என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health department"

    • சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது.
    • அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர்.

    திருப்பூர் :

    அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கவில்லையெனில் 104க்கு தொடர்பு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்துள்ள போதும் சில நேரங்களில், குறிப்பிட்ட சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது. விலை உயர்வாக இருக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

    இந்நிலையில் அரசு மருத்துவமனை, மேம் படுத்தப்பட்ட, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் குறிப்பிட்ட சில மருந்துகள் இல்லையென தெரிவித்தால் அந்த மருந்து குறித்து 104 என்ற அரசின் இலவச உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.உடனே, அவர்கள் அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர். மருந்து கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவர் என திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சீனாவில் இருந்து சேலம் வந்த மகுடஞ்சாவடியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜவுளி வியாபாரியை கண்காணிப்பதற்காக மகுடஞ்சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

    மகுடஞ்சாவடி:

    சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் நமது நாட்டிலும் அந்த வகை தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவைக்கு விமானத்தில் வந்த சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அவருக்கு இருப்பது புதிய வகை கொரோனாவா? என்பது குறித்து கண்டறிய சளிமாதிரிகள் மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த ஜவுளி வியாபாரி, மகுடஞ்சாவடியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் நோய் தொற்று அறிகுறி இல்லை. எனினும் அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் கொரோனா பாதித்த ஜவுளி வியாபாரியை காலை மற்றும் மாலை இருவேளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, அந்த நபரின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தொற்று அறிகுறியுடன் யாரேனும் வசிக்கிறார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    எனவே, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மகுடஞ்சாவடி பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து மகுடஞ்சாவடி பகுதியில் கண்கா ணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. சுகாதார, மருத்துவ துறை யினர் மகுடஞ்சாவடியில் முகாமிட்டுள்ளனர்.

    • தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
    • செவிலியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்காலிக பணியில் சேர்ந்தால் ரூ.18 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

    சென்னை:

    கொரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 6,282 நர்சுகள் தற்காலிக முறையில் ஒப்பந்த நர்சுகளாக நியமிக்கப்பட்டனர். அதில், 3000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது.

    இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி 810 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீதமிருந்த 2,472 செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீட்டிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ந் தேதியில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் பணி பாதுகாப்பு, நிரந்தர பணி கோரி தமிழகம் முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    இது குறித்து சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 காலிப் பணியிடங்களை மாவட்ட கலெக்டர்கள் நேர் முகத்தேர்வு மூலம் நிரப்ப உள்ளனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு இந்த காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் முன்னுரிமை கொடுக்கப்படும். தேர்வில் 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் பெற்றுவிட்டாலே பணிகிடைத்து விடும். 20 மாதம் கொரோனா காலத்தில் பணியாற்றி இருந்தால் மாதத்துக்கு 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 40 மதிப் பெண்கள் கொடுக்கப்படும்.

    ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களும் இந்த தேர்வில் பங்கேற்கலாம். கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கு மதிப்பெண் கொடுக்கப்படுவதால் 2,600 செவிலியர்களுக்கு எளிதாக பணி கிடைத்துவிடும்.

    இதற்கு முன்பு செவிலியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. இந்த பணியில் சேர்ந்தால் ரூ.18 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும். இது தற்காலிக ஒப்பந்த பணியாகும். இந்த வாய்ப்பை செவிலியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கொரோனா கால செவிலியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறினால், வேறு புதிய செவிலியர்கள் பணியில் சேர்ந்துவிடுவார்கள். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் செவிலியர்களில் சுமார் 500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எம்.ஆர்.பி. கொரோனா செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.ராஜேஷிடம் கேட்ட போது, "கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிக ஒப்பந்த பணி தேவையில்லை. பணி பாதுகாப்பு, நிரந்தர பணிதான் வேண்டும். எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தகட்டமாக நாளை (12-ந்தேதி) கோட்டை நோக்கி பேரணி செல்ல இருக்கிறோம்" என்றார்.

    • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.
    • பேரூராட்சி ஊழியர்கள் தெருக்கள் தோறும் புகை மருந்து அடிக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆலங்குளம்:

    தொடர்மழை காரணமாக ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    காய்ச்சல்

    சமீபத்தில் 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் முற்றியதில் மூளைக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாகி நெல்லை அரசு மருத்தவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து இவ்வட்டாரத்தில் சுகாதாரத்துறை ஆய்வு செய்து டெங்கு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் அதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், 5 நாள் தொடர் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனையை நாடினால் அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாகவும், சில நேரத்தில் பணியாளர்களே சிகிச்சை மேற்கொள்கின்றனர் எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    கோரிக்கை

    மழை நீடிப்பதால் ஆங்காங்கே தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. பேரூராட்சி ஊழியர்கள் தெருக்கள் தோறும் புகை மருந்து அடிக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வீடுகளில் தொட்டிகள், குடங்களில் நீண்ட நாட்களாக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் மழைநீரில்தான் டெங்குவை பரப்பும் கொசு இனப்பெருக்கம் செய்கிறது.

