என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament election"

    • சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
    • பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விபரங்கள் மற்றும் பிரசாரம், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன.

    இதில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க., தெலுங்கு தேசம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, எல்.ஜே.பி. (ராம்விலாஸ்), சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்) மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எப்.) ஆகிய 6 கட்சிகளிடம் ரூ.4,300 கோடி அதிகமாக நிதி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக காமன்வெல்த் மனித உரிமைகள் முன் முயற்சி (சி.எச்.ஆர்.ஐ.) அமைப்பின் இயக்குனர் வெங்கடேஷ் நாயக் ஒரு ஆய்வை நடத்தி உள்ளார். அதில் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஜனதா தளம் உள்ளிட்ட 17 மாநில கட்சிகள் என 22 கட்சிகள் 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 4 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட போது ரூ.11,326 கோடி தொடக்க இருப்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

    தேர்தல் செயல்பாட்டின் போது ரூ.7,416 கோடி திரட்டி உள்ளன. அதில் ரூ.3,861.6 கோடி செலவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்த நாளில் ரூ.14,848 கோடி மொத்த இறுதி இருப்பு தொகை இருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வின்படி பா.ஜ.க. அதிகபட்சமாக ரூ.5,921.8 கோடி தொடக்க இருப்பு தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் தொடக்க இருப்பு தொகையை அடிப்படையில் 22 கட்சிகளில் 9-வது இடத்தை பிடித்தது. இறுதி இருப்பு தொகை பொறுத்த வரை காங்கிரஸ் 12-வது இடத்தில் உள்ளது.

    சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அவர்களில் 480 பேர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆய்வின்படி 22 கட்சிகள் பெற்ற மொத்த தொகையில் 84.5 சதவீதம் பாஜ.க. திரட்டியுள்ளது. அந்த கட்சியின் மொத்த தேர்தல் செலவு ரூ.1,738 கோடி என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

    இது 22 கட்சிகளில் மொத்த பிரசார செலவில் 45 சதவீதமாகும். ஊடக விளம்பரங்களுக்காக 22 கட்சிகளும் சேர்ந்து ரூ.992.4 கோடிக்கு மேல் செலவிட்டன. பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. டிக்கெட் தந்தால் நான் போட்டி போடுவேன்.
    • பிரதமர் மோடி மாபெரும் தலைவர்.

    புதுடெல்லி :

    பிரபல இந்தி நடிகை கங்கணா ரனாவத் (வயது 35), இமாசல பிரதேச மாநிலத்தின் மணாலியைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த நிலையில், பா.ஜ.க. ஆதரவு முகம் காட்டி வருகிற நடிகை கங்கணா ரனாவத், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

    எனது சொந்த மாநிலத்தின் மக்களின் முன்னேற்றத்துக்காக நான் உழைக்கிற வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு பெருமை.

    என்ன நிலைமை என்றாலும், அரசு எனது பங்களிப்பை விரும்பினால், எல்லா விதத்திலும் நான் பங்கேற்பதற்கு தயாராக திறந்த மனதுடன் இருக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலில் மாண்டி தொகுதியில் இருந்து நான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பி, பா.ஜ.க. டிக்கெட் தந்தால் நான் போட்டி போடுவேன்.

    இமாசலபிரதேச மக்கள், அவர்களுக்கு சேவை ஆற்றுகிற வாய்ப்பினை எனக்கு தந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். எனவே நிச்சயமாக அது எனது அதிர்ஷ்டம்தான்.

    ஆம் ஆத்மியின் போலியான வாக்குறுதிகளுக்கு இமாசலபிரதேச மாநிலம் இரையாகாது. இந்த மாநில மக்கள் தங்கள் சொந்த சூரிய மின்சக்தியை கொண்டுள்ளனர். அவர்கள் சொந்தமாக காய்கறிகளை சாகுபடி செய்கிறார்கள்.

    எனவே இலவச திட்டங்கள், அறிவிப்புகள் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது.

    பிரதமர் மோடி மாபெரும் தலைவர். ஆனால் அவரும், ராகுல் காந்தியும் போட்டியாளர்கள் என்பது வருத்தம் அளிக்கும் விஷயம்.

    மீண்டும் டுவிட்டர் சமூக ஊடகத்துக்கு வருவீர்களா என்று கேட்கிறீர்கள். நான் அதில் ஓராண்டு காலம் இருந்தேன். டுவிட்டரால் அந்த ஓராண்டு காலம்கூட என்னை சகித்துக்கொள்ள முடியவில்லை. இன்ஸ்டாகிராமில் சேர்ந்து ஓராண்டாகி விட்டது. நான் ஏற்கனவே 3 எச்சரிக்கைகளை பெற்றிருக்கிறேன். எனவே நான் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த மாட்டேன் என்று கூறினேன். இந்த பிரச்சினையை எனது குழு கையாண்டது. இப்போது எல்லாமே சரியாகி விட்டது.

