search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தே பாரத் ரெயில்"

    • கிழக்கு இந்தியாவில் ரெயில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியமும் வளர்ச்சி அடையும்.
    • ரெயில்வே இணைப்பு நெட்வொர்க்கில் 100 சதவீதம் மின்மயமாக்கல் உள்ள மாநிலங்களில் ஜார்கண்ட் ஒன்றாகும்.

    ராஞ்சி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் சென்றார். ராஞ்சியில் அவர் 6 புதிய வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.

    டாடாநகர்-பாட்னா, பிரம்மபூர்-டாடாநகர், ரூர்கேலா-அவுரா, தியோகர்-வாரணாசி, பாகல்பூர்-அவுரா, கயா-அவுரா ஆகிய 6 புதிய வந்தே பாரத் ரெயில்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    அங்குள்ள டாடாநகரில் இருந்து பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் அங்கு செல்ல முடியவில்லை. இதை தொடர்ந்து ராஞ்சியில் இருந்து காணொலி வாயிலாக 6 புதிய வந்தே பாரத் ரெயில்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து மோடி ரூ.660 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தின் கீழ் 32 ஆயிரம் பயனாளிகளுக்கு அனுப்பி கடிதங்கள் வழங்கினார். மேலும் வீடுகள் கட்டுவதற்கு முதல் தவணையாக ரூ.32 கோடியை விடுவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

    6 புதிய வந்தே பாரத் ரெயில்கள், திட்டங்கள் ரூ.650 கோடி, இணைப்பு மற்றும் பயண வசதிகள் விரிவாக்கம், மற்றும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு ஆகிய திட்டங்களுக்காக ஜார்கண்ட் மக்களை நான் வாழ்த்துகிறேன்.

    ஜார்கண்ட் வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. ஆனால் தற்போது பல திட்டங்களால் இங்கு முன்னேற்றம் காண முடிகிறது. பழங்குடியினர், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், தலித்துகள் ஆகியோரின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

    கிழக்கு இந்தியாவில் ரெயில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியமும் வளர்ச்சி அடையும். ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரெயில்வே மேம்பாட்டுக்கான பட்ஜெட் ரூ.7000 கோடி ஆகும். இதை 10 ஆண்டுகளுக்கு முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இது 16 மடங்கு அதிகம்.

    ரெயில்வே இணைப்பு நெட்வொர்க்கில் 100 சதவீதம் மின்மயமாக்கல் உள்ள மாநிலங்களில் ஜார்கண்ட் ஒன்றாகும். 50-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு மோடி பேசினார்.

    இதை தொடர்ந்து பிரதமர் மோடி ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து ஜாம்ஷெட்பூருக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார். அங்கு நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

    அவர் நாளை குஜராத் மாநிலத்திற்கும், நாளை மறுநாள் ஒடிசாவுக்கும் சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    • வந்தே பாரத் ரெயில் வருகிற 18-ந்தேதி முதல் வாரத்தில் 3 நாட்கள் இயங்க உள்ளது.
    • சாதாரண சேர் கார் பெட்டியில் 478 இருக்கைகளும், எக்சிக்கியூட்டிவ் கிளாசில் 52 இருக்கைகளும் உள்ளன.

    பெங்களூரு:

    நாட்டின் அதிவேக ரெயில் சேவையான வந்தே பாரத் ரெயில் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கர்நாடகத்தை பொறுத்தவரை சென்னை-மைசூரு, பெங்களூரு-தார்வார், பெங்களூரு-மதுரை, பெங்களூரு-கோவை, மங்களூரு-கோவா உள்ளிட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடகர்நாடக மாவட்டமான உப்பள்ளியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-புனே இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் உப்பள்ளி-புனே வந்தேபாரத் ரெயிலின் தொடக்க விழா நாளை (திங்கட்கிழமை) நடக்க உள்ளது.

    இந்த ரெயில் சேவையை நாளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். இந்த வந்தே பாரத் ரெயில் புனேயில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும். தொடக்க விழாவில் இந்த ரெயில் மிரஜ், பெலகாவி, தார்வார் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த வந்தே பாரத் ரெயில் வருகிற 18-ந்தேதி முதல் வாரத்தில் 3 நாட்கள் இயங்க உள்ளது.

    அதாவது உப்பள்ளி-புனே இடையே புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், புனே-உப்பள்ளி இடையே வியாழன், சனி, திங்கட்கிழமைகளிலும் இயங்க உள்ளது.

    எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-புனே வந்தேபாரத் ரெயில் (வண்டி எண்: 20669) உப்பள்ளியில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு புனேயை சென்றடையும். மறுமார்க்கமாக புனே-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி வந்தே பாரத் ரெயில் (20670) புனேயில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும். இந்த ரெயிலின் பயண நேரம் 8½ மணி நேரம் ஆகும்.

    இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் தார்வார், பெலகாவி, மிரஜ், சாங்கிலி, சத்தாரா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த வந்தே பாரத் ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண சேர் கார் பெட்டியில் 478 இருக்கைகளும், எக்சிக்கியூட்டிவ் கிளாசில் 52 இருக்கைகளும் உள்ளன.

    இந்த தகவலை தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • மும்பை- கோலாப்பூர் இடையே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • நாக்பூர்-செகந்திரபாத், புனே-ஹுப்ளி இடையேயும் 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

    மும்பை:

    மும்பையில் இருந்து புனே, ஷீரடி, சோலாப்பூர், குஜராத் மாநிலம் காந்திநகர், அகமதாபாத் மற்றும் கோவா இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 6 வந்தே பாரத் ரெயில்கள் இயங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 7-வதாக மும்பை-கோலாப்பூர் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதுபற்றி மத்திய ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தற்போது மும்பை- கோலாப்பூர் இடையே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சுமார் 518 கி.மீ. தூரத்தை 10 மணி நேரத்தில் கடந்து செல்கிறது. இந்த வழித்தடத்தில் விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக பயண நேரம் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

    இது தொடர்பான சரியான அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. புனே-மிராஜ் இடையே இரட்டை ரெயில் வழிப்பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்ற பின்னர் அந்த வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்படும்.

    மேலும் நாக்பூர்-செகந்திரபாத், புனே-ஹுப்ளி இடையேயும் 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ரெயில் சேவைகளை தொடங்குவதற்கான முறையான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • ரெயில் இரு மாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை தவிா்த்து மற்ற நாட்களில் இயக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் சென்னை சென்ட்ரல்-மைசூரு, சென்னை சென்ட்ரல்-கோவை, சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, எழும்பூா்-திருநெல்வேலி, கோவை-பெங்களூரு என மொத்தம் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், மதுரை-பெங்களூரு மற்றும் எழும்பூா்-நாகா்கோவில் இடையே வந்தே பாரத் ரெயில்கள் இன்று (31-ந் தேதி) முதல் இயக்கப்படும் என்று ரெயில்வே அறிவித்தது.

    ரெயில்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ரெயில் சேவைகளை தொடங்குவதற்கான முறையான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


    சென்னை எழும்பூா்-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் மீரட்-லக்னோ ஆகிய 3 வழித் தடங்களில் 'வந்தே பாரத்' ரெயில்களை பிரதமா் மோடி டெல்லியில் இருந்து இன்று (சனிக்கிழமை) காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

    அதேசமயம், சென்னை சென்ட்ரலில் இருந்து கவர்னர் ஆா்.என் ரவி, மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத் துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோா் எழும்பூா்-நாகா்கோவில் இடையே இயங்கும் வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

    இந்த ரெயில் தொடக்க நாளில் மட்டுமே சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும். மற்ற நாட்களில் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

    மதுரையில் இருந்து மத்திய ரெயில்வேதுறை இணை மந்திரி வீ.சோமண்ணா மதுரை-பெங்களூரு இடையே இயங்கும் வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைத்தாா்.

    இந்த ரெயில்கள் இன்று தொடங்கப்பட்டாலும் வருகிற 2-ந்தேதி முதல்தான் வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இதற்காக முன்பதிவுகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.


    எழும்பூரில் இருந்து நாகா்கோவில் செல்ல இருக்கை வசதி கொண்ட குளிா்சாதனப் பெட்டியில் பயணிக்க (ஏசி சோ் காா்) நபா் ஒருவருக்கு ரூ.1,760, சொகுசு பெட்டியில் பயணிக்க (எக்சிகியூட்டிவ் சோ் காா்) நபா் ஒருவருக்கு ரூ.3,240 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    மறுமாா்க்கமாக ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,735, எக்சிகியூட்டிவ் சோ் காா் இருக்கைக்கு ரூ.3,220 கட்டணம் நிா்ணயக்கப்பட்டு உள்ளது.

    மதுரையில் இருந்து பெங்களூரு செல்ல ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,575, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.2,865 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,740, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.3,060 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்தக் கட்டணத்தில் உணவு மற்றும் சிற்றுண்டிக்கான கட்டணங்களும் உள்ளடங்கும்.

