என் மலர்
நீங்கள் தேடியது "ராஜ்நாத்சிங்"
- இரு நாடுகள் இடையேயான மோதலுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
- கதிரியக்க ஆயுதங்களை பயன்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரானது.
ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷோய்க்-குடன், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, உக்ரைனில் தற்போதைய நிலைமை குறித்து இரு மந்திரிகளும் விவாதித்தனர்.
அழிவை ஏற்படுத்தும் குண்டுகள் மூலம் ஆத்திரமூட்டும் செயல்களில் உக்ரைன் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷோய்க் அப்போது மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தார். இரு நாடுகள் இடையேயான மோதலுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
மேலும் போரில் கதிரியக்க ஆயுதங்களை பயன்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரானது என்பதால், இரு நாடுகளும் அணு ஆயுதங்கள் உள்பட பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்த கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு மந்திரிகளும் தொடர்ந்து ஒத்துழைப்பில் இருக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
- எல்லைப் பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
- அரசின் முயற்சிகள் காரணமாக லடாக்கில் அமைதி மற்றும் முன்னேற்றத்தை காண முடிகிறது.
நாட்டின் எல்லையில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் அமைப்பான பி.ஆர்.ஓ 75 உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளது. 45 பாலங்கள், 27 சாலைகள், 2 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் உள்ளிட்ட 75 திட்டங்கள், அருணாச்சலப்பிரதேசம் உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நிறைவு பெற்ற இந்த திட்டங்களை லடாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்ய எல்லைப்பகுதிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது.
இந்த புதிய 75 திட்டங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் சுதந்திரத்திற்கு பின்னர் பல ஆண்டுகளாக உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை. அங்கு பயங்கரவாதம் அதிகரிக்க இதுதான் காரணம். இந்த இடையூறுகள் காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்து லடாக் பாதிக்கப்பட்டது.
இந்த பாதிப்பு நாடு முழுவதும் எதிரொலித்தது. இப்போது அரசின் முயற்சிகள் காரணமாக அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய புதிய உதயத்தை இங்கு காண முடிகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சியை தொடர்வதே மத்திய அரசின் நோக்கம்.
நாட்டின் அனைத்து தொலை தூரப்பகுதிகளையும் பிற பகுதிகளுடன் விரைவில் இணைப்பதன் மூலம் நாட்டுக்கு புதிய உச்சத்தையும், முன்னேற்றத்தையும் அளிக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்புக்கு இடையேயான இடைவெளி குறைந்து வருகிறது.
- சில நாடுகளின் உத்தரவுகளை இந்தியா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.
தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியின் 60வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங், பயிற்சி முடித்த இந்திய முப்படை அதிகாரிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பட்டங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மோடி தலைமையிலான மத்திய அரசு, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக மக்களின் விருப்பங்கள் பாதுகாக்கப்படும்போதுதான், நாடு முழு வல்லமை பெற்றதாக மாறும் என்பதைக் கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுப்புக்கு இடையிலான இடைவெளி குறுகி வரும் நிலையில், கால மாற்றத்திற்கு ஏற்ப நாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் புதிய வடிவம் பெற்றிருக்கிறது. உள்நாட்டு தீவிரவாதம், தற்போது வெளிநாட்டில் பயிற்சி பெறுவது, நிதி திரட்டுவது, ஆயுதங்களை விநியோகிப்பது போன்றவற்றை மேற் கொள்கின்றன.

சைபர் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் மாபெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன. இவற்றால் எரிசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்டத் துறைகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ரஷியா- உக்ரைன் இடையேயான போர் குறித்த தகவல்களை, சமூக வலைதளங்களும், இதர ஆன்லைன் தகவல் பரிமாற்ற தளங்களும், தங்கள் கண்ணோட்டத்தில் வெளியிட்டு வருவது புதிய தகவல் போராக மாறி விட்டது.
சைபர் குற்றங்கள், சமூக வலைதளங்களின் தகவல் போர் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க சர்வதேச சமுதாயம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகளை ஆதிக்கம் செலுத்தும் சில நாடுகளின் உத்தரவுகளை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அனைத்து நாடுகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, சமமாக நடத்துவதுதான் இந்தியாவின் நீதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஜி-20 அமைப்பின் லோகோவில் தாமரை மலர் இருப்பது இந்திய கலாச்சாரத்தின் அடையாளம்.