    நான் மீண்டும் டுவிட்டருக்கு வந்தால், மக்களின் வாழ்க்கை சுவாரசியமாகி விடும். என் வாழ்க்கையோ பிரச்சினைக்குள்ளாகி விடும். நான் டுவிட்டரில் இல்லாததால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது கணக்குக்கு புத்துயிரூட்டினால், நிச்சயமாக உங்களுக்கு நிறைய 'மசாலா' கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2024 பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அணி திரண்டு வருகின்றன.
    • பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி ஒரு மகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர்.

    * நடைபயணம் சென்று கொண்டி ருக்கும் ராகுல்...

    * பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள்....

    * தேர்தல் போர் களத்தில் இரண்டு முறை மோதியும் யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக பா.ஜனதா....

    இந்த சூழ்நிலையில் 2024 பாராளு மன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எல் லோரிடமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் உத்தரபிரதேசம், தெலுங்கானா, பீகார், மராட்டியம் மாநிலங்களில் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவை எதிர்க்கட்சிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்தன.

    அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று தன்னை வீழ்த்த முடியாத சக்தியாக பாரதீய ஜனதா நிரூபித்து இருப்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    உ.பி.யின் கோலாலோகரநாத், அரியானாவின் ஆதம்பூர், பீகாரின் கோபால்கஞ்ச், மொகமா, ஒடிசாவின் தாம்நகர், தெலுங்கானாவின் முனு கோடு, மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு ஆகிய 7 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

    பொதுவாக இடைத்தேர்தல் முடிவுகள் அடுத்து வரும் பொது தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை நாடி பிடித்து கணிப்பதாகவே இருக்கும்.

    அதன்படி இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு தொடர் எழுச்சி, காங்கிரசுக்கு தொடர் வீழ்ச்சி, மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி என்ற வகை யிலேயே அமைந்துள்ளது.

    உ.பி.யின் கோலாலோகரநாத் தொகுதியில் பா.ஜனதா 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது தொகுதியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

    அரியானாவின் ஆதம்பூர் காங்கிரஸ் தொகுதி. இந்த தொகுதியில் பா.ஜனதா 16 ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் வென்றுள்ளது.

    பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதி யில் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வென்று தனது தொகுதியை தக்க வைத்துள்ளது.

    இதே போல் அந்த மாநிலத்தின் மற்றொரு தொகுதியான மொகமாவில் ஆர்.ஜே.டி. கட்சி 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

    ஒடிசாவின் தாம்நகர் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் பா.ஜனதா வென்று தனது தொகுதியை தக்க வைத்துள்ளது.

    தெலுங்கானா முனுகோடு தொகுதி காங்கிரஸ் தொகுதி. இந்த தொகுதியில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி வெற்றி பெற்றுள்ளது.

    மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு தொகுதியில் சிவசேனா வென்று உள்ளது. இங்கு பா.ஜனதா போட்டி யிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 7 தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளும் காங்கிரசுக்கு பின்னடைவையே கொடுத்துள்ளது. அரியானாவின் ஆதம்பூர் தொகுதியை பா.ஜனதாவிடமும், தெலுங்கானாவின் முனுகோடு தொகுதியை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியிடமும் பறி கொடுத்துள்ளது.

    பறி கொடுத்தது மட்டுமல்ல காங்கி ரஸ் 23,384 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையே பிடித்துள்ளது. 2-வது இடத்தை பிடித்த பா.ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 63 ஆயிரத்து 384 என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாநிலத்திலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இல்லாத ஒரு அணியை உருவாக்குவதில் சந்திர சேகரராவ் தீவிரமாக இருக்கிறார்.

    செல்வாக்குடன் இருந்த காங்கிரசின் செல்வாக்கு மிகவும் சரிந்துள்ளதால் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி யுடன் மல்லுகட்ட பா.ஜனதா தயாராகி விட்டதாகவே பார்க்கப்படுகிறது.

    வாக்கு எண்ணிக்கையின் போதும் இந்த இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தது. கடைசியில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி வெற்றி பெற்றது.

    பா.ஜ.க. கடந்த தேர்தலில் 12,275 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தது. இடைத்தேர்தலில் கடந்த தேர்தலை விட 74 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளது.

    தெலுங்கானாவில் ராகுல் நடை பயணத்தில் பெரிய அளவில் கூட்டம் திரண்டது. எனவே தேர்தலில் தெலுங் கானா ராஷ்டீரிய சமிதிக்கு காங்கிரஸ் கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

    ஆனால் காங்கிரஸ் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு சீனிலேயே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே ராகுல்காந்தி தலைவராக பதவி ஏற்று பாராளுமன்ற தேர்தலை சந்தித்த போது காங்கிரஸ் ஆட்சிைய இழந்தது. இப்போது கட்சி சீரமைக்கப் பட்டு புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்றுள்ளார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தன்னி டம் இருந்து 2 தொகுதிகளை இழந்து மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது.

