என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரிகள் வேலைநிறுத்தம்"

    • கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
    • மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மணல் குவாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 23-ந்தேதி முதல் லாரிகள் ஓடாது.

    இதுகுறித்து மாநிலத் தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

    கடந்த 1½ ஆண்டுகளாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால் மாற்றாக எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. குவாரி உரிமையாளர்களால் ஜல்லி எம்.சாண்ட், பி சாண்ட் விலை உயர்த்தப்பட்டது. யூனிட்டுக்கு ரூ.1000 வீதம் 2 முறை உயர்த்தி உள்ளனர்.

    கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை அடுத்து சமீபத்தில் 1000 ரூபாய் விலை குறைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    ஆனால் எம்.சாண்ட் விலை குறைக்கப்படவில்லை. கல் குவாரிகளுக்கு கேரளாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக லாரிகளில் கல் கொண்டு செல்லப்படுகிறது.

    இதன் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கல் குவாரிகளை அரசுடமையாக்க வேண்டும்.

    மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் குவாரிகளை விரைவாக திறந்து விலை உயர்வை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மணல் லாரிகள் ஓடாது. லாரிகளை நிறுத்தி வைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தடைபட்டுள்ளது.

    டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கசாவடி கட்டண உயர்வை திரும்ப பெறுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 3-வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்கிறது.

    இதனால் கர்நாடக மாநிலத்தில் தண்ணீர், கியாஸ் உள்பட அத்தியாவசிய பணிகள் முடங்கி உள்ளது. இது தொடர்பாக கர்நாடகாவில் முதலமைச்சர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த வித உடன்பாடும் இல்லாததால் இன்று முதல் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கர்நாடக மாநிலம் வழியாக வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தடைபட்டுள்ளது.

    இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் செல்ல முடியாமல் கர்நாடக எல்லை பகுதி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள், கனிம வளங்கள், முட்டைகள், கறிக்கோழிகள், வெல்லம், கோழித்தீவனம், கயிறு பண்டல்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சின்டெக்ஸ் டேங்குகள், பி.வி.சி. பைப்புகள், மஞ்சள், ஜவ்வரிசி, ஜவுளி, கல்மாவு, தீப்பெட்டிகள், காய்கறிகள் உள்பட ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் 2 நாட்களில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் அதில் தொடர்புடை யவர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    இதே போல கர்நாடகா வழியாக வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயம், பருப்பு வகைகள், மக்காச்சோளம், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள், தானிய வகைகள், பூண்டு, எண்ணை வகைககள், தக்காளி, பீட்ரூட், கேரட், முட்டை கோஸ், காலிபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட பழ வகைகள், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்கள், கொண்டு வரப்படுவதும் முற்றிலும் தடை பட்டுள்ளது.

    இதனால் தமிழகத்தில் உள்ள காய் கறி மார்க்கெட்டுகள், பழ மார்க்கெட்டுகள், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் வரத்து குறைந்துள்ளது . இதனால் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தால் லாரி உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், டிரைவர், கிளீனர்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். எனவே இந்த போராட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை.
    • டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் ஒப்பந்தம் செய்து உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு புதிய ஒப்பந்தப்படி சில திருத்தங்களை கொண்டு வருகின்றன. அதே போன்று வாடகையையும் குறைத்து உள்ளன.

    இது போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி தென்மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

    இதனை தொடர்ந்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை நிரப்ப செல்லாமல் தூத்துக்குடியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், கொச்சி துறைமுகத்தில் இருந்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் மூலம் தினமும் சுமார் 200 டன் எரிவாயு தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கொண்டு வரப்படும்.

    அங்கிருந்து சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதனால் தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை. தற்போது டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    • எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை.
    • வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்பட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் சுமார் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக சுமார் 6 ஆயிரம் டேங்கர் லாரிகள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றது.

    குறிப்பாக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் பழைய ஒப்பந்த காலம் முடிவடைகிறது. அடுத்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 2025-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது.

