search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • தென் ஆபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
    • வெற்றிக்கு 2 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் ஜெமிமா 18 ரன்கள் ஸ்கோர் செய்தார்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் வைத்து நேற்று நடைபெற்ற மகளிர் டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வுல்வார்ட்- டன்ஸிம் பிரிட்ஸ் ஜோடி முதல் 7 ஓவரில் 50 ரன்கள் விளாசியது.

     

    தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா சார்பில் முதலில் களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. 10 வது ஓவருக்கு பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி இந்தியாவின் ரன் ரேட்டை உயர்த்தினர்.

     

    வெற்றிக்கு 2 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் ஜெமிமா 18 ரன்கள் ஸ்கோர் செய்தார். ஆனால் கடைசி ஓவரில் 190 ரன்கள் என்ற இலக்கை எட்ட இந்திய அணிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்த போதிலும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. 

     

    • புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை.
    • 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.

    சென்னை:

    இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச்சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் மத்திய அரசு நிறைவேற்றி, கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டிலும் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் தி.மு.க., வக்கீல்கள் இன்று காலையில் இந்த 3 புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி.யும் மூத்த வக்கீலுமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க. வக்கீல்கள் கலந்துக் கொண்டனர். அப்போது, இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று வக்கீல்கள் கோஷம் போட்டனர்.

    அப்போது என்.ஆர்.இளங்கோ கூறுகையில், "பாராளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இல்லாமல், இந்த 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை. நீதி பரிபாலனத்திற்கு இந்த சட்டம் மிகவும் எதிரான வையாக உள்ளது. எனவே, இந்த சட்டங்களை அரசு திரும்ப பெறவேண்டும். இதை வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தி.மு.க. சட்டத்துறை சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்'' என்று கூறினார்.

    இந்த நிலையில், இந்த போராட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் இன்று காலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பின்னர், இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    பின்னர், இதுகுறித்து ஜி.மோகன கிருஷ்ணன் கூறும்போது, `3 சட்டங்களும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனால், இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்'' என்றார்.

    • ஆலோசனை விதிகள் மற்றும் அட்டவணை வெளியிடவில்லை.
    • கால நீட்டிப்பு கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பல் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு வெளி வந்தும் இன்னும் நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வில்லை.

    நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் மீது சி.பி.ஐ. நடவடிக்கை, சுப்ரீம் கோர்ட்டு வழக்கு என பல்வேறு பிரச்சினைகள் உருவாகி உள்ளன.

    நீட் தேர்வு குறித்து டெல்லியில் உள்ள மத்திய சுகாதார சேவை இயக்குனரகம் இன்னும் ஆலோசனை விதிகள் மற்றும் அட்டவணை வெளியிடவில்லை.

    அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தால் தமிழகத்தில் மாணவர் சேர்க்கையை தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் எம்.பி.பி.எஸ். மட்டுமின்றி பல், இந்திய மருத்துவம், ஓமியோபதி, நர்சிங் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள், பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த படிப்புகளில் சேருவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில், ஏ.ஐ.சி.டி.இ. போன்ற மருத்துவ ஏஜென்சிகளிடம் இருந்து கால நீட்டிப்பு கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    அகில இந்திய மருத்துவ இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தும் மத்திய சுகாதார இயக்குனரகம் முதல் கட்ட கலந்தாய்வை முடித்ததும் தமிழகத்தில் முதல் சுற்று தொடங்கப்படும். அது 2-வது சுற்று தொடங்கும் போது நாங்கள் முதல் சுற்றை முடித்து விடுவோம். இதன் மூலம் மாணவர்கள் 2 சுற்றுகளிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவ கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீட் தேர்வு முடிவு வெளி வந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் கலந்தாய்வு நடைமுறையை பின்பற்ற முடியாமல் மாநில அரசு உள்ளது. இதனால் மருத்துவ படிப்பில் சேருவதற்கு தகுதியான மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவர்கள் விரக்தி அடைந்துள்ளனர். கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்து இருக்கின்றனர்.