    மோடியின் செல்வாக்கு தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    மோடியை வீழ்த்த எதிர்கட்சிகள் எத்தனையோ வியூகங்களை வகுத்தும், அஸ்திரங்களை கையில் எடுத்தும் எந்த பலனும் இல்லை.

    2024 பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அணி திரண்டு வருகின்றன. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி ஒரு மகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர்.

    ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து மகா கூட்டணியை உருவாக்கி பா.ஜனதாவை கடுமையாக எதிர்த்தன. ஆனாலும் 2-ல் ஒரு தொகுதியை பா.ஜனதா வென்றது. எனவே இந்த மகா கூட்டணி தேசிய அளவில் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று கலக்கம் அடைந்துள்ளார்கள்.

    இதற்கிடையில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. 182 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந்தேதி களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தொடர்ந்து 6 முறை இந்த மாநிலத் தின் ஆட்சியை தக்க வைத்துள்ள பா.ஜனதா இந்த தேர்தலிலும் தக்க வைக்க கடுைமயாக போராடும். பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.

    பா.ஜனதாைவ எதிர்த்து காங்கிரசும் மல்லு கட்டுகிறது. கியாஸ் சிலிண்டர் ரூ.500, ரூ.10 லட்சம் வரையிலான விவ சாய கடன்கள் தள்ளுபடி, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று கவர்ச்சிகரமான வாக்குறுதி களையும் அளித்துள்ளது.

    இந்த முறை கூடுதலாக ஆம் ஆத்மி யும் களம் இறங்கி இருக்கிறது.

    இதே போல் 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச தேர்த லும் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. கவர்ச்சிகரமான இலவசங்களுடன் பா.ஜனதா தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி உள்ளது.

    காங்கிரசும் மக்களை கவரும் வகை யில் வாக்குறுதிகளை வழங்கி உள்ளது. அதே நேரம் கருத்துக் கணிப்புகள் பா.ஜனதாவுக்கு சாதகமாகவே உள்ளன. பா.ஜனதா 131 முதல் 139 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா 37 முதல் 45 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 21 முதல் 29 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வெளியாகி இருக்கும் இடைத்தேர்தல் முடிவுகளும் இந்த மாநில தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

    • அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட முன்னணி கட்சிகள் உள்ளன.
    • இதுபோன்ற சூழலில் டி.டி.வி. தினகரனையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் நிச்சயம் அது தி.மு.க.வை வீழ்த்துவதற்கு வலு சேர்க்கும் என்றே அ.தி.மு.க.வும் நம்புகிறது.

    சென்னை:

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி விட்டன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலை குறிப்பிட்டு பேசிய அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமையேற்கும் என்பது போன்றே தங்கள் கட்சியின் கருத்தையும் வெளிப்படுத்தினார். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தீவிரமாக இப்போதே களம் இறங்கி இருப்பது உறுதியாகியுள்ளது.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பேட்டி அளித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தி.மு.க.வை வீழ்த்துவதற்காக அமைக்கப்படும் கூட்டணிக்கு நேசக்கரம் நீட்ட தயார் என்று தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக இதற்கு முன்னரும் பல முறை கருத்து தெரிவித்துள்ள தினகரன் தேசிய கட்சி ஒன்றுடன்தான் கூட்டணி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    தற்போதைய சூழலில் தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியுடன் அ.ம.மு.க. கூட்டணி சேர வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் இடம்பெற தயார் என்று அறிவித்திருப்பதன் மூலம் டி.டி.வி. தினகரன் தனது நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் எதிர்காலத்தில் இணைய போவதையே டி.டி.வி. தினகரன் இப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்றே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக கைகோர்த்து டி.டி.வி. தினகரனை ஓரம் கட்டினர். இதன்பின்னர் "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்" என்கிற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வரும் தினகரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் ஓட்டுகளை பிரித்து அ.தி.மு.க.வின் வெற்றிக்கு வேட்டு வைத்தார்.

