என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக சட்டசபை தேர்தல்"

    • 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்போடு விஜய் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
    • 2 அணிகளுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 3-வது அணியும் களம் காண்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

    தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள விஜய் தேர்தலை சந்திக்க முழு வீச்சில் தயாராகி வருகிறார்.

    இதற்கு முன்னோட்டமாக கடந்த ஆண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தனது கையால் பரிசு வழங்கி வருகிறார்.

    இந்த ஆண்டும் அதற்கான விழா வருகிற 28-ந் தேதியும், அடுத்த மாதம் 3-ந்தேதியும் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    விஜயின் இந்த உதவி மற்றும் பாராட்டு எதிர்கால இளம் வாக்காளர்களாகிய மாணவ-மாணவிகளின் மத்தியிலும், அவர்களது பெற்றோர்களின் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்கு தகுதிவாய்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் பலரும் விஜயின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இதையெல்லாம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்போடு விஜய் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.


    தமிழக அரசியல் களத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் உள்ளன.

    இந்த 2 அணிகளுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 3-வது அணியும் களம் காண்கிறது. இந்த அணிகளுக்கெல்லாம் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லட்சக்கணக்கான ரசிகர்கள், பெண்கள் மற்றும் பொதுவான வாக்காளர்கள் என பலதரப்பட்டவர்களும் விஜயின் அரசியல் வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    இதுவே வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயின் வெற்றிக்கு கை கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்களும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதுபோன்ற வாக்காளர்களால் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 20 சதவீதம் அளவுக்கு வாக்குகளை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் விஜய் கைகோர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் விஜய்யும், சீமானும் ஒன்று சேர்ந்து தேர்தலில் சந்தித்தால் அது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இப்படி தமிழக வெற்றிக் கழகமும், நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அது நிச்சயம் திராவிட கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான புதிய கூட்டணியாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் 28 சதவீத வாக்குகளை பெற்று இந்த புதிய கூட்டணி ஆட்சியை கைப்பற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்கள் அரசியல் களத்துக்கு புதியவர்கள். இதனால் அனுபவம் வாய்ந்த பலரையும் விஜய் தனது அரசியல் பயணத்துக்கு துணையாக சேர்த்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் சீமானின் அரசியல் அனுபவம் விஜயின் தேர்தல் வெற்றிக்கு நிச்சயம் உதவும் என்றும் கூறப்படுகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி அமைப்பதற்கு அ.தி.மு.க. பெரிதும் விரும்பியது. ஆனால் சீமான் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று தெரிவித்துள்ள விஜய் புதியவர்களோடு சேர்ந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.

    எனவே விஜயுடனான கூட்டணி என்பதில் சீமானுக்கும் எந்தவித சங்கடத்தையும் ஏற்படுத்தாது என்பதே நாம் தமிழர் கட்சியினரின் கருத்தாக உள்ளது.

    இப்படி இருவரும் கைகோர்த்தால் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்படத் தொடங்கி உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலில் சரியாக கூட்டணி அமைக்காததே நாம் தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று பெரும்பாலான நிர்வாகிகள் குற்றம் சாட்டினார்கள்.
    • கூட்டணி பற்றிய கவலையை விட்டு விட்டு ஒற்றுமையோடு பணியாற்றுங்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி அன்று தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல் நாள் அன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

    2-வது நாளான நேற்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    3-வது நாளான இன்று காலையில் முதலில் அரக்கோணம் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகளுடனும், பின்னர் தஞ்சை தொகுதி நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளின் கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் 11.45 மணியளவில் முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்சியின் வளர்ச்சி பணி பற்றியும் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்தும் எடப்பாடி பழனிசாமி முன்னணியில் காரசாரமான கருத்துக்களை தெரிவித்தார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் சரியாக கூட்டணி அமைக்காததே நாம் தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று பெரும்பாலான நிர்வாகிகள் குற்றம் சாட்டினார்கள். பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் பிரசாரம் செய்ததும் கட்சியினர் ஒருங்கிணைப்பு இல்லாததும் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்று நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இதற்கு பதிலளித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ற வகையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அப்போது தான் அவர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள். 2026 -ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் இப்போதே அனைவரும் பணியாற்ற தொடங்கி விடுங்கள்.

    அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையாமல் அப்படியே தான் உள்ளது. எனவே தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வெற்றி பெற வேண்டும் என்று பணியாற்றுங்கள். தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பெண் வாக்காளர்களும் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அதனை பயன்படுத்தி வருகிற சட்டசபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். கூட்டணி பற்றி இங்கு பலரும் குறிப்பிட்டு பேசினீர்கள். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வெற்றி வியூகத்தை நான் அமைத்து வைத்திருக்கிறேன்.

    எனவே நிச்சயம் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அதனால் கூட்டணி பற்றிய கவலையை விட்டு விட்டு ஒற்றுமையோடு பணியாற்றுங்கள். மாவட்ட நிர்வாகிகள் சிலர் கீழ் மட்டத்தில் உள்ள கட்சியினரை மதிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் சில இடங்களில் உள்ளன. அவற்றையெல்லாம் சரி செய்து மாவட்ட செயலாளர் கூறும் தொகுதியில் உள்ள முன்னணி நிர்வாகிகளும் கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அரக்கோணம் மாவட்ட செயலாளரான ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

    23 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வில் நடைபெறும் இந்த நேர்காணல் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் நேர்காணலாக அமைந்துள்ளது.

    1999-ம் ஆண்டு அப்போது கட்சியை வழி நடத்திய ஜெயலலிதா இதைபோன்று நேர்காணல் நடத்தினார். அதன் பின்னர் 2001-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.

    அதேபோல வருகிற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவது உறுதி. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 அமாவாசைகள் உள்ளன. இன்று நடந்த நேர்காணலின் போது எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனக்கூறி எங்கள் அனைவருக்கும் பூஸ்ட் கொடுத்துள்ளார். எனவே அ.தி.மு.க. வினர் உற்சாகமாக பணியாற்றி எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் அனைவரும் மறந்து விட்டோம்.
    • 2026-சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.

    மதுரை:

    மதுரையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கே.கே.நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனுபவி ராஜா அனுபவி, இருக்கும்போதே அனுபவி என ஆட்சியில் இருக்கும் போதே அனைத்தையும் அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம். மக்கள் வறுமையிலும், வறட்சியிலும் இருந்தபோது தள்ளாத வயதில் மானாட மயிலாட பார்த்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று சைக்கிள் ஓட்டி விளம்பரம் செய்கிறார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு தனது மகனோடு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெண் அதிகாரியான மாவட்ட கலெக்டரை இருக்கையில் இருந்து எழ வைத்திருக்கிறார். இந்த ஆட்சியில் அதிகாரிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

    உலகத் தமிழ் மாநாடு தி.மு.க. நடத்திய போது உலகத்திலிருந்து வந்த அறிஞர்கள் எல்லாம் கீழே அமர வைக்கப்பட்டார்கள். கலைஞர் குடும்பம் மட்டும் மேடையில் அமர வைக்கப்பட்டார்கள். அனுபவிக்கிறார்கள், அனுபவிக்கட்டும். இன்னும் ஒரு வருடம் தான். அதற்கடுத்து மக்கள் இவர்களை எங்கே வைப்பார்கள் என்று தெரியாது. ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் அனைவரும் மறந்து விட்டோம்.

    எம்.ஜி.ஆரை யாரும் வென்றது கிடையாது. கடவுளை யாரும் கண்டது கிடையாது. 2026-சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுபான்மையின மக்களின் வாக்குகளை குறிவைத்து கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. தனியாக நின்றது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் தமிழகத்தில் என்ன மாற்றம் நடந்து விடப்போகிறது.

    மதுரை:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரை வருகை தந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூரில் பேசுகையில் திருப்பதி சென்றால் ஒரு நாள் முழுவதும் காத்திருக்கிறார்கள். இங்கே சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய முடியாதா? என்று தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் லட்சணம் இதிலிருந்தே தெரிகிறது.

    பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகிறது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சவுகரியங்களை கோவில் வளாகத்தில் ஏற்படுத்த வேண்டும். 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை இருக்காது. தி.மு.க. ஆட்சி இன்னும் 15 அமாவாசைகள் தான் தாங்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கும் வரை எத்தனை அமாவாசை வரும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். ஐந்து முறை ஆண்ட கட்சியான அ.தி.மு.க., அண்ணாமலை சொன்னதால்தான் கூட்டணி முறிவு ஏற்பட்டது என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன். சிறுபான்மையின மக்களின் வாக்குகளை குறிவைத்து கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. தனியாக நின்றது.

