என் மலர்
நீங்கள் தேடியது "மோசடி கும்பல்"
- மின்வாரிய அதிகாரிகள் யாரும் இதுபோன்ற மிரட்டும் வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்புவதில்லை.
- வடமாநில மோசடி கும்பல் தொடர்ச்சியாக இதுபோன்ற கைவரிசை காட்டி வருகிறது.
நீங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லையா? உங்கள் மின் இணைப்பு முழுமையாக துண்டிக்கப்படும் என்கிற குறுஞ்செய்தி உங்கள் செல்போனுக்கு தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறதா? அதை கண்டு பீதி அடையாதீர்கள்.
மின்வாரிய அதிகாரிகள் யாரும் இதுபோன்ற மிரட்டும் வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்புவதில்லை. இதுபோன்ற நேரங்களில் பதட்டமடையும் சிலர் எந்த எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்ததோ?
அதற்கு போன் செய்து நாங்கள் தான் மின் கட்டணம் செலுத்தி விட்டோமே... என்று கேட்டு விட்டால் போதும்... எதிர் முனையில் பேசுபவன் உங்களை ஏமாற்றுவதற்கு கெட்டியாக பிடித்துக் கொள்வான்.
உங்களது பில் இன்னும் 'அப்டேட்' ஆகவில்லை. நாங்கள் சொல்லும் செயலிக்கு சென்று மின் கட்டணம் செலுத்திய விவரங்களை பதிவிடுங்கள் என்று கூறுவார்கள். தாங்கள் ஏமாற்றப்படப் போகிறோம் என தெரியாமல் அப்பாவி மக்கள் குறிப்பிட்ட செயலிக்குள் சென்றுவிட்டால் போதும்.
அதில் வரும் ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுகிறார்கள். வடமாநில மோசடி கும்பல் தொடர்ச்சியாக இதுபோன்ற கைவரிசை காட்டி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் இது போன்ற மோசடி நபரிடம் சிக்கி கடைசி நேரத்தில் உஷாராகி தப்பியுள்ளார். இதேபோன்று சென்னை மாநகர் முழுவதும் பொது மக்களை குறிவைத்து மின் கட்டண குறுஞ்செய்திகளை போலியாக அனுப்பி பணத்தை பறித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறும் போது, 'மின்வாரியத்தில் குறியீடு இடம்பெற்றிருக்கும். ஆனால் மோசடி ஆசாமிகள் அனுப்பும் போலியான குறுஞ்செய்திகளில் நம்பர் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.
இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரியத்துக்கு சென்று கேட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். உடனடியாக பதட்டத்தில் குறுஞ்செய்தி வந்த போனுக்கு தொடர்பு கொண்டு பேசி ஏமாந்து விடக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற மோசடி நபர்கள் ஒரு முறை பயன்படுத்தும் மோசடி செயலியை மறுமுறை பயன் படுத்துவதில்லை. இதனால் ஏமாற்றி பணத்தை சுருட்டியது யார்? என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியாது.
எனவே மக்கள் உஷாராக இருந்து பணத்தை இழக்காமல் இருந்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்பதே சைபர் கிரைம் போலீசாரின் அறிவுரையாக உள்ளது.
- ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.
- தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
சென்னை:
செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற்று பணத்தை பறிக்கும் வட மாநிலத்தவர்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி பொதுமக்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசும் வடமாநில வாலிபர்கள் உங்கள் செல்போன் எண்ணில் இருந்து உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று கூறி வலை விரிக்கிறார்கள்.
எதிர்முனையில் பேசும் பொதுமக்கள், நாங்கள் உணவு ஆர்டர் செய்யவில்லையே என்று கூறியதும்... என்ன சார் இப்படி சொல்றீங்க... உங்கள் செல்போனில் இருந்துதானே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இப்படி சொன்னால் எப்படி? என்று எதிர்கேள்வி கேட்கும் வடமாநில வாலிபர் சரி... உணவை நான் கேன்சல் செய்து கொள்கிறேன். உங்கள் நம்பருக்கு ஓ.டி.பி. வரும் அதை சொல்லுங்கள் என்பார்.
அதேபோன்று சம்பந்தப்பட்ட நபரின் சொல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்ததும் எதிர்முனையில் பேசிக் கொண்டு இருக்கும் வட மாநில வாலிபர் அதனை கூறுமாறு சொல்வார்.
ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.
இப்படி ரூ.20 ஆயிரம் ரூபாயை ஒருவர் பறி கொடுத்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பொது மக்களை உஷார்படுத்தி உள்ளனர். உங்கள் செல்போனுக்கு இதுபோன்று யாராவது தொடர்பு கொண்டு பேசினால் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்பை துண்டித்து விடுங்கள்.
அதுதான் நல்லது. இல்லையென்றால் நீங்கள் பணத்தை இழப்பது உறுதி என்று போலீசார் தெரிவித்தனர். எப்போதுமே தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
- வடமாநிலத்து இளைஞர்கள் பாலீஷ் செய்து கொடுத்த கொலுசுகள் சிறிது நேரத்தில் தனித்தனியே கழன்று விழத் தொடங்கியது.
