search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைக்கடை"

    • பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.
    • கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சிங் உயிரிழந்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நகை கடைக்குள் புகுந்து உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.

    அப்போது, நகைக்கடையில் இருந்தவர்களை சரமாரியாக கொள்ளை கும்பல் தாக்கியது.

    கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சிங் உயிரிழந்துள்ளார். அவரது தம்பிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

    நகைக்கடையில் இருந்த நகைகளை அள்ளிச்சென்ற மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

    வெறும் 4 நிமிடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

    • தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.
    • தினசரி விற்பனை 5400 கிலோவாக அதிகரிப்பு.

    சென்னை:

    தங்கத்தின் விலை எப்போது குறையும்? என்று ஏங்கிக் கொண்டிருந்த ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதன் விலை குறைவு இன்ப அதிர்ச்சியாக மாறி இருக்கிறது என்றே கூறலாம்.

    கடந்த 23-ந் தேதி வெளியான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்கு மதி வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. 15 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து உடனடியாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.

    கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை கடுமையான ஏறுமுகத்திலேயே இருந்தது. கடந்த 17-ந் தேதி அன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.55,360 ஆக இருந்தது. இது பட்ஜெட் வெளியான 23-ந் தேதி அன்று ரூ.54 ஆயிரத்து 600 ஆக குறைந்தது.

    கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பட்ஜெட்டுக்கு முந்தைய தினம் வரையில் 7 மாதத்தில் தங்கத்தின் விலை உச்சத்தையே தொட் டிருந்தது. இந்த காலகட்டத் தில் பவுனுக்கு ரூ.8 ஆயிரத்து 80 என்கிற அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்து இருந்தது.

    இதனால் அடுத்தடுத்த நாட்களிலும் தங்கத்தின் விலை இதைவிட மேலும் அதிகரிக்கும் என்றே எதிர் பார்த்து இருந்த நிலையில் தான். மத்திய அரசு தங் கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்தது.

    இதன் காரணமாக கடந்த 23-ந் தேதியில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து தாறுமாறாக குறைந்துள்ளது.

    பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட்ட உடனையே அன்று மாலையில் இருந்து விலை குறைய தொடங்கியது 23-ந்தேதி அன்று பவுனுக்கு ரூ.2200 குறைந்திருந்த தங்கத்தின் விலை படிப்படியாக மேலும் குறையத் தொடங்கியது.

    அடுத்த 4 நாட்களில் அதாவது 27-ந் தேதி அன்று கிராமுக்கு ரூ.410 குறைந்து பவுனுக்கு ரூ.3280 அதிரடியாக குறைந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் குறைந்து அதிரடி சரிவை சந்தித்துள்ளது.

    இதன் காரணமாக நேற்று தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டு கிராமுக்கு ரூ.440 என்கிற அளவில் குறைந்திருக்கிறது. அதனால் பவுனுக்கு ரூ.3540 என தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது.

    தங்கத்தின் இந்தவிலை குறைவால் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாகவே தங்கத்தை நகையாகவும் நாணயங்களாகவும் வாங்கி குவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக சென்னை தங்கம் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் கோல்டு குரு சாந்தகுமார் கூறும்போது, `பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி குறைப்பால் தங்கத்தின் விலை குறைந்து பொதுமக்களின் வாங்கும் சக்தி மிகவும் அதிகரித்துள்ளது. 20 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் விற்பனை உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் உள்ள தங்க நகை கடைகளில் தினமும் 4 ஆயிரத்து 500 கிலோ என்கிற அளவுக்கு தங்கம் விற்பனையாகிக் கொண்டிருந்தது. தற்போது 20 சதவீதம் அளவுக்கு விற்பனை உயர்ந்து இருப்பதால் கூடுதலாக தினமும் 900 கிலோ என்கிற அளவுக்கு தங்கத்தின் விற்பனை அதிகரித்து உள்ளது.

