search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள் மேப்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
    • சிலர் விதிமுறையை பின்பற்றாமல் ஸ்டைலாக ஹெல்மெட்டை வாகனத்தில் வைத்து பயணிப்பார்கள்.

    சென்னையில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, இரு சக்கரவாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்ற விதி பல ஆண்டுகளாக இருந்தாலும், பின்பற்றுபவர்கள் குறைவாக உள்ளனர். சமீப காலங்களில் சென்னை நகரத்தில் அதிகரித்துவரும் இருசக்கரவாகன ஓட்டிகளின் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த சாலைகளில் சோதனை நடத்தப்படும் என்றும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் சிலர் இந்த விதிமுறையை பின்பற்றாமல் ஸ்டைலாக ஹெல்மெட்டை வாகனத்தில் வைத்து பயணிப்பார்கள். போலீசாரை கண்டதும் ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொள்வார்கள்.

    இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பயனர் ஒருவர் கூகுள் மேப் செயலியில் வேளச்சேரியை ஒட்டிய பகுதி ஒன்றில் 'போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். இது தொடர்பான பதிவு வைரல் ஆனது.

    சென்னையில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து போலீசார் இருக்கிறார்கள் என்பதை காட்டிக்கொடுக்கும் வகையில் 'போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க' என்ற குறிப்பு கூகுள் மேப்ஸ்-இல் இடம்பெற்றால், பலரும் ஹெல்மட் அணிய தொடங்குவார்கள்.

    இதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அமைச்சர் டிஆர்பி ராஜா, ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை முழுவதும் இத்தகைய முயற்சியை கையாளலாம் என போக்குவரத்து போலீசாருக்கு நகைச்சுவையாக அறிவுறுத்தியுள்ளார்.

    • ‘கூகுள் மேப்’ என்பது புவியியல் தகவல் தொழில்நுட்ப மென்பொருள்.
    • கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    'கூகுள் மேப்' என்பது புவியியல் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஆகும். ஒரு இடத்தில் இருந்து வெறோரு இடத்திற்கு வாகனங்களில் பயணிப்பவர்கள், சரியான இடத்திற்கு செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை.

    செல்லவேண்டிய இடத்திற்கு செல்லும் சாலை உள்ளிட்ட அனைத்தையும் 'கூகுள் மேப்' காண்பித்துவிடுவதால், தெரியாத இடத்திற்கு கூட எளிதாக சென்று விட முடிகிறது.

    இருந்தபோதிலும் சில நேரங்களில் 'கூகுள் மேப்' தவறான வழியை காண்பித்து விடுவதால் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ரஷீத்(வயது35), தஷ்ரீப்(36).

    சம்பவத்தன்று இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் உப்பினங்கியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்றனர். அவர்கள் 'கூகுள் மேப்' உதவியுடன், அது காட்டிய வழியை பின்பற்றி காரில் சென்றனர்.

    குட்டிகோல் பல்லாஞ்சி ஆற்றின் பாலம் வழியாக அவர்கள் சென்றனர். அப்போது அவர்களது கார் ஆற்றுள்குள் பாய்ந்தது.

    'கூகுள் மேப்' புதிதாக கட்டப்பட்டிருந்த பாலத்தை காட்டாமல், பழைய பாலத்தை காட்டியிருக்கிறது. அதனை பின்பற்றி அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகியோர் காரில் சென்றனர்.

    அவர்கள் சென்ற பழைய பாலத்தில் தடுப்புகள் இல்லாதது இருட்டில் தெரியவில்லை. இதனால் அவர்களது கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. அவர்களுடைய கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    சிறிது தூரத்தில் ஆற்றுக்குள் இருந்த செடிகளில் அவர்களது கார் சிக்கி நின்றது. இதையடுத்து அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகி இருவரும் காரின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக வெளியே வந்தனர்.

    தங்களது கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது குறித்து தங்களின் உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ளத்தில் சிக்கியிருந்த அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகிய இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

    மேலும் அவர்களது காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார், ஆற்றின் நடுவே இருந்த செடியில் சிக்கி நின்றதால் அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஐதராபாத்தை சேர்ந்த 4 பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு காரில் சுற்றுலா புறப்பட்டனர்.
    • உள்ளூர் மக்களிடம் விவரத்தைக் கூற, அக்கம் பக்கத்தினர் திரண்டு கால்வாய்க்குள் மூழ்கிய காரையும் அதில் இருந்த பெண் உள்பட 3 பேரையும் மீட்டனர்.

    திருவனந்தபுரம்:

    இன்றைய விஞ்ஞான உலகில் சுற்றுலா செல்பவர்கள் பலரும் மனித வழிகாட்டிகளை நம்புவதை விட, கூகுள் மேப்பை பயன்படுத்தியே பல இடங்களுக்கும் செல்கின்றனர். இது பல நேரங்களில் சரியாக இருந்தாலும், சில நேரங்களில் ஆபத்தில் கொண்டு விட்டு விடுகிறது.