    தி.மு.க. மீது பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தால் மக்களின் கோபம் தெரியும். வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்த சமய அறநிலையத்துறையை அகற்றுவோம் என்ற எங்களது கருத்துக்கு எத்தனை கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் என்று தெரியவில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கொள்கை ரீதியில் இணையும் கட்சியுடன் தேர்தலை சந்திக்க உள்ளோம். பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பேசியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின்போது 36 பக்க வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அமைச்சர்கள் கண், காதுகளை திறந்து வைத்து பார்க்க வேண்டும். பிப்ரவரி மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் தமிழகத்திற்கு பெரிய அளவிலான திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கப்படும். ஆனால் வேண்டுமென்றே இவர்கள் ஆட்சியினுடைய லட்சணத்தை மறைப்பதற்காக தினமும் மத்திய அரசின் மீது குறை சொல்வதை மட்டுமே ஒரு முழு நேர வேலையாக தி.மு.க. செய்து வருகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் தமிழகத்தில் என்ன மாற்றம் நடந்து விடப்போகிறது. இடைத்தேர்தல், இடைத்தேர்தலுக்கு இடைத்தேர்தல், இப்போது ஒரு தேர்தல் என ஐந்து வருடத்தில் நான்கு முறை மக்கள் வாக்களித்தால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் குறையும், தேர்தலால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

    பிரதமர் தமிழகம் வரும் போது, முதலமைச்சர் போட்டி போட்டுக்கொண்டு சந்திக்கிறார். இந்த சந்திப்பு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அரசின் மீது இருக்கும் வெறுப்பை மறைப்பதற்காகவே கவர்னரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். கவர்னர் குறித்து அவதூறாக தி.மு.க.வினர் போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியே கூறியிருக்கிறார். பா.ஜ.க. நிர்வாகிகள் மீது போலீசார் வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீட் குறைந்தாலும் மு.க. ஸ்டாலின்தான் ஆட்சி அமைப்பார்.
    • முக்கியமாக புகழ்ந்து பேசுபவர்களை அருகில் வைத்து கொள்ளாதீர்கள்.

    கேரள மாநிலம் ஸ்ரீசூரிய மங்கலம் ஸ்ரீ பகளா முகி தேவி கோவில் குருஜி ஜோதிடப்படி 2026-ல் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்று கணித்து கூறியிருக்கிறார். அதை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பிரபலமான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஜாதகங்களை சேர்த்து அஷ்டமங்கள பிரசன்னமும் பார்த்த பலன்களைத்தான் சொல்கிறேன்.

    தி.மு.க. ஜாதகப்படி 2026 அக்டோபர் மாதம் வரை சுக்கிர திசை நடக்கிறது. சுக்கிரன் லக்னத்தோடு 11-ம் இடத்தில் இருக்கிறது. ஆட்சி எப்படி கையில் வந்தது என்றால் 2021 மே மாதத்தில் சனி புத்திகாலமாக இருந்தது. அதுவும் சுக்கிரனோடு 11-ம் இடத்தில் இருந்ததால் அதிகமான சீட் வாங்கி ஆட்சி அமைக்க முடிந்தது.

    2025 ஆகஸ்டு முதல் 2026 அக்டோபர் மாதம் வரைக்கும் சுக்கிர திசை காலத்தில் கேது புத்திகாலமாகும். தசாநாதனோடு 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் இருக்கிறது. சனி பார்வை, செவ்வாய் பார்வை உள்ளது.

    கேது புத்தி காலத்தில் தேர்தல் வருவதால் நிச்சயமாக மறுபடியும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும். ஆனால் சீட் குறையும். கூட்டணியில் சில கட்சிகள் வெளியே போகும். சில கட்சிகள் உள்ளே வரும்.



