search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kallakurichi hooch tragedy"

    • மரக்காணத்தில் கள்ளச்சாராயத்துக்கு 23 பேர் பலியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்துக்கு 55 பேர் பலியாகி உள்ளனர்.
    • கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

    மதுரை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 55 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது. இதையொட்டி பா.ஜ.க.வின் பல்வேறு தலைவர்களும் தி.மு.க. அரசை விமர்சித்து வருகின்றனர்.

    கள்ளச்சாராய சம்பவத்தில் 55 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    அதேபோல் மரக்காணத்தில் கள்ளச்சாராயத்துக்கு 23 பேர் பலியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்துக்கு 55 பேர் பலியாகி உள்ளனர். இருந்த போதிலும் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்த சூழலில் கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா உள்பட அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளூர் சிலை அருகே பா.ஜ.க. சார்பில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் தலைமையில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையில் இறந்தவரை தூக்கி செல்லும் பாடையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழக அரசை கண்டித்து சிலர் பாடையை எடுத்து வந்து போராட்டம் நடத்த முயற்சித்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜ்குமார், கருட கிருஷ்ணன், நவீன், வேல்முருகன், ஓம்சக்தி தனலட்சுமி, ஊடகப்பிரிவு தலைவர் வேல்பாண்டியன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கைதான 2 பேரையும் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேரஹள்ளி பகுதியில் கள்ளத்தனமாக மாந்தோப்பில் சாராய ஊரல் வைத்திருந்த சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சின்னலேரஅள்ளி பகுதியில் மாந்தோப்பில் சாராய ஊறல் வைத்திருந்து கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சின்னஆலேரஅள்ளி பகுதியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் சுமார் 150 லிட்டருக்கும் மேற்பட்ட சாராய ஊறலை வைத்திருந்து மத்தூர் அருகே உள்ள மூக்கா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது36 ), அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (44) ஆகிய 2 பேரும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே மத்தூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 150 லிட்டருக்கும் மேற்பட்ட சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் கைதான 2 பேரையும் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
    • சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை.

    சென்னை:

    கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புள்ளதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், சட்டசபை வளாகத்திற்கு வெளியே தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    * உண்மைக்கு மாறானவற்றை கூறும் ராமதாஸ், அன்புமணி ராமதாசுக்கு கண்டனம்.

    * கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

    * கள்ளச்சாராயம் குடித்து பலியோனோரின் குடும்பத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

    * இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அங்கு சென்றும் மலிவான அரசியல் செய்கிறார் அன்புமணி.

    * எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்து விலக தயார். அதேபோல் அவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவார்களா?

    * சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை. வீட்டில் தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் கண்ணுக்குட்டி தி.மு.க பிரமுகராகிவிடுவாரா?

    * ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.
    • தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது.

    ஊட்டி:

    மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல்.முருகன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார்.

    அவருக்கு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக இன்றைக்கு கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பலி கொடுத்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்து 2 நாட்களை கடந்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் மக்களை வந்து பார்க்கவில்லை. மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராய விவகாரத்தில் நேரடியாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

    கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத செயலிழந்த அரசாக, இந்த தி.மு.க அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.

    கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகளின் வீடுகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களின் படங்கள் தான் இடம்பெற்றுள்ளது. இதனால் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது. தி.மு.க அரசு மக்களை போதைப் பொருட்களால் அழித்துக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஜனநாயக முறைப்படி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போதும், அதற்கு பதிலளிக்க தி.மு.க.வினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக தற்போது இருந்தே வேலைகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 70 கிராமங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது.
    • ஏற்காடு மலை கிராமங்களில் சாராய சோதனை தொடரும்.

    ஏற்காடு:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் படி சேலம் மாவட்டத்திலும் போலீசார் பல்வேறு இடங்களில் சாராயம் விற்க்கப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் ஏற்காடு மலை பகுதிகளில் உள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    ஏற்காடு வனப்பகுதிகளில் உள்ள 70 கிராமங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது.

    ஏற்காடு போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து ஒவ்வொரு கிராமங்களிலும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் பழைய சாராய வியாபாரிகளின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தினர்.

    மேலும் ஆத்துஓடைகள், வனப்பகுதிகளிலும் சாராயம் காய்ச்சப்படுகிறதா? என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். விடிய, விடிய போலீசார் மலை கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து போலீசார் கூறும் போது, சட்டத்துக்கு புறம்பாக யாராவது சாராயம் காய்ச்சி விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மலை கிராமங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ஊர்தலைவர்கள் கண்டறிந்து ஏற்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

    இது குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் கூறும் போது. ஏற்காடு மலை கிராமங்களில் சாராய சோதனை தொடரும். சட்டத்துக்கு புறம்பாக யாராவது மது மற்றும் சாராயம் காய்ச்சினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளார்.

    • ராஜா ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்வது வழக்கம்.
    • குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ராஜாவின் உடலை பெற்றுக்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட எத்னால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்நது கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு வந்த பக்தர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து பலியானது தற்போது தெரியவந்தது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    கோவையை சேர்ந்தவர் ராஜா (வயது 35). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 3 குழந்தைகள் உள்ளனர். சிவ பக்தரான ராஜா ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்வது வழக்கம். அதுபோல் கடந்த 18-ந் தேதி திருவண்ணாமலைக்கு செல்ல கோவையில் இருந்து புறப்பட்டு கள்ளக்குறிச்சி வந்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் வந்து இறங்கிய ராஜா அங்குள்ள டீ கடைக்காரரிடம் சாராயம் எங்கு விற்கப்படுகிறது என கேட்டுள்ளார். அதற்கு டீ கடைக்காரர் கருணாபுரத்தில் சாராயம் விற்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி கருணாபுரத்தில் சாராயம் வாங்கி குடித்த ராஜா சிறிது நேரத்தில் வயிற்று வலியால் துடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா இறந்தார்.