- ஒரு மாதத்திற்கு முன்பாக வாங்கிய புது கொலுசுக்கும் அதே நிலை ஏற்பட்டதால் அப்பகுதி பெண்கள் அதிர்ந்து போய் சுதாரிக்க தொடங்கினர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லான் காலனி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடி இன மலைவாழ் மக்கள் குடிசை போட்டு வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியின மலைவாழ் மக்கள் தங்கத்தால் ஆபரணங்கள் செய்து போட முடியாத நிலையில் இவர்கள் அப்பகுதியில் உள்ள தோட்ட வேலைக்குச் சென்று சிறிது சிறிதாக சேர்த்து காலில் வெள்ளி கொலுசு மட்டுமே அணிவது வழக்கம்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ்ஷா, முகேஷ் குமார், அம்ரித் யாதவ் ஆகிய 3 வட மாநில இளைஞர்கள் வீடுகளில் இருந்த பெண்களிடம் காலில் அணிந்துள்ள கொலுசுகளை பாலிஷ் செய்யும் பவுடர் உள்ளது. அந்த பவுடர் வெறும் ரூ.20 மட்டும்தான், நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என முதலில் கூறி பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பெண்கள் பாலீஷ் போட கொலுசுகளை கொடுக்க முன்வராத நிலையில் நானே உங்களுக்கு பாலிஷ் போட்டு காட்டுகிறேன் என்று கூறி வலுக்கட்டாயமாக லட்சுமி என்ற பெண் அணிந்திருந்த கொலுசை வடமாநில இளைஞர் கழற்றி அவர்கள் வைத்திருந்த பவுடரை தடவி வேதிப்பொருட்கள் நீரில் மூழ்கடித்துள்ளனர். அப்போது கொலுசை மூழ்கடித்த நீரானது கொதிக்கத் தொடங்கிய நிலையில் மீண்டும் எடுத்த போது அந்த கொலுசு முழுவதும் கருப்படைந்ததாகவும், அதனை மீண்டும் சீயக்காய் பவுடரை போட்டு தேய்த்து நீரில் கழுவி கொடுத்துள்ளனர். பாலீஷ் செய்த கொலுசை பெண்களிடம் கொடுக்கும் போது தற்பொழுது போட வேண்டாம் ஒரு மணி நேரம் கழித்து அணிந்து கொள்ளுங்கள் எனக் கூறி அடுத்தடுத்து 3 பெண்களின் கொலுசுகளை இதே போன்ற முறையில் பாலீஷ் செய்து கொடுத்துள்ளனர்.
வடமாநிலத்து இளைஞர்கள் பாலீஷ் செய்து கொடுத்த கொலுசுகள் சிறிது நேரத்தில் தனித்தனியே கழன்று விழத் தொடங்கியது. ஒரு மாதத்திற்கு முன்பாக வாங்கிய புது கொலுசுக்கும் அதே நிலை ஏற்பட்டதால் அப்பகுதி பெண்கள் அதிர்ந்து போய் சுதாரிக்க தொடங்கினர். வட மாநிலத்து இளைஞர் ஒருவரின் பையைப் பிடுங்கி வைத்த நிலையில் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர். அந்த நேரத்தில் எதிரே வந்த மற்ற இளைஞர்கள் அவர்கள் 3 பேரையும் விரட்டி பிடித்தனர். அவர்களிடம் கொலுசுகள் அனைத்தும் தனித்தனியாக துண்டாகி உள்ளது குறித்து கேட்டபோது, நீங்கள் கொடுத்த கொலுசு பழையது என்பதால் அப்படித்தான் இருக்கும் என்று முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளனர்.
இதனால் அவர்கள் 3 பேரையும் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெரியகுளம் வடகரை போலீசார் அவர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் இதே போன்று பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. திண்டுக்கல் புறநகர் பகுதியில் குடியிருந்து வெவ்வேறு ஊர்களுக்கு சென்று நகைகளை பாலீஷ் செய்து தருவதாக கூறி மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் பழங்குடியின மலைவாழ் மக்களிடம் நீங்கள் புகார் கொடுத்தால் அந்த 3 கொலுசுகளும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வக்கீல்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். இதற்கெல்லாம் தயாரா? என போலீசார் கேட்டுள்ளனர். இதனால் தங்கள் கொலுசு பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் புகார் கொடுக்காமல் திரும்பி வந்துவிட்டனர். இதனால் மோசடி செய்த கும்பலை வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் விட்டு விட்டனர். பழங்குடியின மலைவாழ் மக்களின் அறியாமையை பயன்படுத்தி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் திருடர்களை விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த சில நாட்களாக புதிய வகையிலான `கூகுள் பே' மோசடியை அரங்கேற்ற சைபர் கிரைம் குற்றவாளிகள் அப்பாவி பொது மக்களுக்கு வலைவிரித்துள்ளார்கள்.
- ஏமாற்று பேர்வழிகள் செல்போன் வழியாக அனுப்பும் லிங்க்கை பொதுமக்கள் தொட வேண்டாம்.
