என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPM"

    • பணம் கொடுக்கல் வாங்கலில் இளையராஜா தன்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டியதாக குணசேகரன் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜா மற்றும் அவரது உறவினரான புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேனி மாவட்ட செயலாளர் இளையராஜா என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் பணம் கொடுக்கல் வாங்கலில் இளையராஜா தன்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டியதாக குணசேகரன் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜா மற்றும் அவரது உறவினரான புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது.
    • மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது.

    இந்த முறை கோவை தொகுதியை தி.மு.க. தனக்கு வைத்துக்கொண்டு அதற்கு பதில் திண்டுக்கல் தொகுதியை கொடுத்து இருக்கிறது.

    திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 35 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து மீண்டும் போட்டியிட உள்ளது. 1977-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது. அப்போது அ.தி.மு.க. வேட்பாளரிடம் கம்யூனிஸ்டு வேட்பாளர் தோல்வியை தழுவினார்.

    1989-ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்ட போது மீண்டும் தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கிய கம்யூனிஸ்டுக்கு தோல்வியே கிடைத்தது. கடந்த 2014-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட்டு 1.81 சதவீத வாக்குகளே பெற்றது.

    இந்த நிலையில் தற்போது தி.மு.க. கூட்டணியில் 4-வது முறையாக திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்டமான வெற்றி பெற்று இருந்தார்.

    எனவே இந்த தடவை மிக எளிதான வெற்றியை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பெற முடியும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் நம்புகிறார்கள். அதற்கு ஏற்ப வேட்பாளர்களை தேர்வு செய்ய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல் தொகுதியில் இதுவரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது இல்லை. ஆனால் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் 7 தடவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. எனவே இந்த தடவை நிச்சயம் வெற்றியை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் உள்ளனர்.

    இதற்காக 3 பேர் பெயரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் வேட்பாளராக தேர்வு செய்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பாண்டிக்கு வாய்ப்பு கொடுக்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.

    இதற்கிடையே தீக்கதிர் பத்திரிகை ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று பரிசீலனை செய்யப்படுகிறது. மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது. எனவே மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    மதுரை தொகுதியில் தற்போது சு.வெங்கடேசன் எம்.பி.யாக உள்ளார். அவரையே மீண்டும் மதுரை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    கடந்த 5 ஆண்டுகளில் சு.வெங்கடேசன் எம்.பி. மதுரை தொகுதிக்கு மிக சிறப்பான சேவை செய்திருப்பதாக தி.மு.க. தலைவர்கள் பாராட்டுகிறார்கள். குறிப்பாக முக்கிய பிரச்சனைகளை உடனுக்குடன் வெளியில் தெரிவித்து அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக சு.வெங்கடேசனுக்கு நல்ல பெயர் உள்ளது.

    அவரையே மீண்டும் களம் இறக்குமாறு தி.மு.க. தரப்பில் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    • தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு திண்டுக்கல், மதுரை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
    • கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை, கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது.

    இந்த முறை கோவை தொகுதியை தி.மு.க. தனக்கு வைத்துக்கொண்டு அதற்கு பதில் திண்டுக்கல் தொகுதியைக் கொடுத்துள்ளது.

    திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 35 ஆண்டுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து மீண்டும் போட்டியிட உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

    அதன்படி, திண்டுக்கல் தொகுதியில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மதுரையில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
    • தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களிடம் அதானி ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்து தான் முதலீட்டை ஏற்றுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அதானி, அவரது மருமகன் உட்பட 7 பேர் மீது பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இவ்வளவு பெரிய முறைகேடு நடந்ததை அங்குள்ள பங்கு சந்தை நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இதனை கண்டு கொள்ளவில்லை. ஏன் இவ்வளவு பெரிய முறைகேட்டை இவர்கள் கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்க நிறுவனம் சொன்ன பின்பாவது மத்திய அரசு ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கும், எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அந்த நிறுவனம் சார்பில் பதில் கூறப்பட்டுள்ளது. இதனை மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

    அதானி என்பது முகம் தான், பின்னால் இருப்பது நரேந்திர மோடி தான். அவரது பினாமியாக இருப்பதால்தான் அதானி மீது எவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் மோடி அரசாங்கம் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. அவர்கள் மீது சம்மன் அனுப்புவதில்லை. விசாரணைக்கு கூட அழைப்பது இல்லை. எனவே மத்திய அரசு உடனடியாக அதானியை கைது செய்ய வேண்டியும், முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.

