என் மலர்
நீங்கள் தேடியது "குறுவை சாகுபடி"
- குருவை சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது.
- விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் ராமன் கோட்டகம் பகுதியில் குருவை சாகுபடி பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது உழவு பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி தினக்கூலி விவசாயிகள், பெண்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
- அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
- குறித்த நாளான ஜூன் 12-ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது.
இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர்.
கடந்த ஆண்டு மழையால் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் ஜூன் 12-ந்தேதிக்கு முன்பாகவே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மே மாதம் 24-ந்தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்துவிட்டார்.
மேட்டூர் அணை வரலாற்றிலேயே, கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்வு முதல் முறையாக நிகழ்ந்தது.
இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.
குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 4 லட்சத்து 91ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். ஜூன் 12-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை குறுவை, சம்பா, காளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 372டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் இந்த நீரின் தேவை சற்று குறையும்.
மேட்டூர் அணையின் உச்ச நீர் மட்டம் 120 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 103.65 அடியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 69.654 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1075 கன அடியாக உள்ளது.
குடிநீருக்காக விநாடிக்கு 1508 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்கியுள்ளதால் ஜூன் 12-ம் தேதியே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன்12-ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன்12-க்கு முன்பாக 11ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 19-வது முறையாக குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி, நடப்பாண்டும் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்டா பாசனப் பகுதியில் கடந்த ஆண்டு 58 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இது 65,500 ஏக்கர் நிலப்பரப்பாக அதிகரித்துள்ளது. அதேபோல் 4.36 லட்சம் டன் உரம் கையிருப்பில் உள்ளது என்று வேளாண் அதிகாரிகள் கூறினர்.
மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இந்த தேதியில் இருந்த தண்ணீரை விட, தற்போது 6 டிஎம்சி வரை குறைவாகவே உள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
- மேட்டூர் அணையில் ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டால், 15-ஆம் நாள் கல்லணைக்கு தண்ணீர் வந்து விடும்.
- குறுவை சாகுபடி உழவர்களுக்கு லாபமாக அமைவது உறுதி செய்யப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேட்டூர் அணையில் ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டால், 15-ஆம் நாள் கல்லணைக்கு தண்ணீர் வந்து விடும். கல்லணையிலிருந்து ஜூன் 15 அல்லது 16-ஆம் நாள் காவிரி பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படக் கூடும். அதற்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் தூர் வாரும் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மையான பகுதிகளில் இன்னும் பாதியளவு பணிகள் கூட நிறைவடையவில்லை. இதே வேகத்தில் பணிகள் நடைபெற்றால், கல்லணை திறப்பதற்கு முன்பாக தூர்வாரும் பணிகள் நிறைவடையாது.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஏறக்குறைய 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கர், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் என நான்கு மாவட்டங்களில் மட்டும் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
காவிரி பாசன மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த சிக்கலில் நீர்வளத்துறை அமைச்சர் தலையிட்டு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மற்றொருபுறம், காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண்துறை மூலம் விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். கூட்டுறவுத்துறை மூலம் உழவர்களுக்கு குறுகிய கால கடன்கள் தடையின்றி கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் குறுவை சாகுபடி உழவர்களுக்கு லாபமாக அமைவது உறுதி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளைத் திறந்து வைக்கிறார்.
- குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சேலம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு வருகிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரடுக்கு பஸ் நிலையமாக கட்டி முடிக்கப்பட்டு உள்ள சேலம், பழைய பேருந்து நிலையத்தினை அவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார்.
மேலும், சேலம் கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியில் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம், அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டம், சீர்மிகு நகரத் திட்டம், மறு சீரமைப்புப் பணிகள், பள்ளப்பட்டி ஏரி புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய பாலப் பணிகள் உட்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளைத் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து 12-ந்தேதி காலையில் காவிரி டெல்டா பகுதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டத்துக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்க சேலம் மாவட்ட தி.மு.க. வினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
- மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும்.
- காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர்.
பூதலூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் இன்று இரவு கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். கல்லணையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் பயன்பெறும். இந்த மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். இது தவிர சம்பா, தாளடியையும் சேர்த்தால் சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த ஆண்டு பிரதான கால்வாய்கள் மட்டுமல்லாமல் சிறிய கிளை கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளதால் விரைவில் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரும் என்றும், பிரதான வாய்க்கால்களில் இருந்து கிளை வாய்க்கால்களில் தண்ணீர் விரைவாக சென்று வயல்களில் பாய்ந்து குறுவை சாகுபடி சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பில் உள்ளதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளன. தனியார் நிறுவனங்களிலும் விதை நெல் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
நாளை கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுவதை ஒட்டி கல்லணை பாலங்களில் தோரணங்கள் கட்டப்பட்டு காணப்படுகிறது. கல்லணை பாலங்களில் மேல் அமைந்துள்ள மாமன்னன் கரிகாலன், ராஜராஜ சோழன், காவேரி அம்மன், அகத்தியர், ஆர்தர் காட்டன் ஆகிய சிலையில் புது வண்ணம் பூசப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன .
நாளை காலை மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும் . அதனை தொடர்ந்து கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதன்பின்னர் முதலில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக இடத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் பொத்தானை அமுக்கி தண்ணீரை திறந்து விடுவார்கள்.
திறந்து விடப்படும் தண்ணீரில் மலர்களையும் விதை நூல்களையும் தூவுவார்கள். காவிரியை தொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்படும் . நிறைவாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் . கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கல்லணை திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பாசனப்பகுதியில் குறுவை சாகுபடிப்பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அதே சமயத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து காவிரி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர். எப்படியாக இருந்தாலும் விவசாயிகள் நம்பிக்கையோடு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாயனூரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி முக்கொம்பை நோக்கி வந்தது.
- மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
திருச்சி:
காவிரி டெல்டா சாகுபடிக்காக கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார்.
முன்னதாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற பாசன வாய்க் கால்கள் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்த படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் சேலம் மாவட்டத்தை கடந்து நாமக்கல், ஈரோடு, ஜேடர்பாளையம், நொய்யல், கரூர், வழியாக நேற்று மதியம் கரூர் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. அப்போது 7 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே முழுவதுமாக முக்கொம்புக்கு திறந்துவிடப்பட்டது.
அங்குள்ள பாசன வாய்க்கால்களான கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மாயனூரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி முக்கொம்பை நோக்கி வந்தது. மாலையில் பெட்டவாய்த்தலைக்கு வந்து அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக் கொம்புக்கு நேற்று இரவு சரியாக 8.30 மணியளவில் வந்தடைந்தது.
அதன்பிறகு முக்கொம்பில் இருந்து அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விடப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து திறக்கப்பட்ட தண்ணீரில் அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் பூக்களை தூவினர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு விநாடிக்கு 1,900 கனஅடி நீர் மட்டுமே வந்தது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய நிலையில் முக்கொம்புக்கு 1,900 கனஅடி நீர் வருகிறது. ஒவ்வொரு மணி நேரமும் நீர்வரத்து மாறுபடும். அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுவதுமாக நமக்கு வந்தடையும். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கல்லணையை இன்று மதியம் சென்றடையும் என்றார். அங்கிருந்து நாளை அமைச்சர்கள் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார்கள்.
கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை வரை சென்று சேரும். மேட்டூர் அணையில் இருந்து தற்போது திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், புதுக் கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சாகுபடி நடைபெற உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
- மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது.
- கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது. அங்கிருந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு காவிரி நீர் நள்ளிரவில் வந்தடைந்தது. இதையடுத்து இன்று காலை கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கல்லணையில் உள்ள ஆதிவிநாயகர், ஆஞ்சநேயர், கருப்பண்ண சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, பொத்தானை அமுக்கி தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் நவதானியங்கள் மற்றும் மலர்களை தூவப்பட்டன. இதேப்போல் விவசாயிகள் காவிரி ஆற்றை வணங்கி மலர்களையும், நவதானியங்களையும் தண்ணீரில் தூவி, விவசாயம் செழிக்க வேண்டிக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து மதகுகளில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. கல்லணை மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.42 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும்.
இன்று காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தலா 500 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது .
நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும். இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு 10 நாட்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லணை திறப்பை முன்னிட்டு கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த சிலைகளுக்கு அதிகாரிகள் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.