    இதற்கிடையே பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறைகளை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தொடங்கியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் 13-ல் தொடங்கி 30 வரை நடந்தது. அதையடுத்து ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

    வருகிற 10-ந்தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் போது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்.

    • உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
    • மாணவர்களின் கவனச் சிதறலுக்கு ஆளாகும்

    சென்னை:

    அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை குறைத்து பணி நிரவல் கலந்தாய்வை பள்ளிக் கல்வி துறை நடத்துகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு அவசியமாக உள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

    விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் பயிற்சி களமாக பள்ளி மைதானங்கள் விளங்கி வருகின்றன.

    இந்த நிலையில் அரசு பள்ளிகளில் உடற்கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

    250 முதல் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 700 மாணவர்களாக அரசு உயர்த்தி உள்ளது.

    1997-ம் ஆண்டு அரசாணையின்படி உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 250-ஐ தாண்டும்போது ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவார்.

    ஒவ்வொரு கூடுதல் 300 மாணவர்களுக்கும் ஒரு உடற்கல்வி ஆசிரியர். அதிகபட்சமாக 3 பேர் வரை நியமிக்கப்படுவார்கள். மேல் நிலைப்பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி இயக்குனர் நியமிக்கப்படுகிறார்.

    அரசு பள்ளிகளில் போதிய அளவு உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்த நிலையில் அந்த இடங்களுக்கு புதிய உத்தரவின் படி கூடுதலாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை இடமாற்றம செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    தற்போது 700 மற்றும் அதற்கு குறைவான மாணவர்கள் கொண்ட உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

    700-க்கும் அதிகமாக மாணவர்கள் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 701 முதல் 1500 வரை உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 என இரண்டு பேருக்கு அனுமதி.

    1500-க்கும் மேல் உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் 2 உடற் கல்வி ஆசிரியர்கள் ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 அல்லது நிலை-1 என மொத்தம் 3 பேர் அனுமதிக்கப்படுவர் என்று உத்தரவிட்டுள்ளது.

    தற்போது மாணவர்கள் இடையே போதைப்பொருள், புகையிலை பயன்பாடு இருக்கின்ற நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களை குறைப்பதன் மூலம் வகுப்புகள் குறையக் கூடும். இது மாணவர்களின் கவனச் சிதறலுக்கு ஆளாகும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    • மாணவ-மாணவிகளை பானிபூரி கடைகளில் அதிகமாக பார்க்க முடியும்.
    • நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

    மாலை வேலைகளில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ-மாணவிகளை பானிபூரி கடைகளில் அதிகமாக பார்க்க முடியும்.

    பானி பூரி விரும்பி சாப்பிடும் பழக்கம் சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியிலும் சிறுவர் சிறுமிகள் மத்தியிலும் அதிகரித்து உள்ளது.

    இதுபோன்ற மாணவ-மாணவிகள், இளைஞர்களை குறிவைத்து பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதிகளிலும், கல்லூரிகள் செயல்படும் இடங்களை சுற்றியும் அதிக அளவில் பானிபூரி கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மெரினா கடற்கரையிலும் ஏராளமான பானிபூரி கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பானிபூரி மசாலாவில் பச்சை நிறத்தை அதிகரித்து காட்டுவதற்காக செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