    இந்த முறைகேடு பட்டியலில் தமிழ்நாடு அரசு இடம் பெற்றுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, நாங்கள் அதானியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

    தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை மத்திய அரசு வாங்கி, மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். நான் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்வது, தமிழ்நாடு பெயர் அந்தப் பட்டியலில் வந்துள்ளதால் இது சம்பந்தமாக தமிழக அரசு விசாரணையை தெளிவுபடுத்த வேண்டும். முழுமையான விவரங்கள் என்னவென்று தெரிவிக்க வேண்டும்.

    பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் கூட ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்தை முன்மொழிவதாக கூறுகின்றனர்.

    ஏதோ ஒரு முறைகேடு மூலமாக பாராளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சதி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற துடிக்கிறது.

    தமிழக சட்டமன்றம் விரைவில் கூட உள்ளது. தமிழக சட்டமன்றத்தை 3 அல்லது 4 நாட்கள் நடத்துவதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் தோழமைக் கட்சிகள் கருத்துக்களை பேசுவதற்கும், நாட்டில் உள்ள பல முக்கியமான பிரச்சனைகளை விவாதிப்பதற்கும் உரிய அவகாசத்துடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டும். முதலமைச்சரும் சபாநாயகரும் சட்டமன்றத்தை போதுமான அவகாசம் கொடுத்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பினை சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

    பள்ளியில் ஆசிரியர்கள், நீதிமன்றத்தில் வக்கீல்கள், மருத்துவமனையில் டாக்டர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் வன்மையான கண்டனத்துக்குரியது. இது தனிமனித விரோதம் காரணமாக நடைபெறுகிறது. தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது. போதைப்பொருள் ஒழிப்பதில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் இந்த விஷயத்தில் மெத்தனமாக உள்ளனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிக்கட்டான்பட்டியில் மத்திய அரசு 2000க்கும் மேற்பட்ட இடங்களில் கனிம வளங்களை எடுப்பதற்கு ஏலம் விட்டுள்ளது. அந்த இடத்தை பல்லுயிர் பாதுகாப்பு மையம் என்கின்ற முறையில் தமிழக அரசு 6 மாதத்திற்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

    2026 தேர்தலில் கூட்டணிகள் மாறும் என பலர் அவர்கள் யூகத்தின் அடிப்படையில் கூறி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. கூட்டணி மாறுவதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை .

    அ.தி.மு.க.வில் உள்ள தலைவர்களுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் உள்ளது. அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் தோற்றத்துக்கு சரியான கூட்டணி இல்லாதது தான் காரணம் என கூறுகின்றனர்.

    மீண்டும் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு சென்றால் அ.தி.மு.க. என்ற ஒரு கட்சியே இருக்காது.

    முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு மற்றும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என பேசி உள்ளார். பொத்தாம் பொதுவாக சொல்லாமல் உங்களிடம் யார் பணம் கேட்டார்கள் என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

    யார் பணம் கேட்டார்கள்? நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சச்சிதானந்தம் எம்.பி. மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக சண்முகம் தேர்வு.

    விழுப்புரத்தில் கட்சியின் மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.

    மேலும், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் கட்சியில் எந்த பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது" என குறிப்பிட்டிருந்தார்.

    அதன்படி, விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர்.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பச்சையப்பன் கல்லூரியில் நடந்த விழாவில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார்.
    • அப்போது, கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டனர் என்றார்.

    சென்னை:

    சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசுகையில், கம்யூனிச கொள்கை தோற்றுப்போய் விட்டது. கம்யூனிசத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசம் செம்மையானது. கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதால் கம்யூனிச தத்துவங்கள் நீர்த்துப் போனது என தெரிவித்தார்.

    இந்நிலையில், சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும்.

    கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுயநலவாதிகள் என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசியது மிகவும் தவறானது என தெரிவித்தார்.

    • தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
    • தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர்.

    தந்தை பெரியார் குறித்த சீமானின் அவதூறு கருத்துகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், தனது அநாகரீகச் செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார் குறித்து, இழிவான ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்களை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    சுயமரியாதை, சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சாதி ஒழிப்பு என பல்வேறு தளங்களிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செலுத்தியிருக்கும் தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர்.

    அவருடைய சிந்தனையால் ஆத்திரமடைந்த பிற்போக்கு சக்திகளும், சங் பரிவார வெறுப்பரசியல் கூட்டமும் அவருடைய சிலையை சேதப்படுத்துவது, அவதூறுகளின் மூலம் இழிவுபடுத்துவது என்று தரம் தாழ்ந்து செயல்பட்டு பரவலான கண்டனத்திற்கு ஆளாகி வந்தனர்.

    தற்போது அதே பாதையில், மிக மோசமான அவதூறுகளை வெளிப்படுத்தியிருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். தந்தை பெரியாரின் வாழ்க்கையும், அவருடைய பேச்சுக்களும் வரலாற்று ஏடுகளில் பதிவானவை.

    ஆய்வாளர்கள், சிந்தனையாளர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டும், ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டும் வரக்கூடியவை. அவருடைய கருத்துக்களின் தொகுப்பு இந்தியாவில் நிலவும் சாதிப் படிநிலைச் சுரண்டலுக்கு எதிரானவை என்பதுடன், சமுதாயத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை ஒழித்து, முற்போக்குத் திசையில் பயணிக்க உதவக்கூடியவை.

    அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரோடு உடன்பட்டும், முரண்பட்டும் பயணித்துள்ள பொதுவுடைமை இயக்கமோ அல்லது வேறு பல இயக்கங்களோ கருத்துக்களை விமர்சித்துள்ளோமே அன்றி ஒரு போதும் அவதூறு, இழிவான தாக்குதல்களை செய்ததில்லை.

    ஆனால், பெரியாரை வெறுக்கும் பிற்போக்கு சக்திகள், அவர் பேசியதாக பல்வேறு பொய்களை இட்டுக்கட்டியும், அல்லது குறிப்பிட்ட கருத்துக்கள் பேசப்பட்ட பின்னணியை மறைத்தும், திரித்தும் அவதூறுகளை முன்வைக்கின்றனர்.

    அதன் மூலம் பெரியாரின் கருத்துக்களை முற்றாக வீழ்த்துவதுடன் தமிழ்நாட்டை பின் நோக்கி இழுத்துச் செல்ல முடியும் என நினைக்கிறார்கள். இதுவரை சங்பரிவாரத்தால் செய்யப்பட்டு வந்த அவதூறுகளை இப்போது சீமானும் முன்னெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

    சீமான் வெளியிட்டிருக்கும் அவதூறு கருத்துக்களை சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது அநாகரீகச் செயலுக்காக சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்"
    • தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்று தெரிவித்துள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பியுமான சசி தரூர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்து சசி தரூர் பாராட்டி பேசினார். கேரளாவில் ஆளும் இடது முன்னணி ( எல்.டி.எப் ) அரசின் கொள்கைகளையும் சசி தரூர் பாராட்டி பேசினார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியது.

     

    கேரள மாநில காங்கிரஸ் சரியான தலைமை இன்றி தவிப்பதாகவும் அவர் கூறியது உள்ளூர் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சசி தரூர் சந்தித்து பேசினார்.

    அரை மணி நேர சந்திப்பில் ராகுலிடம் தான் சில முக்கிய பிரச்சனைகளை எடுத்துக்கூறியதாக சசி தரூர் தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் செய்தியாளர்களிடம் உட்கட்சி பிரச்சனை பற்றி பேச மறுத்துவிட்டார். ''இன்று முக்கிய கிரிக்கெட் மேட்ச். எல்லோரும் சென்று பாருங்கள்'' என்று மட்டும் கூறிவிட்டு நழுவினார்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் நேர்காணலில் பங்கேற்ற சசி தரூர், நான் எப்போதும் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். கட்சிக்காக பணியாற்றத் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், எனக்கு வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன.

