search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர்"

    • முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகிற்கே முன்னோடியான திட்டமாக திகழ்கிறது.
    • இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 15-9-2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.

    இதன் மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.

    இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பையும், மாணவ-மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 25-8-2023 அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும், சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப்பாடங்களில் கவனம் செலுத்தி படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின், 15-7-2024 அன்று (நாளை) பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கிவைக்கிறார்.

    இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.

    முதலமைச்சரால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகிற்கே முன்னோடியான திட்டமாக திகழ்கிறது.

    இந்த விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார்.
    • பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் உருவச் சிலைக்கு அமைச்சர்கள், மேயர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை செய்து சிறப்பிப்பார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் 15-7-2024 அன்று (நாளை) காலை 8.15 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார்.

    அதேநாளில், சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் உருவச் சிலைக்கு காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள், மேயர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செய்து சிறப்பிப்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ் நாட்டில் தொழில் புரட்சியை ஏற்படுத்தினார்.
    • இலவசக் கல்வித் திட்டம் கொண்டுவந்து பள்ளிக் கூடம் பார்த்திராத ஏழை எளிய மக்களுக்கெல்லாம் கல்விக்கண் திறந்தார்.

    இன்றைய அரசியல் எப்படியெல்லாமோ நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் மனசாட்சியை உதறிவிட்டு, லஞ்சம், ஊழல், பித்தலாட்டம் என்று தைரியமாய் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த மோசமான அரசியலுக்கிடையேதான் இந்த ஆண்டும் ஜூலை 15 என்ற புண்ணியதினம் வருகிறது.

    புண்ணியதினம் என்றால் பூமியில் யாராவது புண்ணியசீலர்கள் அவதரித்திருக்கவேண்டும் அல்லது அதிசயங்கள் நிகழ்ந்திருக்கவேண்டு மல்லவா...? ஆமாம்! 19௦3ஆம் ஆண்டுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!

    பூமியில் புண்ணிய சீலராகப் பெருந்தலைவர் காமராஜர்தான் அவதாரம் செய்தார்! அவர் பிறந்ததனால் தான் அந்த தினமான இந்தக் கல்வித் திருநாள் புண்ணிய தினமாக அமைகிறது!

    இன்னும் நூறு ஆண்டுகளுக்குப்பின் வரும் தலைமுறையிடம், கர்மவீரர் காமராஜர் என்ற ஒரு மகான் இந்தத் தமிழ்நாட்டில் இருந்தார்... இந்த நாட்டை ஒன்பது ஆண்டுகள் ஆண்டார்...பதினாரு அணைகளும், மேல்கட்டளை கலவையும், தோப்பியார் ஏரி, மீனக்கரை ஏரி மற்றும் பெரியாறு நீர்மின் திட்டங்களும் அந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் செய்தார்...

    இலவசக் கல்வித் திட்டம் கொண்டுவந்து பள்ளிக் கூடம் பார்த்திராத ஏழை எளிய மக்களுக்கெல்லாம் கல்விக்கண் திறந்தார்...

    பட்டினிக் கொடுஞ் சிறைக்குள் கிடந்தப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் கொண்டுவருவதற்குக் கஜானாவில் பணமில்லை என்ற போது, ஊர் ஊராக இறங்கிப் பிச்சை எடுத்தாவது மக்களிடம் செல்வேன் என்றவர்...சமூகநீதியை நிலைநாட்ட, கல்வி கற்கும் பள்ளிகளில், மாணவர்களிடையே, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றபாகுபாடு களைந்திட இலவசச் சீருடை தந்தார்...

    தமிழ் நாட்டில் தொழில் புரட்சியை ஏற்படுத்தினார்... "முடியாது... சட்டத்தில் இடமில்லை..." என்ற பேச்சுக்கே இடமில்லை... மக்களுக் காகத்தானே சட்டம்...? அப்புறம் முடியாதுன்னா என்ன அர்த்தம்...? சட்டத்தை மாற்றுவோம்..." என்று மக்களாட்சி நடத்திய மாமனிதர்... மாமேதை... கறை படாத கரங்களுக்குச் சொந்தக்காரர்... களங்கமே இல்லாத மனத்திற்குச் சொந்தக்காரர்... ஏழைகளுக்குச் சொந்தக்காரர்...

    வாழும்போதும், ஆளும்போதும் வங்கிக் கணக்கில் 9௦௦ ரூபாயும், சாகும்போது சட்டைப்பையில் 9௦ ரூபாயும் (15௦என்பாரும் உண்டு) வைத்து விட்டுப் போனவர்... தன்னைப் பெற்ற விதவைத் தாயைக்கூட தன்னோடு வைத்துக்கொள்வது நியாயமல்ல வென்று வாழ்ந்து மறைந்தவர்...

    இந்த மண்ணில்தான் பிறந்தார்... இந்த மண்ணில்தான் தன் கால்களால் நடந்தார்... இந்தத் தமிழ் நாட்டைத் தனக்கு முந்தியும்சரி... பிந்தியும்சரி... எவருமே செய்யாத புனித ஆட்சியால் காத்தார் என்று சொன்னால் "அப்படியா...? இது நடந்திருக்குமா...? இப்படி ஒரு மனிதரால் வாழமுடியுமா... அல்லது ஆளத்தான் முடியுமா...?!" என்று கேட்பார்கள் என்பது நிச்சயமான ஒன்றாகும்.

    காமராஜரைப் பற்றிக் கற்பனையாகச் சொல்லப்படும் ஒரு கதையைச் சொன்னால் இந்த இடத்திற்குச் சரியாக இருக்கும் என்பதால் இந்தக் கதையைச் சொல்கிறேன்.

