என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fog"

    • டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் பனிமூட்டம் நீடிக்கிறது.
    • இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 11 விமானங்கள் தரையிறங்க தாமதம் ஆனது.

    புதுடெல்லி:

    தலைந்கர் டெல்லியில் உள்பட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. கடும் பனிமூட்டத்தால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக நிலையில் உள்ளது என காற்றின் தரம் குறித்த ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது.

    பனிப்பொழிவு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 11 சர்வதேச விமானங்களும், 3 உள்ளூர் விமானங்களும் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.

    பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டும் வருகின்றன.

    • டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது.
    • உத்தர பிரதேச மாநிலத்தில் பனியால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    லக்னோ:

    வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளது.

    டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. பஞ்சாப்பின் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களைப் பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    டெல்லியில் 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் காலதாமதமாகின. டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும், புறப்படும் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் பல வானங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கிதில் ஒருவர் பலியானார்.

    இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் இன்று குவிந்தனர். அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனிமூட்டத்தால் மறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் அங்கு புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

    • கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் சீதோசன நிலை மாறி மாறி வருகிறது.
    • வாகனங்கள் அனைத்தும் சாலையில் மிகவும் ஊர்ந்தபடியே செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவும், மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது.

    இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுவதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் சீதோசன நிலை மாறி மாறி வருகிறது. இதில் இன்று அதிகாலை 5 மணியிலிருந்து காலை 8 மணி வரையிலும் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

    கடும் குளிர் நிலவி வருவதால் உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் குடியிருப்புகள் மற்றும் விடுதிகளிலேயே முடங்கி உள்ளனர்.

    மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நீலகிரிக்கு வந்தவர்கள் நேற்று மாலை முதல் சமவெளி பகுதிகளுக்கு திரும்பி கொண்டு வருகின்றனர். இன்று காலையும் ஏராளமானோர் ஊர்களுக்கு சென்றனர்.

    இதனால் மலைப்பாதையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்தன. கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

    முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே வாகனங்களை இயக்கி செல்கிறார்கள். வாகனங்கள் அனைத்தும் சாலையில் மிகவும் ஊர்ந்தபடியே செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உறைபனி அதிகமாக உள்ளது. இன்றும் உறைபனி அதிகமாக காணப்பட்டது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உறைபனி கொட்டி புல்தரை முழுவதும் மறைந்து, வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காணப்பட்டது.

    இதுதவிர கார், வேன், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களிலும் உறைபனி கொட்டி இருந்தது. அதனை பொது மக்கள் அகற்றி விட்டு தங்கள் பணிக்கு சென்றனர்.

    இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலையாக 23.07 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். குளிரில் இருந்து காத்து கொள்ள குல்லா, சுவர்ட்டர் போன்ற ஆடைகளை அணிந்து வருகின்றனர்.

    ஆங்காங்கே தீ மூட்டியும் மக்கள் குளிர் காய்ந்து வருகிறார்கள். ஊட்டியில் கொட்டி வரும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    அவர்கள் சுவர்ட்டர் அணிந்து கொண்டும், தலையில் குல்லா அணிந்து சென்றதையும் காணமுடிந்தது.

    தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

    • இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
    • டெல்லியில் ஜம்முதாவி-டெல்லி விரைவு ரெயில் உள்பட 22 ரெயில்கள் தாமதமாக வருகின்றன.

    புதுடெல்லி:

    வடஇந்தியாவில் குளிர்காலம் என்பதால் கடுங்குளிர் நிலவி வருகிறது. காலையில் மக்கள் எழுந்ததும் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். வாகனங்கள் சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் உள்ளதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    டெல்லி ரெயில் நிலையத்திற்கு வரும் ஜம்முதாவி-டெல்லி விரைவு ரெயில் உள்பட 22 ரெயில்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விமானம் வங்காளதேச நாட்டு தலைநகர் டாக்காவுக்கு திருப்பி விடப்பட்டது.
    • சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கவுகாத்தி:

    மும்பையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் 178 பயணிகள் இருந்தனர். அப்போது கவுகாத்தியில் கடும் பனிமூட்டம் நில வியதால் விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து விமானம் வங்காளதேச நாட்டு தலைநகர் டாக்காவுக்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் இன்று அதிகாலை 4 மணிக்கு டாக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    இதுகுறித்து விமான நிறுவனம் கூறும்போது, "கவுகாத்தியில் மோசமான வானிலை காரணமாக மும்பையில் இருந்து கவுகாத்திக்கு சென்ற இண்டிகோ விமானம் வங்காளதேசத்தின் டாக்காவிற்கு திருப்பிவிடப்பட்டது.

