என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள் மேப்"

    • 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • கோவில் உண்டியல்களை உடைத்து நகைகள் கொள்ளை அடித்தது தொடர்பாக சுமார் 40 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் துறையூர், ஜம்புநாதபுரம், தா பேட்டை, உப்பிலியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சுவாமிகளுக்கு அணிந்திருந்த நகை மற்றும் உண்டியல்கள் உடைத்து காசுகளை திருடும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் முசிறி டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மேற்பார்வையில் தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாபன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், ரவி, அறிவழகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கண்ணனூர் பாளையம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படி வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியை சேர்ந்த தமிழ்பாரதி(வயது 22), திருச்சியைச் சேர்ந்த சரவணன்(44) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முதலில் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு கோவில்களில் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இவர்களில் தமிழ்பாரதி 7-ம் வகுப்பு வரையும், சரவணன் 8-ம் வகுப்பு வரையுமே படித்துள்ளனர். ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை கையாள்வதில் கில்லாடியாக திகழ்ந்த அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் பல்வேறு மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் கோவில்கள் உள்ளது என்றும், காட்டுக்கோவில்கள் எங்கெங்கு உள்ளது என்றும் கண்டறிந்து உள்ளனர்.

    பின்னர் கூகுள் மேப்பில் கோவில்களில் உள்ள சுவாமி சிலைகளின் படங்களை வைத்து, சிலைகளில் நகைகள் ஏதேனும் உள்ளதா என்று பதிவிட்ட புகைப்படங்களை கண்டறிந்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.

    இதை தொடர்ந்து தமிழ்பாரதி, சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கோவில்களில் திருடிய சுமார் ரூ.9 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் தங்க நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து திருடப்பட்ட நாணயங்களையும், திருட்டுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதில் தமிழ் பாரதி மீது அரியலூர் மாவட்ட பகுதிகளில் கோவில் உண்டியல்களை உடைத்து நகைகள் கொள்ளை அடித்தது தொடர்பாக சுமார் 40 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    7-ம் வகுப்பு படித்துவிட்டு செல்போன் அனுபவத்தால் கூகுள் மேப் மூலம் கோவில்களில் நகைகள் மற்றும் உண்டியல்களை உடைத்து திருடிய சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செல்போனில் கூகுள் மேப்பை பயன்படுத்தி அதில் தனது சொந்த ஊர் பெயரை பதிவு செய்தார்.
    • 57 நிமிடங்களாக வேறு எந்த ரெயிலும் வராததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது.

    பீகார் மாநிலம், கோபால் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ் ராய்.

    இவர் உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மது விருந்து வைக்கப்பட்டது.

    அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்தார். பின்னர் வீடு திரும்புவதற்காக மீண்டும் காரில் வீட்டுக்கு புறப்பட்டார். மதுபோதையில் இருந்ததால் அவரது வீட்டிற்கு எந்த வழியாக செல்வது என தெரியவில்லை.

    இதனால் தனது செல்போனில் கூகுள் மேப்பை பயன்படுத்தி அதில் தனது சொந்த ஊர் பெயரை பதிவு செய்தார்.

    பின்னர் கூகுள் மேப் காட்டிய வழியை பின்தொடர்ந்து காரை ஓட்டி சென்றார். 1 மணி நேரத்திற்கு பிறகு அவர் ஓட்டிச் சென்ற கார் ரெயில் தண்டவாளத்தில் பாய்ந்து நின்றது.

    அப்போது அந்த வழியாக ரெயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டி கார் நிற்பதை கண்ட லோகோ பைலட் அவசர கால பிரேகை பயன்படுத்தினார்.

    காருக்கு அருகே 5 மீட்டர் தொலைவில் ரெயில் நின்றது. ரெயில் கார் மீது மோதி இருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரை அப்புறப்படுத்தினர். இதனால் ரெயில் 57 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    அந்த மார்க்கத்தில் 57 நிமிடங்களாக வேறு எந்த ரெயிலும் வராததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர்.