ஆன்லைன் மூலமாக புதுவிதமான மோசடிகள் விதவிதமான வடிவங்களில் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கைவரிசை காட்டுவதால் அவர்களை கண்டுபிடித்து நெருங்குவது என்பது போலீசுக்கு மிகப் பெரிய சவாலாகவே மாறி இருக்கிறது.
இதனால் `வந்தபின் அலறுவதை விட வரும் முன் காப்பதே மேல்' என்பதற்கிணங்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களையும் மேற் கொண்டு வருகிறார்கள்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்களும் இருந்துகொண்டே தான் இருப்பார்கள் என்பார்கள். அந்த வகையில் ஆன்லைன் மோசடி பேர்வழிகள் புதுப்புது வழிகளில் ஊடுருவி மக்களை ஏமாற்றிக் கொண்டே வருகிறார்கள்.
இதன்படி கடந்த சில நாட்களாக புதிய வகையிலான `கூகுள் பே' மோசடியை அரங்கேற்ற சைபர் கிரைம் குற்றவாளிகள் அப்பாவி பொது மக்களுக்கு வலைவிரித்துள்ளார்கள்.
குறிப்பிட்ட தொகையை உங்கள் வங்கி கணக்கில் தூண்டில் போல போட்டு அதன்மூலம் பெரிய தொகையை கறக்கும் மோசடி வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடி வலை எப்படி விரிக்கப்படுகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.
கூகுள் பே என்று அழைக்கப்படும் `ஜி பே' மூலமாக பணம் அனுப்புவது என்பது இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாததாகவே மாறி இருக்கிறது. இப்படி கூகுள் பே மூலமாக பணம் அனுப்பும் நேரங்களில் சில நேரங்களில் தவறுதலாக நாம் வேறு யாருக்காவது பணத்தை அனுப்பிவிட்டு திருப்பி கேட்டிருப்போம்.
அதேநேரத்தில் யார் என்றே தெரியாத மற்றவர்களும் நமது வங்கி கணக் குக்கு பணத்தை அனுப்பி விட்டு திருப்பி கேட்டிருப்பார்கள். இந்த நடை முறையை பின்பற்றித்தான் புதிய மோசடி கும்பல் மக்களின் சேமிப்பு பணத்தை களவாட களமிறங்கி உள்ளது.
சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை பிடிக்கும் தந்திரசாலிகள் போல மோசடி ஆசாமிகள் செயல்படுகிறார்கள். உங்கள் வங்கி கணக்கில் சில ஆயிரங்களை ஜி பே மூலம் அனுப்பி விட்டு உங்கள் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
`எனது வங்கி கணக்கில் இருந்து நண்பர் ஒருவருக்கு பணம் அனுப்பி உள்ளேன். அது தெரியாமல் உங்களுக்கு வந்துவிட்டது. அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் பிளீஸ்...' என்று கூறுகிறார்கள். இப்போதுதான் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இதன் பின்னர் எதிர் முனையில் பேசும் நபர் ஒரு `லிங்'க்கை அனுப்புகிறேன். அதில் போய் எனது பணத்தை அனுப்புங்கள் என்று கூறி குறிப்பிட்ட லிங்கையும் அனுப்பி வைக்கிறார்கள். இந்த லிங்க்கை நீங்கள் கிளிக் செய்ததும் ஓ.டி.பி. எண் வரும் அந்த எண்ணை எதிர் முனையில் பேசும் நபர் கேட்பார்.
நீங்கள் ரகசிய குறியீட்டு எண்ணான ஓ.டி.பி.யை சொன்னதும் அடுத்த நொடியே உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த சேமிப்பு தொகையும் காணாமல் போய் இருக்கும். இது போன்ற நூதன மோசடி கடந்த ஒருவாரமாகவே அதிகமாக அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்கள் உஷாராக இருக்குமாறும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. நானும் அடிக்கடி வீடியோக்கள் மூலமாக பேசி வருகிறேன். உங்கள் வங்கி கணக்கையோ, ரகசிய குறியீட்டு எண்ணையோ வங்கிகளில் இருந்து யாரும் கேட்கமாட்டார்கள்.
இதனை பலமுறை பொது மக்களிடம் எடுத்துக் கூறி உள்ளோம். ஆனால் வங்கி விவரங்களை கொடுத்து பொதுமக்கள் பணத்தை இழந்துகொண்டே இருக்கிறார்கள். தற்போது கூகுள் பே மூலம் தெரியாமல் பணம் அனுப்பிவிட்டேன் என்று ஏமாற்றி பொதுமக்களின் வங்கி கணக்கை குறிவைத்து ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை காட்டி செயல்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஏமாற்று பேர்வழிகள் செல்போன் வழியாக அனுப்பும் லிங்க்கை பொதுமக்கள் தொட வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் உஷாராக இல்லை என்றால் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் இழக்க நேரிடும்.