    இதன் படி அம்மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 'ஆப்பிள் கிரீன்' என்று அழைக்கப்படும் ரசாயனம் பானிபூரி மசாலாக்களில் சேர்க்கப்படுவது தெரிய வந்துள்ளது. இந்த ஆப்பிள் கிரீன் ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை உடையது என்று கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மெரினா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளுக்கு சென்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரியான டாக்டர் சதீஷ்குமார் தலை மையிலான குழுவினர் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது பானிபூரியில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களையும் தண்ணீரையும் பரிசோதனைக்காக எடுத்துள்ளனர். இந்த பானி பூரி மசாலாக்களில் ஆப்பிள் கிரீன் என்று அழைக்கப்படும் புற்று நோயை ஏற்படுத்தும் ரசாயனம் கலக்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றி ஆய்வு நடத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்த உடன் ரசாயனம் கலந்த பானிபூரி மசாலாக்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பானிபூரி கடைகளில் பூரியில் ஊற்றி கொடுக்கப்படும் மசாலா தண்ணீரை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மறுநாள் அதனை பயன்படுத்தினால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ஆனால் சென்னையில் உள்ள பானிபூரி கடைகளில் மசாலா கலந்த தண்ணீரை பல நாட்கள் பயன்படுத்தி வருவதும் தெரிய வந்து உள்ளது. இதுபற்றியும் அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர். இந்த முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்றும் அப்போது பானிபூரி கடை கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

    • யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தல் நடந்திருப்பது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    துபாயில் உள்ள இலங்கையை சேர்ந்த ஒருவர் மூலம், சென்னையை மையமாக வைத்து இந்த தங்கம் கடத்தல் நடந்து உள்ளது. இதற்கு சென்னை விமான நிலையத்தில பரிசு பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்து யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சபீர் அலி, அவரது கடையில் வேலைபார்த்த 7 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கடைகள் நடத்தும் உரிமம் பெற யூடியூப்பர் சபீர் அலி கொடுத்த ரூ.77 லட்சம் ஹவாலா பணம் என்பதும், அவருக்கு சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    மேலும் சென்னை விமான நிலையத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒருவர் இந்த தங்கம் கடத்தலில் தொடர்பில் இருந்து உள்ளார். அவரது வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

    அந்த அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். இந்த தங்கம் கடத்தலில் விமான நிலைய அதிகாரிகள் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களும் அடுத்தடுத்து சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் சிக்கி வருகிறார்கள்.

    இதேபோல் விமான நிலையத்தில் செயல்பட்ட மேலும் 3 கடைகளுக்கும் தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாகவும் அதிரடி விசாரணை நடந்து வருகிறது.

    எனவே வரும் நாட்களில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி களிடம் தகவல்களை பெற்று தமிழக போலீசாரும் தனியாக விசாரித்து வருகி றார்கள். சர்வதேச கும்பல் தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அதிகாரி கூறும்போது, `சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை கடையை மையமாக வைத்து தங்கம் கடத்தல் நடந்து உள்ளது. அதில் உள்ளவர்கள் சிக்கிய நாள் அன்றே சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மேலும் 2 கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் அந்த 2 கடைகளிலும் சோதனை நடந்தது. தங்க கடத்தலில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • தொகுதி வாரியாக ஆய்வு நடத்தும்படி மேலிடம் உத்தரவிட்டது.
    • அறிக்கை தயார் செய்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்குகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாதது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் கூட 2-ம் இடத்தையே பெற்றது. ஏற்கனவே இந்த தொகுதிகளில் நடத்தி இருந்த தேர்தலுக்கு முந்தைய ஆய்வுகள், கணிப்புகள் எல்லாம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருந்தும் அந்த தொகுதிகள் கை நழுவியது எப்படி? என்று மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

    இதையடுத்து தொகுதி வாரியாக ஆய்வு நடத்தும்படி மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் ஆய்வு நடந்தது.

    இந்த கூட்டங்களில் வேட்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் அழைக்கப்பட்டு காரணங்கள் கேட்கப்பட்டது.

    தென் சென்னையில் கனகசபாபதி முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது கட்சி தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தை முறையாக விநியோகிக்கவில்லை. கோஷ்டிகளால் தேர்தல் வேலைகளில் உள்ளடி வேலைகளும் நடந்தன என்று பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

    இதனால் சில தொகுதிகளில் நிர்வாகிகளிடையே மோதல், கைகலப்பு வரை நடந்தது. மாநிலம் முழுவதும் நடத்தப்படும் இந்த ஆய்வு கூட்டம் நாளையுடன் முடிவடைகிறது. தொகுதி வாரியாக தோல்விக்கான காரணம், நிர்வாகிகள் செயல்பாடு பற்றிய விரிவான அறிக்கை தயார் செய்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்குகிறார்கள்.

