஆனால் எதற்காக ஆட்சி நடைபெற அனுமதிக்கிறது என தெரிய வில்லை. இனி எந்த காலத்திலும் தமிழகத்தில் தேசிய கட்சி ஆட்சி அமைக்க முடியாது.

    லோக் ஆயுக்தா சட்டம் பல் இல்லாத பாம்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவையில் பலியான மாணவி வழக்கு தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள். கோவையில் போலி நிறுவனங்கள் தொடங்கி அரசு டெண்டர் எடுத்து வருகின்றனர். 8 வழிச்சாலை மக்களுக்கான திட்டம் கிடையாது. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் சொந்த தேவைக்காக நிறைவேற்ற துடிக்கின்றனர்.

    இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் சமயத்தில் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #Corruption #edappadipalanisamy

    ×