    இதனால் தினமும் விற்பனையாகும் தங்கத்தின் அளவு சுமார் 5400 கிலோவாக உயர்ந்து இருப்பதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதேநேரத்தில் நாடு முழுவதுமே தங்கத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப நகைகளை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதன் காரணமாக தங்கத்தின் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. 35 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக தங்கத்தின் விற்பனை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

    ஆடி மாதம் முடிந்ததும் ஆவணி மாதத்தில் திருமணங்களை நடத்த திட்டமிட்டுள்ள பலரும் நகைகளை வாங்கி வருவதால் நகை விற்பனை களை கட்டத் தொடங்கியுள்ளது.

    அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரியும்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில் தங்கத்தை அதிகம் கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியாவும் முன்னிலையில் இருந்து வருகிறது.

    தங்கத்தின் இந்த விலை சரிவு தற்காலிகமானது தான் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் தங்கத்தின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    அதே போன்று விலை உயர்வு ஏற்பட்டால் தாங்கள் விரும்பும் அளவுக்கு தங்கத்தை வாங்க முடியாதே என்கிற எண்ணத்தில் கையில் பணத்தை வைத்திருப்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்து அதனை வாங்கி குவித்து வருகிறார்கள்.

    இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. இன்னும் வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டு அதன் பின்னரே விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து மக்களின் வாங்கும் சக்தி மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    • கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
    • 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர்.

    சேலம்:

    சேலத்தை அடுத்த வலசையூரை சேர்ந்தவர் சபரி சங்கர் (35) . இவர் சேலம், தருமபுரி, நாமக்கல் , ஆத்தூர், திருச்சி உள்பட 11 இடங்களில் எஸ்.வி.எஸ். நகை கடை என்ற பெயரில் நகை கடைகளை நடத்தி வந்தார். இதில் கவர்ச்சி கரமான திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் முதலீடு பெற்றார்.

    பின்னர் சில மாதங்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு தலைமறை வாகிவிட்டார் .

    இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை புதுச்சேரியில் வைத்து தருமபுரி போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோவை சிறையில் வைத்து சபரிசங்கரை கைது செய்தனர். பின்னர் கடந்த 24-ந் தேதி சபரிசங்கரிடம் விசாரணை நடத்த 4 நாட்கள் காவலில் எடுத்தனர்.

    தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், தாரமங்கலம் உள்பட 5 இடங்களில் உள்ள எஸ்.வி.எஸ். நகைகடைகளை திறந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வருவாய்துறையினருடன் இணைந்து கடைகளை திறந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சபரி சங்கரை அந்த கடைகளுக்கு அழைத்து வந்து கடையில் பொருட்களை கணக்கெடுத்தனர். அதில் தங்க நகைகள் பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது. 70 கிலோவிற்கு மேல் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளிக்கட்டிகள் அங்கு இருந்ததாகவும், அதனை பறிமுதல் செய்ததாகவும் போலீசார் கூறி உள்ளனர்.

    தொடர்ந்து சபரி சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, நகை கடைகளில் வேலை செய்த மேலாளர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவர்களுக்கு கார்களை வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனால் அவர்கள் கடைகளில் இருந்த நகைகளை அள்ளி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கடைகளின் மேலாளர்களை பிடித்தால் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். 

    • வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்தினர்.
    • நகை கடைகளில் சோதனை நடந்ததால் மற்ற கடைக்காரர்கள் உடனே கடைகளை மூடி விட்டு சென்றனர்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் செஞ்சி சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் நகை கடையும், வந்தவாசி சாலையில் பிரபலமான நகைக்கடையும் உள்ளன.

    இந்த கடைகளில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் மற்றும் வருமான வரித்துறை ஆணையாளர் சுப்பிரமணி தலைமையில் 20 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகpe நகைகள் ஏதாவது மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதா? நகை கடையில் வருமான வரி முறையாக கட்டப்பட்டுள்ளதா? வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்தினர்.