    தற்போதைய சூழலில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய வேண்டுமென்றால் அதற்கு டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. கூட்டணியில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றே பா.ஜனதா விரும்புகிறது.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. மேல்மட்ட தலைவர்களுடன் பாரதிய ஜனதா கட்சி ரகசிய பேச்சுவார்த்தையையும் நடத்தி உள்ளது. அப்போது டி.டி.வி. தினகரனை சேர்ப்பது தொடர்பாக இப்போதே எதையும் வெளிப்படையாக பேச வேண்டாம் என்றும் கடைசி நேரத்தில் பேசிக் கொள்ளலாம் என்றும் அ.தி.மு.க. தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட முன்னணி கட்சிகள் உள்ளன. இதுபோன்ற சூழலில் டி.டி.வி. தினகரனையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் நிச்சயம் அது தி.மு.க.வை வீழ்த்துவதற்கு வலு சேர்க்கும் என்றே அ.தி.மு.க.வும் நம்புகிறது. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் அ.ம.மு.க. கைகோர்ப்பது கிட்டத்தட்ட உறுதி என்றே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இதுதவிர டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியிலேயே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஐ.ஜே.கே. கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இடம் மாறி பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதன்படி பார்த்தால் பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., புதிய தமிழகம், ஐ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 7 கட்சிகளும் ஒரே அணியில் நின்று தி.மு.க.வை எதிர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர மேலும் பல அமைப்புகளும் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி வியூகத்தை வகுத்துள்ளதாகவும் இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியை நிச்சயம் வீழ்த்தும் என்றும் அ.தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • ராகுல்காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரையை நடத்தி வருகிறார்.
    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று முதல்முறையாக கூடுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு வருகிற 2024-ம் ஆண்டு தேர்தல் நடக்கிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் மத்தியில் ஆட்சியை இழந்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.

    பா.ஜனதா தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்தது. வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சிகளில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது. இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.

    ராகுல்காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரையை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த 150 நாள் பாதயாத்திரை காஷ்மீரில் முடிவடைகிறது. இதன்மூலம் ராகுல்காந்தி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    மேலும் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பணிக்குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கானி, ரந்தீப் சுர்ஜேவாலா, பிரியங்கா காந்தி, சுனில்கனு கோலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த 8 பேர் கொண்ட பணிக்குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார்.

    இந்த நிலையில் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று முதல்முறையாக கூடுகிறது.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் பணிக்குழுவுடன் நடைபெற உள்ள முதல் கூட்டம் இதுவாகும்.

    இதில் பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படுகிறது.

    தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், பணிக்குழுவின் பணிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான திட்டம் ஆகியவை குறித்து மல்லிகார்ஜூன கார்கேயிடம் விளக்கம் அளிக்க உள்ளனர்.

    • விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே தற்போது கட்சியை வழி நடத்தி வருகிறார்.
    • தொடர் தோல்விகளால் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்ந்து போய் பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டம் பிடித்துவிட்டனர்.

    சென்னை :

    சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அதிரடி காட்டியவர் விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு எதிராக அரசியல் களத்தில் கலக்கிய விஜயகாந்த், கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றியை ருசித்த நிலையில் தே.மு.தி.க வேட்பாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் கணிசமான வாக்குகளை அள்ளினார்கள்.

    முதல் தேர்தலிலேயே (2006-ம் ஆண்டு) 10 சதவீத வாக்குகளை பெற்ற தே.மு.தி.க. பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலையும் (2009-ம் ஆண்டில்) தனித்தே சந்தித்தார். இந்த தேர்தலிலும் தே.மு.தி.க. பெருவாரியான ஓட்டுகளை பெற்றது. 9-ல் இருந்து 10 சதவீத ஓட்டுகள் இந்த தேர்தலிலும் கிடைத்தன.

    இப்படி சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு பலத்தை காட்டிய விஜயகாந்த் யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன். மக்களுடன் தான் எனது கூட்டணி என்றே கூறி வந்தார். ஆனால் 2011-ம் ஆண்டு முதல்முறையாக விஜயகாந்தும் கூட்டணி அரசியலுக்குள் தன்னை புகுத்திக்கொண்டார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 29 தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடித்தது. இப்படி 3 தேர்தல்களில் வெற்றிக் கொடியை நாட்டிய தே.மு.தி.க.வுக்கு 2016-ல் இருந்து இறங்கு முகமே. முதல்- அமைச்சர் ஆசையுடன் மக்கள் நல கூட்டணியில் போய் சேர்ந்தார் விஜயகாந்த். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலால் தி.மு.க. கூட்டணியிலேயே விஜயகாந்த் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜயகாந்தின் இந்த முடிவு மீண்டும் அ.தி.மு.க.வுக்கே சாதகமாக அமைந்தது.

    ஜெயலலிதா மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். இந்த தேர்தலில் விஜயகாந்தின் ஓட்டு சதவீதம் 2.4 சதவீதமாக சரிந்தது. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் இதுவரை தே.மு.தி.க 3 தேர்தல்களை சந்தித்துள்ளது.

    2009-ல் தனித்து போட்டியிட்டு பலத்தை காட்டிய நிலையில் 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க.வுக்கு தோல்வியே கிடைத்தது. 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் தோற்ற தே.மு.தி.க கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தோற்றுப்போனது.

    இப்படி தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் மண்ணை கவ்விய தே.மு.தி.க., 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று தங்களது எம்.பி. கணக்கை தொடங்க திட்டமிட்டுள்ளது.

    விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே தற்போது கட்சியை வழி நடத்தி வருகிறார். தொடர் தோல்விகளால் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்ந்து போய் பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டம் பிடித்துவிட்டனர். ஆனாலும் மனம் தளராத பிரேமலதா, தே.மு.தி.க. மக்கள் செல்வாக்குடனேயே உள்ளது.

