என் மலர்
நீங்கள் தேடியது "crops"
- 4 ஆயிரம் ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம்மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
வேதாரண்யம்:
தலைஞாயிறு பகுதியில் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
5 ஆயிரம் ஏக்கர் இலக்கு தலைஞாயிறு வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உளுந்து மற்றும் பச்சைபயறு பயிரிடுவதற்கு தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை ஆகியவை மானிய விலையில் கொத்தங்குடி, நீர்முளை, பனங்காடி, தலைஞாயிறு ஆகிய வேளாண்மை கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
குறைந்த நாட்களில் அதிக மகசூல் விவசாயிகள் நெல் அறுவடைக்கு பின் பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம்மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
இதை சாகுபடி செய்வதால் குறைந்த நாட்களில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கிறது. தலைஞாயிறு பகுதியில் தற்போது நெல் அறுவடை பணிகள் நிறைவு பெறும் நிலையில், உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பூதலூர்:
காவேரி டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12க்கு பதிலாக மே மாதம் 24 ம் தேதி திறக்கப்பட்டது.
பருவம் தப்பிய மழையால் நடவு பணிகள் சற்று தாமதம் ஆகியது இதனால் கல்லணையில் தலைப்பு பகுதியான பூதலூர் தாலுகா பகுதிகளில் பல இடங்களில் இன்னும் சில வாரங்களுக்கு வயல்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.
இந்நிலையில் ஜனவரி 28ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது.
இதனால் தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது
இதனால் உடனடியாக மேலும் சில வாரங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி இன்று காலை பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் விவசாயிகள் சங்கத்தினர், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் தஞ்சை மாவட்ட விவசாய சங்க செயலாளர் கண்ணன், தஞ்சை மாவட்ட அனைத்திந்திய மாத சங்க செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முக்கியமான இடத்தில் சாலை மறியல் நடைபெற்றதால் இரண்டு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துநின்றன. பூதலூர் தாசில்தார் பெர்ஷியா திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் சாலை மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதை அடுத்து சாலை மறியல் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.
இதனால் இந்த தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீர்வள த்துறை அதிகாரி உடன் பேசி நடவடிக்கை எடுக்க ப்படும் என்று உறுதி கூறியது அடிப்படையில் சாலை மறியல் போரா ட்டம் தற்காலிகமாக கைவி டப்பட்டது.
- நேற்று இரவு ஜெயக்குமார், பிரகாஷ் ஆகியோரின் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
- சேதமான பயிர்களின் மதிப்பு ரூ.1 ½ லட்சம் என கூறப்படுகிறது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது.
அதில் அவர்கள் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர். தற்போது அவை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு ஜெயக்குமார், பிரகாஷ் ஆகியோரின் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுவதும் அனைக்கப்பட்டது. எனினும் அவர்களது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. சேதமான பயிர்களின் மதிப்பு ரூ.1 ½ லட்சம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயக்குமார் கயத்தாறு போலீசில் புகார் செய்தார். அதில், தனக்கு வேண்டாத சிலர் தோட்டத்தில் உள்ள மக்காச்சோள பயிர்களுக்கு தீவைத்து சென்றுள்ளனர். எனவே இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
- நீர் தட்டுப்பாடு காரணமாக ஏற்படும் தாக்கம் உடனடியாக தெரிந்துவிடுகிறது.
- தென்னை நார்கழிவுகள், கரும்புசோகை என கிடைக்கும் பொருட்களை வைத்து மூடாக்கு அமைக்கலாம்.
