என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வீட்டையும், நிலத்தையும் கேட்டு தகராறு.
- கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 39). லாரி டிரைவர். இவரது முதல் மனைவி ரேவதி (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கார்த்தி 2-வதாக சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவுடன் கார்த்தி வசித்து வருகிறார். இதனால் ரேவதி கடந்த 4 ஆண்டுகளாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் ரேவதியின் திருமணத்தின்போது அவரது பெயரில் கார்த்தி நிலம் வாங்கி வீடு கட்டி கொடுத்திருந்தார். இதனால் வீடு, சொத்து ரேவதியின் பெயரில் உள்ளது. தற்போது இந்த வீட்டையும், நிலத்தையும் ரேவதியிடம் திருப்பி கேட்டு கார்த்தி தகராறு செய்து வந்தார்.
கார்த்தியிடம் ரேவதி தனது 2 குழந்தைகளுக்கும் இந்த வீடு, நிலம் பயன்படும். சொத்து, வீடு அவர்களுக்கு இல்லை என்றால் அவர்களின் எதிர்காலம் என்ன ஆவது?, அவற்றை எழுதி கொடுத்தால் 2-வது மனைவி சங்கீதாவுக்கு கொடுத்து விடுவாய்.
மேலும் என்னையும், குழந்தையையும் வீட்டை விட்டு துரத்தி விடுவாய் என கூறி சொத்து மற்றும் பட்டா உள்ளிட்டவை மாற்றம் செய்து தர முடியாது என மறுத்து விட்டார். ஆனால் நான் வாங்கி கொடுத்த நிலத்தையும், வீட்டையும் எனது பெயரில் மாற்றி எழுதி கொடு என்று கார்த்தி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் ரேவதியின் வீட்டிற்கு கார்த்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சொத்து தொடர்பாக கணவன்-மனைவி இடையே மோதல் வெடித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி அரிவாளால் ரேவதியின் தலையில் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.
இதில் மூளை சிதறிய நிலையில் ரேவதி ரத்த வெள்ளத்தில் வீட்டிற்குள் பிணமாக கிடந்தார். அவரது 2 குழந்தைகளும் பயத்தில் அழுதனர்.
ரேவதியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறுகையில் கார்த்தி தலைமறைவாக உள்ளார். ஆகவே ரேவதியை அவர் தான் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகிறோம். அவர் பிடிபட்ட பிறகு தான் இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என முழு விபரங்களும் தெரியவரும் என்றனர்.
முதல் மனைவியை சொத்துக்காக கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் மேட்டூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 1500 கனஅடியாக வந்தது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரம் கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கடந்த 10-ந்தேதி பூக்குழி இறங்குதல் விமரிசையாக நடந்தது.
- பூக்குழியில் நிலைதடுமாறி விழுந்தார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 56). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதற்கிடையே அந்த பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடை பெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 10-ந்தேதி பூக்குழி இறங்குதல் விமரிசையாக நடந்தது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதேபோல் ரியல் எஸ்டேட் அதிபரான கேசவனும் வேண்டுதல் நிறைவேற பூக்குழி இறங்கினார். அப்போது அவர் நெருப்புடன் கூடிய மரக்கட்டைகள் நிரப்பப்பட்டு இருந்த பூக்குழியில் நிலைதடுமாறி விழுந்தார்.
இதைப்பார்த்த சக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தயார் நிலையில் இருந்த மீட்பு குழுவினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
உடலின் பெரும்பாலான பகுதியில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கேசவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி விக்னேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க. அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
- இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்டமுன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர்,
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க. அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
* மாற்றுத்திறனாளி என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் கலைஞர் தான்.
* மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை ரூ.1,432 கோடியாக உயர்த்தி உள்ளோம்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக நிதி தருவதில் தமிழ்நாடு தான் முன்னணி.
* மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும்.
* உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை நிலைநாட்ட அரசு உறுதியாக உள்ளது.
* அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
* புதிய அறிவிப்பின் மூலம் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பு கிடைக்கும்.
* இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன்.
* அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை முன்மொழியும் வாய்ப்பை கலைஞர் எனக்கு வழங்கினார். அப்போது எப்படி பெருமை அடைந்தேனோ, அதே பெருமையை இப்போது அடைகிறேன் என்றார்.
