என் மலர்
நீங்கள் தேடியது "பறக்கும் படை"
- நமது நிலம் நமதே என்ற அமைப்பின் மூலம் 17 இடங்களில் போராட்டக்குழு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
- விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் 17 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அன்னூர்:
கோவை மேட்டுப்பாளையம், அன்னூர் ஒன்றியங்களில் உள்ள 6 கிராமங்களில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்து, 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தது.
இதற்கு 6 கிராம ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிப்காட் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணி, நடைபயணம், கடையடைப்பு உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவர்கள் நடத்தினர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில் நமது நிலம் நமதே என்ற அமைப்பின் மூலம் 17 இடங்களில் போராட்டக்குழு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அக்கரை செங்கப்பள்ளி, குன்னிபாளையம், பச்சாகவுண்டனூர், இலக்கேபாளையம், செலம்பரகவுண்டன்புதூர், தொட்டியபாளையம், கரியனூர், சொலவம்பாளையம், ஆலாங்குட்டை, கரியாக்கவுண்டனூர், ஒட்டகமண்டலம், இராசடி பொகலூர், ஆனணப்பள்ளிபுதூர், ஆத்திக்குட்டை, குழியூர் மாகாளி அம்மன் கோவில் திடல் பகுதிகளில் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நமது நிலம் நமதே விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் ரவிக்குமார், செயலாளர் ராஜா ஆகியோர் கூறியதாவது:-
தமிழக அரசு தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடி வருகிறோம். அக்கரை செங்கப்பள்ளியில் தொடங்கி மொத்தம் 17 இடங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. நிலம் கையகப்படுத்த அரசு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டாலோ, வெளியாட்கள் நடமாட்டம் இருந்தாலோ விவசாயிகள் இந்த அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் 17 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை ஏற்பட்டால் அந்த பகுதிகளுக்கு பறக்கும் படையினர் விரைந்து சென்று விவசாயிகளுக்கு உதவுவார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விவசாய நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன வசதி அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரசார நடைபயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைிவட வேண்டும். அவினாசி-அத்திக்கடவு திட்டத்தின் மூலம் பயன்படும் விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் ஒருங்கிணைப்புக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி பிரசார நடைபயணம் நடக்கிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் அக்கரை செங்கப்பள்ளி கிராமத்தில் பிரசார பயணம் தொடங்குகிறது.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
- தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி:
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 10-ந் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதையடுத்த பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாநில எல்லைகளில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்குள் செல்லும் பஸ், கார், வேன் போன்ற அனைத்து வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வரு கிறார்கள். மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதோடு வாகன எண், பெயர், முகவரி, என்ன காரணத்துக்காக வருகிறீர்கள் என்று கேட்டு குறித்து கொள்கிறார்கள். கர்நாடக மாநில தேர்தலையொட்டி விடிய, விடிய பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் பர்கூர்-கர்நாடக எல்லை யிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
- தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் தவிர்க்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
- பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பதட்டம் அடையாமல் தேர்வு எழுதுவதற்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அடுத்தடுத்து தொடங்கி நடைபெற உள்ளது. பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசியாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் தவிர்க்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
தேர்வு கூடங்களில் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
1-ந்தேதி தொடங்கும் பிளஸ்-2 தேர்வு 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதலில் தமிழ் தேர்வும் அதனை தொடர்ந்து 5-ந்தேதி ஆங்கிலம், 8-ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகள், 11-ந்தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், 15-ந்தேதி இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, 19-ந்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 22-ந் தேதி பயாலஜி, தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 3, 4 நாட்கள் இடைவெளி உள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பதட்டம் அடையாமல் தேர்வு எழுதுவதற்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. வினாத்தாள்கள் கட்டுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுகாப்பாக விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் தங்களின் ஆசிரியர், தலைமை ஆசிரியர்களிடம் வாழ்த்தும், ஆசிகளையும் பெற்றனர்.
- பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் சிறந்த முறையில் தேர்வு எழுத வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பினர்.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் பள்ளிகளில் நேரடியாக தேர்வு எழுதுகிறார்கள்.
பள்ளிகளில் படிக்காமல் பயிற்சி வகுப்பு மூலம் 21 ஆயிரத்து 875 தனித் தேர்வர்களும், சிறை கைதிகள் 125 பேரும் எழுதுகின்றனர்.
302 மையங்களில் நடைபெறும் பொதுத்தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வுக்கு முன்னதாக 9.30 மணிக்கு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டார்கள். 10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டது.
10.10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு அதனை மாணவர்கள் சரி பார்த்து படிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.
10.15 மணிக்கு தேர்வு தொடங்கி பகல் 1.15 மணி வரை நடடைபெறுகிறது.
தேர்வு மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. முதல் நாளான இன்று தமிழ் பாடத்தேர்வு நடைபெற்றது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினார்கள்.
தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் வெளியேற்றப்படுவதோடு 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்களா? என கண்காணிக்க 3200 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேர்வு மைய கண்காணிப்பாளர்களின் தீவிர மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள்கள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு முறையாக தேர்வை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பொதுத் தேர்வை எவ்வித குழப்பமும் இல்லாமல் நடத்த அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் தங்களின் ஆசிரியர், தலைமை ஆசிரியர்களிடம் வாழ்த்தும், ஆசிகளையும் பெற்றனர். அரசு மாநகராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் வெளிநபர்கள் யாரையும் தேர்வு நேரத்தில் அனுமதிக்கவில்லை. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் சிறந்த முறையில் தேர்வு எழுத வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பினர்.
சென்னை மாவட்டத்தில் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இத்தேர்வு வருகிற 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. 5-ந்தேதி ஆங்கில தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு தேர்விற்கும் போதிய இடைவெளி விடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் தேர்விற்கு எளிதாக ஆயத்தமாக முடியும்.
- பொதுத்தேர்வுகளில் முறைகேடு நடக்காமல் தடுக்க பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி தமிழ் பொதுத்தேர்வு நடந்து உள்ளது. நாளை (5-ந் தேதி) ஆங்கிலத் தேர்வு நடை பெறுகிறது.
இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத் தேர்வு இன்று தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 தேர்வை விட பிளஸ்-1 தேர்வை அதிக மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
இத்தேர்வை 8 லட்சத்து 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். பள்ளிகளில் நேரடியாக 8 லட்சத்து 20 ஆயிரத்து 201 பேரும் தனித்தேர்வர்கள் 5 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வுகளில் முறைகேடு நடக்காமல் தடுக்க பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
மேலும் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் வெளியாகாமல் இருக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளி மையங்களில் நடைபெறும் பொதுத்தேர்வுகளை அங்குள்ள தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தவிர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிளஸ்-1 தேர்வு இன்று தீவிர கண்காணிப்பில் நடந்தது. காலை 10-15 மணிக்கு தொடங்கி 1.15 மணிக்கு முடிகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் ஆசி பெற்று சென்றனர்.
சென்னை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். வினாத்தாள்கள் காப்பி மையங்களில் இருந்து பாதுகாப்பாக மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதே போல தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் தூப்பாக்கி பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
பிளஸ்-2, பிளஸ்-1 தேர்வு விடைத்தாள்கள் கல்வி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ள அறையில் வைக்கப்படுகிறது.
- பணம் மற்றும் பொருட்கள் பிடிபட்டால், அந்தந்த பகுதி தலைமை அதிகாரிகளுக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.
- நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது சொந்த தேவைக்காக ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்லலாம்.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து பறிமுதல் செய்வதற்கு பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள இந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு, தேர்தல் புகார்களை கையாள்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் தேர்தல் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கும், கண்காணிப்பு குழுவினருக்கும் தேர்தல் பணிகள் குறித்தும், தேர்தலின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததும், பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் சரியான முறையில் செயல்பட வேண்டும்.
பணம் மற்றும் பொருட்கள் பிடிபட்டால், அந்தந்த பகுதி தலைமை அதிகாரிகளுக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு பகுதி பொறுப்பாளரும் அந்தந்த பகுதிகளுக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
விதிகளை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது.
கள்ளத்தனமாக பணம் எடுத்து செல்வது, மதுபானங்கள் வினியோகிக்க கொண்டு செல்வது உள்பட வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் விதமான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த குழுவினர் கண்காணிப்பார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் முடியும் வரை இந்த குழுவானது செயல்பாட்டில் இருக்கும். லஞ்சம் கொடுப்பது, பெறுவது குறித்த புகார்கள், சமூக விரோதிகள் நடமாட்டம், சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கைப்பற்றுவது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆதாரமின்றி எடுத்து செல்லப்படும் பணம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க எடுத்து சென்றதாக கணக்கில் கொண்டு பறிமுதல் செய்ய வேண்டும். அதனை வீடியோவிலும் பதிவு செய்ய வேண்டும்.
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், மதுபானங்களை கைப்பற்ற வேண்டும். ரூ.10 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை எடுத்து சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும்.
நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது சொந்த தேவைக்காக ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்லலாம். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் கண்டறியப்பட்டால் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பெண்களின் கைப்பைகளை பெண் போலீசாரே சோதனை செய்ய வேண்டும். அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. நாளை மறுநாள்(சனிக்கிழமை) மண்டல குழு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
போலீஸ் அதிகாரிகள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு 11-ந் தேதியும், மைக்ரோ அப்சர்வர்கள் மற்றும் வீடியோ கிராபர்களுக்கு 15-ந் தேதியும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
- நாகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல்,
நாகப்பட்டினம்:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து நாகை மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கி விட்டனர்.
இதற்காக நாகை மாவட்டத்தில் 9 பறக்கும் படை, 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெற்றாற்று பாலம் அருகே பறக்கும் படை தாசில்தார் வடிவழகன் தலைமையிலான அதிகாரிகள் வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 400 எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காரைக்காலில் தனியார் பள்ளியில் கணக்கராக பணிபுரிந்து வரும் வெளிப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், பள்ளி மாணவர்களின் கட்டண தொகையை எந்தவித ஆவணங்களும் இன்றி மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து வெங்கடேசனிடமிருந்து ரூ.1,53,400-யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நாகை தலைமை இடத்து துணை தாசில்தார் தனஜெயனிடம் ஒப்படைத்தனர்.
நாகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது.
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழு வதும் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கி விட்டனர்.
இதற்காக ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நிலையான கண்காணிப்பு குழுவினர் அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் குமலன் குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த காரில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
தொடர்பாக காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த டயர் வியாபாரியான சசிகுமார் என்பதும், டயர் விற்பனை செய்த பணத்தை காரில் வைத்து எடுத்து சென்றதும் தெரிய வந்தது.

ஆனால் அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான ஆவணங்களை வியாபாரி சசிகுமார் காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கானாபுதூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.1.95 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் வெங்கடாசலம் என்பதும், காரைக்குடியில் இருந்து கோவைக்கு இடம் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு வெட்டுக்காடு வலசு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த வடிவேல் என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. 3 லட்சம் பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேப்போல் இன்று காலை பறக்கும் படையினர் ஈரோடு ரெயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

அவரை நிறுத்தி சோதனை செய்தபோது 89 பட்டு புடவைகள், 6 சுடிதார், ஒரு நைட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும் இருந்தது தெரியவந்தது.
அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கர்நாடகா மாநிலம் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த கஜேந்திர ராவ் என்பதும், திருமண வீட்டிற்க்காக ஈரோட்டிற்கு வந்து புடவைகள் வாங்கி சென்று மீண்டும் கர்நாடகா செல்வதற்காக ரெயிலில் ஏற வந்ததாக கூறினார்.
ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் அவரது புடவைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம், புடவைகளை கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், தேர்தல் உதவி வட்டாட்சியர் ஜெகநாதன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
- கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஊட்டி:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை மேற்கொண்டு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கேரள பதிவெண் கொண்ட லாரிகள் வந்தது.
அதிகாரிகள் அந்த லாரிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 லாரிகளிலும் ரூ.11.80 லட்சம் பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- மணப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம், சுரேஷ்குமார் ஆகியோரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 3,500 இருந்தது கண்டறியப்பட்டது.
- ஆவணம் ஏதும் இல்லாத காரணத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். குளித்தலை அருகே கரூர் முதல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருதூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்ட போது பெட்டவாயிலிருந்து மணப்பாறை நோக்கி சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம், சுரேஷ்குமார் ஆகியோரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 3,500 இருந்தது கண்டறியப்பட்டது,
தொடர்ந்து மருதூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்ட போது மற்றொரு வாகனத்தில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஜீவா தெரு கலைவாணன் என்பவரிடம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டது. சரியான ஆவணம் ஏதும் இல்லாத காரணத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்பு அந்த பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குளித்தலை ஆர்.டி.ஓ. தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
அப்போது குளித்தலை வட்டாட்சியர் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ், குளித்தலை வருவாய் ஆய்வாளர் ஸ்ரீவித்யா மற்றும் காவல்துறையினர் இருந்தனர்.
- தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செட்டியப்பனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி ஜோலார்பேட்டை தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெயசித்ரா தலைமையிலான அதிகாரிகள் செட்டியப்பனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம், அணைக்கட்டை சேர்ந்த விஜயன் (வயது 41), முட்டை வியாபாரி என்பதும், இவர் உரிய ஆவணம் இன்றி ரூ.2,01,900 நாமக்கல்லுக்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து, நாட்டறம்பள்ளி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜராஜனிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர்.
- மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளி்ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 83 ஆயிரத்து 710.
பாராளுமன்றத் தேர்தலுக்கு 3687 வாக்குச்சாவடிகளும், 1301 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இவற்றில் 281 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. 6 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சா வடிகளில் தேர்தல் நாளன்று நடக்கும் அனைத்து நடைமுறைகளும் சி.சி.டி.வி. மூலம் நேரடியாக மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக மொத்தம் 9119 வாக்குப்பதிவு கருவிகளும் 4821 கட்டுப்பாட்டுக் கருவிகளும் 5333 யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவியும் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவதற்காக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் 90 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 காணொலி கண்காணிப்பு குழுக்களும், 10 காணொலி பார்வையாளர் குழுக்களும், வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு 10 உதவி செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 87 துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் தங்களது துப்பாக்கிகளை உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். வேட்பாளர்களாக இருப்பவர்கள் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் போன்றவற்றிற்கு அனுமதி பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் சுவிதா 'Suvidha' என்ற இணையதளம் வழியில் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இந்த இணையத்தின் முகவரி 'http:\\suvidha.eci.gov.in' ஆகும். வேட்பாளர்கள் மேற்கண்ட இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
இந்த இணையத்தின் மூலம் அனுமதி பெற 48 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் இந்த சுவிதா இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். அதேபோல் சி.விஜில் என்னும் கைபேசி செயலி இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை புகார் அளிக்க வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க பொது மக்களுக்காக 044-2766 0642, 044-2766 0643, 044-2766 0644 மற்றும் இலவச தொலைபேசி எண் 1800 425 8515-ல் தங்கள் புகார்களை அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமன்ற தலைவர் அறை மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர். நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மாற்றப்பட்டிருந்த தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டது. இரவு முதலே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.