குடிமங்கலம் :
கோடை காலத்தில் பயிர்களுக்கு ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பயிர் மேலாண்மை உத்திகள் குறித்து வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து கோவை வேளாண் பல்கலை பேராசிரியர்கள் ஆனந்தராஜா, குகன் ஆகியோர் கூறியதாவது:- கோடை காலங்களில் பயிர்களுக்கு ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் வெப்ப அயர்ச்சி உற்பத்தியிலும், பொருளாதார ரீதியாகவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீர் தட்டுப்பாடு காரணமாக ஏற்படும் தாக்கம் உடனடியாக தெரிந்துவிடுகிறது. ஆனால் வெப்ப அயற்சியின் காரணமாக ஏற்படும் மாற்றம், இலைகளின் அளவு மற்றும் வடிவத்தின் வாயிலாகவும், மகசூல் குறைவதன் வாயிலாகவும் தெரிகிறது. நீர் தட்டுப்பாட்டை போக்க மேலாண்மை செய்ய, பயிர்களுக்கு மூடாக்கு முறைகளையும் வெப்ப அயர்ச்சியை குறைக்க நீராவிபோக்கை குறைக்கும் முறைகளையும் செயல்படுத்தினால் அதிக மகசூல் கொடுக்கும்.
நிலப்போர்வை அல்லது மூடாக்கு அமைப்பதன் வாயிலாக நீர் ஆவியாதலை குறைத்து கிடைக்கும் நீரை பயிர்களுக்கு பயன்படுத்தலாம். மூடாக்கின் அமைப்பதால் களை கட்டுப்பாடு மற்றும் நுண்ணுயிர் பெருக்கத்தை ஏற்படுத்தி மண்ணை உயிர்ப்போடு வைத்திருக்கலாம்.சில சமயம் துணை பயனாக களைக்கட்டுப்பாட்டு செலவு குறைவதால் நீர்பற்றாக்குறை இல்லாத இடங்களில் கூட நிலப்போர்வை முறை பின்பற்றப்படுகிறது.பயிர் எச்சங்களை 5 முதல் 10 செ.மீ., தடிமன் அளவுக்கு சராசரியாக பரப்பி விடுதல் வேண்டும். இதற்கு ெஹக்டேருக்கு 5 முதல் 10 டன் என்ற அளவிற்கு பயிர் எச்சங்கள் தேவைப்படலாம்.
தென்னை நார்கழிவுகள், ஓலைகள், கரும்புசோகை, கரும்புச்சக்கை என கிடைக்கும் பொருட்களை வைத்து மூடாக்கு அமைக்கலாம். இவற்றை கையாள்வதற்கும், பரப்புவதற்கும் ஏற்ப சிறிய துண்டுகளாக இருப்பது அவசியம்.
நெகிழி மூடாக்கில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களினால் தாள்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் தடிமன் 20 முதல் 25 மைக்ரான் வரை இருக்கும். கருப்புநிறம் கொண்ட தாள்கள், மண்ணின் வெப்பநிலையை அதிகரிக்க செய்கிறது. வெள்ளை நிற நிலப்போர்வையில் கருப்பு நெகிழி மூடாக்கைவிட வெப்பநிலை குறைவாக இருக்கும்.
சொட்டுநீர் குழாய்களை சரியாக வரிசைப்படுத்தி அதன் மீது போர்வையை போர்த்திய பின் அதன் ஓரங்களில் மண் அணைக்க வேண்டும். பயிரின் இடைவெளிக்கு ஏற்ப சீரான இடைவெளியில் துளைகள் இட வேண்டும். அதன்பின் நாற்று விதைகளை நடலாம்.
வெப்ப அயர்ச்சியை தவிர்க்க நீராவி போக்கினை கட்டுப்படுத்தியும், இலைகளில் வெப்பநிலையை மாற்றக்கூடிய திரவங்களை தெளித்தும் கட்டுப்படுத்தலாம். வெப்ப அயர்ச்சியை கட்டுப்படுத்தும் திரவங்களை சமீப காலமாக மட்டுமே விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் வெவ்வேறு வகையான செயல்திறன் கொண்ட திரவங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், அவற்றின் நோக்கம் வெப்ப அயர்ச்சியை கட்டுப்படுத்துவது மட்டுமே.