    எனவே தண்ணீரை நாள் கணக்கில் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தொட்டிகளை 6 நாட்களுக்கு ஒரு முறை உரிய மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுகாதாரத்துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க தொடர்ந்து மத்தியஅரசு முயற்சி செய்து வருகிறது.
    • ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெறும் வகையில் 12 தலைப்புகளில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதில் இன்று உடல்நலம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசினார்.

    கொரோனா தொற்று போன்ற நெருக்கடியான சூழல் ஏற்படும் போதெல்லாம் வளமான நாடுகள் கூட வீழ்ச்சி அடைவதை நாம் பார்க்கிறோம். இதனால் உலகமே இப்போது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறது.

    இந்தியாவில் சுகாதார பாதுகாப்புடன் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தின்போது மருந்து, மாத்திரைகள், தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் போன்றவை உயிர் காக்கும் ஆயுதங்களாக இருந்தது. சுகாதாரத்துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க தொடர்ந்து மத்தியஅரசு முயற்சி செய்து வருகிறது.

    இந்தியாவில் மலிவு விலையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பது தான் அரசின் முதன்மையான நோக்கமாகும். அரசு சுகாதார பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. குடிமக்களின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே சிறந்த மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் தயாராகி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மருத்துவ சிகிச்சைக்காக செலவிடப்ப டும் சுமார் 80 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியா எந்த ஒரு தொழில் நுட்பத்தையும் இறக்குமதி செய்ய வேண்டியது இல்லை. இதில் தன்னிறைவு பெறுவதை நமது தொழில்முனைவோர்கள் உறுதிப்படுத்த வேண்டும். தொழில் முனைவோரை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பொது இடங்களில், சளியுடன் தும்மல் போடுவதால், மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதாக பரவுகிறது.
    • கொரோனா காலத்தில் இருந்தது போன்று மக்கள் முகக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.

    மடத்துக்குளம் :

    தற்போது பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் கவனமுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சளி, காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் குணமடைந்தாலும், சளி, தொண்டை வலி குணமாக ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. வீட்டில் ஒருவருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவுகிறது.

    பொதுஇடங்களில், சளியுடன் தும்மல் போடுவதால், மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதாக பரவுகிறது. இதனால், கொரோனா காலத்தில் இருந்தது போன்று மக்கள் முகக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- காய்ச்சல், சளி பரவுவது அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்ச்சியான பானங்கள், குடிநீரை பருக வேண்டாம்.காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரைக்கும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மருந்துக்கடைகளில் தன்னிச்சையாக மாத்திரை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பொதுஇடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றனர்.  

    • இன்றைய சூழலில் பெரும் அச்சுறுத்தலாக மலேரியா நோய் விளங்கி வருகிறது
    • புதுவை சுகாதாரத்துறை இந்தியா விலேயே முன்னோடி மாநிலமாக விளங்கி உன்னதமான மருத்துவ சேவை ஆற்றி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    உலக நாடுகள் அனைத்திற்கும் இன்றைய சூழலில் பெரும் அச்சுறுத்தலாக மலேரியா நோய் விளங்கி வருகிறது. புதுவையில் மூளையை தாக்கும் மலேரியா மிக குறைந்த அளவில் புதுவையில் தொற்று ஏற்படுகிறது. புதுவை சுகாதாரத்துறை இந்தியா விலேயே முன்னோடி மாநிலமாக விளங்கி உன்னதமான மருத்துவ சேவை ஆற்றி வருகிறது.

    2021-ம் ஆண்டு 5 பேர் மலேரியாவில் பாதிக்கப்பட்டனர். அதன்பின் ஒரு மலேரியா தொற்று கூட உறுதி செய்யப்படவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, இந்திய அரசு நிர்ணயித்த மலேரியா இல்லாத புதுவை என்ற இலக்கை எட்டும் நிலையில் உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ந்தேதி உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.

    வீடுகளுக்கு உள்ளே தண்ணீர் தேங்கும் நீர் நிலைகளை சுத்தம் செய்து பராமரிப்பதன் மூலம் கொசு உற்பத்தியை முற்றிலும் கட்டுப்படுத்தி மலேரியா நோயிலிருந்து நம்மை காப்போம் என உறுதிமொழி ஏற்போம். மலேரியா இல்லாத புதுவையை உருவாக்குவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • மக்கள் உயிரோடு விளையாடுவதை அரசு நிறுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு மருத்துவ மனைகளில் தற்போது டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் உயிரை பாதுகாக்க கூடிய மருத்துவ மனைகளில் விபத்து காலங்களில் அவசர சிகிச்சை இல்லாமல் மக்கள் அல்லல்படுகின்றனர்.

