என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளிக்கூடம்"
- ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
- ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா. பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணான இவர் திருப்புட்குழி ஊராட்சியில் பொது வார்டில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்.
இவர் குடியரசு தின விழாவில் பங்கேற்க திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேசிய கொடியை ஏற்றச் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் தடுத்துள்ளனர்.
இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தேசியக்கொடியை ஏற்றவில்லை.
இதுபற்றி ஊராட்சி தலைவர் சுகுணா பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் தன்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்ததாக பாலசந்தர், செல்வம் ஆகியோர் மீது புகார் செய்தார். இதுகுறித்து சுகுணா கூறுகையில், என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களின் ஆதரவாளர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். பள்ளியில் என்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்தனர். அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மீது பள்ளிக் கல்வித்துறையில் புகார் கொடுக்க உள்ளேன் என்றார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரி கூறுகையில், "நான் எனது விளக்கத்தை கலெக்டரிடம் தெரிவித்துவிட்டேன்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கூறுகையில், "ஊராட்சி தலைவர் ஆரம்ப பள்ளியில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற வரும்போது முன் விரோதத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகுணா அங்கிருந்து வெளியேறினார். எனவே வேறு நபரை வைத்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஊராட்சி தலைவருக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தான் கொடி ஏற்ற முழு அதிகாரம் உள்ளது. பள்ளிக்கூடம் என்பது முழுக்க முழுக்க தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர் தேசியக்கொடியை ஏற்றுவார். அவர் இல்லை என்றால் வேறு யாராவது ஏற்றலாம்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது. பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூடுதல் அம்சமாக 15 நாட்கள் செயல்முறை பயிற்சியும் தருகிறார்கள்.
- ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பீகாரின் சப்ரா பகுதியை சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டதாக கூறினார்.
லக்னோ:
சமீப காலங்களாக ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் அனுபவமில்லாத கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் தோல்வி அடைகிறார்கள்.
இவர்களை போன்று அனுபவம் இல்லாதவர்களுக்கு பீகார் மாநிலத்தில் புதுமையான பள்ளிக் கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக் கூடத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க 3 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கூடுதல் அம்சமாக 15 நாட்கள் செயல்முறை பயிற்சியும் தருகிறார்கள்.
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 4-ந் தேதி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த ரூ.39.58 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தான் இந்த புதுமையான பள்ளிக் கூடம் பற்றிய தகவல் கிடைத்தது.
கைதான ஏ.டி.எம். கொள்ளையன் நீரஜ் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பீகாரின் சப்ரா பகுதியை சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டதாக கூறினார்.
வெளி மாநிலங்களை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பது குறித்து 3 மாத பயிற்சியை சுதிர் மிஸ்ரா அளித்துள்ளார். இதனால் அவர் ஏ.டி.எம். பாபா என்றும் அழைக்கப்பட்டுள்ளார்.
ஏ.டி.எம். அறையின் கண்ணாடிகளில் பனி படர்ந்தது போன்ற திரவத்தை அடிப்பது, அதன் பிறகு 15 நிமிடங்களுக்குள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை எடுப்பது குறித்து அவர் நேரடி பயிற்சி அளித்து உள்ளார். பயிற்சி முடித்தவர்களுக்கு 15 நாட்கள் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியை 15 நிமிடங்கள் மற்றும் அதற்கு முன்பாக முடிப்பவர்கள் மட்டுமே ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை கொள்ளையடிப்பதற்கு களம் இறக்கப்படுகிறார்கள்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் கொள்ளையர்களுக்கு பயிற்சி அளித்த ஏ.டி.எம். பாபா சுதிர் மிஸ்ராவை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ந் தேதிக்கு தள்ளி வைத்திருந்தோம்.
- சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்கள் அதுவும் 10-ம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை:
தமிழகத்தில் இன்று அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ந் தேதிக்கு தள்ளி வைத்திருந்தோம்.
ஆனால் அதை மீறி தனியார் பள்ளிகள் திறந்திருந்தால் அந்த பள்ளிகளின் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்கள் அதுவும் 10-ம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மாவட்டவாரியாக இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமணர்கள் படுக்கும் குகைகள் பள்ளிகள் எனப்பட்டன.
- சமணமுனிவர்கள் பெரும்பாலும் பள்ளி(குகை)களில் தங்கியே தங்கள் துறவுப்பணிகளை மேற்கொண்டனர்.