தமிழக காவல் துறையில் உள்ள `காவல் உதவி செயலி மற்றும் 1930 எனும் அவசர உதவி எண் ஆகியவற்றின் மூலமாக பணத்தை இழந்தவர்கள் உடனடியாக புகார் செய்தால் இழந்த பணம் திரும்ப கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்த நபரின் வங்கி கணக்குக்கு பணம் சென்ற 24 மணிநேரத்தில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே பணம் திரும்ப கிடைக்கும்.
எனவே அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போனில் பேசி வங்கி தொடர்பான தகவலை கேட்டால் இணைப்பை துண்டித்து விடுங்கள். `கூகுள் பே'யில் தெரியாமல் பணம் அனுப்பிவிட்டேன் என்று யாராவது போனில் தெரிவித்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை அணுகி விவரத்தை தெரிவியுங்கள். சம்பந்தப்பட்ட நபர் உண்மையிலேயே தெரியாமல் பணத்தை அனுப்பி இருந்தால் நிச்சயம் நேரில் வருவார்.
அப்போது பணத்தை திருப்பி கொடுத்துவிடலாம். இதுபோன்று உஷாராக செயல்பட்டு பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
- புஷ்பாவதி வீட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று மொபைல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வார்.
- பரிசோதனைக்கான கட்டணம் ரூ.30 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த வகுத்தானூர் கிராமத்தில் வசித்து வந்த சாக்கம்மாள் (எ) புஷ்பவதி, (வயது52) என்பவர் வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் கருவி மூலம் சொல்வதாக மாவட்ட கலெக்டர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவர் உத்தரவின் பேரில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணைய இயக்குனரின் அறிவுறுத்தலின்படி அரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணா, குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண்ணின் வீட்டில் சட்டத்திற்கு விரோதமாக ஈடுபட்ட சாக்கம்மாள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கவியரசன், (28) ஐயப்பன், (34) ஆகியோர் ஒரு பெண்ணிடம் 26,400 ரூபாய் வாங்கும் போது கையும் கழுவுமாக அதிகாரிகள் பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-
கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக வகுத்தானூர் கிராமத்தில் உள்ள சாக்கமாள் (எ) புஷ்பாவதி வீட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று மொபைல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வோம். அப்போது அதற்கான கட்டணம் ரூ.30 ஆயிரம் வரை வசூல் செய்வோம்.
கருவில் இருப்பது பெண் குழந்தை என்றால் கருவை கலைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அவர்களிடம் அதற்கான வழிமுறைகளை கூறிவிடுவோம். இதுவரை நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று பரிசோதனை செய்துள்ளோம் என்று கூறினர்.
கைதானவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சாக்கமாளை சேலம் பெண்கள் சிறையிலும், மற்ற இருவரையும் தருமபுரி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டது.
- ஒருநாள் திடீரென அந்தத் தொகை முழுவதையும் கிரிப்டோ கரன்சியாக மாற்றி ஏமாற்றுகிறார்கள்.
- மோசடி கும்பல் வடமாநிலங்களில் இருந்து அதிகம் செயல்படுகிறார்கள்.
திருச்சி:
திருச்சியில் சமீபகாலமாக பகுதி நேர வேலை, கிரிப்டோ கரன்சி டிரேடிங் என்ற பெயர்களில் ஆன்லைன் மோசடி கும்பல் இளைஞர்களின் பணம் பறிப்பதாக திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசாருக்கு அதிக புகார்கள் வருகின்றன. இதற்கிடையே திருச்சி துவாக்குடி பெல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி இந்த மோசடி கும்பலிடம் ஒரு ரூ. 49 லட்சம் பணத்தை இழந்து தவித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த அதிகாரி மாதம் 2 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறுகிறார். மேலும் குடும்பத்திலும் நல்ல வசதி உள்ளது. அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சில லிங்குகளை மர்ம நபர்கள் அனுப்பி உள்ளனர். அதில் கிரிப்டோ கரன்சி டிரேடிங் செய்தால் பணத்தை இரட்டிப்பு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய அவர் முதலில் குறைந்த தொகையை முதலீடு செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கி கணக்குக்கு ரூ. 15,000 லாபமாக வந்து சேர்ந்தது. உடனே அந்த பணத்தை அவர் தனது கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டார்.
இதனால் அவருக்கு மேலும் பணம் சம்பாதிக்கும் ஆசை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக பல்வேறு தவணையாக ஆன்லைன் மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்குக்கு ரூ. 49 லட்சம் தொகையை செலுத்தினார். இந்த தொகைகளை அவர் முதலீடு செய்து ஒவ்வொரு முறை டிரேடிங் செய்யும் போதும் இரட்டிப்பு தொகையை திரையில் காண்பித்துள்ளனர்.
ஆனால் அவரது வங்கி கணக்குக்கு வரவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அந்த தொகையை மோசடி கும்பல் கிரிப்டோ கரன்சியாக வெளிநாடுகளுக்கு மாற்றி பெல் அதிகாரியை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். பின்னர் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டது.
இதனால் அதிர்ச்சி அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் இழந்த தொகையை மீட்க முடியவில்லை.
இதுபோன்ற தினமும் புகார்கள் வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
ரூ. 30 ஆயிரம், 50 ஆயிரம், ரூ. ஒரு லட்சம் என அவர்கள் இழந்து நிற்கிறார்கள்.