    காரைக்காலில் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக சரியான மருத்துவ சிகிச்சை இல்லாததால் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதே நிலை புதுவையின் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளது. தற்போது எம்.டி, எம்.எஸ், முடித்த 147 டாக்டர்கள், 100-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். டாக்டர்கள், 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 48 பார்மாசிஸ்ட் காலி பணியிடங்கள் உள்ளன.

    நிதித்துறை செயலாளர் தலைமை செயலாளரை காரணம் காட்டி மக்கள் உயிரோடு விளையாடுவதை அரசு நிறுத்த வேண்டும்.

    சுகாதாரத் துறையை தனது பொறுப்பில் வைத்துள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி இதன் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சலீம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொது சுகாதாரத்துறை தற்போதே தொடங்கி உள்ளது.
    • நடமாடும் மருத்துவக்குழு மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்.

    உடுமலை:

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்குகிறது. தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொது சுகாதாரத்துறை தற்போதே தொடங்கி உள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில், சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின்வசதியை உறுதி செய்ய வேண்டும். மழைநீர், கழிவுநீர் கட்டமைப்பு சீராக இருப்பதை ஆய்வு நடத்தி உறுதி செய்ய வேண்டும்.

    மருத்துவமனை வளாகம், காத்திருப்பு அறை, ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் வினியோகத்தின் தரத்தை உறுதி செய்வதுடன், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலக்கப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறதா என்பதையும் கட்டாயம் ஆராய வேண்டும்.

    சுகாதார மாவட்டம், வட்டாரங்கள் வாரியாக விரைவு சிகிச்சை குழு, கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்.

    பருவமழைக்கு பின் ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய் தொற்று குறித்த விபரங்களை முன்கூட்டியே அறிந்து, காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

    நடமாடும் மருத்துவக்குழு மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட தயாராக இருக்க வேண்டுமென பல்வேறு வழிகாட்டுதல் சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    • நன்னீரில் வளரக்கூடிய லார்வா, கொசு ஓழிப்பு பணியில் வேகம் காட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மழை காரணமாக டெங்கு பாதிப்பு மெல்ல தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது. இதனால் நன்னீரில் வளரக்கூடிய லார்வா, கொசு ஓழிப்பு பணியில் வேகம் காட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தாலுகா அளவில் டாக்டர், செவிலியர், மருத்துவ பணியாளர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. மாநில எல்லையில் கேரளா மாநிலத்தில் இருந்து வருவோர் உடல் நலம் பரிசோதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் சுகாதாரத்துறை செயலர் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல் வருமாறு:-

    அவ்வப்போது மழை பெய்வதால் வரும் நாட்களில் டெங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஓழிப்பு பணியை வேகப்படுத்த வேண்டும். கொசு இனப்பெருக்கம் அதிகமுள்ள இடங்களை கண்டறிந்து காலை, மாலை இருவேளையும் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.

    டெங்கு வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளியின் உடல்நிலையை, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறப்பு என்பது கூடவே கூடாது. மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை ஏற்று கடந்த, 15-ந்தேதி டெங்கு சிறப்பு வார்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.தற்போதைய நிலவரப்படி, 9பேர் டெங்கு வார்டில் சிகிச்சையில் உள்ளனர்.

    அனைவரும் ஆரோக்கியமுடன் மருந்து, மாத்திரை எடுத்து வருகின்றனர். ஓரிரு நாளில் உடல் நலம் தேறி வீடு திரும்புவர் என அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.

    அதன்படி பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டையில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    • மர்ம காய்ச்சலுக்கு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் பெர்னட். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் அக்சரன் என்ற மகன் உள்ளார். அக்சரன் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு சென்று வந்தான்.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அக்சரனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவனை பெர்னட் கூடங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து அக்சரனுக்கு காய்ச்சல் குணமாகாமல் இருந்துள்ளது.

    நேற்று காலை சிறுவன் அக்சரனின் உடல்நிலை மிகவும் மோசம் அடையவே கூடங்குளம் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவனை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் அக்சரனை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அக்சரன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஏற்கனவே 10 மாத குழந்தை இறந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் நாங்குநேரி பரப்பாடி பகுதியில் 6 வயது சிறுமி இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று சிறுவன் அக்சரன் இறந்துள்ளான். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே மாவட்டம் முழுவதும் சுகாதராத்துறையினர் தீவிர காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×