பள்ளுதல் = என்றால் தோண்டுதல்.
பள்ளப்பட்ட இடமே - பள்ளம்.
ஒரு இடத்தைப் பள்ளும் போது (தோண்டும் போது) ஆழமாக, பெரிதாகத் தோண்டினால் பள்ளம். குறைவான ஆழத்தில் சிறிதாகத் தோண்டியது பள்ளி(ல்).
'பள்ளு' இலக்கியம் கேள்விப்பட்டிருப்பீரகள்! வயலைப் பள்ளமிட்டுப் ( ஆழ உழுது) பயிர்த் தொழில் புரிந்த உன்னத மாந்தர்கள் ( பள்ளர்) உருவாக்கியது அந்த இலக்கியம்! அவர்கள் கற்பனைத் திறனும் இசையறிவும் மிக்கவர்கள் கூட! இவர்கள் இசைத்துக் கொண்டே இலக்கியமும் படைத்து, பசியாற உணவும் உண்டாக்கியதால், இந்த இலக்கியம் அவர்கள் பெயராலேயே, 'பள்ளு' எனப்பட்டது.
படு / படுப்பது என்ற வினைச்சொல்லும் பள் - என்ற மூலத்திலிருந்து உருவானதே. பள்ளப்பட்ட இடத்தில் இரவினில் உடலைச்சாய்த்து ஓய்வெடுப்பதே - படுத்தல் என்ற வினையானது.
படுத்தல் = கீழாதல், விழுதல், கிடத்தல், தூங்குதல்.
படுக்கை = கீழ் மட்டத்தில் உள்ள இடம்;
தாழ்வான இடம்.
பள்ளிகொள்ளுதல் என்றால் படுத்தல் என்று பொருள்.
பள்ளியெழுச்சி = படுக்கை விட்டு எழுந்திருத்தல்.
சமணர்கள் படுக்கும் குகைகள் பள்ளிகள் எனப்பட்டன. சமணமுனிவர்கள் பெரும்பாலும் பள்ளி(குகை)களில் தங்கியே தங்கள் துறவுப்பணிகளை மேற்கொண்டனர்.
(உதா: குராப்பள்ளி, சிராப்பள்ளி).
பல நீதி நூல்களை சமணர்கள் இப்பள்ளிகளிலிருந்தே படைத்தனர். இந்தச் சமயப் பள்ளிகளில் பின்னர் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்டதால் - கல்விச் சாலைகள் பள்ளி, பள்ளிக்கூடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டன.
-யாகோப்பு அடைக்கலம்
- பிரச்சினை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
- டாஸ்மாக் கடையை மூடாமல் இந்த கேட்டை திறக்க முடியாது.
சென்னை:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.
டி.எச்.ரோடு பகுதியில் பள்ளியின் பின்பக்க கேட் உள்ளது. மாணவிகள் பலர் இந்த வாசல் வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். இங்குள்ள பாசுதேவ் தெருவில் பள்ளியில் இருந்து 40 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மாணவிகள் இந்த பகுதி வழியாக செல்லும்போது மது குடித்துவிட்டு வருவோரால் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இங்கு பயிலும் மாணவி இந்த வாசல் வழியே பள்ளி முடிந்து சென்றபோது மதுபோதையில் 4 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர். அந்த மாணவி கொருக்குப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு செல்லும்வரை அந்த வாலிபர்கள் பின்னால் தொடர்ந்து சென்றுள்ளனர். தினமும் பள்ளி முடியும் வேளையில் மாணவிகளிடம் பேசுவதற்காக சில ஆசாமிகள் காத்திருப்பதும், மாணவிகளை பின்தொடர்ந்து செல்வதும் வாடிக்கையாகி உள்ளது.
இந்த பிரச்சினை அதிகமானதால் மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியின் கேட் மூடப்பட்டது. இது மதுப்பிரியர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. ஆனால் மாணவிகள் பிரதான கேட் அமைந்துள்ள டி.எச்.சாலையை எம்.சி.எம்.கார்டன் 1-வது தெருவழியாக 400 மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாக குழுவில் உள்ள அந்த பகுதி வார்டு கவுன்சிலர் ரேணுகா கூறுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. மாணவிகளின் பாதுகாப்பு கருதியே பள்ளியின் பின்பக்க கேட் மூடப்பட்டு உள்ளது. இங்குள்ள டாஸ்மாக் கடையை மூடாமல் இந்த கேட்டை திறக்க முடியாது.