    அதில் பல்வேறு விதிமுறைகள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுடன் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விதிமுறைகளை தளர்த்துமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை. பாதகமாகத்தான் உள்ளது. விதிமுறைகளை தளர்த்த நாங்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. புதிய ஒப்பந்தத்தின் விதிமுறையால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். நஷ்டத்தில் எங்களால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாது. அதனால் நாளை (27-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். 4 ஆயிரம் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் இயங்காது. எரிவாயு ஏற்றும் 10 இடங்களில் லோடுகளை ஏற்றாமல் லாரிகள் நிறுத்தப்படும். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பிற மண்டலத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம. அவர்களும் போராட தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து டேங்கர், மினிவேன் மற்றும் லாரிகள் இன்று முதல் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள சுமார் 1 லட்சம் லாரிகள் ஓடவில்லை.

    சென்னை:

    சென்னை மற்றும் சுற்று வட்டார மோட்டார் வாகன சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று தொடங்கி உள்ளது.

    அனைத்து டேங்கர், மினிவேன் மற்றும் லாரிகள் இன்று முதல் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். 40 சதவீத சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பல வருடங்களாக முறைகேடாக வசூலிக்கும் ஒளிரும் பட்டைகளுக்கு சரியான விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். வாகனங்களை நிறுத்துவதற்கு துறைமுகம், வடசென்னை, திருவள்ளூர் சுற்று வட்டார பகுதியில் டிரைவர்களுக்கு அடிப்படை வசதியுடன் கூடிய பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது.

    வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள சுமார் 1 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதனால் லாரிகள் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

    மேலும் லாரி உரிமையாளர்கள் மணலி, ஆண்டாள்குப்பம் ஜங்சனில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கோபி, ஜெயக்குமார், கரிகாலன், யுவராஜ், மூர்த்தி ஆகியோர் தலைமையில் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    ஆன்லைன் முறையில் லாரிகளுக்கு வழக்கு பதிவு செய்வதை ரத்து செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். லாரிகளுக்கு பார்க்கிங் டெர்மினர் அமைத்து தர வேண்டும். 40 சதவீத காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

    8 நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து கோவையில் நள்ளிரவு முதல் லாரிகள் ஓடத் தொடங்கியது. #LorryStrike
    கோவை:

    நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை.

    போராட்டம் காரணமாக கோவையில் இருந்து வெளி மாவட்டம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பம்புசெட், கிரைண்டர் விசைத்தறி ஜவுளிகள், தென்னை நார் பொருட்கள், காய்கறிகள் தேக்கம் அடைந்தது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இன்று முதல் லாரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கோவையில் நள்ளிரவு முதல் லாரிகள் ஓடத் தொடங்கியது. சரக்குகளுடன் ஆங்காங்கே நின்று கொண்டு இருந்த லாரிகள் அனைத்தும் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டு சென்றது.

    போராட்டம் காரணமாக கடந்த 8 நாட்களாக தேங்கிய பம்புசெட், கிரைண்டர், விசைத்தறி ஜவுளிகள், தென்னை நார் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தியாளர்கள் லாரிகளில் ஏற்றி செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைத்தனர். லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற நிலையில் கடந்த 8 நாட்களில் அதிகமான உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்ததால் சரக்குகளை ஏற்றி செல்ல லாரிகள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

    கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு வழக்கம் போல வரும் லாரிகள் நேற்று இரவு முதல் காய்கறிகளை ஏற்றி வந்தது. மேலும் இங்கு இருந்து கேரள மாநிலம், மற்றும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கும் அனுப்ப வேண்டிய காய்கறிகளை வியாபாரிகள் அனுப்பி வைத்தனர்.
    நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 8-வது நாளாக நீடித்து வரும் நிலையில் ஈரோட்டிலிருந்து ரெயில்கள் மூலம் ஜவுளிகள் வெளி மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. #LorryStrike
    ஈரோடு:

    நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று வரை சுமார் ரூ 400 கோடி மேல் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இதில் ஜவுளிகள் மற்றும் மஞ்சள் மூட்டை மூட்டையாக குடோன்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். வேலை நிறுத்தம் எப்பொழுது வாபஸ் ஆகுமோ? என்று காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து ரெயில்கள் மூலம் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு ரெயில் நிலைய பார்சல் அலுவலகம் முன் ஜவுளி பண்டல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோட்டிலிருந்து பெரும்பாலும் வெளிமாநிலங்களுக்கு இந்த ஜவுளிகள் அனுப்பப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். கர்நாடகா, ஆந்திரா மும்பை,ஹைதராபாத் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு ஜவுளி பண்டல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதேபோல் கேரள மாநிலம் பாலக்காடு திருச்சூர், கொல்லம் ஆகிய பகுதிகளுக்கும் மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் ரெயில்கள் மூலம் ஜவுளிகள் அனுப்பப்பட்டு வருகிறது.

    ரெயில்கள் மூலம் சொற்ப அளவில்தான் ஜவுளிகள் மற்றும் இதர பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது அதேசமயம் மலைபோல் பல்வேறு பொருட்கள் தேங்கி உள்ளன. #LorryStrike

    லாரிகள் ஸ்டிரைக் எதிரொலியாக சாத்தூர் பகுதியில் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. இதனால் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    சாத்தூர்:

    டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 8-வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. இதன் காரணமாக சாத்தூர், சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவர முடியவில்லை. இதனால் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மூலப்பொருட்கள் இல்லாததால் சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டன. இதனால் தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் வேலை இழந்து உள்ளனர்.
    லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக துறைமுக டிரெய்லர் லாரிகள் இன்று முதல் ஓடாது என்று சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. #LorryStrike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்ககட்டணம் வசூலிக்க வேண்டும். 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு வார காலமாக லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் டிரெய்லர் லாரிகளும் பங்கேற்க வேண்டும் என்று அந்த சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சென்னை ராயபுரத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் டிரெய்லர் லாரிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் என்.மனோகரன், செயலாளர் எஸ்.ஆர்.ராஜா உள்பட நிர்வாகிகளும், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) தலைவர் குமாரசாமி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் உள்பட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு துறைமுக டிரெய்லர் லாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.ராஜா நிருபர்களிடம் கூறும்போது, ‘எங்கள் சங்கத்தில் 6 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும், 2 ஆயிரம் டாரஸ் லாரிகளும் உள்ளன. லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக நாளை முதல்(இன்று) டிரெய்லர் லாரிகளும், டாரஸ் லாரிகளும் ஓடாது. இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்படும்.’ என்றார்.

    மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின்(தமிழ்நாடு) தலைவர் எஸ்.ஆர்.குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 90 சதவீதம் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் கடந்த ஒரு வாரத்தில் ரூ.10 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. மத்திய அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடியும், லாரி உரிமையாளர்களுக்கு ரூ.1,500 கோடியும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூக தீர்வு காணும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென் மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.



    லாரிகள் வேலைநிறுத்தத்தால், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்களை வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தீப்பெட்டி பண்டல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, தூத்துக்குடி துறைமுகத்துக்கும் லாரிகளில் கொண்டு செல்ல முடியவில்லை.

    மேலும் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான மெழுகு, குச்சி, பொட்டாசியம் குளோரைடு, பாஸ்பரஸ், கந்தகம் போன்றவற்றையும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர முடியவில்லை.

    இதனால் சுமார் 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்து உள்ளன. தீப்பெட்டி தொழில் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் மூலம் ரூ.400 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் கோவில்பட்டி நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளதாலும், தீப்பெட்டி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகளை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், “தீப்பெட்டி தொழிலில் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். எனவே, லாரி உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.  #LorryStrike
    லாரிகள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பஸ்களில் இலவசமாக காய்கறிகளை எடுத்து செல்லலாம் என நீலகிரி கலெக்டர் அறிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, லாரிகள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக விவசாயிகள் தங்கள் பகுதிகளிலிருந்து விவசாய பொருட்களை சந்தைக்கு தினமும் எடுத்துச் செல்லவும் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்தில் எவ்வித கட்டணமுமின்றி எடுத்துச் செல்லலாம். கூடுதல் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல அரசு பஸ் இதற்காக தனியாக வாடகைக்கு வழங்கப்படும் எனவும், மேலும் விவரங்களுக்கு அரசு போக்குவரத்துறையை தொடர்பு கொள்ளலாம் என அதில் அறிவித்துள்ளார். #tamilnews
    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுப்பள்ள நிலையில் கடலூர் உழவர்சந்தைக்கு அரசு பஸ்கள் மூலம் நேற்று முதல் காய்கறிகள் வந்தது.
    கடலூர்:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 6-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம் நீடிக்கிறது.