    ஆதர்ஷ் ராய் கூகுள் மேப்பில் தனது முழு முகவரியை பதிவு செய்யாமல் நகரத்தின் பெயரை மட்டும் பதிவு செய்ததால் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    • எதிர்பாராதவிதமாக கார் வழி தவறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.
    • பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் இருந்த ஆற்றில் கார் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

    திருச்சூர்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் அருகே மந்தாரத்தொடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 57). இவரது உறவினர்கள் சதானந்தன், விசாலாட்சி, ருக்மணி, கிருஷ்ண பிரசாத். இவர்கள் 5 பேரும் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சதானந்தன் ஓட்டி சென்றார்.

    அவர் செல்போனில் கூகுள் மேப் பார்த்தவாறு பாலக்காடு நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். திருச்சூர் அருகே கொண்டாழி-திருவில்யா மலை ஆகிய 2 பகுதிகளை இணைக்கும் காயத்ரி ஆற்றின் குறுக்கே எழுண்ணுள்ளத்து கடவு பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் வழி தவறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.

    பின்னர் கார், நீரில் மூழ்க தொடங்கியது. ஆற்றில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு நபராக 5 பேரும் மீட்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் இருந்த ஆற்றில் கார் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கிரேன் மூலம், ஆற்றில் இருந்து கார் மீட்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் கூகுள் வரைபடத்தில் RoadEase ஆப் மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும்.
    • வாகன ஓட்டிகள் தங்களது கூகுள் மேப் மூலம் மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் செல்லக்கூடிய இலக்கை சென்றடையும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    காணும் பொங்கலையொட்டி மெரினாவில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

    மெரினாவில் காணும் பொங்கல் அன்று காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

    உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில், மக்கள் கூட்டம் மிக அதிகமாக கூடும் போது. வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை-முத்துசாமி பாயின்ட்-வாலாஜா பாயின்ட்-அண்ணாசாலை பெரியார் சிலை-அண்ணா சிலை-வெல்லிங்டன் பாயின்ட்-ஸ்பென்சர் சந்திப்பு-பட்டுளாஸ் சாலை-மணிக்கூண்டு-ஜி.ஆர்.எச். பாயின்ட் வழியாக டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை சென்று, தங்களது இலக்கினை அடையலாம்.

    அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில், திருப்பப்பட்டு பாரதி சாலை. பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கினை அடையலாம்.

    மேலும் பாரதி சாலையானது கண்ணகி சிலையில் இருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோட்டுக்கு வாகனங்கள் செல்ல தடை செய்தும் பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் செய்யப்பட்டுள்ளது. (பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்).

    பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்தும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்).

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் கூகுள் வரைபடத்தில் RoadEase ஆப் மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்களது கூகுள் மேப் மூலம் மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் செல்லக்கூடிய இலக்கை சென்றடையும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கார் ஏற்றி நசுக்கியதில் 7 பேரின் கால்களும் நசுங்கின.
    • உறவினர் வீட்டுக்கு வந்திருந்த வைசாலி அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.

    போரூர்:

    சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மனைவி சரிதா. இவர்களது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பலர் வீட்டுக்கு வந்து இருந்தனர். நேற்று இரவு அனைவரும் வீட்டுக்குள் தூங்குவதற்கு இடவசதி இல்லாததால் சரிதா, உறவினர்கள் தில்லைநாயகி, மூதாட்டி ஜோதி, கவுதம் நிஷா உள்ளிட்ட பலர் வீட்டுக்கு வெளியே பாயை விரித்து தூங்கினர்.

    சென்னையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர் இன்று அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.இன்று அதிகாலை 5 மணி அளவில் 10-வது தெருவுக்குள் கார் ஒன்று வந்தது. திடீரென அந்த கார் அதிவேகமாக வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டு இருந்த சரிதா உள்ளிட்ட7 பேர் மீது ஏறியது. கார் ஏற்றி நசுக்கியதில் 7 பேரின் கால்களும் நசுங்கின. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். இதில் 4 பேர் பெண்கள் ஆவர்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது கார் நசுக்கியதால் 7 பேர் காயம் அடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த அனைவரும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கார் ஏறியதில் சரிதா, தில்லை நாயகி ஆகிய 2 பெண்களின் கால்களிலும் எலும்புகள் உடைந்துள்ளன. இதுபற்றி கேள்விப்பட்டதும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குறுகலான சந்தில் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வைசாலி பாட்டீல் என்பது தெரிய வந்தது.

