search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது போதை"

    • போதையில் இருந்த பணியாளர் கடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
    • பொதுமக்களுக்கு பொருட்கள் எதுவும் வழங்காமல் போதையில் படுத்து உறங்கிவிட்டார்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 22-வது வார்டுக்கு உட்பட்ட சொர்ணநாதன் தெரு பகுதியில் அமுதம் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

    இந்த கடையில் நித்திய ராஜ் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே நித்தியராஜ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமான போதையில் கடைக்கு பணிக்கு வந்துள்ளார். மேலும் அவர் பொதுமக்களுக்கு பொருட்கள் எதுவும் வழங்காமல் போதையில் படுத்து உறங்கிவிட்டார்.

    நியாய விலை கடைக்கு ரேசன் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பல முறை அழைத்தும் அவர் எழுந்திருக்கும் நிலையில் இல்லை. இச்சம்பவம் அறிந்த நகர் மன்ற உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    புகார் கூறப்பட்ட ஊழியர் நித்தியராஜ் பல மாதங்களாக ரேசன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் தரக்குறைவாக நடந்து வந்துள்ளார். இதையடுத்து உடனடியாக போதையில் இருந்த பணியாளர் கடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    இதுகுறித்து செய்தி வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. தகவல் அறிந்த தமிழ் நாடு குடிமைப்பொருள் விநியோக மண்டல மேலாளர் அருண் பிரசாத் விசாரணை நடத்தி பணி நேரத்தில் போதையில் தூங்கிய நியாய விலைக் கடை ஊழியர் நித்தியராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • போதையில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
    • நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே நேற்று நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் தலையில் ரத்தக்காயங்களுடன் வந்த வாலிபர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து தொந்தரவு செய்தார்.

    அவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் மது போதையில் நிதானமற்ற வகையில் காணப்பட்டார். போதையில் வரும் வழியில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த வாலிபருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.

    அவர் சீருடையில் இருந்த போலீசாரிடம் சென்று, தன்னை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனவே உடனடியாக போலீசாரை இங்கு வரச்சொல்லுங்கள் என்று கூறி அதிரடி காட்டினார். இதனால் போலீசார் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் தலையில் ரத்தக்காயத்துடன் இருந்த அந்த வாலிபரை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.

    மேலும் போலீசாரை அவர் ஒருமையிலும் பேசினார். பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு அந்த நபரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பெறாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வாலிபர் யார் என்பது குறித்தும், அந்த வாலிபருக்கு தலையில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இரண்டு ஆண்டுகளாக அந்தப் பெண் கடுமையான பகல்நேர தூக்கம் மற்றும் மந்தமான பேச்சு ஆகியவற்றால் அவதிப்பட்டார்.
    • சமீப ஆண்டுகளில், மத நம்பிக்கையின் காரணமாக அவர் குடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

    கனடாவை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு ப்ரூவரி சிண்ட்ரோம் நோய் இருப்பதை டொராண்டோ பல்கலைக்கழகம் மற்றும் மவுண்ட் சினாய் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

    இது குடல் பூஞ்சை நொதித்தல் மூலம் மதுவை உருவாக்கும் ஒரு அரிய வகை நோய் ஆகும். இது அவரது குடலில் ஆல்கஹாலை உற்பத்தி செய்கிறது. குடிபோதையில் இல்லை.

    இரண்டு ஆண்டுகளாக அந்தப் பெண் கடுமையான பகல்நேர தூக்கம் மற்றும் மந்தமான பேச்சு ஆகியவற்றால் அவதிப்பட்டார், மேலும் மது அருந்தாமல் இருந்தபோதிலும், இரத்தத்தில் ஆல்கஹால் அளவு மற்றும் அவரது சுவாசத்தில் ஆல்கஹால் அதிகரித்தது.

    அந்த பெண் குடிக்கவில்லை என்று கூறினாலும் டாக்டர்கள் அதை நம்ப மறுத்தனர்.