உதாரணமாக திரவ நுண்ணுயிரான மெத்தைலோபாக்டீரியாவை காலை அல்லது மாலை வேளைகளில் இரண்டு சதவீத கரைசலை ஒரு லிட்டர் நீரில் 20 மில்லி அளவில் தெளித்து பயன்படுத்தலாம். அப்போது பச்சையத்தை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம். இதனால் மகசூல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.இதனை பூ மற்றும் காய் பிடிக்கும் போதும், வறட்சியான நேரங்களிலும் பயன்படுத்துவது சிறந்தது. அதேபோல் கயோலின் என்ற மருந்து, களி மண் கலந்தது போன்று இருக்கும். இதை தண்ணீரில் 5 சதவீதம் என்ற அளவில் தெளிக்கும் போது வெப்ப நிலை மற்றும் நீராவிப்போக்கு ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- சுமார் 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகிறோம்.
- தண்ணீர் செல்வது தடைபட்டு மழை காலங்களில் பயிர்கள் மூழ்கி விடுகின்றன.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பூதலூர் தாலுகா சொரக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
எங்கள் கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகிறோம்.
வெண்டையம்பட்டி வருவாய் கிராமத்தில் ஊமத்தன் ஏரி உள்ளது.
இந்த ஏரியில் வடிகால் வாரியானது தூர்ந்து போய் புதர் மண்டி உள்ளது.
இதனால் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.
மழை காலங்களில் பயிர்கள் மூழ்கி விடுகின்றன.
எனவே வடிகால் வாரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுமார் 60 அடி முதல் 78 அடி வரை வருவாய்த்துறை பதிவேட்டின் படி அகலம் கொண்டு செல்கிறது.
- சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு, நிலக்கடலை, தானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த குளிச்சப்பட்டு கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் வட்டம் சூரக்கோட்டை கிராம எல்லையில் ஓடும் வடிகால் குளிச்சப்பட்டு கிராம எல்லையில் உள்ள பொன்னேரியில் இருந்து வடியும் மழை நீரை தொடக்கமாகக் கொண்டு ரூ.18,00000 மதிப்பில் 5 கி.மீ. தூரம் ஜம்புகாபுரம் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணிகள் கடந்த 13-ந் தேதி நடைபெற்றது.
இந்த வடிகால் வாய்க்கால் சுமார் 60 அடி முதல் 78 அடி வரை 16.9 மீட்டர் முதல் 24 மீட்டர் வரை வருவாய்த்துறை பதிவேட்டின் படி அகலம் கொண்டு செல்கிறது.
இதில் சில பகுதிகள் ஆக்கிரமிப்பிலும், மேடு பகுதிகளாகவும் உள்ளது.
இதற்கு முன் இரு கரைகளும் வண்டியில் செல்லும் அளவுக்கு பாதியாக இருந்து பயன்பாட்டில் இருந்தன.
நாளடைவில் வயல் பகுதியாக ஆக்கிரமிப்பு உள்ளன.
தற்போது இந்த வடிகாலை வருவாய்த்துறை பதிவேட்டின் படி தூர்வாராமல் மிகக் குறைந்த அளவில் இருக்கும் படியே தூர்வாரும் பணி நடைபெற்றது.
அன்றைய தினமே குளிச்சப்பட்டு கிராம மக்கள் அந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தோம்.
அதன்படி அந்த அதிகாரிகள் சர்வே செய்த பிறகு தூர்வாரும் பணிகள் செய்கிறோம் என கூறிவிட்டனர்.
ஜம்புகாபுரம் வடிகால் பகுதியான வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு, நிலக்கடலை, தானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர்.
இந்த பகுதிக்கு சாலை வசதி கிடையாது.
இந்த வடிகாலை வருவாய்த்துறை பதிவேடு படி தூர்வாரி கரையை உயர்த்தினால் அறுவடை செய்யும் அறுவடை இயந்திரங்கள், உழவு டிராக்டர்கள், விவசாய இடு பொருட்கள் கொண்டு செல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே இந்த வடிகால் தூர்வாரும் பணிகளை பொன்னேரி பாயிண்டில் இருந்து குளிச்சப்பட்டு சாலை அல்லது வாளமர் கோட்டை சாலை பகுதி வரை தூர்வாரும்படியும், கரைகளை உயர்த்த ஆவணம் செய்யும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.
- வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னரம்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையன் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் சொந்த கிராமத்தில் 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.