    சென்னையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர் இன்று அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது. கூகுள் மேப் காட்டிய வழியில் குறுகலான குடியிருப்பு பகுதியில் சந்து இருப்பது தெரியாமலேயே வைசாலி காரை ஓட்டிச் சென்று உள்ளார். அப்போது வீட்டு முன்பு தூங்கியவர்கள் மீது ஏற்றியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கூகுள் மேப்பை நம்பி சென்று முட்டுச்சந்தில் விபத்தை ஏற்படுத்திய வடமாநிலப் பெண் வைஷாலி பாட்டீல் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அஜாக்கிரதை, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஐதராபாத்தை சேர்ந்த 4 பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு காரில் சுற்றுலா புறப்பட்டனர்.
    • உள்ளூர் மக்களிடம் விவரத்தைக் கூற, அக்கம் பக்கத்தினர் திரண்டு கால்வாய்க்குள் மூழ்கிய காரையும் அதில் இருந்த பெண் உள்பட 3 பேரையும் மீட்டனர்.

    திருவனந்தபுரம்:

    இன்றைய விஞ்ஞான உலகில் சுற்றுலா செல்பவர்கள் பலரும் மனித வழிகாட்டிகளை நம்புவதை விட, கூகுள் மேப்பை பயன்படுத்தியே பல இடங்களுக்கும் செல்கின்றனர். இது பல நேரங்களில் சரியாக இருந்தாலும், சில நேரங்களில் ஆபத்தில் கொண்டு விட்டு விடுகிறது.

    அதுவும் மழைக்காலங்களில் கூகுள் மேப் வழிகாட்டி மூலம் சென்ற வாகனங்கள் விபத்துக்களை அதிகம் சந்தித்துள்ளன. கேரளாவில் கடந்த ஆண்டு கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்ற கார், ஆற்றுக்குள் பாய்ந்ததில் 2 டாக்டர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் இது போன்ற மற்றுமொரு சம்பவம் கேரளாவில் இன்று நிகழ்ந்துள்ளது.

    ஐதராபாத்தை சேர்ந்த 4 பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு காரில் சுற்றுலா புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை ஆலப்புழா பகுதியில் கூகுள்மேப் வழிகாட்டியை பார்த்து சென்றுள்ளனர். அவர்கள் 2 சாலைகள் பிரியும் இடத்தில் சென்ற போது, மேப் காட்டிய வழியில் காரை செலுத்தி உள்ளனர். ஆனால் அந்த வழி கால்வாய்க்கான வழியாகும். இது தெரியாமல் சென்றதால், கார் கால்வாய்க்குள் பாய்ந்து மூழ்கியது.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த ஒருவர் தப்பினார். அவர் உள்ளூர் மக்களிடம் விவரத்தைக் கூற, அக்கம் பக்கத்தினர் திரண்டு கால்வாய்க்குள் மூழ்கிய காரையும் அதில் இருந்த பெண் உள்பட 3 பேரையும் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    • ‘கூகுள் மேப்’ என்பது புவியியல் தகவல் தொழில்நுட்ப மென்பொருள்.
    • கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    'கூகுள் மேப்' என்பது புவியியல் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஆகும். ஒரு இடத்தில் இருந்து வெறோரு இடத்திற்கு வாகனங்களில் பயணிப்பவர்கள், சரியான இடத்திற்கு செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை.

    செல்லவேண்டிய இடத்திற்கு செல்லும் சாலை உள்ளிட்ட அனைத்தையும் 'கூகுள் மேப்' காண்பித்துவிடுவதால், தெரியாத இடத்திற்கு கூட எளிதாக சென்று விட முடிகிறது.

    இருந்தபோதிலும் சில நேரங்களில் 'கூகுள் மேப்' தவறான வழியை காண்பித்து விடுவதால் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ரஷீத்(வயது35), தஷ்ரீப்(36).