    டாக்காவில் இருந்து கவுகாத்திக்கு விமானத்தை இயக்க மாற்றுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

    • மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்றனர்.
    • போகி பண்டிகை எதிரொலியால் இன்று அதிகாலை முதல் புகைமூட்டம் ஏற்பட்டது.

    சென்னை:

    போகிப்பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை விமான நிலையம் உள்ள பகுதியில் வசிப்பவர்கள் அதிக புகைதரும் பொருட்களை எரிக்கவேண்டாம் என்று ஏற்கனவே விமான நிலையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் போகிப் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சென்னை விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கவுல் பஜார், பம்மல், அனகாபுத்தூர், மீனம்பாக்கம், தரைப்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பழைய பொருட்கள், பிளாஸ்டிக் டயர்கள் போன்றவைகளை தெருக்களில் எரித்தனர்.

    இதனால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும் பனிமூட்டமும் அதிகமாக இருந்ததால் புகையும் சேர்ந்து மூழுவதும் புகை மூட்டமாக மாறியது. விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சாலையே தெரியாத அளவுக்கு புகையாகக் காட்சி அளித்தது. விமான நிலையத்தில் ஓடுபாதையும் தெரியாத அளவுக்கு இதன் தாக்கம் இருந்தது.

    இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை முதல் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து, அதிகாலை 4.35 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை 5.45 மணிக்கு 260 பயணிகளுடன் லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், டெல்லியில் இருந்து 117 பயணிகளுடன் அதிகாலை 5.20 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மற்றும் இலங்கையில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப் பட்டன.

    இதேபோல் மஸ்கட், துபாய், குவைத், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட 20 வருகை விமானங்கள், மேலும் துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், லண்டன், மும்பை, டெல்லி, அந்தமான், தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட 24 புறப்பாடு விமானங்கள் புகை-பனிமூட்டம் காரணமாக தாமதமானது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இன்று காலை 9.25 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    புகைமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு விமானங்கள் என சுமார் 44 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. காலை 8 மணிக்கு பின்னர் புகைமூட்டம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு பிறகு விமான சேவை சீரானது.

    • கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.
    • விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் சீசன் நிலவி வருகிறது. கடந்த வாரம் உறை பனி காணப்பட்ட நிலையில் புல்வெளிகள் மற்றும் நட்சத்திர ஏரியில் பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டது. வழக்கமாக கொடைக்கானலில் டிசம்பர் மாத இறுதியில் உறை பனி சீசன் தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் உறை பனி சீசன் தாமதமானது. இருந்த போதும் கடும் குளிர்ந்த சீதோஷ்ணம் காணப்படுகிறது.

    மலை கிராமங்களில் பனி மூட்டத்துடன் கூடிய மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி பகல் பொழுதையும், ரம்மியமாக்கி வருகிறது. கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.

    கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், மற்றும் ஏரி பகுதியில் வெண் நுரையுடன் கடல் அலைகள் வருவது போல பனி மூட்டம் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அவர்கள் கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சூழலை அனுபவித்து வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தும், குதிரை சவாரியில் ஈடுபட்டும் பிரையண்ட் பூங்கா, குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். 

    • மாலை நேரத்தில் ரம்யமான சூழல் நிலவி வருகிறது.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    கோடைகாலம் முடிந்த நிலையில் தற்போது அதிகாலை நேரத்தில் பனி மூட்டமும் அதனைத் தொடர்ந்து சாரல் மழையும், மாலை நேரத்தில் மீண்டும் பனி மூட்டமும் என ரம்யமான சூழல் நிலவி வருகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கேரளா மாநிலத்தில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

    இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணாகுகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். மேலும் மேல்மலை கிராமமான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

