என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property"

    • நாகப்பட்டினம் மாவட்ட கோர்ட்டு, மோசசின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என்று தீர்ப்பு அளித்தது.
    • சொத்தில் மனைவிக்கு 3-ல் ஒரு பகுதியில் மீதமுள்ளவை குழந்தைகளுக்கும்தான் தரப்பட வேண்டும்.

    சென்னை:

    கிறிஸ்தவ வாரிசுரிமை சட்டத்தின்படி இறந்த மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது என்று தெளிவுப்படுத்தி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

    நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவரது மகன் மோசஸ். இவருக்கும், அக்னஸ் என்கிற கற்பக தேவிக்கும் கடந்த 2004-ல் திருமணம் நடந்தது. கற்பக தேவி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி மோசசை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மோசஸ் இறந்துவிட்டார். அவர், தனது சொத்து குறித்து எந்த உயிலையும் எழுதிவைக்கவில்லை.

    இதையடுத்து, மோசசின் சொத்துகளில் பங்கு கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் மாவட்ட கோர்ட்டு, மோசசின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என்று தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அக்னஸ் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சி.முனுசாமி, ''இந்திய வாரிசுரிமை சட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கான சட்டம் பிரிவு 33 மற்றும் 33-ஏயில் மகன் தனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்டால், அவரது சொத்தில் மனைவிக்கு 3-ல் ஒரு பகுதியில் மீதமுள்ளவை குழந்தைகளுக்கும்தான் தரப்பட வேண்டும். தாய்க்கு எந்த பங்கும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது'' என்று வாதிட்டார்.

    மோசசின் தாய் பவுலின் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த ஐகோர்ட்டு உதவும் விதமாக வக்கீல் பி.எஸ்.மித்ரா நேஷாவை நியமித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அவர், ''கிறிஸ்தவ வாரிசுரிமை சட்டம் பிரிவு 42-ன்படி கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி, குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உண்டு. மனைவியோ, குழந்தைகளோ இல்லாதபட்சத்தில் தந்தைதான் மகனின் சொத்துக்கு வாரிசு ஆவார். தந்தையும் இல்லையென்றால் தாய், சகோதர, சகோதரிகள் வாரிசுகளாவார்கள் என்று விளக்கம் அளித்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பில், ''இந்த வழக்கில் மகனின் சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை. கிறிஸ்தவ வாரிசுரிமைச் சட்டத்தின்படி, இறந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது என்றும், தாய் பங்கு கேட்க முடியாது என்றும் ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு (ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன்) 2021-ம் ஆண்டே தீர்ப்பு அளித்துள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் நாகை மாவட்ட நீதிபதி, இந்த ஐகோர்ட்டு தீர்ப்பையும், வாரிசுரிமை சட்டத்தையும் கவனிக்காமல் உத்தரவிட்டுள்ளார். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த ஐகோர்ட்டுக்கு உதவிய வக்கீல் மித்ரா நேஷாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

    • 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சிவ பாலகிருஷ்ணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் சிவ பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சிவ பாலகிருஷ்ணா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவருடைய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகட்டாக பணம், தங்க கட்டிகள் நகைகள், 60 உயர் ரக கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், 14 செல்போன்கள், 10 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரது வீடுகளில் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் எண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளகளில் பரவி வருகிறது.

    தங்க நகைகள், செல்போன்களை குவித்து வைத்து வீடியோவாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    சிவபாலகிருஷ்ணா மீது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது பதவியை பயன்படுத்தி பெரும் அளவில் சொத்துக்களை குவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

    தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நாளை வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    ஒரு அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.
    • விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது 3 குழந்தைகளும் பங்கீடும் வகையில் உயில் எழுதி வைத்தார்.

    ஆனாலும் அந்த பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது அவரது குழந்தைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.

    இதையறிந்த அவரது குழந்தைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையான ஒருவரை தேர்ந்தெடுத்து கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும், பூனையையும் நன்கு பராமரிக்க ஒரு விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • டெல்லியைச் சேர்ந்த ப்ரீத் இந்தர் சிங் [30 வயது ] என்ற இளைஞருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
    • தனது விந்தணு மாதிரியை உறையவைத்து அதற்கான நிறுவனத்தில் சேமித்துள்ளார்

    இறந்த மகனின் விந்தணுவை சொத்தாகக் கருத முடியும் என்றும் அதை பெற்றோர் வைத்துக்கொள்ள உரிமை உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ப்ரீத் இந்தர் சிங் [30 வயது] என்ற இளைஞருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