இந்த மோசடி கும்பல் வடமாநிலங்களில் இருந்து அதிகம் செயல்படுகிறார்கள். ஆகவே அவர்களை பிடிப்பது என்பது போலீசாருக்கு சவால் ஆனதாக உள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் தொடர்பு வைத்துக் கொண்டு மோசடி செய்யும் பணத்தை கிரிப்டோ கரன்சியாக எளிதில் மாற்றி விடுகிறார்கள்.
இந்த மோசடி தொடர்பாக திருச்சி சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் கூறும்போது,
முதலில் நமது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை அல்லது கிரிப்டோ கரன்சி டிரேடிங் என்ற பெயரில் டெலிகிராம் வாயிலாகவோ வாட்ஸப் வாயிலாகவோ லிங்குகளை அனுப்புகிறார்கள். பின்னர் சில யூடியூப் வீடியோக்களை அனுப்பி சப்ஸ்கிரைப் பண்ணுங்க... லைக் பண்ணுங்க... ஷேர் பண்ணுங்க... என சொல்கிறார்கள். இதில் ஐந்தாறு டாஸ்க் வந்தவுடன் முதலீட்டு தொகைக்கு ஏற்ப ரூ.300, 600 என முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்புகிறார்கள்.
ஓரிருமுறை கமிஷன் தொகை கொடுத்து நம்பி க்கையை ஏற்படுத்துகிறார்கள்.
அதன் பின்னர் கமிஷன் தொகை சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்குக்கு வராது. திரையில் காண்பிக்கும் தொகையை கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு சிலர் பல லட்சங்களை தொடர்ச்சியாக முதலீடு செய்கிறார்கள். பின்னர் ஒருநாள் திடீரென அந்தத் தொகை முழுவதையும் கிரிப்டோ கரன்சியாக மாற்றி ஏமாற்றுகிறார்கள்.
ஓரிரு முறை சொற்பத்தொகை முதலீடு செய்து லாபத்தை எடுத்துக்கொண்டு லிங்கை விட்டு வெளியேறியவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள் என்றார்.
- கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- டெலிகிராமில் ஐம்பது பேர் கொண்ட குழுவில் இணைத்து மோசடி செய்து உள்ளனர்.
சென்னை:
சென்னை முகப்பேரை சேர்ந்த ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் பகுதி நேர வேலை செய்வதற்காக ஆன்லைனில் தன்னை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பின்னர் டெலிகிராம் மூலம் மோசடி நபர் தொடர்பு கொண்டதாகவும் அதனை நம்பி அவர்கள் கொடுத்த இரண்டு வங்கி கணக்குகளுக்கு ரூ.18 லட்சத்து 23 ஆயிரம் வரையிலான பணத்தை டெபாசிட் செய்ததாகவும் கூறினார்.
ஆனால் தான், செலுத்திய தொகை ஏதும் தனக்கு திரும்ப வரவில்லை என்றும் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புகார்தாரர் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன் தொடர்புடைய மொபைல் எண் விவரங்கள் முகவரிகள் மற்றும் அடையாள விவரங்கள் போன்றவைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மோசடி வங்கி கணக்கில் இருந்து செய்யப்பட்ட பண பரிவர்த்தனைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. விசாரணையில் குற்றவாளிகள் சென்னை ஐ.சி.எப்.-ல் இருந்து இந்த குற்றத்திற்காக வங்கி கணக்குகள் தொடங்கி அதனை வெளிநாட்டில் இருக்கும் மோசடிகாரர்களிடம் கொடுத்து மக்களை ஏமாற்றியது தெரியவந்தது.
இது தொடர்பாக டார்லா பிரவீன்குமார், சண்டீபன், ராஜூ, அசோக்குமார், வீரராகவன், பிரவீன்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலியாக ஒரு வங்கி கணக்கு தொடங்க முதலில் ரூ.50 ஆயிரம் பெறப்பட்டதாகவும் பிரதி மாதம் ரூ.30 ஆயிரம் வரை பெற்றதாக டார்லா பிரவீன்குமார் தெரிவித்ததன் பேரில் அதற்கு உதவிய அசோக் குமார் மற்றும் ராஜூ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அசோக்குமார் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் பேரில் வீரராகவன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குற்ற செயலுக்காக பயன் படுத்தப்பட்ட 7 செல்போன் கள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
இவர்களின் வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் முடக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட எதிரிகள் ஏற்கனவே மும்பை, இஸ்லாபூர் காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் மூலம் ஈர்க்கப்படுகிறார்கள்.
மேலும் அவர்கள் டெலிகிராமில் ஒரு குரூப்பில் இணைக்கப்பட்டு யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்வது, ஓட்டல்களுக்கு ரிவியூ எழுதுவது அல்லது கிரிப்ட்டோ கரன்சியில் டிரேடு செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆரம்பத்தில் ரூ.150 முதல் ரூ.1000 வரை லாபம் பெற்றுள்ளனர்.