எங்களுக்கு வேறு இடமோ, வீடோ இல்லை. பனைத் தொழில் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இந்த இடத்திற்கு எங்களுக்கு 2சி பட்டா வழங்கப்பட்டுள்ளது. பனை மரங்களுக்கு வரியும் நிலத்திற்கு கந்தாயர் ரசிதும் செய்து வருகிறோம்.
ஆனால் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை இடித்தும் விவசாயத்தை அழித்தும் எங்கள் இடத்தை காலி செய்ய சொல்லியும் மிரட்டி வருகின்றனர். எனவே 3 தலைமுறையாக எங்கள் அனுபவத்தில் மற்றும் எங்களின் வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
- நாட்டின் தேசியப்பறவையான மயில் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது.
- மலைப்பகுதிகளிலும், முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில் இனம் தற்போது வாழ்விடத்தை இழந்து தவிக்கின்றன.
உடுமலை :
நாட்டின் தேசியப்பறவையான மயில் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மயில், கோழி இனத்தை சேர்ந்த பெரிய பறவையாகும். காடும், காடும் சார்ந்த பகுதிகளில் மயில் வாழ்ந்து வந்தது.இப்பறவை காடுகளில் கிடைக்கும் விட்டில் மற்றும் சிறு பூச்சிகள், பூரான், மண்புழு, சிறிய பாம்புகள் மற்றும் தானியங்களை உணவாக உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன.
மலைப்பகுதிகளிலும், முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில் இனம் தற்போது வாழ்விடத்தை இழந்து தவிக்கின்றன. உணவுக்காக அவை விளை நிலங்களுக்கு படையெடுக்கின்றன. முதலில் மனிதர்கள் நடமாட்டம், வாகனங்கள் சப்தம் கேட்டாலோ ஓடியும், பறந்தும் மறையும் மயில்கள் தற்போது மனிதர்களை கண்டு அச்சப்படவில்லை. விவசாய நிலத்தில் நாட்டு கோழிகளை போன்று மயில்கள் உலா வருகின்றன.
இதனால் வயல்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட பகுதியில் கூட்டமாக சுற்றித்திரிவதை காண முடிகிறது. அதுவும் மாலை நேரத்தில் கூட்டமாக வரும் மயில்களுக்கு குடியிருப்பு வாசிகள், சிலர் தானியங்களை உணவாக கொடுக்கின்றனர்.வனப்பகுதியில் மட்டும் காணப்பட்ட மயில் இனங்கள், தற்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் போன்று மாறியுள்ளன. இவை மாலை நேரங்களில் வலம் வருவதை கண்டு மக்கள் ரசிக்கின்றனர்.ஆனால் விவசாய பகுதிகளில் நிலக்கடலை, தானியம், காய்கறி உள்ளிட்ட கீரை சாகுபடியை மயில்கள் மேய்ச்சல் நிலமாக மாற்றி விடுவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.கிராம ரோடுகளில் மயில்கள் பறந்து செல்லும் போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர்.இப்பிரச்னைக்கு, வனத்துறை அதிகாரிகளோடு மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தி மயில்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- தீவனப்பற்றாக் குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும், தீவன அபிவிருத்தி திட்டங்களை தமிழக அரசின், கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி வருகிறது.
- 60 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட மர, பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1 ஹெக்டேர் பரப்பளவில் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக் குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும், தீவன அபிவிருத்தி திட்டங்களை தமிழக அரசின், கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 60 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட மர, பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1 ஹெக்டேர் பரப்பளவில் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட வேண்டும்.
இதனை அரசால் தெரிவிக்கப்படும் காலம் வரை பராமரிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் சிறு, குறு மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான மொத்த பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதேபோல், தீவன விரயத்தை குறைப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் மானிய விலையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்த பட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.50 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் சாகுபடி செய்தல் மற்றும் மின்சார வசதி உடையவராகவும் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கடந்த 10 ஆண்டுகளில் அரசு திட்டங்களில் பயன்பெற்ற வராக இருக்கக் கூடாது. மேலும் சிறு, குறு விவ சாயிகள், பெண் விவசாயி கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டத்திற்காக தேர்வு செய்யும் பயனாளி 50 சதவீதம் பயனாளி பங்குத்தொகை செலுத்த வேண்டும். தகுதிவாய்ந்த நபர்கள் இம்மாதம் 13-ந் தேதிக்குள் தங்கள் கிராமத்திற்குட்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
- ஜூன் 15-க்கு முன்பு நாற்று நட்டு 24 நாட்கள் நடவுப்பணி மேற்கொள்ளலாம்.