    கேன்சர் நோய்க்கான கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு முன்னர் தனது விந்தணு மாதிரியை உறையவைத்து அதற்கான நிறுவனத்தில் சேமித்துள்ளார் அவர். தற்போது சிகிச்சை பலனளிக்காமல் ப்ரீத் இந்தர் சிங் உயிரிழந்த நிலையில் அவரின் உறையவைக்கப்பட்ட விந்தணு மாதிரியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரின் பெற்றோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா சிங், நபரின் விந்தணுவை சொத்தாக பாவிக்க முடியும் என்பதாலும், இந்துமத சொத்துரிமை சட்டத்தின்படி பெற்றோருக்கு மகனின் சொத்தில் முதல் உரிமை உள்ளது என்பதாலும் இறந்த மகனின் சேமிக்கப்பட்ட விந்தணுவை பெற்றோர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.  மகனின் விந்தணுவை வைத்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    • தனக்கு ஏழு வயதாக இருந்தபோது, ​​ தான் கடத்தப்பட்டதாக போலீசில் கூறினார்
    • உறவினர்கள் வீட்டில் ராஜு திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவரை வீட்டை விட்டு துரத்தினர்

    நான் தான் சிறு வயதில் காணாமல் போன உங்களது மகன் என்று கூறி நபர் ஒருவர் பல குடும்பங்களில் மோசடி செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பீம் என்றும் இந்திரராஜ் பல பெயர்களால் அறியப்படும் ராஜு என்பவர் ராஜஸ்தானைச் சேர்த்தவர். 1993 இல், தனக்கு ஏழு வயதாக இருந்தபோது, தான் கடத்தப்பட்டதாகவும் தன்னை குடும்பத்துடன் சேர்த்துவைக்குமாறும் போலீசை அணுகியுள்ளார்.

    போலீசார் அவருக்கு ஒரு வாரத்திற்கு உணவு மற்றும் உடைகளை ஏற்பாடு செய்து சமூக ஊடகங்களில் அவரை பற்றய செய்தியை வெளியிட்டனர். அவர் தங்கள் காணாமல் போன பிள்ளைதான் என்று கூறி ஒரு குடும்பம் போலீசை அணுகி ராஜூவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றது. இந்த செய்தியை ஊடகங்களும் நெகிழ்ச்சியான தருணமாக வெளியிட்டன.

     

    ஒரு மகிழ்ச்சியான கிளைமாக்ஸ் போல தோன்றிய இது உண்மையில் மோசடி என்பது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. ராஜூவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்ற குடும்பதிற்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு ராஜுவுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ராஜுவின் குட்டு வெளிப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ராஜுவிடம் நடந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

     தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டில் ராஜு திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவரை கடந்த 2005 ஆம் ஆண்டே வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.

    பின்னர் அவர் தனது அடையாளத்தை மறைத்து இதுவரை ஒன்பது வெவ்வேறு குடும்பங்களை மோசடி செய்துள்ளார். காணாமல் போன மகன் என கூறி ஒரு குடும்பத்துக்குள் செல்லும் ராஜு சிலகாலம் அங்கேயே தங்கி பின் அவர்களின் வீடுகளில் கொள்ளையடித்து, யாரிடமும் கூறாமல் அங்கிருந்து நழுவி அடுத்த குடும்பத்துக்குச் சென்றுள்ளார் . மேலும் அந்த குடும்பங்களிடம் என்ன சொத்து உள்ளது என்பதையும் அலசி ஆராய்ந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

     

    தனது தாயார் இறந்த பிறகு, உணவுக்காகவே மற்றவர்களின் வீடுகளில் இவ்வாறு வசித்து வந்ததாக போலீசாரிடம் ராஜு கூறியுள்ளார் . இதுவரை அவர் தனது போலி அடையாளத்துடன் இருந்த வீடுகளை தவிர்த்து மேலும் பல குடும்பங்களையும் ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பஞ்சாப், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், ஹரியானாவில் ஹிசார் மற்றும் சிர்சா ஆகிய இடங்களில் இவர் இந்த மோசடிகளை அரங்கேற்றியுள்ளார். 

    • எனக்கும், எனது சொத்துக்களுக்கும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதால் நான் அஞ்சுகிறேன்.
    • என்னை நிரந்தரமாக என் வீட்டை கைவிட அவர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள்.