    கடலூர் மாவட்டத்திலும் சுமார் 7 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் வர்த்தகம் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்ட செல்ல முடியவில்லை. இதனால் பல தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.

    கடலூர் மாவட்டத்துக்கு கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அரிசி, பருப்பு, வெங்காயம், காய்கறிகள், பழங்கள் லாரிகளில் கொண்டுவரப்படும். லாரிகள் ஓடாததால் வெளி மாநிலங்களில் இருந்துவரும் காய்கறிகள் வரத்து அடியோடு நின்றது.

    இதைத்தொடர்ந்து கடலூர் உழவர்சந்தைக்கு அரசு பஸ்களில் நேற்று முதல் காய்கறிகள் வந்திறங்கின. எம்.புதூர், எஸ்.புதூர், வடலூர் போன்ற பகுதிகளில் இருந்து அரசு பஸ்களில் காய்கறிகள், வாழைத்தார்கள், பழங்கள் கொண்டுவரப்பட்டன.

    விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 500 லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

    சென்னை கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், திண்டுக்கள் போன்ற பகுதிகளில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக காய்கறிகள் எதுவும் வரவில்லை. இதனால் காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

    மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கும் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக மரக்காணம் பகுதியில் உப்புகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் டன் உப்புகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    லாரிகள் ஓடாததால் உப்பளத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமக விழுப்புரம் மாவட்டத்தில் லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களும் என 20 ஆயிரத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    லாரிகள் ஸ்டிரைக்கால் அத்தியாவசிய பொருட்கள் எவ்வித தங்குதடையுமின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் லாரிகள் பொது வேலை நிறுத்தத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார்.

    லாரி ஸ்டிரைக்யையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தை அலுவலர்களும் விவசாயிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உற்பத்தி செய்யும் அனைத்து காய்கறிகளையும் உழவர் சந்தைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். அதே போன்று அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

    திருப்பூர் மாவட்டத்திற்கு மகாராஷ்ரா மாநிலத்திலிருந்து வரும் வெங்காயத்தை போலீஸ் கண்காணிப்புடன் கொண்டு வர வேளாண் வணிகத்துறை ஏற்பாடு செய்யவேண்டும். வேளாண் துணை இயக்குநர், வேளாண் வணிகம், தன்வசம் உள்ள அரசுத்துறை வாகனங்களை நீலகிரியிலிருந்து மலைக்காய்கறிகளை தங்குடையின்றி திருப்பூர் மாவட்டத்திற்கு கொண்டுவர ஏற்பாடு செய்து தரவேண்டும். உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் கூடுதல் வாகனம் தேவைப்படின் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலரை தொடர்பு கொண்டு விவசாயிகள் காய்கறிகளை சிரமமின்றி கொண்டுவர பஸ் ஏற்பாடு செய்து கொடுத்திட வேண்டும்.

    மேலும், பொது விநியோக திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் வரத்து மற்றும் விநியோகத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகிய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அவர்கள் உறுதிபடுத்திட வேண்டும். இதனைத் தொடர்ந்து காண்காணித்து எந்தவித விடுபாடுமின்றி நுகர்வோருக்கு இடுபொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மண்டல மேலாளருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    காவல்துறை ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில் போதிய பாதுகாப்பு அளித்து வாகனங்கள் எந்த இடையூறுமின்றி இயக்க ஏற்பாடு செய்து தரவேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர் 10 டன்னுக்கு உட்பட்ட சரக்கு வண்டி உரிமையாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து கூட்டம் நடத்தி வாகனம் தேவைப்படும் பகுதிகளுக்கு வாகனங்களை அனுப்ப ஏற்பாடு செய்து எரிபொருட்கள், காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எவ்வித தங்குதடையுமின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×