    1975ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், இரண்டாம் தேதி, எமலோகத்தில் தர்பார் நடந்துகொண்டிருக்கிறது. எமதர்மராஜன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறான். சித்திரகுப்தன் ஏடெடுத்து ஒவ்வொரு பெயராகப் படிக்கிறான். பெயர் படிக்கப்படிக்க எமகிங்கரர்கள் பூலோகத்திலிருந்து பிடித்து வந்த மனிதர்களைக் கொண்டு வந்து எமனுக்குமுன் நிறுத்துகிறார்கள்.

    முதலாவதாக ஒரு பால்க்காரனைக் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். எமதர்மராஜா தனது சிம்மா சனத்தைவிட்டு எழுந்து நிற்கிறார்... பூவுலகில் வாழ்வை முடித்துக்கொண்டு வரும் ஆத்மாக்களுக்கு எமன் வழக்கமாகச் செய்யும் சம்பிரதாய வரவேற்பு இது. எழுந்த எமதர்மராஜா, சித்திரகுப்தனைப் பார்க்கிறார்.

    கலைமாமணி தாமரை செந்தூர்பாண்டி

    கலைமாமணி தாமரை செந்தூர்பாண்டி


    சித்திரகுப்தன், "பிரபோ... இவன் மனசாட்சி இல்லாத ஒரு பாவி! இவன், பால் விற்கிறேன் என்று தண்ணீரில் பாலைக் கலந்து விற்றுக் கொள்ளையடித்தவன். கன்றுக்குப் பால்கொடுத்தால் காசு போய்விடும் என்று வைக்கோலில் கன்றுக்குட்டிப் பொம்மை செய்து, பசுவை ஏமாற்றிப் பாலைக்கறந்த பாவி. இவனை விட்டுவிடாதீர்கள் பிரபோ..." என்றான்.

    இதுவரை நின்றுகொண்டிருந்த எமதர்மராஜா தன் சிம்மாசனத்தில் அமர்ந்து மீசையைத் தடவியபடியே, "இவனை நரகத்தில் வைத்துக் கொடுமைப்படுத்துங்கள்...!" என்று கட்டளையிட்டார்.

    அடுத்தவன் வந்தான். அவனுக்கும் சம்பிரதாய மரியாதையும் தந்து, பாவக்கணக்குப் பார்த்துத் தண்டனையும் தந்தார். இப்படியே தர்பார்களை கட்டிக்கொண்டிருந்தபோது ஒருவன் கம்பீரமாகக் கொண்டு நிறுத்தப் பட்டான். சம்பிரதாய மரியாதைப்படி எழுந்துநின்ற எமதர்மராஜவிடம், "பிரபோ... இவன் தமிழ்நாட்டிலிருந்து தூக்கிவரப்பட்ட அரசியல்வாதி..." என்று சித்திரகுப்தன் சொன்னதுதான் தாமதம்... எழுந்துநின்ற எமதர்மன் அவசர அவசரமாகத் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து இருபுறக் கைப்பிடிகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

    "பிரபோ, இவன் பதவியிலிருந்த போது லஞ்சம், ஊழல், பெண் கடத்தல், மண் கடத்தல், கள்ளச்சாராயம் காய்ச்சல், ஏழை எளியவர்கள் சொத்துக்களை அபகரித்தல் என என்னவெல்லாம் அயோக்கியத்தனம் பூலோகத்தில் உண்டோ... அத்தனையும் செய்தான். இவனைப் பிடித்து வருவதற்குள் மூச்சு வாங்கிவிட்டது!" என்று மூச்சிறைக்கச் சொன்னான் சித்திரகுப்பதன்.

    எமதர்ம ராஜா அவனுக்குக் கடுமையான நரகத்தைக் கொடுத்து விட்டு ஆசுவாசமானார்.

    உடனே சித்திரகுப்பதன் எமதர்மரைப் பார்த்து, "பிரபோ, இவனைப்பார்த்ததும் தாங்கள் எதற்காகத் தங்கள் சிம்மாசனத்தில் அவசர அவசரமாக அமர்ந்து, இருபக்கக் கைப்பிடிகளையும் இருக்கமாகப் பிடித்துக்கொண்டீர்கள்?" என்று கேட்டான்.

    "சித்திரகுப்தா அவன் அரசியல்வாதி...அதுவும் தமிழ்நாட்டு அரசியலில் மூழ்கித் திளைத்தவன். நான் சிம்மாசனத்தைவிட்டு எழுந்து நிற்பதைக் கண்டால் அவன் ஓடிவந்து என்னைத்தள்ளிவிட்டுவிட்டு சிம்மாசனத்தில் அமர்ந்துகொள்ள மாட்டான் என்பது என்ன நிச்சயம்...? அதனால்தான் அவசர அவசரமாக அமர்ந்து கொண்டேன்!" என்றார். சித்திரகுப்பதன் உள்ளிட்ட அவையோர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

    தர்பார் தொடர்ந்தது. பலர் வந்தார்கள்... தண்டனையோ... சொர்க்கமோ... கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு சென்றார்கள். அப்பொழுதுதான் ஆறரை அடி உயரத்தில், கருப்பு நிறத்தில், கதர் வேட்டியும், சட்டையும் அணிந்து ஆஜானுபாகுவாய் கர்மவீரர் வந்து நிற்கிறார்! அவரைக்கண்டதும், எமதர்மராஜா முகம் மலர எழுந்து நிற்கிறார். முறைப்படி அவரது கணக்கு படிக்கப்படுகிறது. வழக்கமாக அமர்ந்துகொள்ளும் எமதர்மன் நின்றுகொண்டே காமராஜருக்கான சொர்க்க வாசலைத் திறந்து விடச்சொல்லி உத்தரவு பிறப்பித்து விட்டும், உட்காராமல் நின்று கொண்டிருக்கிறார்!