    சம்பவத்தன்று இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் உப்பினங்கியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்றனர். அவர்கள் 'கூகுள் மேப்' உதவியுடன், அது காட்டிய வழியை பின்பற்றி காரில் சென்றனர்.

    குட்டிகோல் பல்லாஞ்சி ஆற்றின் பாலம் வழியாக அவர்கள் சென்றனர். அப்போது அவர்களது கார் ஆற்றுள்குள் பாய்ந்தது.

    'கூகுள் மேப்' புதிதாக கட்டப்பட்டிருந்த பாலத்தை காட்டாமல், பழைய பாலத்தை காட்டியிருக்கிறது. அதனை பின்பற்றி அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகியோர் காரில் சென்றனர்.

    அவர்கள் சென்ற பழைய பாலத்தில் தடுப்புகள் இல்லாதது இருட்டில் தெரியவில்லை. இதனால் அவர்களது கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. அவர்களுடைய கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    சிறிது தூரத்தில் ஆற்றுக்குள் இருந்த செடிகளில் அவர்களது கார் சிக்கி நின்றது. இதையடுத்து அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகி இருவரும் காரின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக வெளியே வந்தனர்.

    தங்களது கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது குறித்து தங்களின் உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ளத்தில் சிக்கியிருந்த அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகிய இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

    மேலும் அவர்களது காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார், ஆற்றின் நடுவே இருந்த செடியில் சிக்கி நின்றதால் அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
    • சிலர் விதிமுறையை பின்பற்றாமல் ஸ்டைலாக ஹெல்மெட்டை வாகனத்தில் வைத்து பயணிப்பார்கள்.

    சென்னையில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, இரு சக்கரவாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்ற விதி பல ஆண்டுகளாக இருந்தாலும், பின்பற்றுபவர்கள் குறைவாக உள்ளனர். சமீப காலங்களில் சென்னை நகரத்தில் அதிகரித்துவரும் இருசக்கரவாகன ஓட்டிகளின் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த சாலைகளில் சோதனை நடத்தப்படும் என்றும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் சிலர் இந்த விதிமுறையை பின்பற்றாமல் ஸ்டைலாக ஹெல்மெட்டை வாகனத்தில் வைத்து பயணிப்பார்கள். போலீசாரை கண்டதும் ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொள்வார்கள்.

    இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பயனர் ஒருவர் கூகுள் மேப் செயலியில் வேளச்சேரியை ஒட்டிய பகுதி ஒன்றில் 'போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். இது தொடர்பான பதிவு வைரல் ஆனது.

    சென்னையில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து போலீசார் இருக்கிறார்கள் என்பதை காட்டிக்கொடுக்கும் வகையில் 'போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க' என்ற குறிப்பு கூகுள் மேப்ஸ்-இல் இடம்பெற்றால், பலரும் ஹெல்மட் அணிய தொடங்குவார்கள்.

    இதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அமைச்சர் டிஆர்பி ராஜா, ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை முழுவதும் இத்தகைய முயற்சியை கையாளலாம் என போக்குவரத்து போலீசாருக்கு நகைச்சுவையாக அறிவுறுத்தியுள்ளார்.

    • கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அங்கிருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜேம்ஸ் ஜார்ஜ்(வயது48), சைலி ராஜேந்திர சர்ஜே(27). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்துக்கு வந்திருக்கின்றனர்.

    அவர்கள் நேற்று இரவு கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குமரகோம் பகுதியில் இருந்து எர்ணாகுளத்துக்கு வாடகை காரில் சென்றனர். கைப்புழமுட்டு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அங்கிருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

    இதனால் அவர்களது கார் தண்ணீரில் மூழ்கியபடி இருந்தது. காருக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டுள்ளனர். அவர்களது சத்தத்தை கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    ஆனால் அதற்குள் ஆற்றுக்குள் கார் முழுவதுமாக மூழ்கியது. உள்ளூர் மக்கள் ஆற்றுக்குள் இறங்கி காருக்குள் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்த விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றுக்குள் 20 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்த காரை மீட்டு வெளியே எடுத்தனர். காருக்குள் மயங்கிய நிலையில் கிடந்த ஜேம்ஸ் ஜார்ஜ், சைலி ராஜேந்திர சர்ஜே ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு கூகுள் மேப்பை பார்த்துபடி சென்றி ருக்கலாம் என்றும், அப்போது தவறான வழியை காட்டியதன் காரணமாக ஆற்றுக்குள் கார் விழுந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேம்ஸ் ஜார்ஜ் மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே விபத்தில் பலியான தகவல் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அவர் களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேரளா விரைந்துள்ளனர்.