    எந்த நோக்கத்துக்காக அது தொடங்கப்பட்டதோ அந்த இடத்தை அடைந்தே தீரும் என்று தொடர்ந்து மேடைகள் தோறும் முழங்கி கொண்டிருக்கிறார். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அடித்து கூறுகிறார் தே.மு.தி.க. மூத்த நிர்வாகி ஒருவர்.

    தற்போதைய சூழலில் தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொள்வது என்பதே பெரிய விசயமாக உள்ளதே?

    கட்சிக்குள் பழைய உற்சாகம் இல்லையே?

    இப்படி இருக்கும் போது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக இருந்தாலும் வெற்றிபெறுவது சாத்தியமா? என்பது போன்ற கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம். இதற்கு பதில் அளித்து அந்த நிர்வாகி கூறியதாவது:-

    தே.மு.தி.க.வில் தற்போதுதான் உள்கட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். கட்சியை கீழ்மட்டத்தில் வலுப்படுத்தும் எண்ணத்திலேயே அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதன்மூலம் தே.மு.தி.க.வுக்கு புதுரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளரான பிரேமலதா, கேப்டனையும் கவனித்துக்கொண்டு கட்சியை சரியான திசையில் வழி நடத்தி சென்று கொண்டிருக்கிறார். இளைய கேப்டன் என்று அழைக்கப்படும் தலைவரின் மகன் விஜய பிரபாகரன் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில் இளைஞர்களை கவரும் வகையில் செயல்பட்டு வருகிறார். கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் தவறாமல் பங்கேற்கும் விஜய பிரபாகரனும் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

    கேப்டன் ஆசைப்பட்டபடி தே.மு.தி.க.வை ஆட்சி கட்டிலில் அமரச் செய்துவிட வேண்டும் என்பதில் பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் உறுதியாக உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தே.மு.தி.க. இதுவரை பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதே இல்லை.

    வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்பதில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் தீவிரமாக உள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெறும் கூட்டணியில் இடம்பெறும். கூட்டணி பலத்துடன் தே.மு.தி.க. வெற்றிபெற்று பாராளு மன்றத்துக்குள் முதல் முறையாக காலடி எடுத்துவைக்கும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

    இவ்வாறு நம்பிக்கையுடன் பேசிய தே.மு.தி.க. நிர்வாகி, விஜயகாந்தின் உடல்நிலையை தேர்தலுக்குள் சரிசெய்து அவரை பிரசார களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது சாத்தியமா? என்கிற கேள்விக்கும் அவர் பதில் அளித்தார்.

    விஜயகாந்துக்கு பேச்சு சரியாக வரவில்லை. நிற்பதற்கும் முடியவில்லை. இந்த இரண்டு பிரச்சினைகளையும் தேர்தலுக்குள் சரிசெய்துவிட முடியும் என்று குடும்பத்தினர் நம்புகின்றனர். தே.மு.தி.க. தொண்டர்களும் அந்த நாளுக்காகவே காத்திருக்கிறார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது கட்சியினருக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் நன்மை பயப்பதாகவே இருக்கும் என்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. பெறப்போகும் வெற்றி எங்கள் கட்சிக்கு 2-வது வெற்றி இன்னிங்சாக இருக்கும் என்றே தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். அதேநேரத்தில் அரசியல் நோக்கர்களோ... தே.மு.தி.க. இனி தேறுமா? என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

    விஜயகாந்தின் உடல்நிலை தொடர்ந்து சரியாக இல்லாத நிலையில் அந்த கட்சி எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்பதே தெரியவில்லை. திசை தெரியாமல் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல் போலவே அந்த கட்சி உள்ளது. அது கரை சேருமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது என்றே அவர்கள் கூறுகிறார்கள்.

    தொடர் தோல்விகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தே.மு.தி.க.வுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தல் களம் மிகவும் கடினமானதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது என்பதும் அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.

    காமெடி நடிகர் விவேக் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்று சொல்லிக்கொள்ளும் நிலையிலேயே தே.மு.தி.க. உள்ளது என்பதே தற்போதைய சூழலில் மறுக்க முடியாத உண்மையாகும்.

    • 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது.
    • 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்தது. கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கட்சிரீதியில் அமைந்துள்ள 117 மாவட்டங்களின் செயலாளர்களும் பங்கேற்றனர். கட்சியின் துணைத்தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு, செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய களப்பணிகள், கட்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுரைகளை வழங்கினார்.

    குறிப்பாக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, 'பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கான வேலைகளை நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டாக வேண்டும். கிளை அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். கடந்த முறை தேர்தல்களின்போது செய்த தவறுகளை வரும் பாராளுமன்ற தேர்தலில் செய்யக்கூடாது' என்று கமல்ஹாசன் அறிவுரைகளை வழங்கினார்.