இதனை தொடர்ந்து சட்டமுன் வடிவை நிறைவேற்ற சபாநாயகர் அப்பாவு குரல் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த சட்டமுன்வடிவிற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
- விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-வது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் நிறைவு நாளான நாளை மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு அகில இந்திய விவசாய சங்க தலைவர் ராஜன் கிஸ்சி சாகர் தலைமையில் நடைபெறுகிறது. இதன் தொடக்க நாளில் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கேரளா வேளாண்மை துறை அமைச்சர் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், செல்வராஜ் எம்.பி. மற்றும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அத்தகைய போராட்டம் நடக்காத அளவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். வேளாண் துறைக்கு தனிபட்ஜெட் அறிவித்தார். பயிர்க்காப்பீடு திட்டம், நெல் கொள்முதல் ஊக்கத்தொகை தந்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தந்து விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார். கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகளை செய்து தந்துள்ளார்.
தமிழகத்தில் விவசாயிகள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை முதல்-அமைச்சர் உருவாக்கி கொடுத்துள்ளார். அதனால் தான் தமிழகத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
- வரி உயர்வை திரும்ப பெற கோரி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.
- கட்டுமான பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம்:
தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இந்த கல்குவாரிகள மூலம் கட்டிடங்கள் கட்ட தேவையான கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவை வாகனங்களில் அனுப்பப்படுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு கனிம வள வரி என்ற பெயரில் வரியை தமிழக அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்குவாரி உரிமையாளர்கள் இந்த பல மடங்கு வரி உயர்வால் கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகிய வற்றிற்கு 1 யூனிட்டிற்கு 1000 முதல் 1500 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய சூழல் உள்ளதாகவும், இதனால் குவாரி தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளதால் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறி வந்தனர். ஆனால் அரசு வரியை குறைக்கவில்லை.
இந்த நிலையில் வரி உயர்வை திரும்ப பெற கோரி குவாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குவாரி தொடர்பாக ரூ. 100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். கட்டுமான பணிகளுக்கான கருங்கல், கிரஷர், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் கிடைக்க ாமல் கட்டுமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கும் வரி வருவாய் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக அரசு பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று குவாரி உரிைமயாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நாங்கள் அமைத்திருப்பது வலுவான கூட்டணியா? அல்லது வலுவில்லாத கூட்டணியா? என்பது தேர்தலில்தான் தெரியும்.
- எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.
சென்னை:
சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று சட்டசபை கூடியதும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேருவுக்கு எதிராக நமபிக்கையில்லா தீர்மானத்தை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, 'எதிர்க்கட்சியினர் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் பரிசீலனையில் உள்ளது. அதை இன்று எடுத்துக்கொள்ள முடியாது' என்று கூறினார்.
இதையடுத்து சபாநாயர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது தொடர்பாகவும், தமிழகத்தில் ஆட்சியில் பா.ஜ.க.வுக்கு பங்கு வழங்கப்படுமா? என்பது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
நாங்கள் அமைத்திருப்பது வலுவான கூட்டணியா? அல்லது வலுவில்லாத கூட்டணியா? என்பது தேர்தலில்தான் தெரியும். ஒரு கட்சி வருகிற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
சேருகின்ற வாக்குகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து எதிரிகளை அகற்ற வேண்டும் என்ற கருத்து உள்ள கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு முயற்சி செய்தோம். அந்த முயற்சியில் முதல் கட்டமாக பா.ஜ.க. எங்களுடன் இணைந்திருக்கிறது.
எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்திருக்கிறது. எங்களது கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் சேர இருக்கிறது.
ஆனால் எந்த கட்சிகள் வரும் என்பதை வெளியில் சொல்ல முடியாது. சிலவற்றை தான் வெளியில் சொல்ல முடியும்.
அ.தி.மு.க. எங்கள் கட்சி. நாங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அதற்கு தி.மு.க.வினர் ஏன் எரிச்சல் படுகிறார்கள். ஏன் அவர்கள் பயப்படுகிறார்கள்? இன்றைக்கு அவர்களுக்கு பயம் வந்து விட்டது.
அ.தி.மு.க. ஒரு பிரதான கட்சி. தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சி. பொன்விழா கண்ட கட்சி. எங்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். நாங்கள் கூட்டணி அமைத்தால் உங்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது.
நீங்கள் ஏன் எரிச்சல் படுகிறீர்கள். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அது எங்கள் இஷ்டம். இவருடன் கூட்டணி வைத்தால் வர மாட்டீர்கள், அவருடன் கூட்டணி வைத்தால் வர மாட்டீர்கள் என்கிறார்கள். இதை சொல்ல தி.மு.க. வினருக்கு அருகதை இல்லை. இதை மக்கள் முடிவு செய்வார்கள். வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.