- தேச நலன்களைப் பாதுகாப்பதே மோடி அரசின் முக்கிய நோக்கம்.
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது: இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாம் அமைதியை நம்புகிறோம், ஆனால் யாரேனும் நமக்குத் தீங்கு விளைவிக்க முயன்றால், நாம் தக்க பதிலடி கொடுப்போம். நமது வீரர்கள் இதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
2016-ல் சர்ஜிகல் தாக்குதல், 2019 பாலகோட் வான் வழித் தாக்குதல் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது வீரர்கள் காட்டிய வீரம் ஆகியவை நமது வலிமை மற்றும் தயார் நிலைக்கு சான்றாகும். தேச நலன்களைப் பாதுகாப்பதே மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.எதிர்கால சவால்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க ராணுவம் அதிநவீன ஆயுதங்களுடனும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடனும் தயாராக இருக்கிறது.
அடுத்த ஆண்டு இந்தியா தலைமையில் நடைபெறும் ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டிற்காக அண்மையில் பிரதமரால் வெளியிடப்பட்ட லோகோவில் தாமரை மலர் இருப்பது இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் ஆகும். இந்தியாவின் தேசிய மலர் தாமரை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வலுவான இந்தியாவுக்கு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும்.
- இந்திய ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கு இளைஞர்களின் சிறந்த அறிவாற்றலே காரணம்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மணிப்பால் உயர் கல்வி அகாடமியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் இளைஞர் சக்தியை உலகம் அங்கீகரித்துள்ளது. கூகுள், மைக்ரோசாஃப்ட், அடோப், ஐபிஎம் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியர்களுக்கு மிக நல்ல வாய்ப்புகளை வழங்கி பணியமர்த்தி உள்ளன. பிரதமர் மோடியின் கனவான வலுவான மற்றும் தற்சார்புள்ள இந்தியாவுக்கு புதிய தொழில்நுட்பங்களை இளைஞர்கள் கண்டுபிடித்து உருவாக்க வேண்டும்.
இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழலியல் வளர்ச்சி அடைந்துள்ளது. இளைஞர்களின் சிறந்த அறிவாற்றலாலேயே இது சாத்தியமாகி உள்ளது. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு 400 முதல் 500 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்தன, தற்போது அதன் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அவற்றில் 100-க்கும் மேற்பட்டவை உலக அளவில் அதிக முதலீடு தொழில்களாக மாறியுள்ளன.
புத்தகங்களிலிருந்து அறிவை பெற்றால் போதும் என்று மட்டும் நினைக்க கூடாது. அறிவாற்றலை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே நாட்டை புதிய உச்சங்களுக்கு எடுத்து செல்ல முடியும். அறிவியல், பொருளாதாரம், நிர்வாகம் என பல துறைகளில் இந்தியா முன்னோடியாக திகழ்ந்துள்ளது. அந்நிய படையெடுப்புகளால் அவை மறைந்தன.
கடந்த காலங்களை தெரிந்து கொண்டு நமது வளம் மிக்க கலாச்சார பாரம்பரியங்களிலிருந்து மாணவர்கள் பலவற்றை கற்று கொள்ள வேண்டும். நமது பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்துக்காகவும் நமது கடந்த கால பெருமையை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
பாரம்பரிய மற்றும் நவீன அறிவாற்றலை வழங்கி இளையதலைமுறையை சிறந்த குடிமக்களாக மாற்றும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்கு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
- கம்போடியா பிரதமரையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9வது வருடாந்திர கூட்டத்தை கம்போடியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு கம்போடியா துணைப் பிரதமரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பின் பேரில், பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக நாளை மறுநாள் கம்போடியா செல்கிறார்.
23ந் தேதி ஆசியான் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். மேலும் கம்போடியா பிரதமரையும் ராஜ்நாத்சிங் சந்திக்கிறார். ஆசியான் நாடுகளின் கூட்டம் மற்றும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் தவிர, பாதுகாப்பு அமைச்சர்களுடன் இருதரப்பு விவாதங்களையும் அவர் நடத்துகிறார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ராஜ்நாத் சிங் விவாதிக்க உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொடிநாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக உதவி செய்ய வேண்டும்.