பின்னர் அவர்களை டெலிகிராமில் ஐம்பது பேர் கொண்ட குழுவில் இணைத்து மோசடி செய்து உள்ளனர். இதுவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்டவர்களை மோசடிக் கும்பல் ஏமாற்றியிருப்பது தெரியவந்து உள்ளது.
எனவே ஆன்லைனில் பகுதி நேர வேலை தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1930 என்ற ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணைய தளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
- முதலில் ரூ.799 வைப்புத்தொகை செலுத்தி நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- கர்ப்பமாகாவிட்டாலும் ஆறுதல் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பாட்னா:
சமீப காலமாக நாடு முழுவதும் நூதன மோசடியில் ஈடுபடும் கும்பலின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது.
டிஜிட்டல் முறையில் பணம் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மருத்துவதுறை ரீதியாக ஆசை வார்த்தைகளை கூறி நூதன மோசடியை அரங்கேற்றும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில் பீகார் மாநிலத்தில் கர்ப்பம் தரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்களை கருத்தரிக்க வைக்கும் ஆண்களுக்கு ரூ.13 லட்சம் வரை வழங்குவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-
பீகார் மாநிலம் நவாடா பகுதியில் 'பிரக்னண்ட் ஜாப் ஏஜென்சி' என்ற பெயரிலான நிறுவனத்தில் பணி புரிய ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அதில், இந்த நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளும் நபர்கள், குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களை தேர்வு செய்து அவர்களை கர்ப்பமாக்கலாம்.
இதற்காக முதலில் ரூ.799 வைப்புத்தொகை செலுத்தி நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் பெண்களின் புகைப்படங்கள் வழங்கப்படும்.
அவ்வாறு வழங்கப்படும் பெண்களின் அழகை பொறுத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வைப்புத்தொகை செலுத்தினால் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம். அந்த பெண் கர்ப்பம் அடைந்தால் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு ரூ.13 லட்சம் வரை தொகை வழங்கப்படும்.
அவ்வாறு கர்ப்பமாகாவிட்டாலும் ஆறுதல் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த சில வாலிபர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணத்தை செலுத்த தொடங்கி உள்ளனர். ஆனால் நாட்கள் பல சென்ற பின்னரும் கடைசி வரை பெண்களின் புகைப்படங்களை அனுப்பவில்லை. அதன் பிறகு தான் சம்பந்தப்பட்ட வாலிபர்களுக்கு தாங்கள் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் பீகார் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து நவாடா பகுதியில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தி மோசடி கும்பலை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.
மேலும் அலுவலகத்தில் இருந்து செல்போன்கள், பிரிண்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முன்னாகுமார் என்பவர் இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. தலைமறைவான அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- செயலி மூலம் கடனாக பெற்ற பணத்தை பல மடங்கு கூடுதலாக வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர்.
- போலீசார் விசாரணையில் சமந்தப்பட்ட நபர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூரில் 3 வயது குழந்தையின் படத்தை மார்பிங் செய்து அனுப்பிய லோன் செயலி மூலம் மோசடி செய்யும் கும்பலை சேர்ந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்போன் மூலம் வரும் லோன் செயலி மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோன் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த வாலிபர் குறிப்பிட்ட தேதிக்குள் பெற்ற பணத்தை திரும்ப கட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த செயலியை சேர்ந்த நபர் வேறு நாட்டின் செல்போன் எண் கொண்ட ஒரு எண்ணில் அந்த வாலிபரை தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்பு கொண்ட நபர் செயலி மூலம் கடனாக பெற்ற பணத்தை பல மடங்கு கூடுதலாக வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர்.
அந்த வாலிபர் பணத்தை கட்ட தாமதமாகிவிட்டது. அதனால் கும்பலை சேர்ந்த நபர், லோன் பெற்ற வாலிபருடைய, நண்பரின் 3 வயது குழந்தையை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின் பேரில், துணை கமிஷனர் வனிதா வழிகாட்டுதலின் படி, இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி மேற்பார்வையில் சைபர் கிரைம் எஸ்.ஐ சையது ரபீக் சிக்கந்தர் தலைமையில் போலீசார் நவீன்கிருஷ்ணன், கருணாசாகர், ஆறுமுகம், விஸ்வா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர்.
போலீசார் விசாரணையில் சமந்தப்பட்ட நபர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தனிப்படை போலீசார் பீகார் விரைந்தனர். பீகார் மாநிலம், மதுபானி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கியிருந்தார். அங்கு சென்று அந்த வாலிபரை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த வாலிபர் அரியானாவை சேர்ந்த ராம் சேவாக் கமட் என்பவரின் மகன் ரோசன்குமார் கமட் (22) என்பதும், அவர் லோன் செயலி மூலம் கடன் கொடுத்து விட்டு பலரின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மேல் பலர் குழுக்களாக இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து திருப்பூரை சேர்ந்த 3 வயது குழந்தையின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பியதும் ஒப்புக்கொண்டார். இதே போல் திருப்பூரில் செல்போன் செயலின் மூலம் கடன் பெற்ற பெண்களின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அனுப்பி பணம் பறித்து மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தனிப்படை போலீசார் ரோசன்குமார் கமட்டை திருப்பூர் அழைத்து வந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பீகார் சென்று கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு பாராட்டினார்.
- மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை இணங்கும்படி கையாளுகிறார்கள்.
- ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் அல்லது தகவலை வழங்குவதற்கு முன், நம்பகத்திற்குரியதா என்பதை உறுதிப்படுத்தவும்.
சென்னை:
மோசடி நபர்கள் சமீப காலமாக பாதிக்கப்பட்டவரிடம் அவரது மகன், மகள் பண மோசடி அல்லது சைபர் கிரைம் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் செல்போனில் பேசி மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது தற்போது அதிகரித்து உள்ளது. இது போன்ற சம்பவம் கடந்த வாரம் சென்னையில் நடந்து உள்ளது. இதில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இணையதள குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுதொடர்பாக சைபர் கிரைம் கூடுதல் காவல்துறை இயக்குனர் சஞ்சய்குமார் கூறியதாவது:-
அமலாக்கதுறையினர் அல்லது அதிகாரிகள் எனக்கூறி அழைப்பவர்களின் அடையாளத்தை எப்போதும் சரிபார்க்கவும். அவர்களின் பெயர் மற்றும் அவர்கள் சார்ந்த துறையைக் கோரவும். பின்னர் அதிகாரப்பூர்வ தொடர்புகள் மூலம் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அவர்களின் அடையாளத்தை சுயமாக சரிபார்க்கவும்.
குடும்ப உறுப்பினர் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி உங்களுக்கு அழைப்பு வந்தால், பீதி அல்லது பயத்திற்கு ஆளாகாமல் அமைதியாக இருக்கவும்.
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை இணங்கும்படி கையாளுகிறார்கள். ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் அல்லது தகவலை வழங்குவதற்கு முன், நம்பகத்திற்குரியதா என்பதை உறுதிப்படுத்தவும்.
சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் குடும்ப உறுப்பினரைத் தொடர்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பிடத்தைச் சரிபார்க்கவும். தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்கவோ அல்லது பணம் அனுப்பவோ வேண்டாம்.
இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர்கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-ல் புகார் செய்யலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் உங்களது புகாரைப்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல வருடங்களாக பல தொழில் அதிபர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது.
- வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்திலும் சில தொழிலதிபர்கள் சபலத்தால் இந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.
நெல்லை:
சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 47). இவர் காற்றாலைகளுக்கு மின் உபகரணங்கள் வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு முகநூல் (பேஸ்புக்) மூலமாக பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பானுமதி(40) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, பானுமதி கடந்த 29-ந்தேதி ஆசை வார்த்தை கூறி நித்யானந்தமை நெல்லைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் பானுமதி வீட்டுக்கு சென்ற அவரை அங்கிருந்த மேலும் 4 பேர் கும்பல் சேர்ந்து கடத்தி சென்று நகை, ரூ.10 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பறித்தது.
இதுகுறித்து நித்யானந்தம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தியிடம் அளித்த புகாரின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையிலான போலீசார் பானுமதி, அவரது கூட்டாளிகளான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பார்த்தசாரதி(46), வெள்ளத்துரை(42), ரஞ்சித்(42), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுடலை(40) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகள் இதேபோல் பல வருடங்களாக பல தொழில் அதிபர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது. இதுதொடர்பான தகவல்கள் வருமாறு:-
பானுமதிக்கு ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி கல்லூரி படிப்பு முடித்த ஒரு மகனும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இவரது நடவடிக்கைகள் சரியாக இல்லாததால், அவரது குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பானுமதியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.
இந்நிலையில் பானுமதிக்கு தனது பள்ளி தோழனான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த வெள்ளத்துரையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக அவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 2 பேரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டுள்ளனர். பானுமதி பட்டப்படிப்பு முடித்தவர் என்பதால் முகநூலை பயன்படுத்தி அதில் தொழில் அதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்களை தொடர்பு கொண்டு பழகி வந்துள்ளார்.
அவர்களிடம் மாதக்கணக்கில் பழகி நம்ப வைத்து, ஆசை வார்த்தை கூறி நெல்லைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு அவர் தொழிலதிபர்களை வரவழைத்து படுக்கை அறைக்கு அழைத்து சென்று கதவுகளை பூட்டிக்கொள்வார். அடுத்த 5 நிமிடங்களில் வெள்ளத்துரை தனது கூட்டாளிகள் 3 பேருடன் அங்கு வந்து கதவை தட்டுவார்.
பின்னர் எனது மனைவியை கற்பழிக்க முயன்றுள்ளாய் என கூறி போலீசில் புகார் அளித்து உன்னை அவமானப்படுத்தி விடுவேன் என்று கூறி அந்த தொழில் அதிபர்களை மிரட்டி அவர்களிடம் இருக்கும் நகை மற்றும் உடைமைகளை பறித்து வந்துள்ளனர்.