    நேற்று இரவு 7 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்து நீடித்தது. நகரின் முக்கிய நகை கடைகளில் திடீர் சோதனை நடந்ததால் மற்ற கடைக்காரர்கள் உடனே கடைகளை மூடி விட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
    • நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    வாக்காளர்களுக்கு பணம்-நகை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் உரிய ஆவணங்கள் இருந்தால் விடுவித்து விடுவதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    பறக்கும் படை வாகன சோதனையில் இதுவரை ரூ.80 கோடி அளவுக்கு நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பிடிபட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அந்த பணத்தை அங்கு ஒப்படைத்து விடுகின்றனர்.

    இதனால் பணம் நகை பொருட்களை வியாபாரிகள் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

    இப்போது தேர்தல் நெருங்க நெருங்க சோதனைகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த 2 பேரிடம் இருந்து ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு மாட்டுச் சந்தைக்கு மாடு வாங்கு வதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறியும் விடவில்லை. பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர்.

    அடுத்தடுத்து சோதனை நடைபெறும் நிலையில் வியாபாரிகளும், நகை கடைக்காரர்களும் பணம் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதுபற்றி தேர்தல் கமிஷனில் முறையிட்டும் எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என வியாபாரிகள் ஆதங்கப்படுகின்றனர். கொள்முதல் செய்து நகை உள்ளிட்ட பொருட்களை கடைக்கு கொண்டு வர முடியாததால் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதாகவும் வியாாரிகள் கூறி வருகின்றனர்.

    பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    இதுபற்றி மெட்ராஸ் தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கத் தவைர் ஜெயந்தி லால் சலானியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் போலீசார் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சோதிப்பதால் பொதுமக்கள் நகை வாங்க வருவதற்கு பயந்து கடைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவதற்கு சிறிய நகரங்களில் இருந்து பெரிய நகரங்களுக்கு பணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.

    இந்த மாதம் தொடர்ந்து நகை விலை உயர்ந்து கொண்டு வருவதால் எப்படியாவது கையில் உள்ள பணத்தை கொண்டு நகை வாங்கி விடலாம் என ஒவ்வொரு குடும்பத்தினரும் நினைக்கின்றனர். ஆனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் நகை கடைக்கு வருவதை தவிர்க்கின்றனர்.


    இப்போது உள்ள விலைவாசியில் ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் சேர்த்து ரூ.55 ஆயிரம் ஆகிவிடும். எனவே தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள ரூ.50 ஆயிரம் என்ற அளவை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம்.

    மே 10-ந்தேதி அட்சய திருதியை நாள் நெருங்கி வருவதால் நகைக் கடைக்காரர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் தேர்தல் கமிஷன் கெடுபிடியால் நகை பட்டறையில் இருந்து நகைகளை கடைகளுக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    அட்சய திருதியை ஆர்டர், திருமண நகை ஆர்டர் உள்ள நிலையில் நிறைய நகைகளை கொண்டு செல்லும் போது பறக்கும் படையினர் பிடித்து விட்டால் உடனே அதை வாங்க முடியாது.

    2 மாதம் கழித்துதான் பெற முடியும். தங்கம் விலை தினமும் ஏறி வரும் நலையில் 2 மாதம் போலீசாரிடம் நகை இருந்தால் விலை ஏற்றத்தால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடும்.

    எனவே நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து நகைக் கடைகளில் கூட்டம் குறைந்துவிட்டது. வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதால் ஒவ்வொரு கடைக்காரர்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று 1000 கிலோ அளவுக்கு நகை வியாபாரம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்த அளவு வியாபாரம் இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர்.
    • நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொடிகேஹள்ளி பகுதியில் ஹந்தாராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த ஹந்தாராமை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 2 பேரும் நகைக்கடையில் கொடுத்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் ரபீஸ் ராஜா (வயது33). இவர் அங்கு நகைக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது நகைக்கடைக்கு பெண் ஒருவர், வாலிபரை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அவர்கள் சுமார் 78 கிராம் பழைய நகைகளை கொடுத்துவிட்டு 4 கிராம் கொண்ட ஒரு ஜோடி கம்மல் வாங்கி உள்ளனர்.