    அந்த அதிசயத்தைகண்ட சித்திர குப்பதன், "பிரபோ, இது என்ன அதிசயம்...? அரசியல்வாதியைக் கண்டதும் அவசர அவசர மாகத் தங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்ளும் தாங்கள்... காமராஜர் என்ற முன்னாள் தமிழக முதலமைச்சரின் கணக்கைப்படித்ததும், உட்காரவேண்டிய தாங்கள் உட்காராதது மட்டுமல்ல... அவர் சொர்க்கத்துக்குப் போய்விட்ட பின்னும் நின்றுகொண்டிருப்பதன் காரணத்தை இந்த சபைக்குச் சொல்வீர்களா...?" என்று பவ்வியமாகக் கேட்டான்.

    கண்கலங்கிப்போன

    எமதர்மன், "வந்து விட்டுப்போன காமராஜர் தமிழகத்தை ஒன்பது ஆண்டுகள் ஆண்டு, யாருமே செய்ய முடியாத காரியங்களைச் செய்துவிட்டு, இந்தப் பதவியும், நாற்காலியும் எனக்கு வேண்டாம் என்றுத் தூக்கி எறிந்துவிட்டுப்போன மாமனிதர், நான் நின்றுகொண்டிருந்தாலாவது எனது சிம்மாசனத்தில் வந்து உட்கார்ந்து எழுந்து விடமாட்டாரா... அப்படி உட்கார்ந்தால் இந்த எமதர்மனின் சிம்மாசனம் பெருமை பெற்றுவிடாதா என்ற நப்பாசையில்தான் நான் நின்றுகொண்டே இருந்தேன்.

    ஆசைகளைத் துறந்த அவதாரப் புருசர்கள்கூடத் தன் தாய்மார்களைத் துறக்கவில்லை. ஆனால் இந்தக் காமராஜர் ஒருவர்தானே கணவனை இழந்தத் தன் தாயைக்கூடத் தன்னோடு வைத்துக்கொண்டால் தவறாகிவிடும் என்று தனித்திருந்துத் தியாக வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் என் இருக்கையில் இருக்க நான் கொடுத்து வைக்கவில்லையே என்று வருத்தப்படுகிறேன்...!" என கண்கலங்கினார் எமதர்மன்.

    இது கற்பனையில் எழுந்த கதைதான். ஆனால் காமராஜருக்கு அத்தனை தகுதிகளும் இருந்தன என்பதை இந்த உலகம் உவந்து ஏற்றுக் கொள்ளுமல்லவா...?

    அன்றைக்கு விருதுப்பட்டி என்றழைக்கப்பட்ட விருதுநகரில் பிள்ளைப் பருவத்தில் திண்ணைப் பள்ளியிலும், ஏனாதிநாயனார் வித்யாசாலையிலும், அதற்குப்பின் சத்திரிய வித்தியாசாலையிலும் என மூன்று பள்ளிகளில் சேர்ந்து படித்த காமராஜர் ஆறாம் வகுப்பில் பள்ளிக்குப் போகாமல் நின்றுவிட்டார்.

    ஆனால் 'பிடியரிசிப்பள்ளி' என்றழைக்கப்பட்ட சத்திரிய வித்யாசாலையில் பயின்றதால், அங்கு வீடுவீடாகத் தரும் பிடியரிசியைக் கொண்டு மாணவர்களுக்கெல்லாம் மதிய உணவு வழங்கப்பட்டது பசுமரத்தாணிபோல மனதில் பதிந்து விட்டிருந்ததும், பிற்காலத்தில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வருவதற்கு முன்னோடியாக அமைந்துவிட்டது.

    பள்ளியில் படிக்கும்போதே காமாச்சி என்ற காமராஜருக்கு அறிவுக் கூர்மையும், நகைச்சுவை உணர்வும் நிறைந்திருந்தது. அறிவும், ஆற்றலும் நிறைந்தத் தமிழாசிரியர் ஒருவர் அங்குப் பணியாற்றினார். தலையில் முண்டாசும், வெள்ளை நிற ஜிப்பாவும், தும்பைப்பூ நிறத்தில் வேட்டியும் கட்டி அவர் வகுப்புக்குள் நுழைகின்றபோதே மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று வணக்கம் சொல்லி அமருவார்கள். வகுப்பறைக்குப்பதில் மரத்தடியில் மாணவர்கள் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

    தமிழாசிரியர் தீவிர நாத்திகராயிருந்ததால் அவ்வப்போது கடவுள் மறுப்புப்பற்றி மாணவர்களிடையே பரப்புரை செய்யும் ஆர்வத்தில் பேசுவார். ஒருநாள் பாடம் நடத்திக்கொண்டிருந்தத் தமிழாசிரியர், மாணவர்களிடம்,

    "உங்களுக்கு மேலே என்ன தெரிகிறது...?" எனக் கேட்டார்.

    "மரக்கிளை தெரிகிறது ஐய்யா..."

    "அதற்கு மேலே...?"

    "கொப்பும், குலையும் தெரிகிறது..."

    "அதற்கும் மேலே...?"

    "ஆகாயம் தெரிகிறதய்யா...?"

    "அதற்கும் மேலே...?"

    "ஒன்றும் தெரியவில்லை ஐயா..."

    "அங்கே கடவுள் தெரியவில்லையா...?"

    "தெரியவில்லை ஐயா..."