வருகிற சட்டசபை தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அரசு என்று அமித்ஷா சொல்லவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும். ஆனால் ஆட்சியில் பங்கு என்று அவர் சொல்லவில்லை. ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது.
டெல்லிக்கு பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு என்னுடைய பெயரை சொல்லி அமித்ஷா சொன்னார். இதில் இருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி நீங்கள் ஏதேதோ கண்டு பிடிக்கும் வேலையை விட்டு விடுங்கள். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
தி.மு.க.வை வீழ்தத வேண்டும் என்று ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும் என்றுதான் அமித்ஷா கூறினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி மட்டுமே, ஆட்சியில் கூட்டணி அல்ல. ஆட்சியில் பா.ஜ.க.வினருக்கு பங்கு என கூறவில்லை.
சட்டசபையில் இன்று சட்டமன்ற பேரவை விதி 72-ன் கீழ் அமைச்சரவையின் மீது நம்பிக்கையின்மையை தெரிவிக்கும் தீர்மானத்தை அ.தி.மு.க. சார்பாக நாங்கள் கொண்டு வந்தோம். அது குறித்து அவையில் பேசுவதற்கு சபாநாயகர் மறுத்து விட்டார். அதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது மகன், சகோதரருக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள இடங்கள், இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் 7.4.25 அன்று மத்திய அமலாக்கத்துறை சோதனை நடத்தியதுடன், சோதனைக்கு பின்பு மேல் விசாரணை நடத்தி 11.4.2025 அன்று விளக்கமான செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்கும் போது அளித்த உறுதி மொழியை மீறி இந்து மதத்தை பற்றியும், பெண்கள் பற்றியும் அவர் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு அவதூறாக பேசியது, அமைச்சர் பதவி ஏற்கும் போது அவர் ஏற்ற உறுதிமொழியை மீறிய செயலாகும்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறையான டாஸ்மாக் நிறுவனம் மற்றும் கடைகள் தனியார் மதுபான ஆலைகளில் மத்திய அமலாக்கத்துறை 6.3.2025 அன்று சோதனை நடத்தியது. முதல் கட்டமாக ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே இந்த காரணங்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நாங்கள் கடிதம் கொடுத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்ற போது அதை அப்போதைய சபாநாயகர் அனுமதி கொடுத்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது. அதை மேற்கோள் காட்டி நாங்கள் பேசினோம். எங்களுக்கு அனுமதி கொடுக்க மறுத்த காரணத்தினால் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
தமிழகத்தில் மக்களிடம் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அமலாக்கத்துறை பல்வேறு துறைகளில் சோதனை நடத்தி இந்த துறையில் இவ்வளவு கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்று செய்தி வெளியிடுகிறது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் வெளியிடப்படுகிறது.
ஒரு அமைச்சர் இந்து மதத்தை புண்படுத்துகிற விதமாகவும், பெண்களை இழிவுபடுத்துகின்ற விதமாகவும் பேசி இருக்கிறார். இதெல்லாம் முக்கிய பிரச்சனைகளாக இந்த ஆட்சிக்கு தெரியவில்லை. இதையெல்லாம் அவையில் விவாதிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி கொடுக்கவில்லை. இதை விளக்குவது அரசின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
- தற்போது பா.ஜ.க. யுவமோர்ச்சா தலைவராக கர்நாடக எம்.பி.தேஜஸ்வி சூர்யா பணியாற்றி வருகிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இதனை தொடர்ந்து இவரது பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து, அண்ணாமலைக்கு மத்தியில் பெரிய பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது. இந்த நிலையில், பா.ஜ.க. இளைஞர் பிரிவின் தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பா.ஜ.க. யுவமோர்ச்சா (BJYM) பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பா.ஜ.க. யுவமோர்ச்சா தலைவராக கர்நாடக எம்.பி.தேஜஸ்வி சூர்யா பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவிகளின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.
- சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.
திருச்சி:
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று நிறைவடைந்தது. கடைசி தேர்வான சமூக அறிவியல் பாடத் தேர்வினை நேற்று மாணவ-மாணவிகள் எழுதினர். ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 5 மாணவிகள் மாலையில் வீடு திரும்பவில்லை.
இரவு 8 மணி ஆகியும் அந்த மாணவிகள் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பள்ளியில் விசாரித்த போது, தேர்வு எழுதிவிட்டு மதியமே தேர்வு மையத்திலிருந்து வெளியே சென்றதாக தெரிவித்தனர்.
பின்னர் அவர்களது தோழிகளிடம் விசாரித்த போது, எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பதட்டமடைந்த மாணவிகளின் பெற்றோர் பவானி போலீசில் புகார் செய்தனர்.