    இதை தொடர்ந்து அவருக்கு கடந்த 5 ஆண்டுகளில், அவருக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) இருந்தன, இதற்கு புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்களான சிப்ரோஃப்ளோக்சசின் மற்றும் நைட்ரோஃபுரான்டோயின், அத்துடன் இரைப்பை குடல் ரிஃப்ளக்ஸ் நோய், டெக்ஸ்லான்சோபிரசோல் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது.

    முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பாள்; இருப்பினும், சமீப ஆண்டுகளில், மத நம்பிக்கையின் காரணமாக அவர் குடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

    அவர் இதுவரை ஏழு முறை அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றிருக்கிறார். இது மருத்துவர்களிடையே நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாததை காரணம் என கூறுகின்றனர்.

    தற்போது அந்த பெண் பூஞ்சை காளான் மருந்துகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்.

    "நீரிழிவு நோய், கல்லீரல் நோய், குடல் டிஸ்மோட்டிலிட்டி கோளாறுகள் மற்றும் அழற்சி குடல் நோய் போன்ற நோய்கள் ஆட்டோ ப்ரூவரி சிண்ட்ரோமுடன் தொடர்புடையவை" என்று ஆய்வு காட்டுகிறது.

    • ஆத்திரம் தீராத மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் உடல் மீது தூவினார்.
    • சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகரை சேர்ந்தவர் ஹேமந்த் (வயது 39). இவர் அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரோஹிதி. தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக ஹேமந்த் மது போதைக்கு அடிமையாகியதால் வேலையை விட்டு நின்றார். மேலும் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

    இதனால் கணவரை தீர்த்துக்கட்ட ரோஹிதி முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு ஹேமந்த் மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து ரோஹிதி தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களான சாய்கிரன் மற்றும் நவீனுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வழைத்தார்.

    நண்பர்கள் வீட்டிற்கு வந்ததும் கணவரின் ஆடைகளை கழற்றி விட்டு தூணில் கயிற்றால் கட்டினார். பின்னர் வெந்நீரை கொதிக்க வைத்து கணவர் உடல் மீது ஊற்றினார்.

    இதனால் ஹேமந்த் வலியால் அலறி துடித்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் உடல் மீது தூவினார். பின்னர் கட்டையை எடுத்து வந்து கணவரின் தலை மீது தாக்கினார். இதில் ஹேமந்த் படுகாயம் அடைந்தார்.

    தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ரோஹிதியின் நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்த ரோஹிதி கணவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஹிதி மற்றும் அவரது நண்பர்கள் சாய் கிரண், நவீன் ஆகியவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது.
    • மது போதையில் ஆற்றில் தவறி ஆற்றில் விழுந்தது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சுற்றுலா மாளிகை அருகே ஓடும் புது ஆற்றங்கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் இறந்து கிடந்தவர் தஞ்சை வண்டிக்கார தெருவை சேர்ந்த மணவாளன் (வயது 45 ) என்பதும் , கோவையில் வெல்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் தீபாவளி பண்டிகைக்காக மணவாளன் தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.

    அப்போது படித்துறையில் இருந்து மது அருந்தி உள்ளார். போதை அதிகமாகவே தவறி ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்தது தெரியவந்தது.

    • சுப்பையா பாண்டியன் ரெயிலில் தகராறு செய்தது குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
    • மதுரை ரெயில் நிலையத்தில் காத்திருந்த ரெயில்வே போலீசார் சுப்பையா பாண்டியனை ரெயிலில் இருந்து இறக்கி அழைத்து சென்று விசாரித்தனர்.

    விருதுநகர்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன்(வயது 35). சென்னையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை செல்வதற்காக சங்கரன் கோவில் ரெயில் நிலையத்திற்கு தனது நண்பர் அருண்(34) என்பவருடன் வந்தார். அங்கு வந்த செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருவரும் ஏறினர். இவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்தபோது பரிசோதகர் சுப்பையா பாண்டியனிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது அவர் தான் ஆயுதப்படை காவலர் என்பதற்கான விவரங்களை தெரிவித்துள்ளார். பின்னர் அருணிடம் பரிசோதகர் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் டிக்கெட் இல்லை. அவரிடம் பயணச்சீட்டு எடுக்குமாறு பரிசோதகர் கூறி உள்ளார். ஆனால் சுப்பையா பாண்டியன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். இருவரும் மது போதையில் இருப்பதை உணர்ந்து கொண்ட பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தார். அவர்களும் வந்து சுப்பையா பாண்டியனிடம் சமாதானமாக பேசி அருணுக்கு டிக்கெட் வாங்குமாறு கூறி உள்ளனர்.