கல்லணை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலெக்டர்கள் தீபக்ஜேக்கப் ( தஞ்சாவூர் ), பிரதீப்குமார் (திருச்சி), ஜானிடாம் வர்கீஸ் (நாகை) , மகாபாரதி (மயிலாடுதுறை), சாருஸ்ரீ (திருவாரூர்) , அருண்தம்புராஜ் (கடலூர்), எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கல்யாணசுந்தரம், ராமலிங்கம், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் , மற்றும் பொதுப்பணித்துறை ,நீர்வளத்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் , விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
- கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதத்துக்கு மட்டும் தமிழகத்துக்கு சுமார் 41 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், திறக்கப்படும் தண்ணீரின் அளவு 12 டி.எம்.சி ஆக குறைந்துள்ளதால், நாத்து நடும் விவசாயிகள் நடவு செய்யாமல் விட்டு விடலாமா என்ற கவலையில் உள்ளனர். மேலும் குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதத்துக்கு மட்டும் தமிழகத்துக்கு சுமார் 41 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும். அப்படி திறந்தால் தான் விவசாயிகள் தொடர்ந்து நடவு செய்து, குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும். எனவே தமிழக அரசு, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு பெற வேண்டிய ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீரை முழுமையாகப் பெற உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
- கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு, கர்நாடக அரசிடம் பெற வேண்டிய காவிரி நீர் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு உதவிட வேண்டும். காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடக துணை முதல்-மந்திரி, முதல்-மந்திரி ஆகியோர் காவிரி நீர் விவகாரத்தில், மேகதாது அணைப் பிரச்சினையில், தமிழகத்துக்கு எதிரான போக்கை கடைபிடிக்கின்ற வேளையில் தமிழக தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் யார் பக்கம். கர்நாடக காங்கிரஸ் பக்கமா அல்லது தமிழக விவசாயிகள் பக்கமா.
அதாவது கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும். எனவே காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவின் அத்துமீறிய பேச்சை, செயலை கண்டித்து, ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்பட்டது.
- 43 கிராமங்களில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் கீழ்வேளூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) தேவேந்திரன் தலைமை தாங்கினார்.
வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன் முன்னிலை வகித்தார். கீழ்வேளூர் வட்டார அளவில் 43 கிராமங்களில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் 20 விவசாயிகளுக்கு யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ், பேரூராட்சி மன்ற தலைவர் இந்திராகாந்தி, துணைத் தலைவர் சந்திரசேகரன், ஆத்மாகுழு உறுப்பினர்கள் பழனியப்பன், அட்சயலிங்கம், துணை வேளாண்மை அலுவலர் பிரான்சிஸ், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ளனர்.
- தண்ணீர் இல்லாததால் மேற்கொண்டு செலவு செய்தாலும் நெற்பயிர்கள் வளர்ந்து பலன் கொடுக்குமா என தெரியவில்லை
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறக்கூடிய கிராமமாகும்.
இந்நிலையில், இங்குள்ள விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ளனர்.
மேட்டூர் அணை கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் அரிச்சந்திரா ஆற்றில் ஒருமுறை தான் தண்ணீர் வந்தது. தொடர்ச்சியாக தண்ணீர் வராததால் ராசன் வாய்க்காலிலும் தண்ணீர் குறைந்தளவே இருந்தது.
இந்நிலையில், நேரடி தெளிப்பு மூலம் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் முளைத்து தண்ணீரின்றி கருகத் தொடங்கின. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
இந்நிலையில், செல்வம் என்கிற விவசாயி தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 ஆயிரம் செலவு செய்து குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ளார். தற்போது தண்ணீர் இல்லாததால் மேற்கொண்டு செலவு செய்தாலும் நெற்பயிர்கள் வளர்ந்து பலன் கொடுக்குமா என தெரியவில்லை என கருதி சாகுபடி செய்யப்பட்ட வயலில், டிராக்டரை கொண்டு உழவு செய்து முளைத்து தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களை அழித்தார்.
எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பூதலூர் வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முடிவடைந்து உள்ளது.
- பருவம் தப்பிய கடும் வெயில் காரணமாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பூதலூர்:
பூதலூர் வட்டார பகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆடி மாதத்தில் கடுமையான வெயில் அடித்து வருகிறது.
வெயிலுடன் அவ்வப்போது கடுமையான காற்றும் வீசுகிறது.
பூதலூர் வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முடிவடைந்து உள்ளது.
இந்த வாரத்தில் குறுவை சாகுபடி முழுமையாக முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரில் ஆடிப் பருவத்தில் வீசும் காற்று, பருவம் தப்பிய கடும் வெயில் காரணமாக புது விதமான பூச்சி தாக்குதல் ஏற்படக்கூடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வேளாண்துறையினர் குறுவை சாகுபடி வயல்கள் உன்னிப்பாக கவனித்து விவசாயிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி நல்ல நிலையில் குறுவை பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.