search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல்"

    • விபத்து நடந்த சில நிம்டங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
    • போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகம் பேர் பெண்கள் ஆவர். 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 2.5 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியதாலும், போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க நெறுக்கியடித்ததாலும் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தேவப் பிரகாஷ் மதுக்கருக்கு அரசியல் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சியின் பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த வழக்கில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாததையும் கவனிக்க வேண்டி உள்ளது. வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க போலே பாபாவின் சொத்துமதிப்பு 100 கோடியாக உள்ளது என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போலே பாபாவின் அன்றைய கூட்டத்தில் சுமார் 15 முதல் 16 பேரின் கையில் விஷத் தன்மையுள்ள பொருள் அடைத்த பாட்டில்கள் இருந்துள்ளது என்றும், அதை அவர்கள் திறந்துவிட்டதாலேயே இந்த கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக பேட்டியளித்துள்ளார். மேலும், விஷ பாட்டில்களை வைத்திருந்த நபர்கள் தப்பிச் செல்ல கார்களும் அங்கு தயாராக இருந்துள்ளதாக குறிப்பிடடுள்ளார்.

    இதற்கான தகுந்த ஆதாரத்தை வெளியிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதற்கு புறம்பாக போலே பாபாவின் வக்கீல் சொல்லும் புதிய குற்றச்சாட்டுகள் வழக்கை திசை திருப்பும் முயற்சியா என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.  

    • குடும்பத்தினரும், அக்கம் பக்கத்து வீட்டாரும் இதனை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • மாணவனுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி பாப்பா. இவர்களது 2-வது மகன் தமிழ்ச்செல்வன்.

    2 கை மற்றும் கால்கள் ஆகியவை போலியோவால் பாதிக்கப்பட்டதால், மற்ற மாணவர்கள் போன்று செயல்படும் நிலை இல்லாமல் இருந்து வருகிறார். பிறவியிலேயே இந்த பாதிப்பு இருந்தாலும் படிப்பு ஒன்று தான் முக்கியம் என அவர் கருதியதால் அவரது பெற்றோர் அவருக்கு கல்வியை கற்க அனைத்து உதவிகளையும் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அந்த மாணவன் ஆசிரியர் உதவியுடன் எழுதினார். இன்று வெளியான தேர்வு முடிவில் மாணவன் தமிழ்ச்செல்வன் மொத்தமாக 500-க்கு 420 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குடும்பத்தினரும், அக்கம் பக்கத்து வீட்டாரும் இதனை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மாணவனுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இதுகுறித்து மாணவர் கூறும் போது, தொடர்ந்து படித்து சிறந்த வக்கீலாக வேண்டும் என்பதே தனது ஒரே குறிக்கோள் என்றார்.

    ஏழ்மை குடும்பத்தில் பிறந்தாலும் கல்வியை கண்ணாக கொண்டு தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்து மாணவர் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளது அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    • போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பிரீதம். சம்பவத்தன்று இவர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிக்மகளூர் நகர போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது வக்கீல் பிரீதமை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததும் போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் வக்கீல் மீது தாக்குதல் நடத்தியதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரையும் சஸ்பெண்டும் செய்தார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே வெளியே செல்லாமல் வக்கீல்கள் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரெண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார். இதையடுத்து வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் போலீசாரை கண்டித்து சிக்மகளூர் பார்கவுன்சில் உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    • கடையில் கூட்டம் அதிகம் காணப்பட்ட நிலையில் கடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார்.
    • காயமடைந்த ஹரிகரன் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் ஹரிகரன் (வயது 24). இவர் கோயமுத்தூரில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று ஹரிகரன், வெங்கிட்டாபுரத்தில் உள்ள முடி திருத்தும் கடைக்கு முடி வெட்ட சென்றுள்ளார்.

    அங்கு கடையில் கூட்டம் அதிகம் காணப்பட்ட நிலையில் கடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கிருந்த விக்னேஷ் என்பவரது மீது ஹரிகரன் கால் தவறுதலாக பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், ஹரிகரனை திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    உடனே அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பினர். இதற்கிடையே ஹரிகரன், மேற்கு பல்லடம் பகுதிக்கு சென்றபோது அங்கு நண்பர்களுடன் இருந்த விக்னேஷ், ஹரிகரனிடம் மீண்டும் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளார்.

