என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nataraja"

    • ஜனவரி 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • ஆருத்ரா தரிசன விழா 6-ந்தேதி நடக்கிறது.

    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த இரு விழாக்களிலும் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். வேறு எந்த கோவில்களிலும் இத்தகைய சிறப்பை காண இயலாது என்பதால் இந்த விழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்திற்கு வருவார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.பின்னர் 29-ந் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், 30-ந் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 31-ந்தேதி வெள்ளி பூத வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

    தொடர்ந்து அடுத்த மாதம்(ஜனவரி) 1-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 2-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 3-ந் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 4-ந் தேதி தங்க ரதத்திலும் சாமி வீதி உலா நடைபெறும். தொடர்ந்து 5-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 6-ந்தேதி நடக்கிறது. முன்னதாக அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் திருவாபரண அலங்கார காட்சி, சிற்சபையில் ரகசிய ஸ்தாபன பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சாமியும், அம்பாளும் சிற்சபைக்கு எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

    தொடர்ந்து 7-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா, 8-ந் தேதி இரவு ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும். மார்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதியில் பந்தல் அமைக்கும் பணிகள் முடிவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆண்டுதோறும் 1 நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறக்கப்படும்.
    • நடராஜருக்கு 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.
    • 6-ம்தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். இந்த கோவில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையான கோவிலாகும். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.

    இந்த நிலையில் திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது கடந்த 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

    ஆருத்ரா திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி அளவில் மரகத நடராஜர் சன்னதியானது திறக்கப்படுகின்றது. தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனங்கள் முழுவதுமாக களையப்படுகிறது. பின்னர் நடராஜருக்கு பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இளநீர் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு 11 மணி அளவில் மீண்டும் ஆருத்ரா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகின்றது. அபிஷேகம் முடிந்து 6-ம் தேதி அன்று காலை சூரிய உதய நேரத்தில் நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. 6-ம்தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.

    நாளை 5-ம் தேதி காலையிலிருந்து 6-ம் தேதி மாலை வரையிலும் மட்டும் மரகத நடராஜர் சன்னதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை கோவிலில் நாளை பகல் மற்றும் இரவு முழுவதும் சென்னை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜராஜேஸ்வரி நாச்சியார் ஆகியோர் மேற்பார்வையில் திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    அதுபோல் நாளை மறுநாள் திரு உத்தரகோசமங்கை கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்காக மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் 1 நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதியானது பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆருத்ரா தரிசன விழா அன்று அதிகாலை 2 மணிக்கு மேல் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
    • மார்கழி, ஆனி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வாய்ந்தவையாகும்.

    கடலூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதில் மார்கழி, ஆனி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வாய்ந்தவையாகும்.

    ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    அதன்படி நடராஜர் கோவிலில் இந்தாண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

    நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

    ஆருத்ரா தரிசன விழா அன்று அதிகாலை 2 மணிக்கு மேல் மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் நடைபெறும்.
    • நாளை மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.

    உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச.28-ந்தேதியன்று உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதரால் கொடியேற்றி துவக்கி வைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தினமும் காலையும், மாலையும் சுவாமி விதியுலா மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இதன் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைற்றது. இதனை ஒட்டி இன்று அதிகாலை ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சித்சபையில் இருந்து புறப்பட்டு தேர்நிலையான கீழரத வீதி வந்தடைந்தது.

    சுமார் 8 மணி அளவில் தேர் நிலையிலிருந்து புறப்பட்ட சுவாமிகள் ஸ்ரீ நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகர், விநாயகர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    கீழரத வீதியிலிருந்து புறப்பட்ட இத்தேர் முறையே தெற்குரத வீதி, மேலரத வீதி, வடக்குரத வீதி வழியாக வலம் வரும்.

    கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம், தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடை பெறுவதால் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணதிரும் கோஷங்களை எழுப்பிய வண்ணம் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து மாட வீதிகளில் இழுத்து வந்தனர்.

    முன்னதாக தேரோடும் வீதிகளில் திரளான பெண்கள் சாலைகளை சுத்தம் செய்து கோலமிடுவதும், சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பக்தி பதிகங்களை, மேளதாளம் முழங்க பாடி வருவதும் ஒரு அற்புதமான நிகழ்வாக அமைந்திருந்தது.