    கட்சி மாறுவது குறித்த வதந்திகள் உண்மை இல்லை. என்னை ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. புதிய வாக்காளர்களை ஈர்க்க காங்கிரஸ் தனது தளத்தை கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

    கேரளாவில் தேர்தலுக்கு ஒரு ஆண்டு மட்டுமே உள்ளது. அதற்குள் காங்கிரஸ் தனது ஆதரவு மட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

     

    இதற்கிடையே சசி தரூரை வரவேற்கத் தயாராக இருப்பதாகக் கேரள மாநில சிபிஎம் கட்சி தெரிவித்துள்ளது. சசி தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்றும் தாங்கள் அவரை வரவேற்போம் என்றும் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். சசி தரூருக்காக கட்சி எப்போதும் ஒரு கதவைத் திறந்து வைக்கும் என்று சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கூறினார்.

    சமீபத்தில் சசி தரூரின் எக்ஸ் பதிவு ஒன்றும் வைரலானது. 18 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலக் கவிஞர் தாமஸ் கிரே எழுதிய ஒரு கவிதையிலிருந்து சில வரிகளை சசி தரூர் பகிர்ந்தார். "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்" என்று அந்த கவிதை கூறுகிறது. சசி தரூரும் அதையே மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது. 

    • பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு பேசிய அரசியலின் மர்மம் என்ன? என சிபிஎம் கேள்வி
    • அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேச உரிமையுள்ளது. அத்தகைய சந்திப்பை சிபிஐ (எம்) கேள்வியெழுப்பவில்லை. அதேசமயம், "நாங்கள் அரசியல் பேசினோம்; ஆனால் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது" என ரஜினிகாந்த் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். "பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாத" அளவுக்கு பேசிய அரசியலின் மர்மம் என்ன? ஆளுநர் அரசியல்வாதியாகவும், ஆளுநர் மாளிகையை அரசியல் கட்சி அலுவலகமாகவும் மாற்றுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதையே சிபிஐ (எம்) கேள்விக்குள்ளாக்கியது.

    இக்கேள்விக்கு ஆளுநரோ, ஆளுநர் அலுவலகமோ பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, முந்திரிக்கொட்டையைப் போல் முந்திக்கொண்டு அண்ணாமலை பேட்டியளிக்க எந்த அவசியமுமில்லை. அண்ணாமலை ஒன்றும் ஆளுநரின் செயலாளரோ, செய்தி தொடர்பாளரோ அல்ல; அப்படியிருக்கும் போது வரிந்துகட்டிக் கொண்டு அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் உள்ளது.

    மாநில அரசின் உரிமைகளை பறிப்பது, மத்திய அரசின் கொள்கைகளை நேரடியாக தமிழ்நாட்டில் நுழைப்பது, மாநில அரசுக்கு தெரியாமலேயே பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்துவது, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து தமிழ்நாட்டிற்கு ஏற்ற ஒரு கல்விக்கொள்கையை உருவாக்க தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைத்திருக்கிற நிலையில், புதிய கல்விக்கொள்கையை நிறைவேற்றுவதற்கு பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் கூட்டத்தை நடத்துவது போன்ற காரியங்களை தமிழக ஆளுநர் செய்து வருகிறார்.

    ஆளுநர் என்ற எல்லையைத் தாண்டி ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மேடைகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரின் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே கடும் விமர்சனத்தை தமிழகத்திலேயே உருவாக்கியுள்ளன. இந்த சூழலில் ஆளுநர், ரஜினிகாந்திடம் பகிர்ந்து கொள்ள முடியாத அரசியல் பேசியது அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரிந்ததாகும். ஆனால், ஐ.பி.எஸ். அண்ணாமலைக்கு இந்த அடிப்படை விசயம் புரியாமல் போனது ஏன்? .