    மீதமுள்ள நகைக்கு பதிலாக பணமாக ரூ.2.55 லட்சம் பணமாக பெற்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். மறுநாள் ரபீஸ் ராஜா அந்த 78 கிராம் பழைய நகைகளை உருக்கி உள்ளார். அப்போது அவை போலியான நகைகள் என்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து 2 பேரும் சேர்ந்து ஏமாற்றியதை அறிந்த கடை உரிமையாளர், கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்திய நிலையில், 2 பேரும் நகைக்கடையில் கொடுத்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அவர்கள் 2 பேரும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்கடையில் போலி நகைகளை கொடுத்துவிட்டு மோசடியில் ஈடுபட்டது ராஜபாளையம் சோமையா புரத்தை சேர்ந்த அன்னலெட்சுமி (வயது45), ஸ்ரீநாத் (29) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அன்னலட்சுமியிடம் இருந்து கம்மல் மற்றும் ரூ.2.½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இயக்குனர்கள் மதன், கார்த்திகா ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்தனர்.
    • மதுரையில் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மதன் சரணடைந்தார்.

    திருச்சி:

    திருச்சி கரூர் பைபாஸ் ரோடு பகுதியில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை இயங்கி வந்தது. இதன் கிளை நிறுவனங்கள் திருச்சி மலைக்கோட்டை, மதுரை, கும்பகோணம் உள்பட 8 இடங்களில் செயல்பட்டு வந்தன.

    இந்த நிறுவனம் சில கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை நம்பி ஏராளமானவர்கள் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் மேற்கண்ட நிறுவனங்களில் முதலீடு செய்தனர். பின்னர் கடந்த மாதம் அதன் இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் திடீரென முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினர். அதைத்தொடர்ந்து திருச்சி உட்பட அனைத்து கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    பின்னர் பல்வேறு இடங்களில் வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிரணவ் ஜூவல்லர்ஸ் இயக்குனர்கள் மதன் அவருடைய மனைவி கார்த்திகா மேலாளர் நாராயணன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த நகைக்கடை கிளைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 80 கிலோ வெள்ளி, சுமார் 110 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அதன் மேலாளர் நாராயணனை கைது செய்தனர். இயக்குனர்கள் மதன், கார்த்திகா ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்தனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும் இருவரும் வெளிநாடு தப்பிச்செல்லாமல் தடுக்க லுக் அவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதுரையில் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மதன் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவரை வருகிற 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஜோதி உத்தரவிட்டார். பின்னர் மதன் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். மதன் மீது 1500க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

    மேலும் தற்போது வரையிலும் தினமும் 10 பேர், 20 பேர் தொடர்ச்சியாக புகார் அளித்து வருகின்றனர்.

    ஆகவே மோசடி தொகை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சரணடைந்த மதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பரண்டு லில்லி கிரேசி மதுரை விரைந்துள்ளார்.

    இன்று மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்கிறார்.

    அவரை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் மதன் திருச்சி கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி குவித்துள்ளார்.

    அந்த சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் கார்த்திகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு சம்மந்தமூர்த்தி தெருவில் சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான நகை மற்றும் நகை அடகு கடை உள்ளது.

    நேற்று இரவு வழக்கம் போல சிவசுப்பிரமணியன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அவர் தனது செல்போனில் சி.சி.டி.வி. கேமிரா காட்சி பதிவுகளை பார்வையிட்டுள்ளார்.

    அதில் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் எதுவும் காட்டப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த சிவசுப்பி ரமணியன், உடனடியாக கடைக்கு புறப்பட்டு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நேற்று இரவில் அவர் கடையை பூட்டி விட்டு சென்றபின் திட்டமிட்டு காத்திருந்த மர்ம நபர்கள் நகை கடையை உடைத்து கடையில் இருந்த வெள்ளி பாத்திரங்கள், கொலுசுகள், என மொத்தம் 1½ கிலோ வெள்ளி பொருட்களும், 8 பவுன் தங்கம், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.காமிராக்களையும் உடைத்து சென்றதும் தெரியவந்தது.