    விழாவிற்கு வரும் பக்தர்களின் நலனுக்காக சிதம்பரம் நகராட்சி சார்பில் சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பெயரில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

    மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை போலீஸ் சுப்பிரண்டு ரகுபதி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து இன்று மாலை சுமார் 6 மணி அளவில் தேர் நிலையான கீழரதவீதி வந்தடையும். அங்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சிறப்பு தீபாராதனை செய்யப்படும். தொடர்ந்து தேர் நிலையிலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இரவு முழுவதும் சிறப்பு தீபாரதனை, அர்ச்சனைகள் நடக்கவுள்ள நிலையில், நாளை அதிகாலை இரண்டு மணி முதல் ஆறு மணி வரை ராஜசபை என்கிற ஆயிரம் கால் முன் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் ஆராதனை செய்யப்படும். தொடர்ந்து தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் நடைபெறும். பின்னர் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைபெறும், நாளை மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.

    இதைத் தொடர்ந்து நாளை மாலை சுமார் 4 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் முன் மண்டபம் நடனப்பந்தலுக்கு கொண்டு வந்து முன்னுக்கு பின்னாக 3 முறை நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார். அதைத் தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளின் சித்சபை ரகசிய பிரவேசம் நடை பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சி தர்கள் செய்து வருகின்றனர்.

    • நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று மரகத நடராஜரின் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படுகிறது.

    ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணிய தலமான திருஉத்தரகோசமங்கை கோவில். உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற பெருமை உடைய இந்த கோவிலில் மங்களநாதர், மங்களநாயகி எழுந்தருளி உள்ளனர். இங்கு நடராஜருக்கு தனிசன்னதி அமைந்துள்ளது. இந்த நடராஜர் சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான ஒரே மரகத கல்லினால் ஆன அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது. மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து காப்பதற்காக மரகத நடராஜர் சிலை மீது ஆண்டு முழுவதும் சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.

    வருடத்தில் ஒருநாள் சிவனுக்கு உகந்த நாளான திருவாதிரைக்கு முதல்நாள் இந்த சந்தன காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம். இதன்படி நேற்று ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று காலை 7.45 மணிக்கு நடராஜர் கோவில் நடைதிறக்கப்பட்டு 8மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தன காப்பு களையப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து மரகத நடராஜருக்கு சந்தனாதி தைலம், நெய், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், நெல்லிபொடி, பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அப்போது ஆபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் மிகுந்தது என கருதப்படுவதால் இந்த சந்தனத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    அதிகாலை முதலே பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சந்தனம் களையப்பட்ட அபூர்வ பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். உள்ளூர் பக்தர்கள் தவிர வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். ரூ.10, 50, 100, 200 கட்டண தரிசன வரிசைகளில் ஏராளமான நின்று சென்று தரிசனம் செய்ததை காணமுடிந்தது.

    விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையிலான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். காலை சந்தனக்காப்பு களைந்தது முதல் இரவு மீண்டும் சந்தனகாப்பு பூசும் வரை பக்தர்கள் வரிசையில் நின்று அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவின் நிறைவாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் அருணோதய காலத்தில் அபூர்வ மரகத நடராஜரின் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படுகிறது. இதையடுத்து நடராஜருக்கு பல்வேறு ஆராதனைகள் நடத்தப்படும்.

    • இன்று மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.
    • மாலை 4 மணியளவில் நடராஜ சுவாமிகள் நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலின் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேரானது நேற்று மாலை 6 மணியளவில் கீழரத வீதியில் உள்ள தேர் நிலைக்கு வந்தடைந்தது.

    அங்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களின் விண்ணதிரும் பக்தி கோஷங்களுடன் தேர் நிலையிலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இரவு முழுவதும் சிறப்பு தீபாரதனை, அர்ச்சனைகள் நடந்தது. நள்ளிரவு 2 மணி முதல் 6 மணி வரை ராஜசபை என்கிற ஆயிரம் கால் முன் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு இன்று மதியம் 2 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. இதில் சிவனடியார்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிதம்பரம் நடராஜரின் அருளை பெறுகின்றனர்.

    இதைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது. மாலை 4 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் முன் மண்டபம் நடனப்பந்தலுக்கு கொண்டு வந்து முன்னுக்கு பின்னாக 3 முறை நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார்.

    தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளின் சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    விழாவிற்கு வரும் பக்தர்களின் நலன் கருதி நகராட்சி சார்பில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    மேலும், அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், வர்த்தகர்கள் என பலரும் அன்னதானம் செய்தனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை போலீஸ் சுப்பிரண்டு ரகுபதி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்திற்காக கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • இன்று காலை 5 மணி வரை விடிய விடிய அபிஷேகம் நடந்தது.
    • 4 ஆண்டுகளுக்கு பின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.

    ஆருத்ரா தரிசன விழா சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனை

    திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

    தொடர்ந்து முருகன் சன்னதி அருகே பந்தல் அமைக்கப்பட்டு அங்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டன. நள்ளிரவு 12.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, அன்னம், அரிசி மாவு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் இன்று காலை 5 மணி வரை விடிய விடிய அபிஷேகம் நடந்தது.

    சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 4 ஆண்டுகளுக்கு பின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சேலம் காசி விஸ்வநாதர், குகை அம்பலவாணர், அம்மாப்பேட்டை சுப்பிரமணியர், மேச்சேரி பசுபதீசுவரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.

    அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர் .பெண்களுக்கு திருமஞ்சன கயிறு வழங்கப்பட்டது. பஞ்சமூர்த்திகள் விழாவும் நடந்தது.

    நாமக்கலில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ர தரிசன விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள நடராஜருக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் புறப்பட்டு துறையூர் ரோடு வழியாக நகராட்சி அலுவலகம் வரை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    அவர்களுக்கு பிரசாதம் கோவில் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதயொட்டி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இன்று அதிகாலை 3 மணிக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சிறப்புவாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடராஜப்பெருமான்-சிவகாமி அம்மையாருக்கு 32 திரவியங்களால் அபிஷேகம் நடத்தி ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் இன்று அதிகாலை 3 மணிக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவில் நேற்று மாலை 6 மணிக்கு திருவாதிரை அம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவம் மற்றும் மாங்கல்ய நோன்பு பூஜையும் நடைபெற்றது.

    விழாவையொட்டி இன்று காலை மயில் இறகு, கல் ஆபரணம், பாக்குப்பூ, மரிக்கொழுந்து, விருச்சிப்பூ, சம்பங்கி, மனோரஞ்சிதம், செண்பகம், வில்வம், ரோஜா உள்ளிட்ட மலர்களால் மயிலிறகு பாவாடை, கிரீடம், நெத்தி அட்டி, ஒட்டியானம், குஞ்சிதபாதம் ஆகிய ஆபரணங்கள் கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு அம்மையப்பருக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் 32 திரவியங்களால் நடராஜப்பெருமான்-சிவகாமி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

    • 33 வகையான அபிஷேகங்கள் அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய நடத்தப்பட்டது.
    • அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடந்தது.

    திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜபெருமான் திருநடனம் புரிந்த 5 சபைகளில் முதல் (ரத்தின) சபையாக திகழ்கிறது.

    இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா பத்துநாட்கள் விமரிசையாக நடப்பது வழக்கம்.

    அதன்படி விழாவின் 9-வது நாளான நேற்று மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு ரத்தின சபாபதி பெருமான் பழைய ஆருத்ரா அபிஷேக மண்டபத்தில் விபூதி அபிஷேகத்துடன் எழுந்தருளினார்.

    பின்னர், நடராஜருக்கு, கதம்பத்தூள், நெல்லிப் பொடி, வில்வப் பொடி, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என மொத்தம் 33 வகையான அபிஷேகங்கள் அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய நடத்தப்பட்டது.

    பின்னர் இன்று அதிகாலை சுவாமிக்கு சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடந்தது. பகல் 12 மணிக்கு அனுக்கிரக தரிசனம் நடைபெற்றது.

    ஆருத்ரா தரிசன விழாவில் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். நாளை காலை 8.45 மணிக்கு, சாந்தி அபிஷேகம் நடை பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, தக்கார் ஆகியோர் செய்தி ருந்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் மச்ச அவதாரத்தில் சிவனை வழிபட்டதாக வரலாறு.