    "தெரியவில்லை என்றால் கடவுள் இல்லை என்றுதானே அர்த்தம்...?"

    சட்டென காமாச்சி எழுந்து நின்றார். "தமிழய்யா நானும் கொஞ்சம் கேள்வி கேட்கட்டுமாய்யா...?" என்றார்.

    "சரி... என்ன கேட்கிறாய் என்றுதான் பார்ப்போமே... கேள்..."

    "நமது தமிழய்யாவிற்குத் தலையில் என்ன தெரிகிறது...?" மாணவர்களிடம் கேட்டார் காமாச்சி என்ற காமாராஜர்.

    "தமிழய்யாத் தலையில் தலைப்பாகை தெரிகிறது...!" அனைத்து மாணவர்களும் கோரசாகச் சொன்னார்கள்.

    "தலைப்பாகைக்குள் என்ன தெரிகிறது...?"

    "ஆமாம்... தலையும், நெற்றியும் நன்றாகத் தெரிகிறது...!" மாணவர்கள்.

    "தமிழய்யா தலைக்குள் மூளை தெரிகிறதா...?"

    "தெரியவில்லை... தெரியவில்லை..."

    "தெரியவில்லை என்றால் தமிழய்யாதலையில் மூளை இல்லை என்று தானே அர்த்தம்...?" என்று கேட்டதும், அனைத்து மாணவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். தமிழாசிரியர் வெட்கிப்போனாலும், காமராஜரின் புத்திக்கூர்மையைப் பாராட்டினார். அதற்குப்பின் மாணவர்களிடம் குதர்க்கமான பரப்புரைகள் செய்வதை விட்டுவிடவும் செய்தார்.

    விருதுநகரையே ஆச்சரியப்பட வைத்த இளம் பயிராகத் திகழ்ந்தவர் சிறுவயது காமராஜர் என்றால், தனது பதினாறாவது வயதிலேயே... அதாவது 1919-ம் ஆண்டு நடந்த ரவுலட் சட்ட எதிர்ப்புக்கு காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று முழுநேர அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டு, ஒன்பதரை ஆண்டுகள் சிறைவாசம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர்!

    நாட்டிற்குச் சுதந்திரம் வந்தபின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்றவர், நாடு சுதந்திரம் அடைந்தபின் திருமணம் செய்துகொள்ளும் வயது கடந்துவிட்டது என்று சொல்லித் திருமணமே செய்துகொள்ளாமல் தனிமரமாய் வாழ்ந்த உத்தமர்.

    ஜவஹர்லால் நேரு மறைந்த 1964ஆம் ஆண்டு, நேருவுக்குப்பின் இந்தியப் பிரதமர் யார் என்ற இமாலயக்கேள்வி உலக நாடுகளிலெல்லாம் கேட்கப்பட்ட போது "இதோ...லால் பகதூர் சாஸ்திரி..." என்று இமாலயக் கேள்விக்கு விடை தந்தவர் நமது காலா காந்தி... கர்மவீரர் காமராஜர் ஒருவர்தான்!

    லால்பகதூர் சாஸ்திரி மறைந்ததும் நேருவின் மகள் இந்திராகாந்தியை 1966-ல் பிரதமராக்கியவரும் நமது கர்மவீரர்தான்! அதனால் நாடே அவரை 'கிங் மேக்கர்' என்று கொண்டாடியது!

    ஆனால் ஒன்று...எந்த இந்திராகாந்தியை பிரதமராக்கினாரோ அந்த இந்திராகாந்தி தான் அவருக்கு எதிரானார்! காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்தார்! ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல் காமராஜர் நல்லது செய்கிறோம் என்று எண்ணிச் செய்த இந்தக் காரியம்தான் அவரின் உயிருக்கே உலையாகியது, மக்களுக்கெல்லாம் பெரும் இழப்பாக முடிந்தது என்பதே உண்மை! ஆனால்...காமராஜர் கடவுளாகிவிட்ட ஒரு மாமனிதர் என்பதுதான் நிஜம்!

    "ஒரு தீர்க்கத்தரிசியை நேசிப்பதைப் போல் உன்னை நேசிக்கிறேன்..

    உன்னால்தான் முடிந்தது தாயையும் பார்க்காமல் நாட்டைப் பார்ப்பதற்கு!

    உன் கையில் தராசு! இவர்கள் கையிலோ சூட்கேஸ்!

    ஆமாம்... நீ கல்விக்கண் திறந்தாய்! இவர்களோ கள்ளுக்கடை திறந்தார்கள்!

    நேரு குடும்பத்தின் மீது நீ பாசம் வைக்காதிருந்தால் இந்தியாவின் பரிமாணமே வேறு!

    காந்தியோ சிரிக்கும் நெருப்பு! நீ சிரிக்கத்தெரியாத நெருப்பு!

    பெரியாரின் பல்கலைக் கழகத்தில் பச்சைத் தமிழன் எனும் பட்டம் பெற்றவனே!

    இன்று நீ இங்கிருந்தால் இங்கிருக்கும் காய்ந்த தமிழர்களைக் கண்டித்திருப்பாய்!

    நீ நாடியிருந்தால் ஒரு தமிழன் பிரதமராகி இருக்க முடியும். நீதான் நாடாராயிற்றே!

    மணிமுடி உன்முன் வைக்கப்பட்டது. ஆனால் நீ காளிக்குத் தலை வெட்டித்தந்த கபாலிகனாகவே காலத்தை முடித்தாய்!"

    என்று கவிஞர் மு.மேத்தாவும்,

    "பெருந்தலைவ! இன்றைக்கு உன் பிறந்தநாள் –

    கொள்கைக் குன்றுக்கு எங்கணும் திருவிழா!