    தேர்தல் பத்திரங்கள் வழியாகவும், கார்ப்பரேட் கம்பெனிகளில் சுரண்டல்களில் பங்குபெற்றதன் வழியாகவும் பல்லாயிரம் கோடிகளை சுருட்டி அதைவைத்து தமிழ்நாட்டில் பாஜகவுக்கு உயிரூட்ட அண்ணாமலை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் படுதோல்வியடைந்துள்ளன. இந்நிலையில் ஆளுநர் அலுவலகத்தை தங்கள் கட்சி அலுவலகமாக மாற்றுகிற முயற்சியும் பகிரங்கமானதன் விளைவே அண்ணாமலையின் ஆதங்கத்திற்கு காரணமாகும்.

    பாஜகவைப் போல மன்னிப்பு கடிதம் சுமந்த பாரம்பரியத்தில் வந்தவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்டுகள், சுதந்திரப்போராட்டத்திற்கு துரோகமிழைத்த பாஜகவின் தலைவராக இருந்து கொண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் பேசுவதற்கு விசயமில்லாத சூழ்நிலையில், ஆளுநருக்கு வக்காலத்து வாங்கி கம்யூனிஸ்ட்டுகள் மீது அண்ணாமலை தாக்குதல் தொடுத்துள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த காலத்திலும் யாருக்கும் 'பி' டீம் ஆக இருந்ததில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தோன்றிய காலம் முதல் ஆங்கிலேயர்களுக்கு 'பீ' டீம் ஆகவும், ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளின் 'பீ' டீம் ஆகவும் செயல்படுவதற்காக மட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. அதன் தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை. மக்கள் செல்வாக்கை பெற முடியாமல் புறக்கடை வழியாக ஆளுநர் மூலம் அரசியல் செய்ய முயற்சிக்கும் பாஜகவின் எண்ணம் பகல் கனவாகவே முடியும்.

    இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.

    • நாட்டில் உள்ள இளைஞர்கள் பாஜக அலுவலகத்தை பாதுகாக்கும் காவலர்கள் அல்ல.
    • இளைஞர்களின் சக்தி இந்த நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறது.

    அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு பணி நிறைவுக்கு பிறகு, பாஜக அலுவலகங்களில் பாதுகாவலர்கள் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா தெரிவித்திருந்தார்.

    அவரது இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து கைலாஷ் விஜய் வர்கியாவுக்கு, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    கைலாஷ் விஜய் வர்கியாவின் இந்த கருத்து பாஜகவின் உண்மையான மனநிலையை அம்பலப்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள இளைஞர்கள் பாஜக அலுவலகத்தை பாதுகாக்கும் காவலர்கள் அல்ல என்றும், மோடி அரசை போல் அல்லாமல் இளைஞர்களின் சக்தி இந்த நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    விஜயவர்கியா, தேசத்தின் இளம் ஆர்வமுள்ள ராணுவ வீரர்களை அவமதித்துள்ளதாகவும், நாட்டைக் காக்கும் ஆயுதப் படைகளின் வீரத்தை சிறுமைப்படுத்தி விட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி, தெரிவித்து உள்ளார். விஜயவர்கியாவின் கருத்து குறித்து பாஜக உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    அக்னி வீரர்கள் பாஜக அலுவலங்களில் வாட்ச்மேனாக மாறும் நிலை குறித்து அஞ்சுவதாக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதைப்போல் விஜயவர்கியாவின் கருத்திற்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், பாஜக எம்.பி. வருண்காந்தி உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் தனது கருத்துகளை காங்கிரஸ் கட்சி திரித்து கூறுவதாக கைலாஷ் விஜய் வர்கியா குற்றம் சாட்டியுள்ளார். ராணுவ பணிகளை முடித்தபின் எந்த துறையிலும் அக்னி வீரர்களை பணியில் அமர்த்த முடியும் என்பதையே தான் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்து உள்ளார்.

    மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    மதுரை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    மதுரை தொகுதியில் 11 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 2,69,382 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியன் இருந்தார். அவர் 1,80,147 வாக்குகள் பெற்றிருந்தார்.

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் 51 ஆயிரத்து 310 வாக்குகளும், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை 44 ஆயிரத்து 900 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் 25 ஆயிரத்து 973 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டனர். #LSPolls #CPM #DMK
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

    இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் வெளியிட்டார். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

    நவாஸ்கனி

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.



    அப்போது, திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவித்தார்.  #LSPolls #CPM #DMK
    ×