என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கொலை"

    • ராமநாதபிரபுவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் ராமநாதபிரபு (வயது 28). வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி, மது போதை என்று ஊரை சுற்றி வந்துள்ளார். பண பலம் மிக்க அவரை பெற்றோரும் பல முறை கண்டித்தும் அவர் திருந்தவில்லை.

    இதற்கிடைய திருமணத்திற்கு பிறகு ராமநாதபிரபு தன்னுடைய மனைவி ஊரான ராமநாதபுரம் மாவட்டம் அம்மன் கோவிலை அடுத்த தெற்கு தரவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த சாத்தையா மற்றும் சிலருடன் அமர்ந்து ராமநாதபிரபு மது அருந்தினார். பின்னர் தலைக்கேறிய அளவுக்கு அதிகமான போதையுடன் தனக்கு சொந்தமான காரில் நண்பர்களான அம்மன்கோவிலை சேர்ந்த பழனி மற்றும் வள்ளிமாடன்வலசையைச் சேர்ந்த சிவா, தெற்கு தரவையைச் சேர்ந்த சாத்தையா ஆகியோருடன் அங்கிருந்து புறப்பட்டார்.

    அப்போது எதிரே வாலி நோக்கத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி உப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அதனை டிரைவர் கார்த்தி ஓட்டினார். அம்மன்கோவிலை அடுத்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை குடியிருப்பு பகுதியில் சென்றபோது எதிரோ வந்த லாரி, காரின் பக்கவாட்டு பகுதியில் லேசாக உரசியது. இதில் அந்த காரின் கண்ணாடி உடைந்ததுடன், காரிலும் கீறல் ஏற்பட்டது.

    இதனையடுத்து லாரியை முந்திச் சென்ற பிரபு லாரியை மடக்கி வழிமறித்து நிறுத்தினார். பின்னர் அந்த லாரி டிரைவர் கார்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்த பலர் திரண்டனர். அப்போது காரில் கீறல் விழுந்ததை உடனடியாக சரி செய்து தருவதாகவும், கண்ணாடியை மாற்றி தருவதாகவும் லாரி டிரைவர் கார்த்தி கூறியுள்ளார்.


    ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத ராமநாதபிரபு லாரி டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து தகராறு நடந்த பகுதியில் திரண்ட அம்மன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், லாரி டிரைவர் கார்த்திக்கு ஆதரவாக, ராமநாதபிரபு தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தனது சகோதரரை தொலைபேசியில் தொடார்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வரச்சொன்னதன்பேரில், அவருடன் அம்மன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் அங்கு வந்தனர்.

    அவர்களுடனும் போதையில் இருந்த ராமநாதபிரபு தகராறு செய்தார். மேலும் அவருடன் இருந்த அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்களை பார்த்து, தங்களுக்கு ஆதரவாக பேசாமல் வெளியூர் நபருக்கு ஏன் ஆதரவாக பேசுகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவழியாக இருதரப்பினரையும் சமாதானம் செய்து பிரச்சினையை மேலும் வளர்க்க வேண்டாம், அங்கிருந்து கலைந்து செல்லுமாறும், காருக்கும், லாரிக்கும் வழியை விடுமாறும் கூறியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து காரை எடுத்துக் கொண்டு புறப்பட்ட ராமநாதபிரபு தன்னுடன் காரில் வந்த நண்பர்கள் சிவா, சாத்தையா ஆகியோரை அதே இடத்தில் இறக்கிவிட்டார். ஆத்திரம் தீராமல் தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணினார். சிறிது தூரம் சென்று விட்டு மீண்டு காரை திருப்பிய ராமநாதபிரபு அதிவேகமாக வந்த அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது காரை மூர்க்கத்தனமாக ஏற்றினார். மேலும் பின் நோக்கி காரை இயக்கி மீண்டும் ஒருமுறை ஏற்றினார். பின்னர் காரில் இருந்து அவர் குதித்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இங்கே நடந்தது கனவா அல்லது நனவா என்று புரியாமல் மக்கள் நின்றனர். இந்த கோர சம்பவத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். த.மு.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லா கான், வர்த்தக அணி மாநில செயலாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா ஆகியோர் தலைமையில் காயம் அடைந்த 12 பேரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவம் நடந்த பகுதிக்கு ஒரு கிராமமே திரண்டு வந்தது. அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓலமிட்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் சாத்தையா உட்பட 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை செல்லும் வழியில் ராமநாதபிரபுவின் நண்பர் சாத்தையா பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது.