- ஓய்வு பெறும் இளம் ராணுவ வீரர்களுக்கு தனியார் நிறுவனங்கள் உதவ வேண்டும்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை சார்பில் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்காக, http://www.affdf.gov.in/என்ற புதிய இணையதளத்தை அறிமுகம் செய்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
சுதந்திரம் முதல், போர்களில் வெற்றி பெறுவது, எல்லைகளில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதிலும் நமது வீரர்கள் ஏராளமானோர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். பலர் உடல் ஊனமுற்றனர். எனவே நமது வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவளிப்பது நமது தலையாய கடமை. எல்லைகளில் எப்போதும் விழிப்புடன் இருக்கும் நமது துணிச்சலான ராணுவ வீரர்களால் தான், அச்சமின்றி நாம் நமது இல்லங்களில் நிம்மதியாக உறங்க முடிகிறது.
நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவ வீரர்களின் நலனில் அக்கறை கொள்வது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, அது அனைவரின் கடமை. தேச பாதுகாப்பு வலுவாக இல்லாமல், எந்த ஒரு நாட்டிலும் தொழில்துறைகளும், வர்த்தகமும் வளர முடியாது. என்று தெரிவித்தார். ராணுவ வீரர்களின் நலனுக்காக பெரும் நிறுவனங்கள் வழங்கி வரும் நன்கொடையை மேலும் அதிகரிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் இளம் வயதில் சுமார் 60,000 ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு தனியார் துறையினர் வேலை வழங்க வேணடும். ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தேசியப் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.
- ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் மற்றும் ஆயுதங்கள் மூலம், நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாக்க ஏதுவாக இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் தயாராகி வருகிறது. தேசியப் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையைப் பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா இயக்கம் மூலம் உரிய நேரத்தில் ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணுவ தளவாட இறக்குமதியைக் குறைக்கும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
ராணுவ கப்பல் கட்டும் தளங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் தளங்களாக மாறியிருக்கின்றன. கடந்த 2021-2022ம் ஆண்டு ரூ.8,925 கோடியாக இருந்த கப்பல் கட்டும் தளங்களின் உற்பத்தி , நடப்பு ஆண்டில் ரூ.81,777 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய கப்பல்கட்டும் தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தரமான பணிகளை நட்பு நாடுகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சீன வீரர்களின் அத்துமீறலை முறியடித்த இந்திய ராணுவ வீரர்களின் வீரம் பாராட்டுக்குரியது.
- பிரதமர் மோடியின் தலைமையில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியாக இருந்தாலும் சரி, தவாங் பகுதியாக இருந்தாலும் சரி, சீன ராணுவத்திற்கு எதிராக நமது ராணுவ வீரர்கள் வெளிப்படுத்திய வீரத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என்று தெரிவித்தார்.
சீனாவுடனான எல்லை விவகாரத்தில் மத்திய அரசு குறித்த ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த அவர், யாருடைய நோக்கத்தையும் எப்போதும் அவர் சந்தேகிப்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை என்று கூறினார். நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சி தலைவரின் நோக்கத்தை கேள்வி கேட்டதில்லை என்றும், கொள்கையின் அடிப்படையில் மட்டுமே விவாதித்தோம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
உண்மையின் அடிப்படையில்தான் அரசியல் இருக்க வேண்டும், பொய்யின் அடிப்படையில் நீண்ட காலமாக அரசியல் செய்ய முடியாது, சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும் செயல்முறையே சரியான அரசியல் ஆகும் என்றும் ராகுல்காந்தியின் விமர்சனத்திற்கு அவர் பதில் அளித்தார்.
உலக நன்மை மற்றும் செழுமைக்காகவே இந்தியா வல்லரசாக மாற விரும்புகிறது, இதனால் உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம் என்று ஒருபோதும் யாரும் கருதக் கூடாது என்றும் மத்திய மந்திரி குறிப்பிட்டார். எந்த ஒரு நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட கைப்பற்றும் எண்ணம் இந்தியாவிற்கு கிடையாது, பிரதமர் மோடி தலைமையில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது என்றும் மத்திய மந்திரி ராஜ்நாத் தெரிவித்தார்.
- ஐ.என்.எஸ். மொர்முகோவ் போர்க்கப்பல் கடற்படையில் இணைந்தது.