    பழம்பெரும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு தனது மகன் மஞ்சு மனோஜ் மற்றும் மருமகள் மோனிகா ஆகியோர் தன்னை மிரட்டுவதாகவும் அவர்கள் மூலம் தனக்கு ஆபத்து இருப்பதாவும் போலீசில் புகார் அளித்துள்ளார். எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    மோகன் பாபு தனது புகாரில் கூறியதாவது, மனோஜ் சில சமூக விரோதிகளுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை ரங்காரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் அருகே ஜல்பல்லியில் தனது வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்தார்

    எனக்கும், எனது சொத்துக்களுக்கும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதால் நான் அஞ்சுகிறேன். இந்த நபர்கள் என்னைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் வெளியே சென்ற நான் மீண்டும் வீடு திரும்புவதற்காகக் காத்திருந்தனர் என்பதை அறிந்து நான் பயந்துவிட்டேன். என்னை நிரந்தரமாக என் வீட்டை கைவிட அவர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள்.

     

    எனக்கும், என் வீட்டில் இருப்பவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள் என்று மோகன் பாபு தெரிவித்துள்ளார்.

    மனோஜ், மோனிகா மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை தனது சொத்துக்களிலிருந்து வெளியேற்றுமாறும் மோகன் பாபு போலீசை வலியுறுத்தியுள்ளார்.

    முன்னதாக, மனோஜ் மஞ்சு தனது தந்தையால் தாக்கப்பட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது மகனுக்கு எதிராக மோகன் பாபு புகார் அளித்துள்ளார்.

    தந்தை - மகன் இருவருக்கும் இடையில் சொத்து தொடர்பான தகராறால் சுமூகமான உறவு இல்லை என தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும்.
    • பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே திருச்செங்காட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 70). இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார்.

    அதில், தனது பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பெயரில் மடம் இருந்தது. இந்த மடம் மற்றும் அப்பகுதியில் உள்ள இடத்தை நாங்கள் பல தலைமுறையாக அனுபவித்து வந்தோம்.

    இந்த நிலையில் அந்த மடத்தை 1996-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெயரில் வகைமாற்றம் செய்து பெயர்மாற்றம் செய்துள்ளனர். காலப்போக்கில் இதை நான் அறிந்தேன். எனவே எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர், அதில் தெரிவித்து இருந்தார்.

    இந்த மனு நாகை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையில் விசாரிக்கப்பட்டது. இதில் மூலப்பத்திரம் உள்ளிட்ட சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

    பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.

    ஆனால் ராதாகிருஷ்ணன், தன்னிடம் இருந்த சோழர் கால செப்பு பட்டயத்தை சமர்ப்பித்தார். இந்த செப்பு பட்டயத்தை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையிலான குழுவினர் அலுவலகத்தில் இருந்த ஆவண குறிப்புகளை வைத்து சோதனை செய்தனர்.

    இதில் ராதாகிருஷ்ணன் கொடுத்த சோழர் கால செப்பு பட்டயத்தை ஆதாரமாக ஏற்று அவரது தரப்பை சேர்ந்தவர்களுக்கு சாதகமாக அரங்கநாதன் தீர்ப்பு வழங்கினார்.

    இதனையடுத்து உரிய முறையில் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகத்திற்கு ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

    • முதுமையில் மனம் நோகாமல் பெற்றோரை பிள்ளைகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • பெற்றோருக்கு இருக்கும் கடமை உணர்வு, சட்ட ரீதியாக பிள்ளைகளுக்கும் உண்டு.

    சென்னை :

    சென்னையை சேர்ந்த நாகராஜன், சரோஜா தம்பதி. நாகராஜன் விமானப்படையில் அதிகாரியாகவும், சரோஜா நர்சாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு ராஜசேகர், ராஜேஷ் என்று 2 மகன்கள்.

