என் மலர்
நீங்கள் தேடியது "நகைக்கடை"
- ஊழியர் முருகன் வேலை முடிந்ததும், வளையல் பிரிவில் நகைகளை அடுக்கி வைக்கும் சமயத்தில் புதிய கவரிங் வளையல்களை அங்கு வைத்துவிட்டு, அதற்கு பதில் தங்க வளையல்கள் எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.
- போலீசார், முருகனை பிடித்து சென்று பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது 6 வளையல்கள் மீது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அதனை ஊழியர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவைகள் அனைத்தும் கவரிங் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தங்க வளையல்களை திருடிவிட்டு அதற்கு பதிலாக கவரிங் நகை வைக்கப்பட்டது தெரியவந்தது. இந்த தங்க வளையல்களின் எடை 10 பவுன் ஆகும். அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.
இதுதொடர்பாக அந்த நகை கடையின் மேலாளர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார், இந்த நூதன திருட்டு குறித்து முதற்கட்டமாக நகைக்கடையின் தங்க வளையல் பிரிவில் வேலை பார்த்தவர் யார்? என விசாரணை நடத்தினர். அதில், சேலம் சின்னபுதூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 40) என்பவர் தங்க வளையல் பிரிவில் ஊழியராக வேலைபார்த்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம், தங்க வளையல் எங்கே? என கேட்டபோது தனக்கு இதுபற்றி தெரியாது என கூறினார். இதனை தொடர்ந்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கணினி மூலம் போலீசார் பார்த்தனர். அதில், ஊழியர் முருகன் வேலை முடிந்ததும், வளையல் பிரிவில் நகைகளை அடுக்கி வைக்கும் சமயத்தில் புதிய கவரிங் வளையல்கள் அங்கு வைத்துவிட்டு, அதற்கு பதில் தங்க வளையல்கள் எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார், முருகனை பிடித்து சென்று பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்து போலீசார் கூறியதாவது-
நாங்கள், நகைக்கடையில் பணியாற்றிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினோம். இதில் ஊழியர் முருகன் தினமும் பணிக்கு வருவதால் முதலில் எங்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. இதையடுத்து நாங்கள், அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் நகைகளை முருகன் திருடுவது காட்டி கொடுத்தது.
6 புதிய கவரிங் வளையல்கள் தயார் செய்து, அவற்றை கொண்டு வந்து வைத்துவிட்டு, 6 தங்க வளையல்கள் எடுத்துச் சென்றுள்ளார். திடீரென வேலையை விட்டு நின்று விட்டால், நகைகளை திருடியது நான் தான் என தெரிந்து விடும் என்று கருதி, தன் மீது சந்தேகம் வந்து விடக் கூடாது எனபதற்காக, விடுப்பு எடுக்காமல் தினமும் வேலை வந்துள்ளார்.
நகைகளை மீட்பதற்காக நாங்கள் முருகனின் வீட்டில் சோதனை நடத்தினோம். திருடப்பட்ட வளையல்கள் அங்கு இல்லை. அவற்றை முருகன் விற்று பணத்தை செலவழித்துள்ளார்.
இந்த நகை திருட்டுக்கு ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். கூட்டு சதி செய்து, இந்த நகைகள் திருடப்பட்டு இருக்கிறது. சக ஊழியர்கள் மற்றும் முருகன் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இதுபோல் போலி கவரிங் நகை வைத்து விட்டு தங்க நகைகள் திருடப்பட்டு இருக்கிறதா? என கண்டறிய மேலாளரிடம், அனைத்து நகைகளையும் பரிசோதிக்கும்படி உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
- நேற்று இரவு வேலை முடிந்ததும் சுந்தரம் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் புறப்பட்டுள்ளார்.
- அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
கன்னியாகுமரி :
கொட்டாரம் அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 38). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு வேலை முடிந்ததும் சுந்தரம் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் புறப்பட்டுள்ளார். பொற்றையடி அருகே உள்ள இலங்காமணிபுரம் பகுதியில் அவர் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
இதில் கீழே விழுந்ததில் தலை உள்ளிட்ட இடங்களில் சுந்தரத்துக்கு காயம் ஏற்பட்டது.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே சுந்தரம் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுந்தரம் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (55). இவர் நேற்று இரவு வடலிவிளை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயம் அடைந்த ராஜாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை பிடிக்க அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- ஏராளமனோரிடம் பல கோடி மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
- 50-க்கும் மேற்பட்டோர் திடீரென பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போரூர்:
சென்னை முகப்பேர் பகுதியில் ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நகைக்கடை மற்றும் ஏ.ஆர்.டி. டிரஸ்டட் பிராப்பிட் உள்ளிட்ட பெயர்களில் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
இதனை சகோதரர்களான ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்.
இவர்கள் கவர்ச்சி கரமான பரிசு பொருட்களுடன் கூடிய தீபாவளி சீட்டு, நகைச்சீட்டு, ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.1½ லட்சத்துக்கு நகை வாங்கி கொள்ளலாம், முதலீடு செய்யும் தொகைக்கு வாரம் தோறும் 3 சதவீதம் வட்டி, ரூ.10 ஆயிரம் செலுத்தினால் 12 மாதத்தில் ரூ.2.40 லட்சத்துக்கு நகை வாங்கிக் கொள்ளலாம், வட்டியில்லாத நகைக்கடன், குலுக்கல் சீட்டு உள்ளிட்ட கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இதை நம்பிய பொது மக்கள் பலர் தங்களது பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். மேலும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களும் வாடிக்கையாளர்களிடம் பேசி பணத்தை முதலீடு செய்ய வைத்தால் அவர்களுக்கு ஊக்கத் தொகையும் கொடுத்து உற்சாகப்படுத்தி உள்ளனர்.
இதனால் அங்கு நகைக்கடை மற்றும் நிறுவனங்களில் வேலைபார்த்த ஊழியர்களும் ஏராளமானோரை பணத்தை முதலீடு செய்ய வைத்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த நகைக்கடை மற்றும் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை முதலீடாக பெற்றது.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் திடீரென ஏ.ஆர்.டி. நகைக்கடை மற்றும் நிறுவனத்தை மூடிவிட்டு சகோதரர்களான ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் தலைமைறைவாகி விட்டனர்.
இதுகுறித்து அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நகைக்கடை தொடங்கிய 2 ஆண்டுகளில் சகோதரர்கள் ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்கள் மீது இதுவரை 925 பேர் மோசடி புகார் அளித்து உள்ளனர். மேலும் தினமும் 5 பேர் வரை ஏ.ஆர்.டி.நகைக்கடை மற்றும் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து இழந்ததாக புகார் தெரிவித்து வருகிறார்கள்.
எனவே சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்து இழந்து இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இது வரை ரூ.13 கோடி மட்டும் மோசடி நடந்து இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் மேலும் பல கோடி மோசடி நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, 'இதுவரை ஏ.ஆர்.டி. நிறுவன உரிமையாளர்கள் மீது 925 புகார்கள் வந்துள்ளன. மேலும் தினசரி 5 பேர் வரை தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். இதுவரை ரூ.13 கோடி மோசடி நடந்துள்ளதாக தெரிகிறது.
தலைமறைவான மோசடி சகோதரர்களை பிடிக்க விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் ஏராளமனோரிடம் பல கோடி மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களிடம் பணத்தை இழந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
இதற்கிடையே பணத்தை பறிகொடுத்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
கடந்த மாதம் ஏ.ஆர்.டி.நகைக்கடை, அதன் உரிமையாளர்கள் வீடு, அலுவலகம் என 5 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- கனமழையால் பெங்களூரு சம்பகி சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.
- நகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடிய கடை உரிமையாளர், பருவமழை நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை வெளுத்து வாங்கியது. இதில், பெங்களூருவில் உள்ள சாலைகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கனமழையால் பெங்களூரு சம்பகி சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதில், அங்கிருந்த நகைக்கடை ஒன்றில் புகுந்த மழைநீர் அங்கிருந்த தங்க நகைகள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து சென்றன. இதனால், நகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும், கடையில் இருந்த சுமார் 2.50 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், மரச்சாமான்களும் அடித்து செல்லப்பட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடிய கடை உரிமையாளர், பருவமழை நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
- யோகேஷ் ஜெயினின் உடன் பிறந்த தம்பி வினோத் ஜெயின் என்பவரே நகைகளை திருடியது தெரிய வந்தது.
- தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த வினோத்தை யானை கவுனி போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சவுகார்பேட்டை பெரிய நாயக்கன் தெருவில் யோகேஷ் ஜெயின் என்பவரது நகைக்கடையில் இருந்து கடந்த 3-ந் தேதி ஒரு கிலோ தங்க கட்டி 15 லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டு போனது. இது தொடர்பாக யானை கவுனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் யோகேஷ் ஜெயினின் உடன் பிறந்த தம்பி வினோத் ஜெயின் என்பவரே நகைகளை திருடியது தெரிய வந்தது. அவர் தப்பி ஓடி தலைமறைவாக இருந்தார். இதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த வினோத்தை யானை கவுனி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கம், 1½ லட்சம் ரொக்கம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
- மதுரை நகைக்கடைகளில் கைவரிசை காட்டிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
- நகைக்கடை பஜாருக்கு சென்றனர்.
மதுரை
மதுரை கீழவெளிவீதி கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது59). இவர் தெற்கா வணி மூல வீதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு 2பெண்கள் வந்த னர். அவர்கள் கடையில் ½பவுன் தோடு வாங்குவது போல் நடித்து அதனை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து செல்வராஜ் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.
இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பின் காம ராஜர் சாலை ரெங்கநாயகி தெருவை சேர்ந்த சிவகுமார் (48) என்பவர் தெற்கு சித்திரை வீதியில் நடத்தி வரும் கடையில் 2 பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து ¾பவுன் தோடு திருடிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்தும் கடை உரிமையாளர் சிவக்குமார் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ேமலும் கடை உரிமை யாளர்களும், போலீசாரும் கடையில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 கடைகளிலும் நகையை திருடிச்சென்றது அதே பெண்கள் தான் என தெரியவந்தது.
அவர்கள் யார்? என்று போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே திருடி மாட்டிக் கொள்ளா ததால் தங்களை அடையா ளம் தெரியவில்லை என அந்த திருடிகள் நம்பியுள்ள னர். இதனால் தைரியமாக மீண்டும் கைவரிசை காட்டு வதற்காக நகைக்கடை பஜாருக்கு சென்றனர்.
ஏற்கனவே திருடிய நகைக்கடை வழியாக சென்றபோது கடையின் உரிமையாளர்கள் அவர்களை அடையாளம் கண்டு விரட்டிப்பிடித்தனர். பின்னர் அவர்களை விளக்குத்தூண் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணை யில், அவர்கள் ஒத்தக்கடை அய்யப்பன் நகர் 4-வது தெருவை சேர்ந்த செல்லம் மகள் தரணி (32), சக்கரா நகரை சேர்ந்த ஜெகதீஷ குமார் மனைவி சந்தியா (27) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- குளச்சலில் ஒரு நகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சகாய ரெக்சின் ஜீவாவை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
குளச்சல் சைமன் காலனியை சேர்ந்தவர் ரிச்சர்டு, கடல் தொழிலாளி. இவரது மகள் சகாய ரெக்சின் ஜீவா (வயது 19), பி.காம். 2-ம் ஆண்டு படித்து விட்டு குளச்சலில் ஒரு நகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 25-ந் தேதி காலை சகாய ரெக்சின் ஜீவாவை, அவரது சகோதரர், மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து கடையில் விட்டுச் சென்றார். இரவில் அவரை அழைத்து வர சகோதரர் கடைக்கு சென்றார். அப்போது சகாய ரெக்சின் ஜீவா, கடையில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்கு போன் செய்துள்ளார். அங்கும் வரவில்லை. இதனை தொடர்ந்து சகாய ரெக்சின் ஜீவாவை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடினர். எங்கு தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாயார் சகாய பிரபா, குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான சகாய ரெக்சின் ஜீவாவை தேடி வருகின்றனர்.