    விருதையில் பிறந்த வீரனாய் வளர்ந்தாய்

    சரிதையில் நிறைந்த தலைவனாய் நின்றாய்!

    சிறையின் கொடுமையும், சித்திர வதையும் சிரித்தமுகத்துடன் ஏற்ற தியாகி!

    கதராடை மேனிதனை அலங்கரிக்கும்

    கதறுகின்ற ஏழைகளைக் கரம் அணைக்கும்.

    தனி மனிதன் வாழ்வல்ல உன் வாழ்வு...

    தன்மானச் சரித்திரத்தின் அத்தியாயம்!

    'குணாளா! குலக்கொழுந்தே!' என்று பண்பின்

    மணாளர் எங்கள் அண்ணன் உனை அழைத்தார்.

    'பச்சைத் தமிழன்' எனப் பகுத்தறிவுத் தந்தை

    இச்சையுடன் உன் உச்சி முகர்ந்தார்.

    'கறுப்புக் காந்தி'யென உன்னை – இந்தக்

    கடல்சூழ் நாடு கைகூப்பித் தொழுத தன்றோ!"

    என்று கலைஞர் கருணாநிதியும் கூறியிருக்கும் வார்த்தைகள் இந்த மண்ணில் உதித்த மாவீரர் காமராஜரின் வரலாற்றிற்குச் சிறு துளி மழை என்பேன் நான்!

    • ஆறுகளில் அணைகளை கட்டி நீர்ப்பாசன பரப்பை அதிகப்படுத்தி இன்றைய நவீன தமிழகத்திற்கு அன்று அடித்தளமிட்டவர் காமராஜர்.
    • தமிழக காங்கிரசின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் என்றைக்கும் திகழ்பவர் காமராஜர்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியாவின் தென்கோடியில் உள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்திலிருந்து இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் வரை சென்று இந்திய குடியரசின் நிலைப்பாட்டிற்கு உதவியதை பெருந்தலைவர் காமராஜர் மேற்கொண்ட அரசியல் பயணத்தின் மிகப்பெரிய வெற்றியாக கூறலாம்.

    விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று 9 ஆண்டுகள் சிறைவாசம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடர்ந்து 12 ஆண்டு காலம் பதவி வகித்து, 1954 முதல் 1963 வரை ஒன்பதரை ஆண்டுகாலம் முதலமைச்சராக பதவி ஏற்று தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தியவர். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருமுறை பதவி வகித்து பண்டித நேரு மறைவிற்கு பிறகு மூன்று முறை பிரதமர்களை தேர்வு செய்து இந்திய வரலாற்றில் காலத்தால் அழியாத சரித்திர சாதனை படைத்தவர். பெருந்தலைவர் காமராஜருக்கு 122-வது ஆண்டு பிறந்தநாளை தமிழகம் முழுவதும் ஜூலை 15 அன்று கோலாகலமாக கொண்டாட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியினரை அன்போடு வேண்டுகிறேன்.

    அதிகம் படிக்காத, ஆதரவற்ற, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக வாழ்வை துவக்கிய மிகமிக சாதாரண மனிதராக இருந்து இந்திய அரசியலில் அற்புதங்களை நிகழ்த்தியவர். தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற 1954 இல் ஆண்டு பட்ஜெட் தொகை ரூபாய் 27 கோடி. 1963 இல் பதவி விலகியபோது பட்ஜெட் தொகை ரூபாய் 120 கோடி. குறைந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு தமிழகத்தில் சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியவர்.

    ஈராயிரம் ஆண்டுகளாக தமிழர்களுக்கு கிடைக்காத கல்வி என்ற சொத்தை வழங்க இலவச கல்வி திட்டம், மதிய உணவு திட்டம், நீர்ப்பாசன திட்டங்கள், விவசாயத்தில் வளர்ச்சி, கிராமங்கள்தோறும் மின்சாரம் வழங்க மின் உற்பத்தி திட்டங்கள், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கி மக்களுக்கே அதிகாரம் வழங்குதல், தொழிற்புரட்சி மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்குதல், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு கண்டு பரம்பிக்குளம் - ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் அணைகளை கட்டி நீர்ப்பாசன பரப்பை அதிகப்படுத்தி இன்றைய நவீன தமிழகத்திற்கு அன்று அடித்தளமிட்டவர் காமராஜர்.

    சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக் காலங்களில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் காமராஜர் ஆட்சியில் நிகழ்வதாக தந்தை பெரியார், அன்றைய முதலமைச்சர் காமராஜரை பாராட்டியது இன்றைக்கும் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கிறது. 1961 இல் காரைக்குடியில் தந்தை பெரியார் மரண வாக்குமூலம் வழங்குவதைப் போல, 'காமராஜர் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும், தமிழன் உருப்பட வேண்டுமானால் காமராஜரை விட்டால் வேறு ஆளே சிக்காது. எனவே அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆதரியுங்கள்" என்று பகிரங்கமாக பேசியதை எவரும் மறந்திட இயலாது.

    தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரும், பெருந்தலைவரும் பிரிக்க முடியாத சக்தியாக இருந்ததை வரலாற்று ஏடுகள் மூலம் புரிந்து கொள்ளலாம். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதைப் போல பாராட்டுகளை பெற்ற பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி முறையை தான் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.

    தமிழக காங்கிரசின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் என்றைக்கும் திகழ்பவர் காமராஜர். காமராஜரையும், காங்கிரசையும் பிரித்துப் பார்க்க முடியாது. பெருந்தலைவர் காமராஜரின் புகழை பாடுவதற்கு எல்லோரையும் விட நமக்கு அதிகப்படியான உரிமை இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் நமது இயக்கத்தின் உயிர் மூச்சாக இருப்பவர் காமராஜர்.