    மூத்த மகன் ராஜசேகர் ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தங்கள் பெயரில் இருந்த வீட்டை இவரது பெயரில் நிபந்தனையுடன் பெற்றோர் எழுதி வைத்தனர். தங்களது கடைசி காலம் வரை மருத்துவ செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மூத்த மகன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கடந்த 2012-ம் ஆண்டு நாகராஜன் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 4 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டார். அப்போது மூத்த மகன் ராஜசேகரை தொடர்பு கொண்டபோது, அவர் எந்த உதவியும் செய்யவில்லை. பல லட்சம் ரூபாயை சரோஜா செலவு செய்து, கணவரை காப்பாற்றியுள்ளார். பின்னர் சரோஜா உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது, உதவி கேட்டு, மூத்த மகனுக்கு தந்தை இ-மெயில் கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு எந்த பதிலும் இல்லை. இதனால், சரோஜா ஆஸ்பத்திரியிலும், அவரது கணவர் நாகராஜன் முதியோர் இல்லத்திலும் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதனால், அவர் பெயரில் எழுதி வைத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை நாகராஜனும், சரோஜாவும் 2014-ம் ஆண்டு ரத்து செய்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பறிபோனதால், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்தது தவறு என்று தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், நாகராஜன், சரோஜா ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் சாரதா விவேக் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை ஏன்நோற்றான் கொல் எனும் சொல்" என்ற திருக்குறளை உதாரணமாக கூறி நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    பெற்றோருக்கு இருக்கும் கடமை உணர்வு, சட்ட ரீதியாக பிள்ளைகளுக்கும் உண்டு. முதுமையில் மனம் நோகாமல் பெற்றோரை பிள்ளைகள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், இதை பெரும்பாலான பிள்ளைகள் ஏற்க மறுப்பது வேதனையாக உள்ளது. இந்த வழக்கில் மூத்த மகனின் செயல்பாடு இரக்கமற்றது ஆகும்.

    அவருக்கு தந்தை அனுப்பிய இ-மெயிலில், "அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க டாக்டர்கள் கூறுகின்றனர். அப்படி ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டால், நான் எங்கே போவது? முதியோர் இல்லத்துக்கு போகவா? தம்பி ராஜேஷ் போன் எடுக்கவில்லை. எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. என்ன செய்வது? உடனே சொல்" என்று கூறியுள்ளார்.

    ஆனால், இந்த இ-மெயில் கடிதத்துக்கு மூத்த மகன் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. பெற்றோரை கடைசி காலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பை மகன் மறந்து விட்டான். தனக்கு எழுதி வைத்த செட்டில்மெண்ட் படி, வீட்டு வாடகையை மட்டுமே பெற்றோர் சாகும் வரை வசூலிக்கலாம். அதற்காக செட்டில்மெண்ட்டை ரத்து செய்ய முடியாது என்று மகன் தரப்பில் வாதிடப்பட்டது.

    ஆனால், கடந்த 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம், பிரிவு 23-ன்படி, பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் பெயரில் எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை சட்ட ரீதியாக ரத்து செய்ய பெற்றோருக்கு முழு உரிமை உண்டு.

    இந்த வழக்கில் தாயும், தந்தையும் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது அவர்களை மகன் கவனிக்கவில்லை. பணம் கொடுத்து உதவி செய்யவும் இல்லை. எனவே, மகனுக்கு எழுதி வைத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்தது சரியானதுதான்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

    • நகராட்சி சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் காரைக்குடி நகர்மன்றத்தலைவர் உறுதியளித்துள்ளார்.
    • காரைக்குடி நகர்மன்ற கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது.

    காரைக்குடி

    காரைக்குடி நகர்மன்ற கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குணசேகரன், ஆணையாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

    குணசேகரன் (துணைத்தலைவர்) :- சூடாமணிபுரம், தேவஸ்தான பகுதி, அண்ணாநகர், சேர்வார் ஊரணி பகுதிக ளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்க ளுக்கு வரி போட வேண்டும்.

    அன்னை மைக்கேல் (தி.மு.க. கவுன்சிலர்) :- காரைக்குடியில் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி வாங்குவதில் புரோக்கர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் அவப்பெயர் ஏற்படுகிறது. சாலையோர மீன் கடைகளால் சுகா தாரக்கேடு நிலவுகிறது. நல்லதண்ணீர் ஊரணி அருகே ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.

    குருபாலு (அ.தி.மு.க. கவுன்சிலர்) :- அண்ணாநகர் பகுதியில் வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும். சாலை அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும்.

    கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளித்தனர்.

    கூட்டத்தில் இறுதியாக தலைவர் முத்துதுரை பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் காரைக்குடி நகராட்சியில் சாலைப்பணிகளுக்கு ரூ. 10 கோடியும், தெருவிளக்கு அமைக்க ரூ. 3 கோடியும் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.

    கடந்த ஆட்சியில் நகராட்சியின் இழந்த சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதே முதல் கடமை.

    ஊரகத்துறையில் சாதனை புரிந்து ஜனாதிபதி விருது பெற்ற அமைச்சர் பெரியகருப்பனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் பொறியாளர் கோவிந்தராஜ், நகரமைப்பு அலுவலர் மாலதி, நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

    • திருமங்கலத்தில் சொத்து மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு போலீஸ் ஐ.ஜி.யிடம் புகார் செய்யப்பட்டது.
    • குறைத்து மதிப்பீடு செய்து பத்திரப்பதிவு செய்து உள்ளனர்.