    இதுதவிர அந்தந்த மாவட்டங்களில் நடந்து வரும் உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட பணிகள் உள்ளிட்ட விவரங்களையும் மாவட்ட ரீதியாக கமல்ஹாசன் கேட்டறிந்தார்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு வெளியே வந்த கமல்ஹாசனிடம், "பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசப்பட்டதா?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினோம். விவாதித்தோம். ஆனால் அதை இப்போது விவரிக்க முடியாது. பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் விவாதித்தோம்'' என்று பதில் அளித்தார்.

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. இந்த தேர்தல்களில் வெற்றி பெறாத நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் இப்போதே ஆயத்த பணிகளில் களமிறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் கூட்டணி அரசியலை விரும்புவது தெரிய வந்துள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல், 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்த நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.

    இது தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 85 மாவட்ட செயலாளர்கள், மாநில செயலாளர்கள், மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர். துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, கவிஞர் சினேகன், மூகாம்பிகை, முரளி அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர்கள் பாராளுமன்ற தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் நடவடிக்கை அமைய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். 2 தேர்தல்களில் செய்த தவறை வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் நாம் செய்துவிடக் கூடாது என்றும் நிர்வாகிகள் பேசினார்கள்.

    தனித்து போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற முடியாததை சுட்டிக்காட்டியே நிர்வாகிகள் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தனர்.

    இதையடுத்து கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் 'கூட்டணி'யை பற்றி கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நீங்கள் சுறுசுறுப்பாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். மக்களின் மதிப்பை பெறும் வகையில் அனைத்து பகுதிகளிலுமே நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

    இதற்காக உங்கள் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து அவைகளை சரி செய்வதற்கான பணிகளில் எப்போதும் போல தீவிரமாக செயல்படுங்கள். கிராமப் புறங்கள் தொடங்கி நகர் புறங்கள் வரையில் கட்சியை வலுப்படுத்தினால் தான் நம்மால் வெற்றி பெற முடியும்.

    பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது? என்பது பற்றி நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா? என்பது பற்றி நாம் தீவிரமாக ஆலோசித்து முடிவு செய்வோம். நீங்கள் கட்சி பணிகளில் வேகம் காட்டுங்கள். கூட்டணி அமைப்பது போன்ற மற்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய ஓராண்டிலேயே 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கமல்ஹாசன் சந்தித்தார். அந்த தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. மக்கள் நீதி மய்யம் சார்பில் களம் இறங்கிய வேட்பாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் வாக்குகளை பிரித்தனர்.

    2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் கமல் கட்சி வேட்பாளர்கள் சொல்லிக்கொள்ளும்படியே வாக்குகளை பெற்றனர். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றியை நழுவ விட்டார்.

    இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் கூட்டணி அரசியலை விரும்புவது தெரிய வந்துள்ளது.

    பாரதிய ஜனதாவின் கொள்கைகளுடன் உடன்படாத காரணத்தாலேயே சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியின் வானதி சீனிவாசனை எதிர்த்து கமல்ஹாசன் போட்டியிட்டார்.

    பாராளுமன்ற தேர்தலிலும் அது போன்ற ஒரு முடிவையே கமல்ஹாசன் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் தோல்வியை தவிர்க்க 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பெரிய கூட்டணியில் இணைந்து போட்டியிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே திரையுலகில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன், கமல்ஹாசன் இணைந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

    எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க.-காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க. கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட கமல்ஹாசன் திட்டம் வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

    மேலும் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தன்னை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச்சென்ற கோவையிலேயே போட்டியிட கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஜெயலலிதா தலைவராக இருந்த அ.தி.மு.க.வில் இன்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள்.
    • எடப்பாடி பழனிசாமி ஒரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.ம.மு.க. சுதந்திரமாக இயங்கக் கூடிய இயக்கம். நாங்கள் மற்றவர்களுடன் கூட்டணி தான் போக முடியும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மெகா கூட்டணி பற்றிய பேச்சு வந்துள்ளதால் அதில் சேர தயார் என்றேன். எனவே பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணியில் அ.ம.மு.க. சேரும்.

    ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் ஓரணியில் திரண்டு தி.மு.க. அணியை எதிர்க்க வேண்டும்.

    அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என்பதை காண்பிக்கிறார். நான் அரைக்கால் சதவீதம் கூட எடப்பாடி பழனிசாமியுடன் செல்வேன் என்று எங்கும் சொல்லவில்லை.

    நீங்கள் அ.தி.மு.க. கூட்டணியுடன் செல்வீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் திரும்ப திரும்ப கேட்கிறார்கள். அ.தி.மு.க. என்பது இன்று செயல்படாத கட்சியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்.