    அவர் அணிந்திருந்த சட்டைபையில் இருந்த ஆதார் கார்டு மூலம் அவரது முகவரியை தொடர்பு கொண்டு போலீசார் ராஜாவின் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று அவரது குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ராஜாவின் உடலை பெற்றுக்கொண்டனர்.

    • கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
    • மக்கள் ஆட்சியர் முன்னிலையில், கள்ளச்சாராயத்தை குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை பலி எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது.

    இதையடுத்து நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி மாவட்டம் துரையூர் நெசக்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பது குறித்து உளவுத்துறைக்கு அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆட்சியர் முன்னிலையில், கள்ளச்சாராயத்தை குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 876 சாராய வியாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
    • தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தை தொடர்ந்து மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விதிகளை மீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆல்கஹால், எத்தனாலை மூலப்பொருளாகக் கொண்ட ஸ்பிரிட், சானிடைசர், ஹேண்ட் வாஸ் ஆகியவற்றை முறைப்படி விற்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள 37000 மருந்து கடைகளுக்கும் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்க அறிவுறுத்தியுள்ளது.

    • அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும்.
    • இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை.

    நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது.

    விஷச்சாரயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? தற்போது அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் கவனமும், கவலையும், கோபமும் அதிகரித்திருக்கிறது. அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது.

    கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாரயத்தை குடித்து 22 பேர் பலியானர்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள். இப்போதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

    வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்களை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கிற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'மதுவிலக்கு கொள்கை என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்து விடுகிறது.

    டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள் பணம் இல்லாதபோது 50 ரூபாய்க்கு கிடைக்கும் விஷச்சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். குடிக்கு அடிமையானவர்களின் பிரச்சனை என்பது தனிநபர் பிரச்சனை அல்ல, அந்த ஒவ்வொரு குடும்பத்தின், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை என்பதை எப்போது நாம் அனைவரும் உணரப்போகிறோம்?

    அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும். குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி அவர்களை குடிநோயிலிருந்து மீட்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற அரசு எத்தகைய தொலைநோக்கு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறதோ, அதேபோல குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்.

    அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும். குறுகிய கால தீர்வை கடந்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

    சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை.

    இனி ஒரு விதி செய்வோம்..! அதை எந்நாளும் காப்போம்.!! என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, கள்ளச்சாராய விவகாரத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை! நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்! மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகின்றனர்? ஏழை எளிய மக்கள் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி, 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் துல்லியமாக விசாரிக்கப்பட வேண்டும்.
    • அனைத்து நிலை அரசு ஊழியர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் துல்லியமாக விசாரிக்கப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்திற்குக் காரணமான காவல் துறை உட்பட அனைத்து நிலை அரசு ஊழியர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும்.

    சாதாரணப் பணியிட மாற்ற நடவடிக்கை மட்டும் போதாது. இந்தச் சம்பவத்திற்குத் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தனாலை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.
    • சாராயம் விற்பனை செய்த கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கருணாபுரம் கள்ளச்சாராய மரணங்கள் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    * பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    * கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    * அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.

    * சாராயம் விற்பனை செய்த கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    * கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து அறிந்து அமைச்சர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன்.

    * கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதற்காக ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * தமிழகம் முழுவதும் விஷ சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

    * கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விசாரணை அறிக்கை கிடைத்த உடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

    * கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    * கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 16 லட்சம் லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

    * பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்.

    * பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தையின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வரவு வைக்கப்படும். குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.

    * பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சபாநாயகரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் 120 போ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்கு அ.தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    கள்ளச்சாராய விற்பனை பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் தமிழக சட்டசபையில் விஷச்சாராய விவகாரம் இன்று எதிரொலித்தது. இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார்.

    இந்த சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேச முற்பட்டார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எழுந்து நின்றபடி பேசிக்கொண்டே இருந்தார். அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்ததால் எடப்பாடி பழனிசாமி என்ன பேசினார்? என்று யாருக்கும் கேட்கவில்லை.

    அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்று கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர். இதைத் தொடர்ந்து சபாநாயகர் அனைவரும் அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் கூறியதை ஏற்காமல் தொடர்ந்து கோஷமிட்டனர்.

    எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் சபாநாயகரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா மற்றும் அமளியில் ஈடுபட்டனர்.

    அவர்களை பார்த்து சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். அதையும் மீறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர்.

    இதனால் சட்டசபையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து சபை காவலர்கள் சட்டசபைக்குள் சென்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றினார்கள். அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்தபடி எழும்ப மறுத்து கோஷமிட்டபடியே இருந்தார்.

    இதனால் சுமார் 10 சபை காவலர்கள் ஒன்றாக சேர்ந்து குண்டுக்கட்டாக தூக்கி அவரை வெளியேற்றினார்கள். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், சபை காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பின்னர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட மற்ற எம்.எல்.ஏ.க்களும் வெளியேற்றப்பட்டனர். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது.

    அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்ட போது சபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் இல்லை. அதன் பிறகு சட்டசபைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் பற்றி விளக்கி பேசும்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். ஆனால் அ.தி.மு.க. சபாநாயகரின் அழைப்பை ஏற்காமல் புறக்கணித்துள்ளது.

    இதனை தொடர்ந்து பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    ×