    எனவே, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியின் சாதனைகளை விளக்குகிற வகையில் கருத்தரங்குகள், ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஏழைப் பங்காளனாக இருந்து வேட்டி கட்டிய தமிழர் எவரும் நிகழ்த்தாத சாதனைகளை இந்திய அரசியலில் செய்து காட்டிய பெருந்தலைவரின் புகழை தமிழகம் முழுவதும் பரப்புகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் அவரது பிறந்தநாளை தேசியத் திருவிழாவாக கொண்டாட வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார்.
    • பழமையான நுழைவு வாயில் இடித்து தரைமட்டமாக்கியது பொது மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பகுதி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.

    அதே போல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பெரும்பாலான திரைப்படங்கள் எடுக்கப்பட்டது. இதனால் இந்த பகுதியை சின்ன கோடம்பாக்கம் என்று பெயர் பெற்று திகழ்ந்தது.

    மேலும் கடந்த 1950-ம் ஆண்டுகளில் இருந்தே கோபிசெட்டிபாளையம் பல வரலாற்று சிறப்புகளையும் பெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் வரலாற்று சின்னங்களும் கம்பீரமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் கோபி செட்டி பாளையத்தில் கடந்த 1-12-1958-ம் ஆண்டு 45-வது அரசியல் மாநாடு நடை பெற்றது. இதையொட்டி கோபி கிழக்கு பகுதியிலும் (கரட்டூர்), மேற்கு பகுதியிலும் (குடிநீர் மேல்நிலை தொட்டி அருகிலும்) நகராட்சி சார்பாக அப்போதே 2 நுழைவு வாயில்கள் (ஆர்ச்) கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. அதை அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார்.

    அப்போது முதல் ஈரோடு, சத்தியமங்கலம் ரோட்டில் கோபிசெட்டிபாளையம் என வளைவு அமைக்கப்பட்டு தூண்களுடன் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக பொதுமக்களை வரவேற்கும் வகையில் நிலைத்து நின்று வந்தது.

    இந்த நிலையில் கடந்த கடந்த 2018-ம் ஆண்டு கரட்டூர் ஆர்ச் மீது லாரி மோதியதில் அது இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து புதியதாக கிழக்கு பகுதியில் உள்ள ஆர்ச் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

    இந்நிலையில் சித்தோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரோடுகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் உள்ள ஆக்கரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஈரோடு-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கோபிசெட்டி பாளையம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமையான நுழைவு வாயில் (ஆர்ச்) ரோடுகள் வரிவாக்கம் பணிக்காக அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து நேற்று (புதன் கிழமை) இரவு நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப் பணிக்காக எந்திரங்கள் மூலம் பணியாளர்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அகற்றினர். இதை கண்டு அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.

    கோபியின் பெருமையை நிலை நாட்டும் வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பழமையான நுழைவு வாயில் இடித்து தரைமட்டமாக்கியது பொது மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, பெண்கள் கல்வியில் முன்னேற அடித்தளமிட்டது அண்ணா மற்றும் கருணாநிதி அரசுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
    • காமராஜர் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார்.

    சென்னை:

    தி.மு.க. சார்பில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டது அண்ணா மற்றும் கருணாநிதி தலைமையிலான அரசுகள் என்று குறிப்பிட்டார்.

    இது தொடர்பாக கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய சோனியாகாந்தி, பெண்கள் கல்வியில் முன்னேற அடித்தளமிட்டது அண்ணா மற்றும் கருணாநிதி அரசுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அவரது இந்த பேச்சு மிகவும் துரதிருஷ்டவசமானது. அண்ணா, கருணாநிதிக்கு முன்பே தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராஜர் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார். தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் பள்ளிகளை திறந்தார். கிராமப்புறங்களில் இருக்கும் குழந்தைகள் 3 கிலோ மீட்டருக்கு மேல் நடக்கக்கூடாது என்ற அடிப்படையில் இந்த பள்ளிகளை திறந்து பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பலமான அடித்தளத்தை அமைத்து இருந்தார். அவரை மறந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • ஏழை எளிய மாணவர்கள், கற்பதற்காக கல்வி சாலைகளை திறந்து எண்ணற்ற பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர்.
    • எங்களது பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில்,

    பெருந்தலைவர் காமராஜர் ஏழை எளிய மாணவர்கள், கற்பதற்காக கல்வி சாலைகளை திறந்து எண்ணற்ற பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர். மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போது சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் காலை உணவு என்கிற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு மகத்தான திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

    தற்போது கல்லூரிகளுக்கிடையே உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் ஆயிரம் கோடி செலவில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ஒரு சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும் உயர் கல்வியி னுடைய வளர்ச்சிக்காக முதல்வர் எடுக்கிற பல்வேறு நடவடிக்கைகளையே பெருந்தலைவர் காமராஜர் பெயரிலேயே அமைந்திருக்க இந்த திட்டம் அமைந்துள்ளது எனவும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

    பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரி உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு அறிவித்துள்ள திட்டத்திற்கு எங்களது பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • கல்யாணத்தை அவரது வீட்டிலேயே எளிமையாக நடத்துகிறார்.
    • கடைசியில் ‘காமராஜர் வரமாட்டார்’ என்பதும் ஜனங்களுக்கு புரிந்தது.

    காமராஜர் முதல்வராக இருந்த சமயம்.. அவரை காண அலுவலகம் தேடி ஒரு எளிய மனிதர் கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருகிறார்.