    நாளை மறுநாள் (6-ந் தேதி) பா.ஜனதா மாநில செயற்குழுக் கூட்டம் மதுரவாயல் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கிறது. இதில் மாநில நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்திலும் தேர்தல் தோல்வி தொடர்பாக விவாதிக்க திட்டமிட்டு உள்ளார்கள்.

    செயற்குழு கூட்டத்துக்கு பிறகு மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் புகாருக்கு ஆளான நிர்வாகிகள் பதவிகளை பறிக்க திட்டமிட்டுள்ளனர். செயற்குழு முடிந்ததும் இந்த வேலைகள் தொடங்கும் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை.
    • ஜூலை 23-ந் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு.

    சென்னை:

    இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சட்டங்களை அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என அறிவிக்கக் கோரி, தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    அவர் தனது மனுவில், நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் ஒன்பது மாநிலங்களிலும், இரு யூனியன் பிரதேசங்களிலும் மட்டும் தான் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில், 43.63 சதவீதம் மக்கள் மட்டுமே இந்தியை தாய் மாொழியாகக் கொண்டவர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு மொழிகளில் சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்தியில் பெயரிடப்பட்டுள்ள மூன்று சட்டங்களையும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து, ஆங்கிலத்தில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மூன்று சட்டங்களும் ஆங்கிலத்தில் தான் நிறைவேற்றப்பட்டன எனவும், சட்டங்களின் பெயர்கள் கூட ஆங்கில எழுத்துக்களில் தான் இடம் பெற்றுள்ளன என்றும் விளக்கினார்.

    மேலும், இந்த சட்டங்கள், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை எனவும், எவரின் அடிப்படை உரிமையும் இதனால் பாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

    சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது பாராளுமன்றத்தின் விருப்பம் எனவும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் விளக்கமளித்தார்.

    இதையடுத்து, மனுவுக்கு ஜூலை 23-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை.
    • கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது.

    எண்ணூர்:

    எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் ஏராளமான மீன்களும், இறால்களும் அதிக அளவில் கிடைக்கும். இதனை நம்பி 10 மீனவ கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கொசஸ்தலை ஆறு இணையும் பகுதி முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இதனை கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவு வெளியேற்றப்படும் கழிவு நீரால் இந்த மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    மேலும் இதேபோல் எண்ணூர் முகத்துவார பகுதி அடிக்கடி மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளிப்பதாக குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக மீனவர்கள் கூறியதாவது:-

    எண்ணூர் முகத்துவார பகுதி ஆண்டுதோறும் பல நாட்கள் மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளித்து வருகிறது.

    ஆற்றை சுற்றி இருக்கும் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது. இதனால் ஆற்றில் இருக்கும் மீன்கள் மற்றும் இறால்கள் இனப்பெருக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் கொசஸ்தலை ஆற்றை நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    எனவே எண்ணூர் முகத்துவாரத்தை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் எண்ணூரில் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் நிறமாக வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • சிறை தண்டனையால் பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார்.
    • பலவீனமான ஆதாரங்களே உள்ளது.

    சென்னை:

    1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இவ்வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், போலீஸ் விசாரணையில் குறைபாடுகள் உள்ளது. உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அரசுத்தரப்பு கண்டறியவில்லை. பலவீனமான ஆதாரங்களே உள்ளது. அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை. எனவே, சிறப்பு கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.

    • கேப்ஜெமினி, சென்னையில் புதிய கேம்பஸ் அமைக்க உள்ளதாக தகவல்.
    • தமிழ்நாடு அரசின் இலக்கிற்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தற்போது பெங்களூருக்கு இணையாக தகவல் தொழில் நுட்பத் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஸ்டார்ட்அப் முதல் ஐ.டி. சேவைத் துறை வரையில் தொடர்ந்து முதலீடுகளை பெற்று வருகிறது.