    கை, கால் முறிவு, தலையில் காயம் அடைந்த மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்தியவர் கிராமமக்கள் கையில் சிக்கினால் அவரை அடித்தே கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் ராமநாதபிரபுவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர் மீது கடுமையான காயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல், பொது மக்களுக்கு இடையூறு, தீங்கு விளைவித்தல், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய விபத்து, தாக்குதல், கொலை முயற்சி ஆகிய 5 பிரிவுகளில் கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சினிமாவை மிஞ்சும் அளவுக்கு, ஒரே கிராமத்தைச் சேர்ந்த 12 பேரை மூர்க்கத்தனமாக காரை கொண்டு ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பாரில் இருக்கை பிடிப்பது சம்பந்தமாக தனுஷ் கவுட் மற்றும் கேசவ் இடையே போட்டி ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவை கைது செய்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கஜுல ராமா ரத்தை சேர்ந்தவர் தனுஷ் கவுட் (வயது 22). மூசாப்பேட்டையை சேர்ந்தவர் கேசவ். இருவரும் தனித்தனியாக குகட் பள்ளி மெயின் ரோட்டில் உள்ள பாரில் மது குடிக்க சென்றனர்.

    அப்போது மதுபான பார் முழுவதும் கூட்டம் நிரம்பியது. மது குடித்துக் கொண்டு இருந்த ஒருவர் பாரில் இருந்து வெளியே சென்றார்.

    அப்போது பாரில் இருக்கை பிடிப்பது சம்பந்தமாக தனுஷ் கவுட் மற்றும் கேசவ் இடையே போட்டி ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கேசவ் பீர் பாட்டிலை உடைத்து தனுஷ் கவுட் வயிற்றில் சரமாரியாக குத்தினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர் தனுஷ் கவுட் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவை கைது செய்தார்.

    • அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொரட்டிகட்டில் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் விஷ்ணு (வயது32), யது கிருஷ்ணன் (29). சம்பவத்தன்று இரவு இவர்கள் இருவரும் திருச்சூர் ஆனந்தபுரத்தில் உள்ள கள்ளுக்கடையில் கள் குடித்துள்ளனர்.

    அப்போது குடிபோதையில் அவர்களுக்கிடையே திடீரென தகராறு நடந்துள்ளது. இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்த நிலையில், ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு, யது கிருஷ்ணனின் தலையில் ஆயுதத்தால் அடித்தார்.

    இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த புதுக்காடு போலீசார், சம்பவ இடத் துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு யது கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்கு பதிந்தனர்.

    தம்பியை அடித்துக் கொன்ற விஷ்ணுவை தேடினர். மோதலில் காயமடைந்ததால் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்த அவரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சை முடிந்ததும் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்ட தகராறிலேயே யது கிருஷ்ணனை விஷ்ணு கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    • பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் டொம்பு சேரி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது33). எலக்ட்ரீசியன் வேைல பார்த்து வந்தார். இவரது அண்ணன் மருதமுத்து (36). இவரது மனைவி வீரலட்சுமி (32). இவரும் அதே பகுதியில் வசித்த பிரவீன் (24) என்பவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இவர்கள் கள்ளத்தொடர்பு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து ஊர் பெரியவர்கள் மூலம் பேசி அவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர்.

    இனிமேல் இதுபோன்று செயல்பட்டால் போலீசில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். ஆனால் அதனையும் மீறி வீரலட்சுமி, பிரவீன் கள்ளத்தொடர்பு தொடர்ந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 26ந் தேதி வீரலட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்த பிரவீனை கணவர் மருதமுத்து கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் மருதமுத்துவை தினேஷ்குமார் (27) என்பவர் பிடித்துக்கொள்ள பிரவீன் கத்தியால் குத்த முயன்றார். ஆனால் தகராறை தடுக்க சென்ற ராஜா மீது கத்திக்குத்து விழுந்தது. பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பிரவீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் உடந்தையாக இருந்த தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.

    • பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன.
    • சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.

    நாகர்கோவில்:

    கருங்கல் அருகே உள்ள மாங்கரை தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 24), எலக்ட்ரீசியன். இவர் கடந்த 16-ந்தேதி வேலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள காட்டாற்று குளத்தில் சஜின் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன. எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.

    இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் சஜினின் உறவினர்கள் இன்று காலை கருங்கல்-தொலையா வட்டம் சாலையில் மாங்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னரசு, ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், ஆழ்வார்குறிச்சி தனிப்பிரிவு ஏட்டு ரவி மற்றும் போலீசார் சென்றனர்.
    • சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    கடையம் :

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே கீழஆம்பூர் ஊராட்சி மன்றத்திற்கு பின்புறம் உள்ள நெல் களத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னரசு, ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் , ஆழ்வார்குறிச்சி தனிப்பிரிவு ஏட்டு ரவி மற்றும் போலீசார் சென்றனர். அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    மேலும் கொலையானவர் அந்த பகுதிகளில் 2 நாட்களாக மனநிலை சரியில்லாதது போல் சுற்றி திரிந்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 4 பேர் கைது
    • பைக் மீது வேன் உரசியதால் கடத்தி கொலை செய்ததாக வாக்குமூலம்

    சோளிங்கர்:

    திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(வயது 22). இசை குழு நடத்தி வந்தார். இவரும், சோளிங்கர் அடுத்த ஆயலாம்பேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

    பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து, பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் சரத்குமாரின் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தலை தீபாவளிக்காக சரத்குமார் தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றார்.

    கடந்த 24-ந் தேதி தலை தீபாவளியை கொண்டாடினர். அன்று இரவு 7 மணியளவில் சரத்குமார் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட மாமனார் உமாபதியுடன், சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார்.

    அப்போது, கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பைக்குகளில் வந்த 7 பேர் கும்பல் திடீரென சரத்குமாரை சரமாரியாக தாக்கியது. அப்போது, தடுக்க முயன்ற உமாபதியை சரமாரியாக தாக்கினர்.

    இதில் உமாபதி லேசான காயமடைந்தார். பின்னர், சரத்குமாரை அந்த கும்பல் பைக்கில் கடத்தி சென்று, சுமார் 2 கி.மீ தொலைவில் கூடலூர் அருகே உள்ள ஒரு மறை வான இடத்தில் வைத்து, சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

    இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நடத்திய விசாரணையில், ஐப்பேடு பகுதியை சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக சரத்குமாரை கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அரக்கோணம் ஏஎஸ்பி கிரீஸ் யாதவ், அரக்கோணம் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 'ஐப்பேடு பகுதியை சேர்ந்த தாமோதரன் (24), கோபி (24), அசோக் பாண்டியன் (24), துரைபாண்டியன் (23) ஆகிய 4 பேரை அரக்கோணம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    தகராறு

    கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் ஞான கொள்ளை பகுதியில் இருந்து ஆர். கே.பேட்டை கிராமத்திற்கு நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சரத்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்றுள்ளனர்.

    அப்போது ஐப்பேடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சென்ற பைக் மீது வேன் உரசியுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் வேனில் சென்றவர்கள், பைக்கில் வந்த நபர்களை தாக்கியுள்ளனர். இதில் பைக்கில் வந்தவர்களை ஆர்.கே.பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சரத்குமார் வேனில் வந்தவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்த முன்விரோத தகராறில், எதிர்தரப்பைச் சேர்ந்த கோபி உள்ளிட்டோர் தங்களது கூட்டாளிகள் மூலம் சரத்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதில் கோபி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இவ்வாறு கூறினர்.

    • சிறுவன் அடிக்கடி மது குடித்துள்ளதால் கார்த்திக்ராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
    • இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான் பாளையம் தெரு கேசவன் நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ் (வயது 32). கூலித்தொழிலாளி.

    இவரும் அதேபகுதியை சேர்ந்த இவரது உறவினரான 16 வயது சிறுவனும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

    இந்நிலையில் சிறுவன் அடிக்கடி மது குடித்துள்ளதால் கார்த்திக்ராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்தநிலையில் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டு 2 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு கார்த்திக் ராஜ் தனது வீட்டிற்கு மீரான் பாளையம் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு வந்த சிறுவன், கார்த்திக்ராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கார்த்திக்ராஜின் தலை மற்றும் முதுகில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைதடுமாறிய கார்த்திக் ராஜ் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் சென்று தப்ப முயன்றுள்ளார்.

    எனினும் அந்த சிறுவனும் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிவிட்டு கார்த்திக் ராஜை அரிவாளால் பலமுறை வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் ராஜ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் போலீசார் கார்த்திக் ராஜை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    ஆனால் கார்த்திக் ராஜ் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட கார்த்திக்ராஜிக்கு லதா (27) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    • காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் காரமடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பாலசுப்பிரமணியின் மனைவி ஹேமசுதா கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் மீது காரமடை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை வடமங்களக்கரை பகுதியை சேர்ந்தவர் ஹேமசுதா (25). இவரது கணவர் பெருமாள்ராஜ் என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    அதன்பிறகு ஹேமசுதாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பாலசுப்பிரமணி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனால் எதிர்ப்பை மீறி ஹேமசுதாவை, பாலசுப்பிரமணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் தனியாக வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பாலசுப்பிரமணி தனது தாயாரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டில் பாலசுப்பிரமணியின் அண்ணன் பாலமுருகன் இருந்தார்.