தங்களின் பிடியில் சிக்கும் தொழிலதிபர்களை பொன்னாக்குடி பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் தங்களது பெயரில் உள்ள ஒரு தனி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளனர்.
சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல் இந்த கும்பல் சென்னை, கோவை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலதிபர்களை குறிவைத்து ஆசைவார்த்தை பேசி நெல்லைக்கு வரவழைத்து அவர்களிடம் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களது வலையில், 40 வயதில் தொடங்கி 65 வயது வரையிலான தொழிலதிபர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சபலத்தால் சிக்கி பணத்தை இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறாக அந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளது.
வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்திலும் சில தொழிலதிபர்கள் சபலத்தால் இந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். ஆனால் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும். அதற்கு பணத்தோடு போகட்டும் என்று அவர்கள் வெளியே தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே பார்த்தசாரதியை தவிர மற்ற 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பார்த்தசாரதிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் நெல்லை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் கூறுகையில், பல வருடங்களாக இந்த கும்பல் தொழிலதிபர்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து பணத்தை பறித்து வந்துள்ளனர்.
இந்த கும்பலிடம் தங்களது பணத்தை இழந்தவர்கள் வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இன்று அல்லது நாளை அந்த கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அதன்பின்னரே இதுவரை எத்தனை தொழிலதிபர்களை ஏமாற்றி எவ்வளவு பணத்தை இவர்கள் பறித்துள்ளனர் என்ற விபரம் தெரியவரும்.
அதேநேரத்தில் பணத்தை இழந்த தொழிலதிபர்கள் எங்களிடம் வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்கள் பெயர் ரகசியம் காக்கப்பட்டு அவர்களது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- யார் போன் செய்து வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களை கொடுக்க வேண்டாம்.
- 1930 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
சென்னை:
ஆன்லைன் மூலமாக பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணத்தை பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகமாகவே தங்களது கைவரிசையை காட்டு கொண்டிருக்கிறது.
மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி ஏமாற்றி உங்களது பெயரில் போதைப் பொருள் பார்சல் வந்துள்ளது, உங்கள் வங்கி கணக்கில் இருந்து சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஏமாற்றி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை பறிப்பது தொடர்கிறது.

நாங்கள் சொல்கிறபடி ஆர்.பி ஐ. வங்கிக் கணக்குக்கு உடனடியாக பணத்தை அனுப்புங்கள். நாங்கள் உங்களைப் பற்றி விசாரணை நடத்தி விட்டு அந்த பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறோம் என்று கூறி ஏமாற்றுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது ஒரு புறம் இருக்க வங்கி அதிகாரி போல பேசியும் மோசடி கும்பல் ஆன்லைன் மூலமாக பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. ஒரு சிலர் இது போன்ற மோசடி கும்பல்களை அடையாளம் கண்டு சிலர் உடனடியாக போனை துண்டித்து விடுகிறார்கள்.
இன்னும் சிலரோ மோசடி கும்பலை சேர்ந்தவர்களிடம் போனில் வாக்குவாதம் செய்து யாரை ஏமாற்ற பார்க்கிறாய்? என்று திட்டிவிட்டும் போனை துண்டிக்கிறார்கள்.
இப்படி தமிழகம் உள்பட நாடு முழுவதுமே மோசடி கும்பல் தொடர்ச்சியாக ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருப்பவர்களிடமும் இது போன்று பணம் பறிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் நாடு முழுவதும் ரூ. 1750 கோடிபணத்தை மோசடி பேர்வழிகள் சுருட்டி இருக்கிறார்கள்.
இந்த மோசடியை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அதனை கட்டுப்படுத்துவது என்பது பெரிய சவாலாகவே மாறிப் போயிருக்கிறது.
வயதானவர்கள் மற்றும் ஐ.டி.நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஆகியோர்களை குறி வைத்தே மோசடி நபர்கள் பேசுகிறார்கள். அப்போது அவர்களை மூளைச் சலவை செய்து மிரட்டி தாங்கள் சொல்கிறபடி கேட்க வைத்து விடுகிறார்கள்.
இதன் மூலமே லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த மோசடி அதிகமாக நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை தற்போது பறிகொடுத்துள்ளார்.
இது தொடர்பாகவங்கி அதிகாரி ஒருவர் கூறும் போது, `வங்கியில் இருந்து போன் செய்து யாரும் வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்களை கேட்பதில்லை. அதே நேரத்தில் வங்கி தொடர்பான தொலைபேசி அழைப்புகள் வந்தால் 1860 என்று தொடங்கும்.
அதேபோன்று அப்படியே யாரும் பேசினாலும் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அவர்கள் கேட்க மாட்டார்கள்.
எனவே யார் போன் செய்து வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களை கேட்டாலும் அவர்களிடம் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பாக 1930 என்ற கட்டுப்பாட்டு அறைஎண்ணில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுபோன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்த போதிலும் ஒரு புறம் மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மோசடி பேர்வழிகள் அந்த அளவுக்கு அதிகாரிகள் போல ஆங்கிலத்தில் பேசி துணிகர மோசடியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.