    இதன் வாயிலாக நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியிலும், மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபலமான ஐ.டி. சேவை மற்றும் கன்சல்டிங் சேவை நிறுவனமான கேப்ஜெமினி, சென்னையில் புதிய கேம்பஸ் அமைக்க உள்ளதாக நேற்று (செவ்வாய்க் கிழமை) அறிவித்துள்ளது.

    டெக் நிறுவனங்களின் முதலீடுகள் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், கேப் ஜெமினி அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த முதலீட்டின் வாயிலாக கேம்ஜெமினி சுமார் 6 லட்ச சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய தகவல் தொழில் நுட்ப வளாகத்தில், 5000 ஊழியர்கள் பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது.

    2027-ம் ஆண்டுக்குள் இந்த கேம்பஸ் கட்டி முடிக்கப்படும் என்று கேப்ஜெமினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், கேம்ஜெமினி தற்போது அறிவிக்கப்பட்ட முதலீட்டில் சுமார் ரூ.3 கோடியை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்குவதாகவும் இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த புதிய , ஐடி வளாகத்தில் நவீன கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருக்கும் என்று கேப் ஜெமினி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த கேம்பஸ்-ல் பைனான்சியல் சர்வீசஸ், என்ஜினீயரிங், டிஜிட்டல், கிளவுட், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்கள் பணிபுரிய இது உதவும்.

    மேலும், இந்த வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட என்ஜினீயரிங் லேப்ஸ், வாடிக்கையாளர் சேவை மையங்கள் என தனித்தனி பகுதிகள் இருக்கும் என கேப்ஜெமினி தெரிவித்துள்ளது.

    சென்னையில் மிகப்பெரிய ஐ.டி. கேம்பஸ் என்றால் டி.சி.எஸ். நிறுவனத்தின் சிறுசேரி கேம்பஸ் தான். இதை முறியடிக்கும் வகையில் பல நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் வேளையில் பிரான்சின் கேப்ஜெமினி நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் சென்னையில் ரூ. 1000 கோடி முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டில் இன்னோ வேஷன் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு நாங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த முதலீடு காட்டுகிறது என்று கேப்ஜெமினி நிறு வனத்தின் ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் சேவைகளின் தலைவர் விஜய் சந்திர மோகன் கூறி உள்ளார்.

    கேப்ஜெமினியின் இந்த உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வளாகம், தமிழ்நாட்டில் இருக்கும் திறன்மிக்க டெக் ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ள ஆர்வம்காட்டு வதை பிரதிபலிக்கிறது, மேலும் 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் தமிழ்நாடு அரசின் இலக்கிற்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

    • வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது.
    • படம் திரையரங்குகளில் ஓடி இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலளித்துள்ளது

    இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கருடன் அதிரடி திரில்லர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'கருடன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, ரோஷ்ணி ஹரிப்ரியன், ரேவதி சர்மா, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கருடன் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. திரைக்கதை, வசனங்கள், நடிப்பு என இப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை வென்று புகழ் பெற்றுள்ளது. கிராமத்து திரைக்கதையில் வெளியான இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று இந்த ஆண்டின் வெற்றி பட வரிசையில் இணைந்துள்ளது.

    விடுதலை படத்தின் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கிய நகைச்சுவை நடிகர் சூரி, இப்படத்தில் நாயகனாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படத்தில் சூரியின் நடிப்பை பலரும் பாராட்டினர். நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டு இருந்தவர். விடுதலை படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுப்பட்ட சூரியாக திரையில் வந்தார். அதற்கடுத்து கருடன் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி மக்கள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

    படம் திரையரங்குகளில் ஓடி இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் நாளை [ஜூலை 3] வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×