இதுபற்றி மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளிக்கு பின்னால் ஒரு நூலகம் உள்ளது. டாஸ்மாக் கடை இயங்குவதால் பள்ளி நேரத்தில் கூட நூலகத்தில் மாணவிகள் உட்கார முடியவில்லை என்றார். பள்ளி தலைமை ஆசிரியை கோகிலா கிரேஸ் கூறுகையில், டாஸ்மாக் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால்தான் பின்பக்க கேட்டை திறக்க முடியும் என்றார். இதுபற்றி ராயபுரம் எம்.எல்.ஏ. ஆர்.மூர்த்தி கூறுகையில், மாணவிகளுக்கு இடையூறாக இருந்தால் அந்த டாஸ்மாக் கடை மூடப்படும் என்றார்.
- குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு எதுவும் கலக்கப்படவில்லை.
- குடிநீருக்காக வேறு தொட்டி உள்ளது.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த திருவந்தவார் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 96 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த பள்ளிக்கூட்டத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், உத்திரமேரூர் தாசில்தார் ஞானவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர்.
ஆய்வுக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் கலைச்செல்வி மோகன், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு எதுவும் கலக்கப்படவில்லை. பறவைகள் அழுகிய முட்டையை எடுத்து வந்து குடிநீர் தொட்டியில் போட்டு இருக்கலாம். குடிநீருக்காக வேறு தொட்டி உள்ளது. ஆகவே இந்த குடிநீர் தொட்டியை இடித்து விடும்படி கூறியிருக்கிறேன். மேலும் அதே இடத்தில் புதிதாக வேறு ஒரு குடிநீர் தொட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளேன். தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் அதிகாரிகள் முன்னிலையில் மனிதக்கழிவு கலந்ததாக கூறப்பட்ட குடிநீர் தொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது.
- காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெருசலேம்:
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மாதமாக போர் நடந்து வருகிறது. ரபாவிலும் இருதரப்புக்கும் இடையே மோதல் நடக்கிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய காசாவில் உள்ள நுசி ராட்டில் பள்ளிக்கூடத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் உறுதிசெய்துள்ளது.
இதுதொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டு அதை சமாளிக்கப் பொய்க் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருகிறது என தெரிவித்தார்.
- முதல் மாற்றமாக தேர்வுக்கான பாடங்களில் எண்ணிக்கை 6-ல் இருந்து 10-ஆக மாற்றப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மாணவரும் குறைந்த பட்சம் 3 மொழிகளில் பாடங்களை கற்ற வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் உத்திரபிரதேசத்தில் 9, 10- ம் வகுப்பு பாடத்திட்டங்களில் 2025-26-ம் ஆண்டு முதல் சில மாற்றங்களை அந்த மாநில அரசு கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் முதல் மாற்றமாக தேர்வுக்கான பாடங்களில் எண்ணிக்கை 6-ல் இருந்து 10-ஆக மாற்றப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் 3 மொழிகளில் பாடங்களை கற்ற வேண்டும் என அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாரியத்துடன் தொடர்புடைய 27 பள்ளிகளில் 9, 10-ம் வகுப்புகளில் படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு இந்த திட்டம் படிபடியாக செயல்படுத்த அனைத்து பங்குதாரர்களிடம் வாரியம் ஜூன் 29-ந் தேதிக்குள் ஆலோசனைகளை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.
அதிகாரிகளின் அறிக்கைப்படி, 2025-26 முதல் 9-ம் வகுப்பிலும், 2026-27 முதல் 10-ம் வகுப்பிலும் மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். இந்த கொள்கையில் கீழ், அனைத்து மாணவர்களுக்கும் ஹிந்தி கட்டாயமாக இருக்கும்.
கூடுதலாக, மாணவர்கள் சமஸ்கிருதம், குஜராத்தி, உருது, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, அஸ்ஸாமி, ஒரியா, கன்னடம், காஷ்மீரி, சிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், நேபாளி, பாலி, அரபு, பாரசீகம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இரண்டு மொழிகளைத் தேர்வு செய்வார்கள்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களும் கட்டாயப் பாடங்களாக இருக்கும் என்று உத்தரப் பிரதேச வாரியச் செயலர் திவ்யகாந்த் சுக்லா தெரிவித்தார்.