    அவர் பாலசுப்பிரமணியை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். எங்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தவன், இப்போது இங்கு ஏன் வந்தாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பாலசுப்பிரமணியும் எதிர்த்து பேசவே 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், கத்தியை எடுத்து தம்பி என்றும் பாராமல் பாலசுப்பிரமணியை குத்தினார். இதில் அவரது தலையில் கத்திக்குத்து ஏற்பட்டது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பாலசுப்பிரமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி நேற்று உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக பாலசுப்பிரமணியின் மனைவி ஹேமசுதா கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் மீது காரமடை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பாலமுருகன் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் காரமடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அன்பழகன் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்து, அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவத்தன்றும் அன்பழகன் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லை பகுதியில் ஆரியங்காவு ரெயில் நிலையத்திற்கு அருகில் ஆற்றங்கரையில் செங்கோட்டை காலங்கரையை சேர்ந்த அன்பழகன்(வயது 37) என்பவர் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தென்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சம்பவ இடத்திற்கு சென்று அன்பழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையில், அன்பழகன் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கொலை செய்து ஆரியங்காவு பகுதியில் வீசி சென்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில், சாத்தூர் அருகே உள்ள அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ்(30) என்பவரும், அவரது கூட்டாளிகள் 3 பேரும் சேர்ந்து அன்பழகனை கைது செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விக்னேசை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட அன்பழகனின் சொந்த ஊர் சங்கரன்கோவில் என்பதும், சமீபத்தில் தான் இவர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அன்பழகன் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்து, அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு செங்கோட்டையை அடுத்த மேலூரில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    சம்பவத்தன்றும் அன்பழகன் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சிறிது நேரத்தில் மாயமான அவரை 4 பேர் கும்பல் காரில் கடத்தி சென்று கொலை செய்து ஆரியங்காவில் வீசி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

    இதனால் கள்ளக்காதல் விவகாரத்தல் அன்பழகன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏற்கனவே கொலை வழக்கில் தொடர்புடைய அவரை முன்விரோதம் காரணமாக யாரேனும் தீர்த்துக்கட்டினரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    • அண்ணாமலை, பிரவீன் மனைவிக்கும் வாலிபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி வந்தார்.
    • பிரவீன் அண்ணாமலையை எச்சரித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கடந்த 3 மாதங்களாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    திருப்பூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 33). இவரது மனைவி ராணி (32). இவர்களுக்கு ராகுல் (13) என்ற மகனும், ராகவி (11) என்ற மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இருவரும் கட்டிட வேலைக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் பல்லடம் பகுதிக்கு வந்தனர். இதையடுத்து திருப்பூர் மாஸ்கோ நகர் துவாரகை நகர் 3-வது வீதியில் உள்ள வாடகை வீட்டில் குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தனர். அவர்களது வீட்டின் எதிரே மற்றொரு கட்டிட தொழிலாளியான தர்மபுரி பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த அண்ணாமலை(40) தங்கியிருந்து வந்தார்.

    இந்தநிலையில் அண்ணாமலை, பிரவீன் மனைவிக்கும் வாலிபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி வந்தார். இதையறிந்த பிரவீன் அண்ணாமலையை எச்சரித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கடந்த 3 மாதங்களாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    நேற்றிரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அண்ணாமலை வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து பிரவீனை சரமாரியாக குத்தினார். இதில் அவரது உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது பிரவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தேடுவதை அறிந்ததும் அண்ணாமலை தப்பியோடிவிட்டார். இந்தநிலையில் மண்ணரை ஊத்துக்குளி சாலை பகுதியில் அண்ணாமலையை போலீசார் மடக்கினர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி.சந்தீஷ், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
    • தலை துண்டிக்கப்பட்ட வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள தட்டப்பாறை வடக்கு சிலுக்கன்பட்டியில் ஆட்டுச்சந்தை உள்ளது.

    இங்கு இன்று காலை ஒரு வாலிபர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக தட்டப்பாபறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி.சந்தீஷ், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். தலை துண்டிக்கப்பட்ட வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையத்தில் மாயமானவர்கள் குறித்து தகவல்களையும் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×