பின்னர் துணை போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.
இதில் 5 மாணவிகளும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனே பவானி போலீசார் சமயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சென்று 5 மாணவிகளையும் மீட்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தேர்வில் வெற்றி பெற பெற்றோருக்கு தகவல் கொடுக்காமல் சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை கூறினர். இதை தொடர்ந்து 5 பேரையும் ஈரோட்டுக்கு அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
- அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவே சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது.
- சின்ன அசம்பாவிதமும் நடக்காத வகையில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும்.
மாமல்லபுத்திரத்தில் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* ராமதாஸின் கொள்கைக்கு இணங்க சித்திரை திருவிழா மாநாடு நடைபெறுகிறது.
* அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவே சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது.
* சின்ன அசம்பாவிதமும் நடக்காத வகையில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும்.
* மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களையும் ராமதாஸ் அழைத்துள்ளார். குறிப்பாக பின்தங்கிய மக்களை அழைத்துள்ளார்.
* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான யோசனைகள் மாநாட்டின் மூலம் வழங்கப்படும்.
* தமிழ்நாட்டில் இருந்து போதைப்பொருள், மது விற்பனையை ஒழிக்க வேண்டும் என்றார்.
- 20-க்கும் மேற்பட்டோர் வணிக வளாகம் முன்பு கையில் பதாகைகளுடன் திரண்டனர்.
- போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
கோவை:
தெலுங்கு பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10-ந் தேதி ஜாட் என்ற இந்தி திரைப்படம் வெளியாகியது.
இந்த திரைப்படத்தில், இலங்கை தமிழர் விடுதலை போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் ஜாட் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும், அதனை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார். இல்லையென்றால் அந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்கள் முன்பு நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் அறிவித்தார்.
கோவை-சத்தி சாலையில் பிரபலமான மால் ஒன்று உள்ளது. இந்த மாலில் உள்ள ஒரு தியேட்டரில் ஜாட் திரைப்படம் வெளியாகி இருந்தது.
இதனை கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு அந்த வணிக வளாகம் முன்பு கையில் பதாகைகளுடன் திரண்டனர். அவர்கள் ஜாட் திரைப்படத்தை திரையிடக்கூடாது என கூறி கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி அவர்கள் தியேட்டருக்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.
- உற்பத்தியாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
சேலம்:
டீசல் விற்பனை வரி உயர்வை திரும்ப பெற வேண்டும், 19 சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் கர்நாடக லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதனால் கர்நாடகாவில் உள்ள 5 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் ஓடாததால் தண்ணீர் வினியோகம், கியாஸ் வினியோகம் உள்பட அத்தியாவசிய பணிகளும் முடங்கி உள்ள நிலையில் அங்குள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா வழியாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு வரும் லாரிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட வில்லை.
கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் அத்திப்பள்ளி மற்றும் பெங்களூரு அருகே உள்ள பொம்ம சந்திரா பகுதிகளில் லாரிகளை மொத்தமாக நிறுத்தி வைத்து போராட்டடத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் தமிழக எல்லையான ஓசூர், ஜுஜுவாடி, மூக்கண்டப்பள்ளி உள்பட பல பகுதிகளில் சாலையோரம் நீண்ட தூரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து பொருட்கள் ஏற்றிய லாரிகள் கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.
மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடகாவுக்கு இயக்கப்படும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் அந்தந்த மாவட்டத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள், முட்டைகள், கறிக்கோழிகள், மஞ்சள், ஜவ்வரிசி, ஜவுளி, கல்மாவு, தீப்பெட்டிகள், காய்கறிகள் உள்பட ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் ஒரே நாளில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் அதன் உற்பத்தியாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
இதே போல வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயம், பருப்பு வகைகள், மக்காச்சோளம், பூண்டு, வெங்காயம், எண்ணை வகைககள், தக்காளி, பீட்ரூட், கேரட், முட்டை கோஸ், காலிபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட பழ வகைகள், தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு வரப்படுவதும் தடை பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால் விரைவில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் 10 ஆயிரம் லாரிகளிலும் வேலை பார்க்கும் டிரைவர், கிளீனர், லோடு ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். 10 ஆயிரம் லாரிகளுக்கும் ஒரே நாளில் ஒரு லாரிக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் லாரி உரிமைாளர்களுக்கு மொத்தத்தில் ரூ. 20 கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிைடயே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களுடன் கர்நாடக மாநில முதல்-அமைச்சர் சித்தாராமையா மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.