    எழும்பூா்-நாகா்கோவில் ரெயில் காலை 5 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கமாக இந்த ரெயில் (எண் 20628) நாகா்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும்.

    மதுரை-பெங்களூரு ரெயில் (எண் 20671) காலை 5.15 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கமாக இந்த ரெயில் (எண் 20672) பெங்களூரில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் இரு மாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை தவிா்த்து மற்ற நாட்களில் இயக்கப்படும்.


    • வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகள் உதவும்.
    • கோவில் நகரம் மதுரை, ஐடி நகரம் பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை.

    வந்தே பாரத் ரெயில்கள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகள் உதவும்.

    புதிய வந்தே பாரத் ரெயில் சேவையால் தொழில்கள் வளரும். வேலைவாய்ப்புகள் பெருகும்.

    கோவில் நகரம் மதுரை, ஐடி நகரம் பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை பெருமிதம் என கூறினார்.

    இதைத்தொடர்ந்து சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    • மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • 2 வந்தே பாரத் ரெயிலை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து மைசூரு, சென்டிரலில் இருந்து கோவை, சென்டிரலில் இருந்து விஜயவாடா, எழும்பூரில் இருந்து நெல்லை மற்றும் கோவை-பெங்களூரு என 5 ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ் செல்வன் கூறும்போது, 'நாகர்கோவில்-சென்னை எழும்பூர், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையில் இயக்கப்பட உள்ள 2 வந்தே பாரத் ரெயிலை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது' என்றார்.

    இதன்படி வருகிற 31-ந் தேதி டெல்லியில் இருந்தவாறு பிரதமர் மோடி இந்த 2 ரெயில்களையும் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதிய வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை மொத்தம் 742 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். இந்த ரெயில் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ்க்கு அடுத்தபடியாக இந்த பாதையில் இயக்கப்படக்கூடிய வேகமான ரெயிலாக இது இருக்கும்.

    தற்போது இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 11 மணி நேரம் 35 நிமிடங்களும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 11 மணி நேரம் 50 நிமிடங்களும் பயணம் செய்கிறது. ஆனால் வந்தே பாரத் 8 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணத்தை முடிக்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.

    • பராமரிப்பு காரணமாக ரெயில் சேவைகளின் தொடக்கம் தள்ளிவைக்கப்பட்டது.
    • வந்தே பாரத் ரெயில் அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன.

    சென்னை:

    சென்னை-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பல மாதங்களாகிவிட்டது.

    இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து கடந்த ஜூன் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்குவதாக இருந்தது.

    பிரதமா் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும் தமிழகத்துக்கு 2 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

    ஆனால், மேற்கு வங்காளத்தில் ஜூன் 17-ந்தேதி நிகழ்ந்த மோசமான ரெயில் விபத்து மற்றும் சென்னை, தாம்பரம், மதுரையில் ரெயில் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த 2 ரெயில் சேவைகளின் தொடக்கம் தள்ளிவைக்கப்பட்டது.

    மேலும் நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்கான வழித்தடம் கண்டறியப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. இந்த புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் ரெயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

    இது குறித்து ஐ.சி.எப். அதிகாரி ஒருவா் கூறியதாவது:-

    சென்னை பெரம்பூா் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தற்போது வரை 70 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 51 ரெயில்கள் இயக்கத்திலும், 9 ரெயில்கள் அவசர தேவைக்காகவும் உள்ளன. மேலும், 10 வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்குத் தயாா் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவா் கூறினார்.

    இந்த நிலையில் சென்னை-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவைகள் அடுத்த (செப்டம்பா்) மாதம் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்கு அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன. ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்.

    தற்போது ராமேசுவரம் புதிய பாம்பன் பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அதன் திறப்பு விழாவை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைக்க உள்ளதால், இதனுடன் சோ்த்து புதிய வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விரைவில் இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் வெளியாகும்' என்றனர்.

    • ரெயில் பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பட்டு புகை முழுவதும் வெளியேற்றப்பட்டது.
    • இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து மைசூரு செல்லும் வந்தே பாரத் ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை கடந்து சென்றபோது ரெயிலில் இருந்த பயணியின் செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    வந்தே பாரத் ரெயிலின் C11 பெட்டியில் பயணித்த குஷ்நாத்கர் என்பவர் செல்போன் சார்ஜ் போட்டிருந்தபோது திடீரென வெடித்தது.

    செல்போன் வெடித்து புகை வந்ததால் பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது.

    பின்னர் ரெயில் பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பட்டு புகை முழுவதும் வெளியேற்றப்பட்டது.