    முயல்பண்ணை, சூழல் சுற்றுலா மையம் ஆகியவற்றிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. காலை நேரத்தில் இதமான வெயில் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவது சுற்றுலாப் பயணிகளை உற்சாகமடைய செய்துள்ளது. தொடர்ந்து அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுற்றுலாப் பயணிகள் வருகையால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால் ஏற்காட்டில் மரம், செடி கொடிகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது
    • சேலம் மாநகரில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். இதனால் ஏற்காட்டில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டிலும் தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் பகல் மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    மேலும் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால் ஏற்காட்டில் மரம், செடி கொடிகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் அருகில் நிற்பவர்களை கூட பார்க்க முடிவதில்லை. தொடர் மழை மற்றும் பனி காரணமாக ஏற்காட்டில் வரலாறு காணாத அளவில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் தவியாய் தவித்து வருகிறார்கள். மேலும் கடும் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்வெட்டர் மற்றும் ஜர்கின் அணிந்த படியும் சாலையில் நடமாடுகின்றனர். ஆனாலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பெரும்பாலானோர் வீட்டில் முடங்கி உள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    மேலும் ஏற்காடு மலைப்பாதையில் அதிக அளவில் பனி மூட்டம் நிலவுவதால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே ஊர்ந்து செல்கின்றன. ஏற்காட்டில் நிலவும் கடும் குளிரால் அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம் மாநகரில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து சேலம் மாநகரில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனியால் கடும் குளிர் நிலவி வ ருகிறது. இதனால் காலை நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்வெட்டர் மற்றும் ஜெர்கின்கள், கம்பளி பெட்சீட், போர்வைகள் பொது மக்கள் அதிக அளவில் வாங்கி வருகிறார்கள். இதனால் அதன் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

    • வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஓட்டிச் செல்கின்றனர்.
    • அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொலை தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. 2 நாட்களாக அவ்வப்போது திடீரென கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

    எதிரே யார் வருகிறார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் என அனைத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர்.

    வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஓட்டிச் செல்கின்றனர். பல்வேறு தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்த நிலையில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால் மாணவ-மாணவிகள் ஏமாற்றமடைந்தனர். பள்ளிக்கு செல்வதா வேண்டாமா என அரசு நிர்வாகம் மாணவ- மாணவிகளை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 8 மணி வரை அரசு பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வராததால் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு மத்தியில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.

    உள்ளூர் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் முன்னதாகவே எந்த அறிவிப்பையும் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்காததால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பதில் தாமதம் காட்டியது.

    அதிகாலை முதலே மின்சாரமும் இல்லை கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழையும் இருந்து வந்ததால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொலை தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மலைகிராமங்களிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது.

    • போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் பனிமூட்டத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

    கொடைக்கானல்:

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் கொடைக்கானலில் கடந்த 3 தினங்களாக கன மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுவது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மின்சாரமும் அதிக நேரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அடுக்கம் மலைச்சாலையின் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் நகரின் பல பகுதிகளில் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை ஒட்டிய டோபிகானல் பகுதி வழியாக ஓடும் நீரோடையில் நட்சத்திர ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீர் அதிகமாக வெளியேறுவதாலும் தொடர் மழையாலும் அதிகமான நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

    இதனால் இப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ள வீட்டில் தங்கி இருப்பவர்கள் முகாம்களில் வந்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாலை நேரத்தில் மழை அளவு குறைந்து கடும் பனிமூட்டம் நிலவியது.இதனால் நகரின் பல பகுதிகளில் அதிகமான பனிமூட்டத்தின் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

    மேலும் நீண்ட நேரம் இப்பனிமூட்டம் நீடித்தது.நட்சத்திர ஏரிப்பகுதியில் சைக்கிள் சவாரி, படகு சவாரி செய்ய வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு அதிகமாக காணப்பட்ட பனிமூட்டத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

    நட்சத்திர ஏரியை ஒட்டிய நடைமேடையில் கேரள கல்லூரி மாணவிகள் பனிமூட்டத்தை ரசித்து உற்சாகமாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். மிக நீண்ட நேரம் நீடித்த பனிமூட்டத்தை ஏரிச்சாலையை சுற்றி வந்த சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

    அதன் பின்னர் நகர் பகுதியில் அவ்வப்போது பனிமூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது.இன்று காலை மேகமூட்டம் கூட இல்லாமல் வெயில் தலை தூக்கி உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக அங்கு பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.
    • பெரும்பாலான பொதுமக்கள் இந்த உறைபனி நேரத்தில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    ஏற்காடு:

    சுற்றுலா தலமான ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக மாலையில் இருந்து காலை வரை பொதுமக்கள் நடமாட்டமின்றி நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும் பனிப்பொழிவின் காரணமாக எதிரே யார் நிற்கிறார்கள் என்று கூட தெரியாத சூழல் நிலவியது. மேலும் மலைப்பாதையில் சென்று வந்த வாகனங்கள் அனைத்தும் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படி வந்து சென்றன.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக கடும் உறைபனி நிலவி வருகிறது. மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த உறைபனி மறுநாள் காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் பெரும்பாலான பொதுமக்கள் இந்த உறைபனி நேரத்தில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    இன்று காலையும் கடும் உறைபனி நிலவியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்தனர். மேலும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தொடர் பனி மற்றும் குளிரின் காரணமாக பொதுமக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    ×