    ஒரு கட்சி பெரிய கட்சியாக இருந்தாலும் சரி, சின்ன கட்சியாக இருந்தாலும் சரி இடைத்தேர்தல் வரும்போது கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும். அங்கு அந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனியாக போட்யிட்டோம். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாததாலேயே தோல்வியை சந்தித்தோம். தேர்தல் பின்னடைவுக்கு அதுவும் ஒரு காரணம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. ஒரு அணியை போல செயல்படும். இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அ.ம.மு.க. தமிழ்நாட்டில், சிறப்பாக பணியாற்றும். எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    ஏற்கனவே தேர்தலில் நாங்கள் பின்னடைவை சந்தித்ததால் வருங்காலத்தில் நாங்கள் தேர்தலில் பின்னடைவை தான் சந்திப்போம் என்று யாராவது நினைத்தால் அது அவர்களின் எண்ணம். எங்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

    ஜெயலலிதா தலைவராக இருந்த அ.தி.மு.க.வில் இன்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஒரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார்.

    அ.தி.மு.க. தலைவர் யார் என்பதை நீதிமன்றம் போய் முடிவு செய்யும் இடத்தில் அந்த கட்சி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாளை நலத்திட்ட நாளாக சிறப்பாக கொண்டாட வேண்டும்.
    • இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள கிருஷ்ணா ஹாலில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தீர்மானங்களை வாசித்தார்.

    தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் மாரிச்சாமி, பராசக்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, ஒன்றிய செயலாளர்கள் கிறிஸ்டோபர், மதிமாரிமுத்து, பெரியதுரை, சேர்மதுரை, ராமச்சந்திரன், புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதாமுன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். வெற்றிவிஜயன் தொகுத்து வழங்கினார்.

    இதில் தென்காசி எம்.பி. தனுஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலாசங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் செண்பகவிநாயகம், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையாபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    தொடர்ந்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாளை நலத்திட்ட நாளாக சிறப்பாக கொண்டாட வேண்டும், தி.மு.க. இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சரின் திட்டங்களை ஒன்றிய நகர, பேரூர், கழக நிர்வாகிகள் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்தி பொதுமக்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும், தெருமுனை பிரசாரம் என்பது பொதுமக்களிடம் எளிதாக செல்லும் முறை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு தற்போது இருந்தே பணியை தொடங்கி தி.மு.க.வை வெற்றி பெற கடமையாக உழைக்க வேண்டும்.

    வரும் 18-ந்தேதி கழகத்தின் இளைஞரணி செயலாளர் அறிவித்துள்ளபடி வாசுதேவநல்லூர் தொகுதி தேவர் மண்டபத்தில் திராவிட பாசறை கூட்டம் நடத்தப்பட உள்ளது. 22 -ந்தேதி சங்கரன்கோவிலில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .

    கட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக மாவட்ட கழகத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். அனைவரும் இணைந்து கட்சிப் பணி ஆற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, மூத்த வழக்கறிஞர் சண்முகையா, அரசு வழக்கறிஞர்கள் கண்ணன், அன்புசெல்வன், ஜெயக்குமார் மூத்த முன்னோடிகள் அண்ணாவிப்பன், சோமசெல்வபாண்டியன், இளைஞரணி சரவணன், திலீப்குமார், வர்த்தக அணி முனியசாமி, சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, வீமராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், குமார் இளைஞரணி பசுபதிபாண்டியன், மாணவரணி கார்த்திக், நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட தொண்டரணி முத்து மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்துச்செல்வி நன்றி கூறினார்.

    • பா.ஜனதாவின் நெருக்கடியில் இருந்து விலகி செயல்படும் மன நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டதாக கூறப்படுகிறது.
    • வருகிற 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் முடிவை பொறுத்து மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணிகளை நோக்கி நகர தொடங்கி விட்டன.

    தேர்தல் நேரங்களில் கூட்டணி கட்சிகள் மாறுவது வழக்கமானது தான். இந்த மாற்றங்களுக்கு திரை மறைவு ரகசியங்கள், வெளிப்படையான பிரச்சினைகள் காரணமாக அமையும்.

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதாவும், தி.மு.க.வுடன் காங்கிரசும் சேர்ந்தன. இந்த கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்தன.

    இதில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் இடம்பெற்றன.

    தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் கூட்டணிகளில் மாற்றங்கள் வரலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் காங்கிரசுக்கு 'சீட்'களை கேட்டு பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கான தேர்தல் என்பதால் கூடுதல் தொகுதியை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால் அந்த அளவுக்கு தொகுதிகளை விட்டுக்கொடுக்க தி.மு.க. முன்வராது.

    அதற்கு காரணம் காங்கிரசின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் தடம் பதிக்க விரும்புவதால் கூடுதலான எம்.பி.களுடன் பாராளுமன்றத்தில் வலுவான கட்சியாக இருப்பதையே விரும்பும்.