    இதில் காயமடைந்த ஹரிகரன் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கு பல்லடத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் விக்னேஷ் (28), முருகன் என்பவரது மகன் கேசவன் (23), ஆறுமுகம் என்பவரது மகன் பரமசிவம் (23), ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரை ரோடு பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு பெரிய கடை வீதிக்கு சென்றார்
    • கார் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    திருச்சி

    திருச்சி அல்லித்துறை சிவன் கோவில் பகுதி சேர்ந்தவர் பொன்.முருகன். இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் திருச்சி மதுரை ரோடு பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு பெரிய கடை வீதிக்கு சென்றார். பிறகு சிறிது நேரம் கழித்து பொருட்களை வாங்கிக்கொண்டு காரை எடுக்க வந்த போது கார் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் 4 டயர்களும் பஞ்சர் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து பொன். முருகன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை சேதப்படுத்திய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    • இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
    • மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்

    திருச்சி

    திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 28). இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் குட்செட் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் அவரது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரவிக்குமார் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் வக்கீலை கத்தியால் குத்தியவர் திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் (25)என்பது தெரியவந்தது பின்னர் அவரை போலீசார் கைது செய்து கைது ஜெயிலில் அடைத்தனர்.

    • சங்கருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • தலைமறைவாக உள்ள சரண்யாவின் கணவா் சங்கரை போலீசார் தேடி வருகின்றனா்.

    அவிநாசி:

    அவிநாசி செம்பியநல்லூா் ஊராட்சி முத்தம்மாள் நகரை சோ்ந்த லட்சுமணன் மகள் சரண்யா (வயது 25), வக்கீல். இவருக்கும் திருப்பூரை சோ்ந்த கட்டடப் பொறியாளா் சங்கருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து பெற்றோா் வீட்டில் வசித்து வந்த சரண்யா, கடந்த ஜூலை மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

    இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும், சப்-கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.இதற்கிடையில், இவ்வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவிநாசி சிஐடியூ., கட்டட கட்டுமான தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய சரண்யாவின் மாமனாரான திருப்பூா் கூத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மணி (65), இவரது மகள் கோபிசெட்டிபாளையம் அங்காளம்மன் நகரைச் சோ்ந்த லாவண்யா (26), இவரது கணவா் மெளலி சங்கா்(28) ஆகியோரை போலீசார் இரவு கைது செய்தனா்.

    தலைமறைவாக உள்ள சரண்யாவின் கணவா் சங்கரை போலீசார் தேடி வருகின்றனா்.

    • ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருச்சி:

    புதுக்கோட்டை என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கறிஞரான இவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்வி பயின்று வந்தார்.

    நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். ஏ.சி. கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தார்.

    இந்த ரெயில் நேற்று இரவு 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.18 மணிக்கு திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதை தொடர்ந்து பயணிகள் அங்கு இறங்கினர்.

    அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மேனகாவுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருச்சி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    உடனே கோட்டை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில் காடு பகுதியில் சேர்ந்த சந்திர பிரசாத் (வயது 33) என்பதும், இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் பணி நிமித்தமாக திருச்சிக்கு வந்துள்ளார்.

    பின்னர் மேகனா கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் சந்திர பிரசாத்தை திருச்சி ரெயில்வே போலீசார் நள்ளிரவு கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    கைதான சந்திர பிரசாத் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரிக்கு பேராசிரியராக பணியமர்த்தப்பட்டவர்.

    பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வக்கீலை மிரட்டி மோட்டார் சைக்கிள் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது22). வக்கீலான இவர் சம்பவத்தன்று மேலேந்தல் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் அரிவாளை காட்டி மிரட்டி தினேஷின் மோட்டார்சைக்கிள், செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் நாராயணன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் பறிப்பில் ஈடுபட்ட வீரசோழனை சேர்ந்த அபிஷேக் என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • மணிராஜ்-சாந்தி தம்பதி மற்றும் இவர்களது மகள் பவித்ரா, மருமகன் சசிகுமார் ஆகியோர் பல தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர்.
    • இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ் (56). இவரது மனைவி சாந்தி(52). இவர்கள் திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் பொதிகை நகரில், ஜவுளி நிறுவனம் நடத்தி வருவதாகவும் தமிழ்நாடு முழுவதும் பகுதி வாரியாக ஷோ ரூம்கள் அமைக்க ஏஜென்டுகள் தேவை என்றும் கடந்த 2020-ம் ஆண்டு விளம்பரம் செய்தனர்.

