என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நில அதிர்வு"

    • ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • நில அதிர்வு, கரீம் நகர் மற்றும் நிர்மல் ஆகிய மாவட்டங்களில் உணரப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் இன்று மாலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.

    இது, ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நில அதிர்வு, கரீம் நகர் மற்றும் நிர்மல் ஆகிய மாவட்டங்களில் உணரப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, ராமகுண்டம் பகுதியை மையமாக கொண்டு பூகம்பம் ஏற்படும் என கடந்த மாதம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அங்கு சில பகுதிகளில் வீடுகள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறினர்.

    • நிலநடுக்கம் குறித்து நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • பாகிஸ்தானில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்.

    பாகிஸ்தானில் இன்று மாலை 4 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவாகியுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் அருகே பாகிஸ்தானில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இன்று மதியம் 12.17 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.

    ஆப்கானிஸ்தானில் இன்று (சனிக்கிழமை) 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கிலோமீட்டர் ஆழத்தில்இன்று மதியம் 12.17 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

    நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் அதிர்ந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. 

    • பூமிக்கு 20 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று இரவு 7. 52 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்தியாவின் தாக்கம் பீகார், உத்தரபிரதேசம் முதல் டெல்லி வரை உணரப்பட்டது.

    நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி உள்ளிட்ட வடஇந்திய நகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. பலர் நிலநடுக்கத்தின் லேசான அதிர்வுகளை உணர்ந்ததாகக் கூறியுள்ளனர்.

    நேபாளத்தை மையமாக கொண்டு பூமிக்கு 20 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று இரவு 7. 52 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நேபாளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பீகார், உத்தரபிரதேசம் முதல் டெல்லி வரை உணரப்பட்டது. சில இடங்களில் நில அதிர்வு மிகவும் லேசானதாக இருந்ததால் அவை மக்களால் நேரடியாக உணரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

    முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மீட்புப் பணிகள் நடந்து வரும் சூழலில் உயிரிழப்பு எண்ணிக்கை 3000 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் இறப்புகள் பதிவாகியுள்ளன.
    • சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டது.

    மியான்மரில் இன்று நண்பகலில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகியுள்ளன.

    இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

    சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    மண்டலே நகரில் உள்ள ஒரு மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் இறப்புகள் பதிவாகியுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் உள்ளே சிக்கியுள்ளதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் கடுமையாக உணரப்பட்டது. தாய்லாந்தில் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    மேலும் இந்த நிலநடுக்கம் இந்தியாவின் மேற்கு வங்க வங்க தலைநகர் கொல்கத்தா, மணிப்பூர் தலைநகர் இம்பால் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. வங்கதேசத்தின் டாக்கா மற்றும் சட்டோகிராமிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

    சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டதாக சீன நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

     

    • சீஸ்மோகிராப் கருவி பொருத்தப்பட்டு கண்காணிப்பு
    • வருவாய் துறையினர் விசாரணை

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரில் தரைக் காடு, குப்பைமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் சுற்றுப் புற கிராமங்களிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மட் டும் தொடர்ந்து 4 முறை நில அதிர்வு ஏற்பட்டது.

    பொது மக்கள் பீதிக்குள்ளாகினர். இதனைத்தொடர்ந்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அதைதொடர்ந்து பேரணாம் பட்டு தாலுகா அலுவலகத் தில் நில அதிர்வை பதிவு செய்யும் சீஸ்மோகிராப் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் பேரணாம்பட்டில் தரைக்காடு பகுதியில் நேற்று மதியம் சுமார் 1.25 மணியள வில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டு வெடிச்சத்தம் போன்று சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. தரைக் காடு பகுதியில் வசிக்கும் முபாரக் என்பவரின் வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    இந்த நில அதிர்வு சில நொடிகள் நீடித்ததாக பொது மக்கள் கூறினர். நில அதிர்வினால் பொதுமக்கள் அதிர்ச் சியடைந்து பீதிக்குள்ளாகி வீடுகளிலிருந்து வெளியே ஓடி வந்துதெருவில் நின்றனர்.

    இது குறித்து தகவலறிந்த பேர ணாம்பட்டு வருவாய் ஆய்வா ளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.

    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
    • நிலநடுக்கம் 70 கிலோமீட்டர் ஆழம் வரை உணரப்பட்டுள்ளது.

    மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டம் அருகே 3.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் அருகே இன்று நள்ளிரவு சுமார் 12:14 மணியளவில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 70 கிலோமீட்டர் ஆழம் வரை இருந்தது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் இல்லை.

    முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை, அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங்கில் ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நாளில், லடாக்கில் 4.7 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    கார்கிலுக்கு வடக்கே 401 கிமீ தொலைவில் 150 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • உயிர்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
    • நிலநடுக்கம் குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு.

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் உயிர்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    முன்னதாக நேற்று அதிகாலையில் மிசோரமின் என்கோபாவில் இருந்து கிழக்கே 61 கிலோமீட்டர் தொலைவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு 3 பிளாக்குகளை கொண்டதாகும்.
    • கடந்த 2021-ம் ஆண்டு இந்த குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    அம்பத்தூர்:

    கொரட்டூர் போலீஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன.

    கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு 3 பிளாக்குகளை கொண்டதாகும். இங்கு 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். குடியிருப்பு மொத்தம் 9 தளங்களை கொண்டதாகும்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் 2 பிளாக்குகளில் 8-வது தளத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகளில் வசித்தவர்கள் தூக்கத்தில் இருந்து அலறியடித்துக் கொண்டு எழும்பினார்கள். தங்களது குழந்தைகள் வீட்டில் இருந்த பெரியவர்களை அழைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக கீழே இறங்கினர்.