    • 112 என்ற கட்டுப்பட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டார்.
    • பவுன்ராஜ் அவரது செல்போனில் இருந்து இருப்பிட லொக்கேஷன் அனுப்பினார்.

    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11.20 மணியளவில் துரைப்பாக்கம் வி.ஜி.பி. அவென்யூவில் உள்ள ஒரு வீட்டுக்கு உணவு டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    உணவு டெலிவரி செய்யும் இடத்திற்கு செல்ல செல்போனில் "கூகுல் மேப்" பார்த்தபடி சென்றார். இருள் சூழ்ந்திருந்த பகுதியை மேப் காட்டியதால் கண்மூடித்தனமாக சென்ற பவுன்ராஜ் அங்குள்ள சதுப்பு நில சேற்றில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கி கொண்டார்.

    சேற்றில் சிக்கிய பவுன்ராஜ் அதிலிருந்து மீள முடியாததால் கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் பரிதவித்த அவர் 112 என்ற கட்டுப்பட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டார். பின்னர் பவுன்ராஜ் செல்போன் எண்ணிற்கு அருகில் உள்ள துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தொடர்பு கொண்டு எந்த பகுதியில் உள்ளீர்கள் என்று கேட்டனர்.

    பவுன்ராஜ் அவரது செல்போனில் இருந்து இருப்பிட லொக்கேஷன் அனுப்பினார். உடனே துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சேற்றில் சிக்கிக் கொண்டிருந்த வாலிபரையும் மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.

    காப்பாற்ற யாரும் வராத நிலையில் மிகவும் அச்சத்தில் இருந்த நேரத்தில் விரைந்து வந்து மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு கண்ணீர் மல்க பவுன்ராஜ் நன்றியை தெரிவித்தார். பின்னர் வாலிபருக்கு தண்ணீர் கொடுத்து சிறிது நேரம் இளைப்பாற வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    • சேதமடைந்த காரை பார்த்த கிராம மக்கள், ராமகங்கா ஆற்றில் இருந்து அதனை வெளியே எடுத்தனர்.
    • உயிரிழந்தவர்கள் கூகுள் மேப்பை நம்பியிருந்ததாக உடலை வாங்க குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    சாலை வழியாக பயணம் செய்பவர்களில் பெரும்பாலானோர் செல்ல வேண்டிய இடத்தை சென்றடைய ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில உத்தர பிரதேசத்தில் இரண்டு சகோதரர்கள் உட்பட மூவருக்கு, அது ஒரு சோகமான முடிவை அளித்துள்ளது.

    நேற்று காலை பரேலியில் இருந்து படாவுன் மாவட்டத்தில் உள்ள டேடாகஞ்ச் நோக்கி சென்றபோது, ஜிபிஎஸ் மூலம் கார், பழுதடைந்த பாலத்தின் மீது ஏறி, ஃபரித்பூரில் 50 அடிக்கு கீழே ஓடும் ஆற்றில் கவிழ்ந்தது.

    சேதமடைந்த காரை பார்த்த கிராம மக்கள், ராமகங்கா ஆற்றில் இருந்து அதனை வெளியே எடுத்தனர். அப்போது காரில் இருந்த மூவரும் (இரண்டு சகோதரர்கள் உள்பட) உயிரிழந்ததை கண்டனர். விபத்து குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெள்ளத்தால் பாலத்தின் முன் பகுதி ஆற்றில் இடிந்து விழுந்தது. ஆனால் இந்த மாற்றம் ஜிபிஎஸ்-ல் புதுப்பிக்கப்படவில்லை. இதன் விளைவாக, தவறாக வழி நடத்தலால் இந்த விபத்து நடந்துள்ளதாக அப்பகுதி வட்ட அதிகாரி அசுதோஷ் சிவம் தெரிவித்தார்.