    இந்த நெருக்கடியில் தான் கூட்டணியில் எதிர்பார்த்த எண்ணிக்கையில் 'சீட்' கிடைக்காவிட்டால் கூட்டணி மாறுவது பற்றி யோசிக்கலாம் என்ற மனநிலையில் காங்கிரசார் உள்ளனர்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜனதா கூட்டணியில் இருப்பதால் பலன் இல்லை என்றே நினைக்கிறது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க பா.ஜனதா மேலிடம் வற்புறுத்துவதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

    டி.டி.வியும் வேண்டாம், ஓ.பி.எஸ்.சும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து டெல்லி தலைவர்களை சந்தித்து வலியுறுத்துவதால் பா.ஜனதா தலைவர்களும் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

    முக்கியமாக அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியை விட ஓ.பன்னீர்செல்வம் தான் நமக்கு ஆதரவாக இருப்பார் என்ற கருத்தும் பா.ஜனதா தலைவர்களிடம் உள்ளது.

    பா.ஜனதாவின் நெருக்கடியில் இருந்து விலகி செயல்படும் மன நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டதாக கூறப்படுகிறது.

    வருகிற 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் முடிவை பொறுத்து மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது.

    காங்கிரசை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம், முன்னேறியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் ஆகியவற்றில் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் தி.மு.க. உள்ளது.

    எனவே தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாமா? என்ற தயக்கத்தில் இருக்கும் காங்கிரசையும், பா.ஜனதா கூட்டணியில் தொடர தயங்கும் அ.தி.மு.க.வையும் சேர்த்து விடுவதற்கான வேலை டெல்லி அளவில் ஜரூராக நடப்பதாக கூறப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் பட்சத்தில் பா.ம.க., தி.மு.க. அணிக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் வெளியேறும். அந்த கட்சி காங்கிரஸ் அணியில் இடம் பிடிக்கும்.

    இப்படி ஒரு சூழ்நிலை உருவானால் 2014 தேர்தலை போல் வருகிற தேர்தலிலும் பா.ஜனதா தனித்து விடப்படும். அது மும்முனை போட்டிக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த கூட்டணி மாற்றங்கள் நிகழும் பட்சத்தில் எந்த அணியில் இடம் கிடைக்கும் என்று சில சிறிய கட்சிகள் தவிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

    • தி.மு.க.வும், நாம் தமிழர் கட்சிகளிடையே கூட்டணி ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    • தி.மு.க.வை பொறுத்தவரை 2024 தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

    சென்னை:

    2024 பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்ற யோசனையில் எல்லா கட்சிகளும் மூழ்கி உள்ளன. குறிப்பாக சிறிய கட்சிகள் எந்த பக்கத்தில் இடம் பிடிப்பது என்று யோசிக்கத்தொடங்கி உள்ளன.

    கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி 4 ஆண்டுகளுக்கு முன்பு உதயமானது. இதுவரை தனித்தே களம் கண்டுள்ளன. அதேநேரம் கூட்டணி பற்றி கமல் பேசியதும் கிடையாது.

    ஆனால் சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது பற்றி ஆலோசனை வழங்கிவிட்டு கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதுவரை கூட்டணி பற்றி வாயே திறக்காத கமல் முதல்முறையாக கூட்டணி சேரும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

    தி.மு.க. கொள்கையுடன் ஒத்துப்போகும் கமல் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பிடிக்கவே முன்கூட்டியே கமல் தரப்பில் இருந்து இந்த சமிக்ஞை வெளியிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இது ராகுல் பிரதமர் வேட்பாளர் என்பதற்கு கிடைத்த வெற்றி என்றும் வருகிற தேர்தலில் மேலும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும்படியும் கேட்கும் என்று கூறப்படுகிறது.

    எனவே காங்கிரசுக்கு கொடுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க ஏதுவாக கூடுதலாக கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை உருவாக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த விசயத்தில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு தெரியவில்லை. கட்சி தொடங்கப்பட்டது முதல் அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டது. ஆனால் இதுவரை ஒரு எம்.பி., எம்.எல்.ஏ. கூட வெற்றி பெற்றதில்லை.

    ஆனாலும் இதுபற்றி சீமான் கூறும்போது, 'நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு தமிழர் நலனுக்காக உழைப்பது தான். அப்படியிருந்தும் தேர்தலில் மக்கள் அங்கீகரிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதேநேரம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு விமர்சிப்பதில் மென்மையான போக்கையே அவர் கடைபிடித்து வருகிறார். எனவே வருங்காலத்தில் தி.மு.க.வும், நாம் தமிழர் கட்சிகளிடையே கூட்டணி ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    பா.ம.க. தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளையும் தங்கள் அணியில் இணைக்க தி.மு.க.வும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்சிகள் கடைசி நேரத்தில் பா.ஜனதாவுடன் செல்லவும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.

    தி.மு.க.வை பொறுத்தவரை 2024 தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. தி.மு.க. உருவாக்கும் மெகா கூட்டணியில் இடம்பிடிக்க சிறிய கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன.

    ×