    உள்ளே வந்த நபரை சட்டென அடையாளம் கண்டுகொண்ட முதல்வர், என்ன ரெட்டியாரே.. செளக்கியமா? என்ன சேதி? இல்ல சும்மா பார்க்க வந்தீரா?" என அழைத்து அருகில் அமரச்செய்தார்.

    இல்ல என் மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்.." என தயங்க.. அடடே நல்ல சேதிதானே.. இதுக்கு ஏன் ரெட்டியாரே தயக்கம். சரி. நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்க" என்று தோளில் தட்ட..

    இல்ல.. கல்லாணத்துக்கு நீங்க வரனும். நீங்கதான் தலைமை தாங்கனும்.. ஊரெல்லாம் சொல்லிட்டன். பத்திரிகை கொடுத்துட்டு சொல்லதான் நேர்ல வந்தன். நீங்க எப்படியும் வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை. அதனால அப்படி சொல்லி முடிவெடுத்துட்டன். தப்பா நினைச்சுக்காதீங்க" என்று ரெட்டியார் இழுக்க..

    காமராஜருக்கு பட்டென்று கோபம். முகம் இறுகிப்போனது. எந்த நம்பிக்கையில நீங்க முடிவெடுத்தீங்க. யாரைக்கேட்டு இப்படி மத்தவங்ககிட்ட சொன்னீங்கன்னேன்" என்று கடுமைகூட்டினார்.

    ரெட்டியாருக்கு கண்கள் கலங்கியது.. தப்பா நினச்சுக்காதீங்க. அன்னைக்கு உங்களுக்கு வேலூர்ல ஒரு கூட்டம் இருக்கு. பக்கத்துலதான் என் ஊர். அதனால கல்யாணத்துக்கு கூப்பிட்டா கட்டயாம் வருவீங்கன்னு நினைச்சுட்டன்" என்றார்.

    பெருந்தலைவருக்கு கோபம்... "உங்க வீட்டு கல்யாணத்துக்கு வர்றதா முக்கியம். அதுவா வேலை. வேற வேலை இல்லையா? போங்க, வரமுடியாது. நீங்க போய்ட்டு வாங்க" என்று பட்டென்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.

    முகத்தில் அடித்ததை போல் ஆனது ரெட்டியாருக்கு. நடந்ததை வெளியில் சொல்லிக் கொள்வில்லை.

    கல்யாணத்தை அவரது வீட்டிலேயே எளிமையாக நடத்துகிறார். அவரது வசதிக்கு அப்படித்தான் நடத்தமுடியும்.

    கடைசியில் 'காமராஜர் வரமாட்டார்' என்பதும் ஜனங்களுக்கு புரிந்தது. வந்தவர்கள், போனவர்கள் எல்லாம் புறம் பேசினார்கள்..

    மனம் உடைந்துபோன ரெட்டியாருக்கு உடல் கூனிப்போனது. அப்படியே வீட்டிற்குள் சுருண்டு படுத்துவிட்டார். அந்த கல்லாயான வீடே வெறிச்சோடிப்போனது..

    திடீரென ஒரு கார் அங்கு வந்தது. வந்தவரோ..."முதல்வர் காமராஜர் கொஞ்ச நேரத்தில் வரபோகிறார்" என்ற செய்தியைச் சொல்லி போய்விட்டார். சட்டென ஓர் கார் வந்து நின்றது. பெருந்தலைவரே வந்து இறங்கினார்.

    இரண்டு, மூன்று பெரிய சாப்பாட்டு கேரீயரில் சாப்பாட்டோடு.

    ரெட்டியாரால் நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் காமராஜர் வந்த செய்தி காட்டுத் தீயாய் பரவி கூட்டம் சேர்ந்துவிட்டது….

    ரெட்டியார், முதல்வரை கட்டித்தழுவிக் கொண்டார். குலுங்கி அழுதார். தட்டிக்கொடுத்து சமாதானம் சொன்ன காமராஜர்..

    "உங்க கஷ்டம் எனக்குத் தெரியும் ரெட்டியாரே. சுதந்தரம் போராட்டம், ஜெயில்னு எல்லாத்தையும் இழந்துட்டீங்க...எனக்குத் தெரியும்.

    அதான் பையனுக்கு கல்யாணம்னு சொன்னப்பவே பட்டுனு யோசிக்காம அப்படிச் சொன்னன். நான் வர்றதா சொல்லியிருந்தா நீர் இருக்கிற இந்த நெலமில கடன் வாங்குவீர்..

    முதல்வர் வர்றார்னு ஏதாவது பெரிசா செய்யனும்னு போவீர்.. அதான் அப்படிச் சொன்னன். மன்னிச்சுடுப்பா… உன் வீட்டுக் கல்யாணத்துக்கு வர்றாம எங்கபோவன்" என்று ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினார்..

    பிறகு வாசலிலேயே பாய்விரித்து எடுத்து வந்த சாப்பாட்டை எல்லோருக்குமாக போடச் சொல்லி அந்த குடும்பத்தாரோடு தானும் உட்கார்ந்து சாப்பிட்டார்.

    இந்த சாப்பாட்டு சுமையைக்கூட அவருக்கு கொடுத்துவிடக்கூடாது என்று தன் பணத்தைக்கொடுத்து வாங்கி வந்தாரென்றால்.. ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதை கூறத்தேவையில்லை…

    -எச்.கே. சாம்

    • கர்மவீரர் காமராஜர் தான் தமிழகத்தில் முதன் முதலாக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.
    • காமராஜர் ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடப்பட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்ப பள்ளிகளை திறந்தார்.