- கடைக்குள் வந்த ஒரு சிலர் நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
- நிர்வாண சாமியார் தனது கழுத்தில் அணிய ஒரு தங்க செயின் வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறி உரிமையாளரிடம் சொல்லச் சொன்னார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில்-ராஜபாளையம் மெயின் சாலையில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வரும் நிர்வாண சாமியார் ஒருவர் 30 நாள் புனித யாத்திரையாக ராமேஸ்வரம், கன்னியா குமரி செல்வதற்காக வந்த வழியில் இந்த கடைக்குள் சென்றுள்ளார்.
அவர், கடை உரிமையாளரிடம் தான் ஹரித்துவாரில் இருந்து வருவதாகவும், இந்த பகுதியை கடக்க முயன்றபோது திடீரென எனக்கு கடவுள் அருள்வாக்கில் கேட்டதாகவும், அதில் உங்கள் நகைக்கடைக்கு சென்று உங்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு போ என கூறியதாகவும், அதனாலே தங்களது கடைக்கு தங்களை ஆசீர்வாதம் செய்வதற்காக வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் உரிமையாளரும், பணியாளர்களும் செய்வது அறியாது திகைத்துப் போய் நின்றனர். தொடர்ந்து நிர்வாண சுவாமியை கும்பிட்டு வரவேற்று அமர செய்தனர். அப்போது கடைக்குள் வந்த ஒரு சிலர் நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
தொடர்ந்து கடையின் உரிமையாளர், நிர்வாண சாமியாரின் வழிச் செலவுக்காக சிறிய தொகையை கொடுக்க, அதனை பெற்றுக்கொண்ட நிர்வாண சாமி இது தனக்கு பூஜைக்கு உண்டான செலவு என்றும், என்னுடைய ஆசீர்வாதம் கிடைத்தால் நீ மிகப்பெரிய ஆளாய் வருவாய் எனக்கூறி நான் உனக்கு ஆசீர்வாதம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டே கடையின் உள்ளே நகைகள் இருக்கும் பகுதிக்கு உரிமையாளரை போகுமாறு கூறினார். பின்னர் இருக்கையில் இருந்து எழுந்து வந்து உரிமையாளரின் தலையில் கை வைத்து மீண்டும் ஒரு முறை ஆசீர்வாதம் செய்தார். தொடர்ந்து, நிர்வாண சாமியார் தனது கழுத்தில் அணிய ஒரு தங்க செயின் வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறி உரிமையாளரிடம் சொல்லச் சொன்னார். அதைக் கேட்ட உரிமையாளர் சில நொடிகள் அதிர்ச்சி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு ஒரு பவுன் மதிப்புள்ள தங்க செயினை நிர்வாண சாமியாரிடம் கொடுப்பதற்காக எடுத்தார். அந்த செயின் வேண்டாம் பெரிய செயின் எடுங்கள் என்று நிர்வாண சாமியார் கையசைத்து கூறினார்.
ஆனால் கடையின் உரிமையாளர் ஒரு பவுன் மதிப்புள்ள தங்க செயினை மட்டும் நிர்வாண சாமியாரின் கழுத்தில் அணிவித்தார். அதனை பெற்றுக்கொண்ட நிர்வாண சாமியார் தங்க செயின் மற்றும் பணத்தோடு வெளியே சென்றார். வட இந்திய சாமியார் தமிழகத்திற்கு வந்து பணம் மற்றும் நகையை லாவகமாக வாங்கிக் கொண்டு சென்ற சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம்.
- நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.
புதுச்சேரி:
காரைக்கால் புதுத்துறையை சேர்ந்தவர் சித்ரா. இவர், காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். கடை உரிமையாளர் மற்றும் இவரது மகன் ஆகியோர் மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி நகைகளை சரிபார்த்து விட்டு நேற்று முன்தினமும் சரி பார்த்தனர். அப்போது, அரை பவுன் தங்க மோதிரம் குறைவது தெரியவந்தது.