    உயிரிழந்தவர்கள் கூகுள் மேப்பை நம்பியிருந்ததாக உடலை வாங்க குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் பாலம் முழுமையடையாமல் கிடப்பதாலும், வரும் வாகனங்களை எச்சரிக்கும் வகையில் அப்பகுதியில் தடுப்புகள் ஏதும் இல்லாததாலும் துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

    நிர்வாகத்தின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், கட்டுமானத்தில் இருக்கும் பாலத்தில் பாதுகாப்பு தடைகள், எச்சரிக்கை பலகைகள் இல்லாதது ஆபத்தை அதிகரிக்கிறது, இது ஆபத்தான விபத்துக்கு வழிவகுத்தது என்று அசுதோஷ் சிவம் கூறினார்.

    • நீண்ட தூரம் சென்றும் நெடுஞ்சாலை வராமல், ஒரே வனப்பகுதியாக இருப்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • 4 பேரும் காருடன் பெலகாவி மாவட்டம் கானாபுரா தாலுகா மதிகுன்சி வனப்பகுதியில் சிக்கி தவித்தது தெரியவந்தது.

    'கூகுள் மேப்' பார்த்து வாகனங்களில் செல்வோர் திக்குதெரியாமல் வழிதவறி செல்லும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் உத்தரபிரதேசத்தில் 'கூகுள் மேப்' பார்த்து பயணித்த கார் புதியதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது. இதில் 3 பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

    அதுபோல் கர்நாடகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பக்தர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டரில் 'கூகுள் மேப்' பார்த்து சென்ற போது நடுக்காட்டில் சேற்றில் சிக்கி தவித்தார். அவரை போலீசார் மீட்டனர்.

    அந்த வரிசையில் 'கூகுள் மேப்' பார்த்து காரில் சென்ற ஒரே குடும்பத்தில் 4 பேர் நடுக்காட்டில் சிக்கி தவித்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு கோவாவுக்கு சுற்றுலா செல்ல காரில் புறப்பட்டு பெலகாவி வழியாக வந்தனர். அதில் பெண்கள் உள்பட 4 பேர் இருந்தனர். அவர்களுக்கு கோவாவுக்கு செல்ல வழி தெரியவில்லை. இதனால் அவர்கள் கூகுள் மேப்பில் வழிபார்த்து கோவா நோக்கி காரில் சென்றனர்.

    இந்த நிலையில் நள்ளிரவில் கூகுள் மேப் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டு அவர்களுக்கு தவறான வழியை கூறியுள்ளது. ஆனால் இதை அறியாத அவர்கள் காரை வனப்பகுதி வழியாக ஓட்டிச் சென்றுள்ளனர். நீண்ட தூரம் சென்றும் நெடுஞ்சாலை வராமல், ஒரே வனப்பகுதியாக இருப்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வனப்பகுதிக்குள் 10 கிலோ மீட்டர் தூரம் சென்றுள்ளனர்.

    நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் சாலை தெரியாததால் அவர்களால் மீண்டும் வெளியே வர முடியவில்லை. இதன் காரணமாக திக்கு தெரியாமல் அவர்கள் நடுக்காட்டில் சிக்கி தவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் பெலகாவி போலீஸ் உதவி மையத்துக்கு போன் செய்து சம்பவம் பற்றி கூறி, தங்களுக்கு உதவ கோரினர். அதன்பேரில் போலீசார் ஒரு காரில் அவர்களை தேடி சென்றனர். அப்போது 4 பேரும் காருடன் பெலகாவி மாவட்டம் கானாபுரா தாலுகா மதிகுன்சி வனப்பகுதியில் சிக்கி தவித்தது தெரியவந்தது.

    உடனே அவர்களை தேடி அந்த வனப்பகுதிக்குள் போலீசார் தேடிச் சென்றனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அவர்கள் காரை போலீசார் நேற்று காலை தான் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை மீட்டு கோவா செல்லும் சாலைக்கு அழைத்து வந்தனர். அவர்கள், போலீசாருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். அதன் பிறகு ஆந்திரா சுற்றுலா பயணிகள் அதே காரில் கோவா நோக்கி சென்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    ×