    இதனை நம்பி ஜவுளி விற்பனை மையம் அதைப்பதற்காக திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த வக்கீல் அரசபிரபாகரன் இவர்களை அணுகி உள்ளார். ஒரு கிளைக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்தால், தேவைப்படும் இடத்தில் கடையின் உள்அலங்காரம் செய்து கொடுப்பதுடன், தங்கள் நிறுவனத்தின் தரமான வேட்டி, சட்டை, பனியன், ஜட்டி மற்றும் மாஸ்க் உள்ளிட்ட தயாரிப்புகளை யாரும் தர முடியாத அளவில் குறைந்த விலைக்கு விற்பனைக்காக தருவதாகவும் கூறி உள்ளனர்.

    இதனை நம்பி அரசபிரபாகரன் மற்றும் அவரது 4 நண்பர்கள் சேர்ந்து 5 கிளைகள் அமைப்பதற்காக ரூ. 61 லட்சத்தை மணிராஜ்-சாந்தியிடம் கொடுத்துள்ளனர்.

    மணிராஜ்-சாந்தி தம்பதி மற்றும் இவர்களது மகள் பவித்ரா, மருமகன் சசிகுமார் ஆகியோர் பல தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர். அதன் பின் ஷோரூம் அமைத்துதராமல் காலம் தாழ்த்தி வந்ததால் அரசபிரபாகரன் பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மட்டும் திருப்பி தந்துள்ளனர். மீதி தொகையாக ரூ. 59 லட்சத்து 25 ஆயிரம் தராமல் காலம் தாழ்த்தி உள்ளனர். இதனால் அரசபிரபாகரன் ஈரோடு மாவட்டம் சித்தோடு போலீசில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சித்தோடு போலீசார், ஜவுளி நிறுவனம் அமைத்து தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த மணிராஜ் மற்றும் சாந்தியை நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்களின் மகள் மற்றும் மருமகனை தேடி வருகின்றனர். மணிராஜ் மற்றும் சாந்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • கருப்பு ‘கோட்’ மற்றும் கழுத்தில் வெள்ளை நிற பட்டை அணிவது கட்டாயம்.

    சென்னை :

    கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், மார்ச் முதல் ஜூலை மாதம் வரை வக்கீல்கள் கருப்பு 'கவுன்' அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் பார் அசோசியேசன் என்ற வக்கீல் சங்கம் ஐகோர்ட்டுக்கு கோரிக்கை கடிதம் வழங்கும். அந்த வகையில், அண்மையில், ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இந்த மனுவை அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "கோடைகாலம் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வருகிற ஜூன் 30-ந்தேதி வரை 'கவுன்' அணிவதில் இருந்து வக்கீல்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அதேசமயம் கருப்பு 'கோட்' மற்றும் கழுத்தில் வெள்ளை நிற பட்டை அணிவது கட்டாயம்'' என்று கூறியுள்ளார்.

    • ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
    • பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

     திருப்பூர் :

    திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் அமிர்நிஷா (21). இவர் சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி மதியம் 2.20 மணிக்கு ஜமீலா பானு மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திருப்பூர் குமரன் ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில் உள்ள தங்களது வக்கீல் அலுவலகத்தில் இருந்து பணியாற்றிக்கொண்டிருந்தனர்.அப்போது திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த வக்கீல் ரகுமான்கான் (26) என்பவர் ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். மேலும் தடுக்க வந்த ஜமீலாபானுவுக்கும் தலை, கையில் வெட்டு விழுந்தது. அதன்பிறகு அங்கிருந்து ரகுமான்கான் தப்பினார்.

    இதில் படுகாயம் அடைந்த தாய்-மகள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அமிர்நிஷா சேலம் கட்டக்கல்லூரியில் படிக்க சென்றபோது, ரகுமான் கான் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரகுமான்கானை கைது செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரகுமான் கான் கோபத்தில் தாய்-மகளை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ரகுமான் கானை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகுமான் கான் திருப்பூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு பார்கவுன்சில் அவரை வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. தாய்-மகளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ரகுமான் கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அத்துமீறி வக்கீல் அலுவலகத்துக்குள் நுழைந்த குற்–றத்–துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், பெண்களை தொல்லை செய்த குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வழக்கில் உதவுவதற்காக பெண் வக்கீலகள் சத்யா, பூங்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மாதத்துக்குள் சாட்சி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதுபோல் கொலைமுயற்சி வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்குவது இதுவே முதல் முறை என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.

    ×