search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panipuri"

    • மாணவ-மாணவிகளை பானிபூரி கடைகளில் அதிகமாக பார்க்க முடியும்.
    • நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

    மாலை வேலைகளில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ-மாணவிகளை பானிபூரி கடைகளில் அதிகமாக பார்க்க முடியும்.

    பானி பூரி விரும்பி சாப்பிடும் பழக்கம் சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியிலும் சிறுவர் சிறுமிகள் மத்தியிலும் அதிகரித்து உள்ளது.

    இதுபோன்ற மாணவ-மாணவிகள், இளைஞர்களை குறிவைத்து பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதிகளிலும், கல்லூரிகள் செயல்படும் இடங்களை சுற்றியும் அதிக அளவில் பானிபூரி கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மெரினா கடற்கரையிலும் ஏராளமான பானிபூரி கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பானிபூரி மசாலாவில் பச்சை நிறத்தை அதிகரித்து காட்டுவதற்காக செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

    இதன் படி அம்மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 'ஆப்பிள் கிரீன்' என்று அழைக்கப்படும் ரசாயனம் பானிபூரி மசாலாக்களில் சேர்க்கப்படுவது தெரிய வந்துள்ளது. இந்த ஆப்பிள் கிரீன் ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை உடையது என்று கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மெரினா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளுக்கு சென்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரியான டாக்டர் சதீஷ்குமார் தலை மையிலான குழுவினர் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது பானிபூரியில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களையும் தண்ணீரையும் பரிசோதனைக்காக எடுத்துள்ளனர். இந்த பானி பூரி மசாலாக்களில் ஆப்பிள் கிரீன் என்று அழைக்கப்படும் புற்று நோயை ஏற்படுத்தும் ரசாயனம் கலக்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றி ஆய்வு நடத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்த உடன் ரசாயனம் கலந்த பானிபூரி மசாலாக்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பானிபூரி கடைகளில் பூரியில் ஊற்றி கொடுக்கப்படும் மசாலா தண்ணீரை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மறுநாள் அதனை பயன்படுத்தினால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ஆனால் சென்னையில் உள்ள பானிபூரி கடைகளில் மசாலா கலந்த தண்ணீரை பல நாட்கள் பயன்படுத்தி வருவதும் தெரிய வந்து உள்ளது. இதுபற்றியும் அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர். இந்த முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்றும் அப்போது பானிபூரி கடை கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

    • நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.
    • செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சுகாதாரத்துறை சமீபத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பல உணவகங்களில் இருந்து சுமார் 250 பானி பூரி மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தது. இதில் 40 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதியானது.

    மேலும் இந்த ஆய்வில் நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.

    கோபி மஞ்சூரியன் மற்றும் கபாப் போன்ற பிற தின்பண்டங்களில் இதுபோன்ற காரணிகள் இருந்ததால் அவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை போல் பானிபூரியிலும் புற்றுநோய் நிறமூட்டும் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் முழுமையான பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் உடல் நலனில் தனி அக்கறை எடுத்து உடல் நலத்தை பாதிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    கடந்த மாத தொடக்கத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன், கபாப் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பலர் விரும்பி உண்ணும் பிரபலமான வட இந்திய உணவான பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பானிபூரியை விரும்பி உண்ணும் நபர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பானிபூரியை தடை செய்யவும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • கர்நாடகாவில் சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது.
    • 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அனைவரும் விரும்பும் உணவாக பானி பூரி உள்ளது. முதலில் இந்த உணவு வட மாநிலங்களில் மக்களின் விரும்பப்படும் உணவாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த உணவு வட மாநில மக்கள் மூலம் தமிழகத்தில் வந்தது. இதன் மூலம் தமிழகத்திலும் பானி பூரியை மக்களின் விரும்பத்தக்க உணவாக மாறியது.

    பானி பூரி குறித்து தவறான கருத்துக்கள் வந்தாலும் அதனை கண்டுக்கொள்ளாமல் மக்கள் அதனை ருசித்து சாப்பிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பானி பூரி சாப்பிடும் மக்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தியை நேற்று கர்நாடக உணவு பாதுகாப்புதுறை தெரிவித்தது.

    அந்த வகையில் சாலையோரம் உள்ள பானி பூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல புகார்கள் வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியது.

    சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சோதிக்கப்பட்ட 260 பானிபூரி மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும் ஆணை பிறபிக்கப்பட்டது.

    • சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன.
    • பானிபூரியில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வட இந்தியாவில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருந்த பானிபூரி தற்போது இந்தியா முழுவதும் உள்ளவர்களும் விரும்பி உண்ணும் உணவாக மாறிவிட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கடைகளில் இருந்து 260 பானிபூரி மாதிரிகளை சோதனை செய்த பின்னர் அதிர்ச்சிகரமான முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.

    சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    சோதிக்கப்பட்ட 260 பானிபூரி மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    18 பானிபூரி மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றவை என்றும், பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதனையடுத்து உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

    ஏற்கனவே கர்நாடகாவில் கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய்களுக்கு கலக்கப்படும் ரோடமின் பி கெமிக்கலை அம்மாநில அரசு தடை செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு வண்ணங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
    • சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சின்ன ஜமக்கா, மகன்கள் ராமகிருஷ்ணா (வயது 11), விஜய் (6).

    நேற்று முன் தினம் இரவு தனது மகன்களுடன் ஊரில் உள்ள ஒரு பானி பூரி கடைக்கு சென்றனர். தந்தை வாங்கி கொடுத்த பானி பூரியை சாப்பிட்டுவிட்டு சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று தூங்கினர்.

    நேற்று அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

    அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அங்கிருந்து ராஜமகேந்திராவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு விஜய் இறந்தார்.

    இதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில், மூத்த மகன், ராமகிருஷ்ணனுக்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. ஏலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், வழியிலேயே அவர் இறந்தார். பானி பூரி சாப்பிட்டதால் மகன்கள் இறந்ததாக பெற்றோர்கள் கூறினர்.

    தூங்கும் போது ஏதேனும் விஷ பூச்சி கடித்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் இரவில் வீட்டில் சாப்பிட்ட உணவு, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×