- தென்மேற்கு மழையால் ஏற்படும் பயிர் சேதத்திலிருந்து தங்களது நெல் பயிரை பாதுகாத்து கொள்ளலாம்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ராணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிய தாவது:-
குறுவை சாகுபடிக்கு தேவையான சான்று பெற்ற விதைகள், நெல் நுண்ணூட்டம், திரவ உயிர் உரங்கள் யாவும் பேராவூரணி, திருச்சிற்றம்பலம் மற்றும் சீதாம்பாள்புரம் விரிவாக்க மையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தரமான சான்று பெற்ற விதைகளை விதைநேர்த்தி செய்து ஒற்றை நாற்று நடவு முறையில் நடவுப்பணி மேற்கொள்ளவும் நடவு வயலில் கடைசி உழவிற்கு பிறகு நெல் நுண்ணுட்டம் இட்டு நடவு செய்திடவும், திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை இலைவழி உரமாக பயன்படுத்தவும், பேரூட்டசத்துக்களில் ஒன்றான தழைச்சத்தை மூன்று கட்டங்களாகவும் பொட்டாஸ் உரத்தை இரு கட்டங்களாகவும் பிரித்து நெல்பயிருக்கு கொடுக்க வேண்டும்.
நெல் நடவு வயலில் நடவுக்கு முன்பாக தக்கைபூண்டு, பசுந்தாள் உரத்தை ஏக்கருக்கு 20கிலோ வீதம் விதைத்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்வதன் மூலம் 25சதவீதம் தழைச்சத்தை மிச்சப்படுத்தலாம். குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகளை விரிவாக்க மையங்களில் உடனடியாக பெற்று வரும் ஜூன் 15க்கு முன்பாக நாற்றுநட்டு சரியாக 24 நாட்களில் நடவுப்பணி மேற்கொள்ள லாம். தென்மேற்கு மழையினால் ஏற்படும் பயிர் சேதத்திலிருந்து தங்களது நெல் பயிரினை பாதுகாத்துக் கொள்ளலாம்.
விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் அல்லது தொழில்நுட்பங்களை பெறுவதற்கு அந்தந்த தொகுதி வேளாண்மை உதவி அலுவலர்கள், வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பயன்பெறலாம்.
பேராவூரணி பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை விரைவில் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பெற உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு முழுமையாக காவிரி நீர் சென்றடையவில்லை.
- ஆற்றில் இருந்து வரும் நீரை பாசன வாய்க்கால் மூலம் வயலுக்கு பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
நாகப்பட்டினம்:
குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு முழுமையாக காவிரி நீர் சென்றடையவில்லை.
இந்நிலையில் காவிரி நீரை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள சித்தாய்மூர் ஊராட்சி கீரம்பேர் பாசன வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களுக்கு இதுவரை காவிரி நீர் சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது.
வெள்ளையாற்றிலிருந்து பிரிந்து வாசன வசதி பெறும் இக் கால்வாய் தூர்வாரி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது.
இதனால் வாய்க்காலில் அதிக அளவில் குப்பைகள் தேங்கியும், தேவையற்ற செடிகள் வளர்ந்தும் நீர் பாய்வதற்கு ஒரு தடையாகவே இருந்து வருகிறது.
இதனால் இப்பாசனத்தை நம்பி சுமார் 1000 ஏக்கருக்கும் வயலில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விதை நெல்கள் நீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது.