வீட்டு அறிவியல், மானுடவியல், வணிகம், என்சிசி, கணினி, வேளாண்மை அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றிலிருந்து ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கலைக் கல்வித் துறையில் ஓவியம், இசை, பாடுதல் அல்லது இசை வாசித்தல் ஆகியவை அடங்கும்.
உடற்கல்வி மற்றும் சுகாதாரக் கல்வியில் நீதிநெறி கதைகள், யோகா, விளையாட்டு மற்றும் உடற்கல்வி மற்றும் சமூகப் பயனுள்ள உற்பத்திப் பணிகள் ஆகியவை அடங்கும். தொழிற்கல்விக்கு, மாணவர்கள் 31 பாடங்களில் இருந்து தேர்வு செய்யலாம்.
30 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், உடற்கல்வி, கலை, தொழிற்கல்வி ஆகிய பாடங்களில் 70 மதிப்பெண்களுக்கு உள்மதிப்பீடும் நடத்தப்படும். மற்ற பாடங்களுக்கு 80 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், 20 மதிப்பெண்களுக்கு உள்மதிப்பீடும் இருக்கும்.
உயர்நிலைப் பள்ளி மதிப்பெண் பட்டியலின் மொத்த மதிப்பெண்கள், முந்தைய 600 மதிப்பெண்களிலிருந்து இப்போது 1,000 ஆக இருக்கும். ஒவ்வொரு பாடத்திற்கும் 100 மதிப்பெண்கள், இறுதித் தேர்வுக்கு 80 மதிப்பெண்கள் மற்றும் உள் மதிப்பீட்டிற்கு 20 மதிப்பெண்கள்.
புதிய பாடத்திட்ட மாற்றங்களுடன் தர நிர்ணய முறை அறிமுகப்படுத்தப்படும். மேலும் வினாத்தாள் வடிவமும் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து, மடிக் கணினிகளை வழங்கினார்.
- நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 264 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள், 12 ஆய்வகக் கட்டிடங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதில் பள்ளிக்கல்வித் துறையில் 114 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் 26 மாவட்டங்களில் உள்ள 106 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 515 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 12 ஆய்வகக் கட்டிடங்கள்;
தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் குழந்தை நேய வகுப்பறை கட்டும் திட்டத்தின் கீழ், 68 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் 25 மாவட்டங்களில் உள்ள 176 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் கட்டப்பட்டுள்ள 441 வகுப்பறை கட்டிடங்கள்;

தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் இயங்கி வரும் 28 தகைசால் பள்ளிகளில் 61 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் ஆகியவை அடங்கும்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று, சென்னை, ஐ.ஐ.டியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஆதிதிராவிடர் நல மேல் நிலைப் பள்ளி மாணவர் சி. பார்த்தசாரதி, திருச்சி என்.ஐ.டியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள சேலம் மாவட்டம், கரியகோவில் வலவு, அரசு பள்ளி மாணவி சுகன்யா, திருச்சி சின்ன இலுப்பூர், அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி ரோகிணி, சட்ட பல்கலைக் கழகத்தில் பயில தேர்ச்சி பெற்றுள்ள மாணவர் அஜய், தரமணி பேஷன் டெக்னாலஜியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள புளியம்பட்டி மாணவியர் மீனா மற்றும் எஸ். துர்கா, மணியார்பாளையம், அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி பழனியம்மாள் மற்றும் மாணவர் கே. தவமணி, ஆகிய 8 மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து, மடிக் கணினிகளை வழங்கினார்.

சிறைகள் மற்றும் சீர் திருத்தப் பணிகள் துறையின் சார்பில் 9 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள கிளைச் சிறைக் கட்டடம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும்
நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- பள்ளிக்கூட நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- இந்த நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.
அபுஜா:
நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணம் பசொரன் நகரில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆண்டு நிறைவையொட்டி அந்தப் பள்ளிக்கூடத்தில் நேற்று கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க மாணவ, மாணவியரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். நிகழ்ச்சியின்போது பரிசு பொருட்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் நிகழ்ச்சியைக் காணவும், பரிசுப்பொருட்களை வாங்கவும் பள்ளிக்கூடத்தில் கூட்டம் குவிந்தது. எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்வு முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான பள்ளிக்கூடம் உள்ளது.
கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளி, 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறது. இந்த பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்வு முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பினர்.
எனினும் ஒரு சில மாணவர்கள் பள்ளியில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இந்த பள்ளிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 10 பேர் பலியானார்கள். அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.