    இது குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அழகப்பா மணியின் சகோதரர் ராஜகோபால் கொடுத்த புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் சாலையில் அழகப்பா நகை மாளிகை கடை உள்ளது.அதன் உரிமையாளர் அழகப்பா மணி(வயது 60). சம்பவத்தன்று அழகப்பா மணி தனது கடையில் இருந்து வந்தார். அப்போது அழகப்பா மணியை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்கள் அழகப்பா மணியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அழகப்பா மணியின் சகோதரர் ராஜகோபால் கொடுத்த புகார் கொடுத்தார். அதில் குடும்ப பிரச்சினை இருந்து வந்த நிலையில், தனது சகோதரர் அழகப்பா மணியை காணவில்லை என புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டிப்-டாப் வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

    கடலூர்:

    பண்ருட்டி ராஜாஜி சாலையில்சங்கர் (59) நகைகடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று மாலை டிப்டாப் ஆசாமி ஒருவர் போன் பேசியபடி உள்ளே வந்தார்.உள்ளே வந்தகில்லாடி ஆசாமி அங்குள்ளசி.சி.டி.வி. கேமராக்களில் அவன் முகம் தெரியாதபடி தலைமுடியால் நெற்றி வரை மறைத்தபடியும் முககவசம் அணிந்திருந்தான்.

    அவன்போனில் கெத்து காட்டியபடிசிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். எதிர் முனையில் பேசியவர் அவரது மனைவி என்ற தோரணையில் கார் எடுத்துக் கொண்டு போக வேண்டியது தானே என்று கேட்டதாகவும் கார்ஒரு லிட்டருக்கு 8கிலோமீட்டர் தான் கொடுக்கிறது. அதனால் பைக்எடுத்துட்டு வந்துட்டேன் என்ற மாதிரி பேசி பெரிய பணக்காரன் மாதிரி காட்டிக் கொண்டு அங்கிருந்த கடை முதலாளி ,ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அதை எடுங்க,இதை எடுங்க என்றெல்லாம் கேட்டு இறுதியாக 4 கிராம் மோதிரத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஜிபே அனுப்புவது போல சாதாரண எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளான்.எஸ். எம். எஸ். சவுண்டு வந்தவுடன் முதலாளி போனை கவனித்துள்ளார். அதில் குறும் செய்தி நோட்டிபிகேஷன் வந்துள்ளது. அவர் போனுக்குஉள்ளே சென்று பேலன்ஸ் சரிபார்ப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடத்தை விட்டு மாயமாக மறைந்தார். குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு ஜிபே அனுப்பியதாக கூறி ஏமாற்றிய வாலிபர் குறித்து பண்ருட்டி போலீசில் நகைக்கடை அதிபர் சங்கர்புகார் செய்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம்.
    • நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் புதுத்துறையை சேர்ந்தவர் சித்ரா. இவர், காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். கடை உரிமையாளர் மற்றும் இவரது மகன் ஆகியோர் மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி நகைகளை சரிபார்த்து விட்டு நேற்று முன்தினமும் சரி பார்த்தனர். அப்போது, அரை பவுன் தங்க மோதிரம் குறைவது தெரியவந்தது.

    மோதிரம் குறைவதால் கடையில் உள்ள சி.சி.டிவி கேமரா பதிவுகளை பார்த்தனர். அப்போது, கடையில் இருந்த சித்ராவிடம், 45 வயது மதிக்கத்தக்க நபரும், ஒரு பெண்ணும் நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்ற நபர்களை தேடி வந்த நிலையில் மோதிரத்தை திருடிசென்ற திருவாரூர் அய்யம்பேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 45) நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இவருடன் வந்த குபேரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×