    பயணிகளுக்கு எந்தபாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் சுமார் 35 நிமிடங்கள் காலதாமதமாக வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் சார்ஜ் போட்டபோது செல்போன் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செல்போன் வெடித்து வடமாநில வாலிபர் படுகாயம்.
    • ரெயில் 35 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.

    ஜோலார்பேட்டை:

    சென்னை-மைசூரு செல்லும் வந்தே பாரத் ரெயில் இன்று காலை 8 மணி அளவில் வாணியம்பாடி அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது ரெயிலில் பயணம் செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த குஷ்நாத்கர் (வயது 31) என்பவர், தனது செல்போனை சார்ஜ் போட்டபடி பயன்படுத்தி வந்தார். திடீரென செல்போன் சூடாகி, பயங்கர சதத்துடன் வெடித்து சிதறியது. இதில் படுகாயம் அடைந்த வடமாநில வாலிபர் வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டார்.

    செல்போன் வெடித்த போது புகை கிளம்பியதால் அந்த பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டதால், ரெயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று, 2 ரெயில் பெட்டிகளின் பிரதான கதவுகளைத் திறந்து புகையை அகற்றினர்.

    இதன்பிறகு ரெயில் 35 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அந்த சண்டையை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
    • சக பயணிகள் பணியாளருக்கு ஆதரவாக அந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    வந்தே பாரத் விரைவு ரெயிலில் பயணி ஒருவர் உணவு பரிமாறும் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

    வந்தே பாரத் ரெயிலில் சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவு பரிமாறியதாக பணியாளரிடம் வயதான பயணி ஒருவர் சண்டை போட்டுள்ளார். அப்போது அந்த பணியாளரை கோவத்தில் அந்த பயணி அறைந்துள்ளார்.

    அந்த சண்டையை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், வந்தே பாரத் பணியாளரிடம் பயணி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதே சமயம் சக பயணிகள் பணியாளருக்கு ஆதரவாக அந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    பணியாளர் ஒருவர் தவறுதலாக உணவு பரிமாறியதற்காக அவரை அடிப்பீர்களா என்று நெட்டிசன்கள் இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பணியாளருக்கு ஆதரவாக சக பயணிகள் பேசியதையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    • 3,515 ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.
    • தற்போது வந்தே பாரத் ரெயில்களில் 8 அல்லது 16 பெட்டிகள் உள்ளன.

    சென்னை:

    அதி நவீன சொகுசு மற்றும் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலான வந்தே பாரத் சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தமிழகத்திலும் 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    2018 முதல் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரித்து வரும் ஐ.சி.எப். இதுவரையில் 70 ரெயில்களை தயாரித்து உள்ளது. 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் சுமார் 75 ஆயிரம் பெட்டிகளை தயாரித்துள்ளது.

    இந்த நிதியாண்டில் 1,536 எல்.எச்.பி. பெட்டிகள் மற்றும் 650-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் உட்பட 3,515 ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    தற்போது 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்கு பெட்டிகள் தயாராக உள்ளன. அவற்றை விரைவில் இயக்கவும் எந்த நகரங்களுக்கு அவை செல்கிறது என்பதும் ரெயில்வே வாரியம் தீர்மானிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    16 பெட்டிகளை கொண்ட இந்த ஆரஞ்சு நிற ரெயில்களின் இறுதி ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுபற்றி ஐ.சி.எப். அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களை ரெயில்வே வாரியம் முடிவு செய்யும்.

    தற்போது வந்தே பாரத் ரெயில்களில் 8 அல்லது 16 பெட்டிகள் உள்ளன. எதிர் காலத்தில் 20 மற்றும் 24 பெட்டிகளுடன் இயக்கப்படும். வந்தே பாரத் மெட்ரோவின் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

    • இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இந்த பிரச்சனை குறித்து பல பயணிகள் புகார் அளித்தனர்.
    • இந்த புகார் தொடர்பாக வடக்கு ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

    டெல்லியில் இருந்து வாரணாசிக்கு சென்ற வந்தே பாரத் ரெயிலில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இந்த பிரச்சனை குறித்து பல பயணிகள் புகார் அளித்தனர்.

    இந்த புகார் தொடர்பாக வடக்கு ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இந்த நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கலாம். பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று பதிவிட்டுள்ளது.

    இருப்பினும் ரெயிலில் நீர் ஒழுகும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து நெட்டிசன்கள் ரெயில்வேத்துறையின் அலட்சியத்தை விமர்சித்து வருகின்றனர்.

    ×