    அதுவும் மழைக்காலங்களில் கூகுள் மேப் வழிகாட்டி மூலம் சென்ற வாகனங்கள் விபத்துக்களை அதிகம் சந்தித்துள்ளன. கேரளாவில் கடந்த ஆண்டு கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்ற கார், ஆற்றுக்குள் பாய்ந்ததில் 2 டாக்டர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் இது போன்ற மற்றுமொரு சம்பவம் கேரளாவில் இன்று நிகழ்ந்துள்ளது.

    ஐதராபாத்தை சேர்ந்த 4 பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு காரில் சுற்றுலா புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை ஆலப்புழா பகுதியில் கூகுள்மேப் வழிகாட்டியை பார்த்து சென்றுள்ளனர். அவர்கள் 2 சாலைகள் பிரியும் இடத்தில் சென்ற போது, மேப் காட்டிய வழியில் காரை செலுத்தி உள்ளனர். ஆனால் அந்த வழி கால்வாய்க்கான வழியாகும். இது தெரியாமல் சென்றதால், கார் கால்வாய்க்குள் பாய்ந்து மூழ்கியது.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த ஒருவர் தப்பினார். அவர் உள்ளூர் மக்களிடம் விவரத்தைக் கூற, அக்கம் பக்கத்தினர் திரண்டு கால்வாய்க்குள் மூழ்கிய காரையும் அதில் இருந்த பெண் உள்பட 3 பேரையும் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    • கார் ஏற்றி நசுக்கியதில் 7 பேரின் கால்களும் நசுங்கின.
    • உறவினர் வீட்டுக்கு வந்திருந்த வைசாலி அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.

    போரூர்:

    சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மனைவி சரிதா. இவர்களது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பலர் வீட்டுக்கு வந்து இருந்தனர். நேற்று இரவு அனைவரும் வீட்டுக்குள் தூங்குவதற்கு இடவசதி இல்லாததால் சரிதா, உறவினர்கள் தில்லைநாயகி, மூதாட்டி ஜோதி, கவுதம் நிஷா உள்ளிட்ட பலர் வீட்டுக்கு வெளியே பாயை விரித்து தூங்கினர்.

    சென்னையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர் இன்று அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.இன்று அதிகாலை 5 மணி அளவில் 10-வது தெருவுக்குள் கார் ஒன்று வந்தது. திடீரென அந்த கார் அதிவேகமாக வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டு இருந்த சரிதா உள்ளிட்ட7 பேர் மீது ஏறியது. கார் ஏற்றி நசுக்கியதில் 7 பேரின் கால்களும் நசுங்கின. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். இதில் 4 பேர் பெண்கள் ஆவர்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது கார் நசுக்கியதால் 7 பேர் காயம் அடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த அனைவரும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கார் ஏறியதில் சரிதா, தில்லை நாயகி ஆகிய 2 பெண்களின் கால்களிலும் எலும்புகள் உடைந்துள்ளன. இதுபற்றி கேள்விப்பட்டதும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குறுகலான சந்தில் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வைசாலி பாட்டீல் என்பது தெரிய வந்தது.

    சென்னையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர் இன்று அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது. கூகுள் மேப் காட்டிய வழியில் குறுகலான குடியிருப்பு பகுதியில் சந்து இருப்பது தெரியாமலேயே வைசாலி காரை ஓட்டிச் சென்று உள்ளார். அப்போது வீட்டு முன்பு தூங்கியவர்கள் மீது ஏற்றியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கூகுள் மேப்பை நம்பி சென்று முட்டுச்சந்தில் விபத்தை ஏற்படுத்திய வடமாநிலப் பெண் வைஷாலி பாட்டீல் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அஜாக்கிரதை, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் கூகுள் வரைபடத்தில் RoadEase ஆப் மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும்.
    • வாகன ஓட்டிகள் தங்களது கூகுள் மேப் மூலம் மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் செல்லக்கூடிய இலக்கை சென்றடையும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    காணும் பொங்கலையொட்டி மெரினாவில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

    மெரினாவில் காணும் பொங்கல் அன்று காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

    உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில், மக்கள் கூட்டம் மிக அதிகமாக கூடும் போது. வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை-முத்துசாமி பாயின்ட்-வாலாஜா பாயின்ட்-அண்ணாசாலை பெரியார் சிலை-அண்ணா சிலை-வெல்லிங்டன் பாயின்ட்-ஸ்பென்சர் சந்திப்பு-பட்டுளாஸ் சாலை-மணிக்கூண்டு-ஜி.ஆர்.எச். பாயின்ட் வழியாக டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை சென்று, தங்களது இலக்கினை அடையலாம்.

    அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில், திருப்பப்பட்டு பாரதி சாலை. பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கினை அடையலாம்.

    மேலும் பாரதி சாலையானது கண்ணகி சிலையில் இருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோட்டுக்கு வாகனங்கள் செல்ல தடை செய்தும் பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் செய்யப்பட்டுள்ளது. (பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்).

    பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்தும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்).

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் கூகுள் வரைபடத்தில் RoadEase ஆப் மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்களது கூகுள் மேப் மூலம் மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் செல்லக்கூடிய இலக்கை சென்றடையும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரை விட்டு வெளியேற முடியாத நிலையில் செல்போன் மூலம் அவசர போலீஸ் உதவியை நாடியுள்ளார்.
    • ஜே.சி.பி. எந்திரம் வரவழைத்து காரை தரைப்பாலத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஓசூர் பகுதியில் பெய்து வரும் மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கிக்கிடக்கிறது. ஓசூர் பஸ் நிலையம் தொடங்கி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், குடியிருப்புகள், விளைநிலங்கள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிய ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலம், சர்ஜாபூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓசூர் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு நேற்றிரவு திரும்பினார். அப்போது கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி சென்றார்.

    செல்போனை பார்த்தபடியே காரை ஓட்டிய ராஜேஷ் பேக்கப்பள்ளி பகுதியை கடந்தார். ஆனால் மழையால் அப்பகுதியில் இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியிருந்தது தெரியாமல் காரை அந்த தரைப்பாலத்திற்குள் இறக்கிவிட்டார். இதனால் காரை வெள்ள நீர் சூழ்ந்தது.

    இதனால் காரை விட்டு வெளியேற முடியாத நிலையில் செல்போன் மூலம் அவசர போலீஸ் உதவியை நாடியுள்ளார்.

    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் வரவழைத்து காரை தரைப்பாலத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    கூகுள் மேப் பார்த்து வாகனம் இயக்கும் பலர் இவ்வாறு அசம்பாவிதங்கள் சிக்குவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • கூகுள் மேப் காட்டிய வழியில் இரவு 11.30 மணியளவில் சென்ற போது திடீரென சாலை முடிந்தது.
    • மழையால் வழித்தடத்தை கூகுள் மேப்பால் காட்ட முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கோட்டயம்:

    கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கூகுள் மேப்பை பயன்படுத்தி காரில் சென்ற போது, நள்ளிரவில் ஓடையில் கார் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளா மாநிலம் கும்பநாடு பகுதியைச் சேர்ந்த 4 பேர், எர்ணாகுளத்தில் இருந்து நேற்று இரவு ஊருக்கு காரில் நள்ளிரவில் பயணம் செய்து கொண்டிருந்தனர். கூகுள் மேப்பை பயன்படுத்தி டிரைவர் காரை ஓட்டி உள்ளார். கூகுள் மேப் காட்டிய வழியில் இரவு 11.30 மணியளவில் சென்ற போது திடீரென சாலை முடிந்தது. டிரைவர் சுதாரித்து பிரேக் போடுவதற்குள் கார் நேராக, ஓடையில் இறங்கியது.

    காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் சென்று 4 மாத குழந்தை உட்பட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். மழையால் வழித்தடத்தை கூகுள் மேப்பால் காட்ட முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • கூகுள் ஸ்டிரீட் வியூ அம்சம் தற்போது முதற்கட்டமாக 10 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
    • இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம்.

    கூகுள் மேப் செயலியில் உள்ள ஸ்டிரீட் வியூ அம்சம் தற்போது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பாதுகாப்பு காரணமாக நீண்ட நாட்களாக செயல்படுத்தப்படாமல் இருந்த இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாக 10 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கூகுள் மேப் செயலியை வைத்து இருபிடத்தின் புகைப்படங்களை 360 டிகிரியில் தெளிவாக காண முடியும்.


    வெளிநாடுகளில் இந்த அம்சம் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் ஆகிவிட்ட போதும் இந்தியாவில் தற்போது தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். இந்த அம்சம் மூலம் உள்ளூர் சாலை அமைப்புகள் மற்றும் போக்குவரத்து தடங்கள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள முடியும்.

    முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், புனே, நாசிக், அமிர்தசரஸ், வதோதரா, அகமத்நகர் ஆகிய 10 நகரங்களில் இந்த ஸ்டிரீட் வியூ அம்சம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேற்கண்ட நகரங்களில் உள்ள சுமார் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை இந்த ஸ்டிரீட் வியூ அம்சம் மூலம் புகைப்படங்களாக பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×