    ஆனால் சுப்பையா பாண்டியன் அவர்களிடமும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அருணை ரெயிலில் இருந்து இறக்கி அழைத்து சென்று விசாரித்தனர். சுப்பையா பாண்டியன் தொடர்ந்து பயணம் செய்தார். இதற்கிடையே சுப்பையா பாண்டியன் ரெயிலில் தகராறு செய்தது குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    மதுரை ரெயில் நிலையத்தில் காத்திருந்த ரெயில்வே போலீசார் சுப்பையா பாண்டியனை ரெயிலில் இருந்து இறக்கி அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அபராதம் விதித்தனர். அவரது நண்பர் அருண் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

    எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் முன்னிலையில் போலீஸ்காரர், டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரெயில்வே போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாகன சோதனையில், மது போதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குடிபோதை வழக்குகள் பதிவு
    • மொத்தம் ரூ.98,500 அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்

    குளச்சல் :

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு தங்கராமன் அறிவுரைப்படி குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், சிதம்பரதாணு, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் கள் சுரேஷ்குமார், பாலசெல்வன் உள்ளிட்ட போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    கடந்த 4 நாட்களில் குளச்சல், கருங்கல், இரணியல், தோட்டியோடு பகுதியில் நடத்திய வாகன சோதனையில், மது போதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குடிபோதை வழக்குகள் பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மது குடித்து வாகனம் ஓட்டிய டிரைவர்கள், இரணியல் குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி அமீர்தீன் முன்பு ஆஜர் செய்யப்பட்டனர். அவர், வழக்குகளை விசாரித்து, குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கு அபராதம் விதித்தார். மொத்தம் ரூ.98,500 அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்

    • பொதுமக்கள் தங்களை சுற்றி வளைத்து தாக்க தொடங்கிய பின்னரும் போதை வாலிபர்களின் அட்டூழியம் அடங்கவில்லை.
    • மூவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க முடிவு செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அம்பத்தூர்:

    சென்னை, திருமங்கலத்தை அடுத்த பாடி புதுநகர் வளையாபதி சாலையில் நேற்று மாலையில் 3 வாலிபர்கள் திடீரென மது போதையில் ரகளையில் ஈடுபட்டனர்.

    அளவுக்கதிகமாக மது குடித்திருந்த 3 பேரும் போதை தலைக்கேறிய நிலையில் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து உடைத்தனர்.

    ரோட்டோரமாக நிறுத்தப் பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி உடைத்தார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களும், பொதுமக்களும் போதை வாலிபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது தங்களை பிடிக்க வந்தவர்களை அவர்கள் தாக்கினர்.

    இதனை மாடியில் நின்று பார்த்த பெண்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தபடியே கூச்சல் போட்டனர். போதை வாலிபர்களை விரட்டிய தங்கள் பகுதி வாலிபர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 'அப்படித்தான் போடுடா...' என்றும் குரல் எழுப்பினர். பொதுமக்கள் தங்களை சுற்றி வளைத்து தாக்க தொடங்கிய பின்னரும் போதை வாலிபர்களின் அட்டூழியம் அடங்கவில்லை. அவர்கள் விடாமல் ரகளை செய்தனர். இதையடுத்து பொதுமக்களில் சிலர் தங்களது தாக்குதலை வேகப்படுத்தி 3 பேரையும் நைய புடைத்தனர். இதனால் வலி தாங்காமல் அலறி துடித்த 3 பேரும் அண்ணா விடுங்கண்ணா... என்று புலம்பியபடியே வாயில் ரத்தம் வழிந்தோடிய நிலையில் கையெடுத்து கும்பிட்டனர்.

    இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போதை வாலிபர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து அவர்களது சட்டையை கழற்றினர். பின்னர் அதை வைத்து 3 பேரின் கைகளையும் பின்னால் கட்டி ரோட்டில் உட்காரவைத்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 போதை வாலிபர்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். 3 வாலிபர்களும் சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு போதையில் எல்லை மீறி தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மூவரும் சிறுவர்கள் என்பதால் அவர்களது பெற்றோரை வரவழைத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று போதை தெளிந்ததும் வாகனங்களை அடித்து உடைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்த வழக்கில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மூவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க முடிவு செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலை குப்புற கவிழ்ந்தது.
    • அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு நோயாளி மற்றும் அவரது உறவினரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்றது. இதனை செந்தில் (38) என்பவர் ஓட்டி சென்றார். இவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காரைக்கால் அருகே மேலகாசாக்குடி சாலை வளைவில் ஆம்புலன்ஸை திருப்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலை குப்புற கவிழ்ந்தது. மது போதையில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    அவ்வழியே சென்றவர்கள் ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த நோயாளியையும், அவரது உறவினரையும் மீட்டு, வேறொரு வாகனத்தில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காரகை்கால் நகர போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர் செந்திலை தேடி வருகின்றனர்.

    • கடுப்பான போலீசார் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
    • மணிகண்டன் மீது ஆயுதங்கள் வைத்து ரகளையில் ஈடுபட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    திண்டிவனம் ஏரிக்கரையோரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தனது 6 நண்பர்களுடன் புதுச்சேரி எல்லை பகுதியான சேதராப்பட்டில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்தியுள்ளனர்.

    அப்போது உச்சகட்ட மது போதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மணிகண்டன் தன்னுடன் வந்த நண்பர்களை விரட்டி, விரட்டி சரமாரியாக தாக்கினார். இதனால் அவருடன் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். ஒருவர் மணிகண்டனிடம் வசமாக சிக்கிக்கொண்டார். அவரை மணிகண்டன் பீர் பாட்டிலால் தலையில் தாக்கினார்.

    அடி வாங்கிய நண்பர் அவரை விட்டு செல்லாமல் வாடா பிரச்னை ஆகப்போகுது எனக்கூறி அழைத்து செல்கிறார். பின்னர் மணிகண்டன் தன் சட்டையை கழற்றி நண்பரின் தலையில் அமுக்கி அழைத்து செல்கிறார்.

    இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கே மதுபானம் அருந்தி கொண்டிருந்தவர்களை பார்த்து சண்டைக்கு வாடா.. நீ வேண்ணுனா.. வந்து பார்ரா என அவ்வழியே செல்பவர்களை வடிவேலு பாணியில் அழைத்தவாறு ஆபாச வார்த்தைகளால் அர்சித்தவாறு சென்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சேதராப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த மணிகண்டனை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.

    நீங்கள் காக்கி சட்டை அணிந்திருக்கிறீர்கள், எந்த கம்பெனி செக்யூரிட்டி? எனக்கூறி தொப்பியை தட்டு விட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    மேலும் நான் யாருனு தெரியுமா? என போலீசாரை தள்ளிவிட்டுள்ளார். இதில் கடுப்பான போலீசார் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.

    மேலும் அவரிடம் அடி வாங்கி ஓட்டம் பிடித்த நண்பர்கள் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. போலீஸ் நிலையத்தில் வைத்து, மணிகண்டனிடம், வந்த இடத்தில் ஒழுங்கா குடி, இல்லாவிட்டால் தர்ம அடிதான் என அறிவுரை வழங்கினர். தொடர்ந்து மணிகண்டன் மீது ஆயுதங்கள் வைத்து ரகளையில் ஈடுபட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • பொறுமை இழந்த சில பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி ரகளை ஈடுபட்ட வாலிபரை கண்டித்தனர்.
    • பேருந்தை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பேருந்து பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரம் கல்லாத்தூர் இடையே சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் அந்த பேருந்தை வழி மறித்தார். தனது மோட்டார் சைக்கிளை அந்த பஸ்ஸின் முன்பு குறுக்கே நிறுத்தி அவர் டிரைவரை தகாத வார்த்தைகள் திட்டி ரகளையில் ஈடுபட்டார்.

    இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் செய்வதறியாமல் தவித்தனர். பின்னர் பொறுமை இழந்த சில பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி ரகளை ஈடுபட்ட வாலிபரை கண்டித்தனர். இதனால் அடி விழக்கூடும் எனக் கருதிய அந்த வாலிபர் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றார். இந்த சம்பவத்தால் அந்த அந்த பேருந்து சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    பேருந்தை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பேருந்து பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுப்பழக்கத்தால் நாளடைவில் உடல் தளர்ந்து, மன அழுத்தம் ஏற்பட்டு வாழ்க்கையை வீணடிக்கும் நிலை ஏற்படுகிறது.
    • மகள் முன்பு மது குடித்த அந்த ஆசாமி நாளடைவில் மனைவிக்கும் மது பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது.

    மதுரை:

    'மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு' என்ற விழிப்புணர்வு வாசகம் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டிருப்பதை காணலாம். அதனை பார்த்துக் கொண்டே நாள்தோறும் ஏராளமான கடந்து செல்கின்றனர். மதுவினால் நாடும்... வீடும்... எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என்பதை யோசிப்பதற்கு யாருக்கும் நேரம் இல்லாமல் ஓடுகிறோம்.

    இன்றைய நவீன காலத்தில் மது குடிப்பது பகட்டான விஷயமாகவே கருதப்படுகிறது. அதிலும் இன்று இருபாலரும் ஒன்றாக சேர்ந்து மது குடிக்கின்றனர். ஆண்களுக்கு நிகராக பெரிய பெரிய நகரங்களில் பெண்களும் மது கடைகளில் நிற்பதை காண முடிகிறது. மதுப்பழக்கத்தால் நாளடைவில் உடல் தளர்ந்து, மன அழுத்தம் ஏற்பட்டு வாழ்க்கையை வீணடிக்கும் நிலை ஏற்படுகிறது. மது குடிக்கும் நபர் மட்டும் இதில் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அவரை சார்ந்த நபர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    மதுவினால் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த 9 வயதுடைய மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி இயல்பாக இருக்க முடியாமல் கடந்த சில மாதங்களாக ஒரு வித மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு காரணம் அவரது பெற்றோர்கள் தான்.

    சிறுமியின் தந்தை கூலி தொழிலாளி. வேலை முடித்து வரும் அவர் தினமும் போதையிலையோ அல்லது மது பாட்டிலோடு தான் வீட்டுக்கு வருவது வழக்கம். மகள் முன்பு மது குடித்த அந்த ஆசாமி நாளடைவில் மனைவிக்கும் மது பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது. அவரும் மது குடிக்க பழகிக் கொண்டார். நாட்கள் செல்ல செல்ல இருவரும் வீட்டுக்குள்ளேயே ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். மகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அவர்கள் சிறிதும் கூட யோசிக்கவில்லை.

    மது குடித்துவிட்டு போதை ஏறிய பின்பு கணவன், மனைவி தங்கள் 9 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பல நேரங்களில் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டுள்ளனர். இதனால் அந்த சிறுமி பக்கத்து வீட்டிலோ அல்லது தெருவிலோ தூங்கும் நிலை ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவும் போதையில் பெற்றோர் தங்களது மகளை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர்.

    பெற்றோரின் பொறுப்பு கெட்ட இந்த செயலால் செய்வதறியாது திகைத்த அந்த சிறுமி இறுதியாக அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.

    சிறுமியின் நிலையைப் பார்த்து போலீசாரும் பரிதாபப்பட்டனர். இந்த நிலையில் இந்த தகவல் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவுக்கு தெரியவந்தது. அவர் உடனே குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவித்து சம்பந்தப்பட்ட சிறுமிக்கு வேண்டியவற்றை செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் சோபனா, டயானா ஆகியோர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த அந்த சிறுமியை மீட்டனர். பெற்றோரின் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கலெக்டர் சங்கீதா போன் மூலம் பேசி ஆறுதல் கூறினார்.

    ×