- இந்த கப்பலில் உள்ள உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை.
மும்பைக் கடற்படைத் தளத்தில் இன்று மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ். மொர்முகோவ் என்ற போர்க்கப்பல், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள 2-வது போர் கப்பல் என்ற பெருமையை அது பெற்றது.

விழாவில் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளதாவது: இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதுடன், கடல் பாதுகாப்பை உறுதி செய்யும். தொழில்நுட்ப ரீதியிலான அதிநவீன ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை. இந்திய ராணுவம் தற்சார்பு நிலையை அடைவதற்கு இது உதாரணம்.

இந்தியக் கடற்படை, கடல்சார் பாதுகாப்பைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார வளர்ச்சியிலும் பங்காற்றுகிறது. இந்திய கடல் பிராந்தியத்தைப் பாதுகாப்பதே, இந்தியக் கடற்படையின் முக்கிய இலக்கு. இந்திய பொருளாதார வளர்ச்சி கடல் மார்க்கமாக அதிகரிக்கும் வர்த்தகத்தைச் சார்ந்தே இருக்கிறது.
எல்லைப்பகுதிகளையும், கடலோரப் பகுதிகளையும் பாதுகாக்கும் ஆயுதப்படையினர், தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடியப் பங்களிப்பின் மூலம், இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்கிறது. ராணுவத்தில் பெரும்பாலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது.
- நாட்டின் எல்லைகளை துணிச்சலுடன் ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
கேரள மாநிலம் சிவகிரி மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது:
தற்சார்பு என்பது இந்திய கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதி. தற்சார்பு தொடர்பான தகவல்களை நாராயண குரு பரப்பினார். தற்போது அந்தப் பணியை சிவகிரி மடமும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. நாராயண குரு, பழங்கால கலாச்சாரம் மற்றும் நவீனத்திற்கு இடையே சமநிலையைப் பராமரித்தார். இது தற்போதும் நாட்டுக்கு பொருத்தமாக உள்ளது.

கல்வி, தூய்மை போன்ற விஷயங்களில் பொதுமக்கள் மத்தியில் நாராயண குரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது அவரது தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுகிறது. இந்த விஷயங்களில் அரசும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமத்துவம், விடுதலை மற்றும் சகோதரத்துவம் ஆகியவை மேற்கத்திய தத்துவம் என கருதப்படுகிறது.
உண்மையில் இவை பழங்கால இந்திய இலக்கியங்கள் மற்றும் பாரம்பரியத்தில் காணப்படுகிறது. வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்டவற்றில் சமத்துவம் மற்றும் ஒற்றுமை குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு தற்சார்பு கொள்கையை ஊக்குவிப்பதன் காரணமாகவே ராணுவ பலம் அதிகரித்து வருகிறது. இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது.உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தற்போது திகழ்கிறது. நாட்டின் எல்லைகளை துணிச்சலுடனும் தைரியத்துடனும் ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தியது.
- லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
லடாக்:
1999-ம் ஆண்டு லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் வீர தீரத்துடன் போரிட்டனர்.
இதில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதையொட்டி ஆண்டு தோறும் ஜூலை 26-ந்தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 24-வது கார்கில் வெற்றி தினம் (கார்கில் விஜய்திவாஸ்) நாட்டின் பல பகுதிகளில் இன்று கடைபிடிக்கப்பட்டது.
லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் திராஸ் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அப்போது ராஜ்நாத்சிங் பேசியதாவது:-
கார்கில் போர் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது. பாகிஸ்தானால் முதுகில் குத்தப்பட்டோம். நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த எங்கள் துணிச்சலான மகன்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.
எப்போதெல்லாம் போர் சூழல் ஏற்பட்டாலும் பொது மக்கள் எப்போதும் படைகளுக்கு ஆதரவு வழங்கினாலும் அந்த ஆதரவு மறைமுகமாகவே இருந்துள்ளது. தேவை ஏற்பட்டால் நேரடியாக போர்க்களத்தில் படையினருக்கு ஆதரவளிக்க பொது மக்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காக்க நாம் எந்த எல்லைக்கும் செல்லலாம். எல்லை கோட்டை கடப்பது அதில் அடங்கும் என்றால் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.