    ஆருத்ராதரிசன விழாவையொட்டி 9 அடி உயரம் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48 வகை வாசனை திரவியங்கள், 23 வகைபழ வகைகள், பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் மற்றும் மலர்கள் ஆகியவை கிலோ கணக்கில் கொண்டு அபிஷேம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அச்சரைப் பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆருத்தார தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடராஜ பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 36 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடைபெற்றன.

    கோவில் சிவாச்சாரியார் சங்கர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்தி ரங்கள் முழங்க, மேளதாளங்களுடன் சிறப்பு ஆராதனை நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து நடராஜ பெருமானும், சிவகாம சுந்தரியும் கோவிலின் உள் பிரகார வளாகத்தில் வலம் வந்தனர். பின்னர் சூரிய பிரபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    மாட வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • இன்று பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.
    • நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. சிவபெருமானின் பஞ்ச சபையில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது.

    பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் தனிசிறப்புகள் வாய்ந்தது.

    ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரான நடராஜரே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் பிறகு தினமும் சாமி வீதிஉலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆருத்ரா தரிசனம் தருவதற்காக மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி 4 வீதியில் வலம் வந்தனர்.

    தேரோட்டம் முடிந்ததும் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு எழுந்தருளினார்கள். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை 3.30 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 4.45 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம் பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து மாலை 5.20 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

    அப்போது சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி திருநடனம் புரிந்தபடி தரிசனம் அளித்தார். இந்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடல் வல்லானே...! நடராஜ பெருமானே...!, சிவ, சிவ... ஓம் நமச்சிவாய என்று விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர்.

    இதையடுத்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் இன்று (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஞானபிரகாசம் குளக்கரையில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசன் தீட்சிதர், துணை செயலாளர் சேதுஅப்பாசெல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

    • பல்வேறு அபிஷேகங்களுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அருள்பாலித்தார்.
    • மரகத நடராஜர் பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று முன்தினம் அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனம் களையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி காலையில் சந்தனம் களையப்பட்டு, பல்வேறு அபிஷேக தீபாராதனைகளுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அருள்பாலித்தார்.

    இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. பின்னர் நடைசாத்தப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    அதிகாலை 4.30 மணி அளவில் அருணோதய காலத்தில் அபூர்வ பச்சை மரகத நடராஜர் திருமேனி மீது புதிய சுத்தமான சந்தனம் பூசப்பட்டது. பச்சை மரகத நடராஜர் சிலை முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நன்கு அரைக்கப்பட்ட சந்தனம் மென்மையாக பூசி வைக்கப்பட்டது. இதன்பின்னர் மரகத நடராஜருக்கு ஆருத்ரா சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    மேலும் மரகத நடராஜர் மனோரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சந்தனம் பூசப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவிலில் கூத்தர் பெருமாள் திருவீதி உலாவும், மாலை பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    இரவு 9 மணிக்கு மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்து, பஞ்சமூர்த்தி புறப்பாடு வெள்ளி ரிஷப சேவை நடைபெற்றது. சிவனுக்கு உகந்தநாளாக கருதப்படும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை தரிசிப்பது விஷேசம் என்பதாலும், விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததாலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.

    ஆருத்ரா தரிசன ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் நாளை தீர்த்தவாரி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.
    • திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் உள்ள நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.

    சிவபெருமானின் 64 திருவடிவங்களில் ஒருவர் நடராஜமூர்த்தி. சிவன் அபிஷேகப் பிரியர். ஆனால் நடராஜமூர்த்திக்கோ ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிஷேகம். எனவே இந்த ஆறு அபிஷேகங்களும் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆகிய நாட்களிலும், ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வருகிறது.

    இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் உள்ள நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்படி, திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் இன்று மாலை 6 மணிக்கும், உய்யகொண்டான் திருமலையில் உஜ்ஜீவநாத சுவாமி கோவிலில் மாலை 5.30 மணிக்கும் நடராஜர்-சிவகாமசுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    இதுபோல் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இன்று மாலை 6.30 மணிக்கு நடராஜர்-சிவகாமசுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகமும், நாளை (திங்கட்கிழமை) காலை தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.

    நீர் ஸ்தலம் என்று போற்றப்படும் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி அம்மன் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கு நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. லால்குடி சப்தரிஷிஸ்வரர் கோவிலில் காலை 6 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களநாதர்கோவிலில் இன்று இரவு 7 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன்கோவில்களில் இன்று நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    ×