இதனால் ஆற்றில் இருந்து வரும் நீரை பாசன வாய்க்கால் மூலம் வயலுக்கு பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும் வாய்க்கால் தூர்வாரப்படாததால் விவசாயிகளே சொந்தமாக வாய்க்காலை தூர்வாரும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் 7கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்காலை விவசாயிகளே தங்களது நிதி பங்களிப்போடு ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- சுமார் 10,000 ஏக்கர் பரப்பில் தண்ணீர் இன்றி இளம் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
- ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது போதிய தண்ணீரின்றி காய்ந்து வரும் குறுவை பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் தான் பிரதான பயிராக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இந்த ஆண்டு குறுவை சாகுபடி 5 லட்சம் ஏக்கரில் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியான ஜுன் 12-ந் தேதி திறந்து விடப்பட்டது.
இருந்தாலும் கடைமடை பகுதி வரை தண்ணீர் சரியாக சென்று சேரவில்லை என விவசாயிகள் கூறி வருகின்றனர். இதனால் கடைமடை பகுதியில் நெல் சாகுபடி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிகள், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கல்லணையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைமடை பகுதியான தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. குறிப்பாக திருவையாறு அருகே உள்ள மேலதிருப்பூந்துருத்தி, கண்டியூர், நடுக்காவேரி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு நடவு செய்து 30 நாட்களே ஆன நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைப்பட்டனர்.
ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது போதிய தண்ணீரின்றி காய்ந்து வரும் குறுவை பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது :-
பாசன வாய்க்காலில் போதிய தண்ணீரும் வரவில்லை. தலைமடை பகுதிக்கு தண்ணீர் இல்லை என்றால் இதை விட வேதனை வேறு என்னவாயிருக்கும். தண்ணீரின்றி கருகி வரும் பயிர்களை பார்க்க வேதனையாக உள்ளது. தற்போது ஆடி மாத காற்றும் பலமாக வீசி வருவதால் வயலில் உள்ள ஈரப்பதமும் காய்ந்து வருகிறது. இதனால் வயல்களில் ஆங்காங்கே பாலம் பாலமாக வெடிப்பு விட்டு வருகின்றன.
எனவே கர்நாடக அரசு காவிரியில் உரிய தண்ணீர் திறக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணையில் இருந்து முறை வைக்காமல் தண்ணீர் திறந்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தும் இனிமேல் பயிர்களை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. எனவே எங்கள் பகுதியில் உரிய கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 92,214 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறுவை நெல்பயிர் நேரடி விதைப்பின் கீழ் சுமார் 28,569 ஏக்கரிலும், நெல் தீவிரப்டுத்தல் முறையின் கீழ் 46,720 ஏக்கரில் பயிடப்பட்டுள்ளது. சாதாரண நாற்று நடவு முறையில் குறுவை பயிர் சுமார் 14,680 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் அதிலிருந்து பிரியக்கூடிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடி விதைப்பு செய்த நெற் பயிர்கள் முற்றிலுமாக கருகி வருகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் அருகே உள்ள பழையவலம், செங்கமேடு, ஓடாச்சேரி, கேக்கரை, கள்ளிக்குடி, தென் ஓடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 3000 ஏக்கர் நேரடி விதைப்பு செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. மாவட்டத்தில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பில் தண்ணீர் இன்றி இளம் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக வெட்டாறு பாசனத்தில் இருந்து பிரியக்கூடிய பாசன வாய்க்காலில் இதுவரை ஒரு முறை மட்டுமே தண்ணீர் வந்ததாகவும் அந்த தண்ணீரும் விவசாய நிலங்களுக்கு பாய்ச்ச முடியாத நிலையில் குறைந்த அளவு தண்ணீராக வந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வசதியான விவசாயிகள் மட்டும் என்ஜின் வைத்து தண்ணீரை தங்களது நெற் பயிர்களுக்கு பயன்படுத்தி கொண்டனர். மற்ற விவசாயிகளின் நெற் பயிர்கள் கருகும் நிலை உருவாகி வருகிறது. ஒரு ஏக்கருக்கு ரூபாய் 10000 வரை செலவு செய்துள்ளோம். இந்நிலையில் தற்போது பயிர்கள் கருகி வருகிறது. மூன்றாவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையில் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் வருகிற 27-ந்தேதி தஞ்சாவூருக்கு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.