    பின்னர் ஒலி பெருக்கி மூலமாக அறிவித்து 8 மாடியில் வசித்த மற்றவர்களையும் கீழே இறங்கி வருமாறு தெரிவித்தனர்.

    இதனால் சுமார் 500-க் கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் நள்ளிரவில் தங்களது வீடுகளை விட்டு கீழே இறங்கி சாலையில் திரண்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட கட்டிடத்தில் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக வானிலை மற்றும் அது தொடர்பான அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

    இதில் நிலநடுக்கம் போன்று எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதியானது. இதன் பிறகே சாலையில் திரண்டு நின்ற குடியிருப்பு வாசிகள் அதிகாலை 5 மணிக்கு பிறகே தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

    இது தொடர்பாக குடியிருப்போர் நல சங்க நிர்வாகியான லட்சுமி நாராயணன் கூறும்போது, நில அதிர்வு காரணமாக வீடுகள் குலுங்கவில்லை என்று அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். அப்படியென்றால் கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டது ஏன்? அதற்கான காரணம் என்ன? என்பதை கண்டுபிடித்து விளக்க வேண்டும் என்றார்.

    குடியிருப்பு வாசியான ஜெயபிரகாஷ் கூறும்போது, கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததும் மாடியில் இருந்து இறங்கி கீழே ஓடி வந்தோம். இங்கு 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதால் அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் நில அதிர்வுக்கான காரணத்தை கண்டறிந்து தெளிவு படுத்த வேண்டும் என்றார்.

    அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் வாயு காரணமாக வீட்டில் உள்ள பொருட்கள் துருப்பிடித்து போவதாக அங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர். சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் காரணமாக அதிர்வு ஏற்பட்டு உள்ளதா? என்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு இந்த குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது கட்டிட வல்லுனர்கள் ஆய்வு செய்து அடுத்த 20 ஆண்டுகளுக்கு கட்டிடம் உறுதியாக இருக்கும் என்று தரச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள நில அதிர்வு குடியிருப்பு வாசிகளை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    • தீவில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதிகாலை 4.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 61 கி.மீட்டர் என்றும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி நள்ளிரவு 12.53 மணிக்கு அந்தமான்- நிகோபார் போர்ட் பிளேயரில் இருந்து 126 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தென் மேற்கு பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஃபரிதாபாத் நகரிலிருந்து கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது
    • ரிக்டர் அளவுகோளில் 3.1 என இந்த நில அதிர்வு பதிவாகியது

    இந்திய தலைநகர் புது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நகர்புற பகுதிகளில் இன்று மிதமான நில அதிர்வு உணரப்பட்டது.

    இன்று மாலை 04:08 மணியளவில் அரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் நகரிலிருந்து கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், டெல்லிக்கு தென்கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்வு, ரிக்டர் அளவுகோளில் 3.1 என பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி சாலைகளில் கூடி விட்டனர்.

    இது குறித்து அவசர கால பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ள டெல்லி காவல்துறை, லிஃப்டை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், கட்டிடங்கள், மரங்கள், சுவர்கள், தூண்கள் ஆகியவற்றின் அருகே நிற்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. டெல்லி காவல்துறை, அவசர உதவிக்கு 112 எனும் எண்ணை அழைக்குமாறு பொதுமக்களை கோரியுள்ளது. இத்துடன் நில அதிர்வு காலங்களில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.

    புது டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் சில பகுதிகளிலும் இது உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தலைநகர் டெல்லியில் இம்மாதம் இது இரண்டாவது முறையாக நடைபெறும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாத தொடக்கத்தில் டெல்லியை உள்ளடக்கிய வட இந்திய பகுதிகளில் அடுக்கடுக்காக ஏற்பட்ட நில அதிர்வுகள் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவானது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கம் அயோத்தியா நகருக்கு வடக்கே, மையம் கொண்டிருந்தது
    • இது கடந்த 4 நாட்களில் நேபாளத்தை தாக்கும் 3-வது நிலநடுக்கம்

    இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் என்.சி.ஆர். (National Capital Region) எனப்படும் தேசிய தலைநகர் பகுதியில் இன்று மதியம் நில அதிர்வு உணரப்பட்டது.

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று மாலை 04:15 மணியளவில், ரிக்டர் கணக்கில் 5.6 அளவாகவும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும், நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் அறிவித்தது. இந்த அதிர்வின் மையப்பகுதி உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியா பகுதிக்கு வடக்கே 233 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

    கடந்த 4 நாட்களில் நேபாளத்தை தாக்கிய 3-வது நில அதிர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலநடுக்கம் நேபாளத்தில் ஏற்படுத்திய தாக்கம், தலைநகர் புது டெல்லியில் அதிர்வாக உணரப்பட்டது.

    டெல்லியில், வீடுகளில் பொருட்கள் பலமாக குலுங்கியதாக மக்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக பெருமளவு கட்டிட சேதங்களோ அல்லது உயிர்சேதமோ ஏற்படவில்லை.

    சில தினங்களுக்கு முன் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150 பேருக்கும் மேல் உயிரிழந்தனர்.  இப்பின்னணியில் இன்று ஏற்பட்ட டெல்லி நில அதிர்வால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    ×