மோதிரம் குறைவதால் கடையில் உள்ள சி.சி.டிவி கேமரா பதிவுகளை பார்த்தனர். அப்போது, கடையில் இருந்த சித்ராவிடம், 45 வயது மதிக்கத்தக்க நபரும், ஒரு பெண்ணும் நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்ற நபர்களை தேடி வந்த நிலையில் மோதிரத்தை திருடிசென்ற திருவாரூர் அய்யம்பேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 45) நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இவருடன் வந்த குபேரனை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி ராஜாஜி சாலையில்சங்கர் (59) நகைகடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று மாலை டிப்டாப் ஆசாமி ஒருவர் போன் பேசியபடி உள்ளே வந்தார்.உள்ளே வந்தகில்லாடி ஆசாமி அங்குள்ளசி.சி.டி.வி. கேமராக்களில் அவன் முகம் தெரியாதபடி தலைமுடியால் நெற்றி வரை மறைத்தபடியும் முககவசம் அணிந்திருந்தான்.
அவன்போனில் கெத்து காட்டியபடிசிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். எதிர் முனையில் பேசியவர் அவரது மனைவி என்ற தோரணையில் கார் எடுத்துக் கொண்டு போக வேண்டியது தானே என்று கேட்டதாகவும் கார்ஒரு லிட்டருக்கு 8கிலோமீட்டர் தான் கொடுக்கிறது. அதனால் பைக்எடுத்துட்டு வந்துட்டேன் என்ற மாதிரி பேசி பெரிய பணக்காரன் மாதிரி காட்டிக் கொண்டு அங்கிருந்த கடை முதலாளி ,ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அதை எடுங்க,இதை எடுங்க என்றெல்லாம் கேட்டு இறுதியாக 4 கிராம் மோதிரத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஜிபே அனுப்புவது போல சாதாரண எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளான்.எஸ். எம். எஸ். சவுண்டு வந்தவுடன் முதலாளி போனை கவனித்துள்ளார். அதில் குறும் செய்தி நோட்டிபிகேஷன் வந்துள்ளது. அவர் போனுக்குஉள்ளே சென்று பேலன்ஸ் சரிபார்ப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடத்தை விட்டு மாயமாக மறைந்தார். குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு ஜிபே அனுப்பியதாக கூறி ஏமாற்றிய வாலிபர் குறித்து பண்ருட்டி போலீசில் நகைக்கடை அதிபர் சங்கர்புகார் செய்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் சாலையில் அழகப்பா நகை மாளிகை கடை உள்ளது.அதன் உரிமையாளர் அழகப்பா மணி(வயது 60). சம்பவத்தன்று அழகப்பா மணி தனது கடையில் இருந்து வந்தார். அப்போது அழகப்பா மணியை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்கள் அழகப்பா மணியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அழகப்பா மணியின் சகோதரர் ராஜகோபால் கொடுத்த புகார் கொடுத்தார். அதில் குடும்ப பிரச்சினை இருந்து வந்த நிலையில், தனது சகோதரர் அழகப்பா மணியை காணவில்லை என புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு சம்மந்தமூர்த்தி தெருவில் சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான நகை மற்றும் நகை அடகு கடை உள்ளது.
நேற்று இரவு வழக்கம் போல சிவசுப்பிரமணியன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அவர் தனது செல்போனில் சி.சி.டி.வி. கேமிரா காட்சி பதிவுகளை பார்வையிட்டுள்ளார்.
அதில் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் எதுவும் காட்டப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த சிவசுப்பி ரமணியன், உடனடியாக கடைக்கு புறப்பட்டு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நேற்று இரவில் அவர் கடையை பூட்டி விட்டு சென்றபின் திட்டமிட்டு காத்திருந்த மர்ம நபர்கள் நகை கடையை உடைத்து கடையில் இருந்த வெள்ளி பாத்திரங்கள், கொலுசுகள், என மொத்தம் 1½ கிலோ வெள்ளி பொருட்களும், 8 பவுன் தங்கம், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.காமிராக்களையும் உடைத்து சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.