    மதுரை

    தென் மண்டல போலீஸ் ஐ.ஜி அஸ்ரா கார்க்கிடம் திருமங்கலத்தைச் சேர்ந்த வக்கீல் வினோத்குமார் என்பவர் புகார் மனு கொடுத்தார். அதில் திருமங்கலத்தைச் சேர்ந்த சிலர் அங்குள்ள சார்பதிவாளர் அலுவ லகத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.40 லட்சம் என்று குறைத்து மதிப்பீடு செய்து பத்திரப்பதிவு செய்து உள்ளனர்.

    இதனால் பத்திரப்பதிவு மற்றும் வருமான வரித்துறைக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து புகார் மனு அனுப்பினேன். அவர்கள் என் மீது ரூ.20 கோடி மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் கூறி வருகின்றனர்.

    திருமங்கலம் சார்பதி வாளர் அலுவலகத்தில் மோசடியாக பதிவு செய்தவர்களின் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். என் மீது பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    • களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 70).
    • அவரது 3-வது மகன் இசக்கிப்பாண்டிக்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 70). இவருக்கும், அவரது 3-வது மகன் இசக்கிப்பாண்டிக்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

    இந்த தகராறில் ஏற்கனவே இசக்கிமுத்து, சண்முகத்தாயையும், இசக்கிபாண்டி, தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர்கள் களக்காடு போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிபாண்டியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகத்தாய் அங்குள்ள புரோட்டா கடை முன்பு நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கிப்பாண்டி சொத்தை எனக்கு எப்போது எழுதி தருவாய் எனக் கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது தாயாரான சண்முகத்தாயை தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூதாட்டியை தாக்கிய மகனை தேடி வருகிறார்.

    • 5 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டு தற்பொழுது 50 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் மட்டுமே உள்ளது.
    • தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப கமிஷன் உயர்த்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏஐ) எல்ஐசி முகவர்களின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை அளித்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முகவர்க ளின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை கைவிட கோரியும், எல்ஐசியை தனியார் மையமாக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை கோட்ட பொருளாளர் திருவாரூர் கருணாநிதி பேசுகையில் எல் ஐ சி முகவர்கள் இல்லாத நிலையை இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையும், மத்திய அரசும் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

    பிஎஸ்என்எல் இந்திய விமான கட்டுப்பாடு உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி வருகி ன்றனர்.இதேபோல் எல்ஐசி தனியார் மையமாக ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

    எல்ஐசி தொடங்கப்பட்ட பொழுது 1956ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகையை தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.

    5 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டு தற்பொழுது 50 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் மட்டுமே உள்ளது.

    இந்த வளர்ச்சி முகவர்களால் ஏற்படுத்தப்பட்டது. கடந்த காலங்களில் எல்ஐசிஐ தனியார் மையமாக முயற்சித்த போது பல்வேறு போராட்டத்தில் இந்த சங்கம் ஈடுபட்டு எல்ஐசி யும் அதனால் பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகளையும் தக்க வைத்துள்ளோம்.

    ஆனால் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப கமிஷன் உயர்த்த வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை.

    புதிய பாலிசிகளுக்கு 20% கமிஷன் வழங்க வேண்டும், புதுப்பித்தலுக்கு ஐந்து சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும்.

    ஆனால் ஐ ஆர் ஏ டி ஐ சொல்வதைக் கேட்டு எல்ஐசி கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.

    குறிப்பாக பொதுமக்களின் உறுதி அளிக்கப்பட்ட உரிமம் தொகை வழங்கக்கூடாது என்பதில் முயற்சி செய்து வருகின்றனர்.

    எல்ஐசி முகவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் 5 லட்சம் முகவர்கள் இன்று பணி இழந்து சென்றுள்ளனர்.

    அனைத்து முகவர் சங்கங்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றால் எல்ஐசி என்ற ஒரு நிறுவனம் இல்லாத நிலை ஏற்படும் என்றார்.

    இதில் நூற்றுக்கு மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோட்ட துணைத் தலைவர் முனுசாமி, மாவட்ட செயலாளர் பழனிவேல் பொருளாளர் கார்த்திகேயன், பொறு ப்பாளர்கள் சரவணன் அன்புமணி ஜவகர் சீனிவாசன் ஆறுமுகம் கலாதேவி மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் கபிலன் பரமேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் ராஜேந்திரன் நன்றி உரையாற்றினார்.

    ×