    சென்னை:

    இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலகத்திறப்பு விழாவில் பேசும்போது "கல்வி புரட்சிக்கு வித்திட்டது தி.மு.க என்றும், அதன்பின் தான் தமிழகத்தில் கல்வி கற்பவர் எண்ணிக்கை அதிகரித்தது" என்றும் பேசியிருப்பது வரலாற்றினை மாற்ற நினைக்கும் செயலாக தெரிகிறது.

    கர்மவீரர் காமராஜர் தான் தமிழகத்தில் முதன் முதலாக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். காமராஜர் ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடப்பட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்ப பள்ளிகளை திறந்தார். தமிழகத்தில் கல்வி புரட்சி கொண்டு வந்தது காமராஜர் தான். இதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பாராட்டி காமராஜரின் பிறந்தநாளை 2006 -ம் ஆண்டு கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கலர் பென்சில், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்பட படிப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களை முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் வழங்கினார்.
    • மூத்த பத்திரிகையாளர் கவிஞர் எஸ்.முருகவேள், டி.டில்லிபாபு, சேட்டு, முருகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து, முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் பெருந்தலைவர் காமராஜரின் 121- ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, முத்தியால்பேட்டை நடுநிலை பள்ளி, ஏரிவாய் அரசு ஆரம்ப பள்ளி, வள்ளுவப்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளி, மற்றும் களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ஆகிய 4 பள்ளிகளில் படிக்கும் 520 மாணவர்களுக்கு தேவையான தரமான நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், அரிச்சுவடி, வாய்பாடு, கலர் பென்சில், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்பட படிப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி)மாவட்ட செயலாளரும், ஆன்மீக பிரமுகரும், தொழிலதிபருமான முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.வீ.ஜோதியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார் மாவட்ட கழக அவைத் தலைவர் ரங்கநாதன், முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஊராட்சிமன்ற உறுப்பினர் திருவேங்கடம், தலைமை ஆசிரியர்கள் ஸ்ரீமணிமாலா, ஏரிவாய் செல்வி, வள்ளுவப்பாக்கம் ஞானேஸ்வரி, களியனூர் மோகன காந்தி மற்றும் மூத்த பத்திரிகையாளர் கவிஞர் எஸ்.முருகவேள், டி.டில்லிபாபு, சேட்டு, முருகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முத்தியால்பேட்டை நடுநிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி, தேசிய கொடியை மாவட்ட கழக செயலாளரும், ஆன்மீக பிரமுகருமான முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    • முன்னாள் தமிழக முதல்-அமைச்சரும், கல்வி கண்திறந்த கர்மவீரரும்மான காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ராசு வீதியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா வெகுவிமர்ச்சியாகவும் கொண்டாடப்பட்டது,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசு வீதியில் முன்னாள் தமிழக முதல்-அமைச்சரும், கல்வி கண்திறந்த கர்மவீரரும்மான காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ராசு வீதியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து பர்கூர் அரசு மருத்துவ–மனையில் அனைவருக்கும் இனிப்பு மற்றும் நலத்திட்டத்தினையும் டாக்டர் செல்லக் குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    இந்த விழாவின் போது மாவட்டத் தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத்தவர் சேகர், நகர தலைவர்கள் முபாரக், லலித் ஆண்டனி, மூத்த வழக்கறிஞர் அசோகன், ஆடிட்டர் வடிவேல், இளைஞர் அணி மாநில பொதுசெயலாளர் விக்னேஷ்பாபு, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜ்குமார்,சேவாத்தள மாவட்டத் தலைவர் தேவராஜ், உள்ளிட்ட ஏராமானவர்கள் கலந்துக்கொண்டனர்.

    இதேபோல காங்கிரஸ் கட்சியினர் போச்சம்பள்ளி, ஓசூர், வேப்பனபள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, காவேரிப்பட்டிணம், நாச்சிகுப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள காமராஜரின் உருவச்சிலைகளுக்கும், உருவப்படங்களுக்கும் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    • காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையை கட்டினார்.
    • கே.ஆர்.பி. அணை கட்டுமான பணி நடந்த போது இந்த காரில் வந்து தான் காமராஜர் அணையை பார்வையிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. காமராஜர் பயன்படுத்தி வந்த செவர்லெட் கார், சென்னை காமராஜர் அரங்கில் இருந்தது. அந்த கார் கடந்த மாதம் 1-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து அந்த காருக்கான உதிரிபாகங்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கார் புதுப்பிக்கப்பட்டது அந்த காரை கிருஷ்ணகிரியில் இருந்து காமராஜரின் சொந்த ஊரான விருதுநகருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதற்காக காமராஜர் பயன்படுத்திய கார் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த அணை முன்பாக நிறுத்தப்பட்ட காரை செல்லகுமார் எம்.பி. கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

    இந்த கார் லாரி மூலமாக தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக விருதுநகருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது குறித்து செல்லகுமார் எம்.பி. கூறுகையில், காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையை கட்டினார்.

    அவர் கே.ஆர்.பி. அணை கட்டுமான பணி நடந்த போது இந்த காரில் வந்து தான் காமராஜர் அணையை பார்வையிட்டார். அதை நினைவு கூறும் வகையில், காரை இங்கே கொண்டு வந்து, இங்கிருந்து வழி அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரா ஜூவல்லரி அண்டு சில்க்ஸ் உரிமையாளர் எம்.பி. ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் ஜேசுதுரை, நகர தலைவர் லலித் ஆண்டனி, மாநில பொதுச் செயலாளர் அக.கிருஷ்ணமூர்த்தி, முபாரக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    ×