    சீட் குறைந்தாலும் மு.க. ஸ்டாலின்தான் ஆட்சி அமைப்பார். அந்த ஆட்சி காலம் முடிவதற்குள் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

    அ.தி.மு.க.வுக்கு சனி திசை காலம் நடக்கிறது. 6-ல் இருக்கும் சனி அவ்வளவு நல்லதல்ல. அதுமட்டுமல்ல மேடையில் ஏறி தலைவர்களெல்லாம் ஜெயலலிதா அம்மையாரை கடவுளுக்கு மேலாக புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் அந்த அம்மையாரின் ஆத்ம சாந்திக்கு ஏதாவது செய்தார்களா? கஷ்டமல்லவா? கட்சி இப்போதும் ஒவ்வொரு நாளும் சீரழிந்து கொண்டு தான் வருகிறது.

    அதற்கு காரணம் அந்த அம்மையாரின் ஆத்மாவுக்கு சாந்தி கிடைக்கவில்லை. இன்னமும் அந்த ஆத்மா அலைந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் மறைந்த பிறகு ஆட்சிக்கு வந்ததும் சாஸ்திர விதிப்படி அதை முதலில் செய்து இருக்க வேண்டும்.

    அம்மையார் ஆஸ்பத்திரியில் இருந்தபோது கோவில் கோவிலாக சென்றார்கள். ரோட்டில் வைத்து கூட ஹோமம் நடத்தினார்கள். அதெல்லாம் நாடகம்தான். அதனால் எந்த பலனும் கிடைக்காது. சாஸ்திர விதிப்படி, ஆத்ம சாந்தி நடத்தினால்தான் கட்சியில் ஒற்றுமை ஏற்படும்.

    அதில்லாமல் இப்போது நாங்கள் ஆட்சிக்கு வரலாம். தி.மு.க.வை கீழே இறக்கலாம் என்று நினைத்தால் எதுவும் நடக்காது. தி.மு.க.வுக்கும் கேது புத்தி நல்லதல்ல. ஆனால் அ.தி.மு.க. பலவீனமாக உள்ளது. அஷ்ட பிரசன்னபடியும் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். ஆனால் சீட் குறையும் அவ்வளவுதான்.

    அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலக்கத்தில் சீட்டுக்கு மேலாக போகாது. ஆத்ம சாந்தி செய்துவிட்டு இப்போது இருக்கும் தலைமையின் மைனசை மாற்ற வேண்டும். ஆனாலும் ஆட்சிக்கு வர முடியாது. சீட் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும்.

    என்ன மாதிரி கூட்டணி வைத்தாலும் மாற்றம் வராது. தி.மு.க.வினரை பார்த்து கடவுள் நம்பிக்கை கிடையாது என்கிறார்கள். நான் அதை நம்பவில்லை. அவர்களில் பலர் என்னிடம் வருகிறார்கள். பரிகாரங்கள் செய்கிறார்கள். எனவே தி.மு.க.காரர்களெல்லாம் நாத்திகர்கள் என்பதும் மூடத்தனம்தான்.

    மறுபடியும் நாங்கள் தான் என்ற அகங்காரம் கூடாது. முக்கியமாக புகழ்ந்து பேசுபவர்களை அருகில் வைத்து கொள்ளாதீர்கள். உங்கள் மைனசை எடுத்து சொல்பவர்களை அருகில் வைத்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அருகருகே அமர்ந்தும் ராமதாஸ்- அன்புமணி பேசிக்கொள்ளவில்லை.
    • கடந்த மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலேயே இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது.

    சேலத்தில் இன்று நடந்த பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி பேசினார்.

    அப்போது, வரவிருக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களாக அன்புமணி கூறியதாவது:-

    நெக்ஸலிசம் என்று ஒன்று தமிழ்நாட்டில் இல்லாமல் போனதுக்கு காரணம் மருத்துவர் அய்யா. எவ்வளவோ இருக்கு.. பேசிக்கிட்டே போகலாம்... எவ்வளவு செய்தீர்கள் என்று மக்களுக்கு சொல்லலாம் என்றார்.

    அப்போது ஒரு நிர்வாகியின் பெயரை குறிப்பிட்டு உன்னையும் தான் சேர்த்து சொல்றேன். உன் தொகுதியில வாங்குனியே ஓட்டு... உட்காரு. 52ஆயிரம் ஓட்டு வாங்குன தொகுதி அதெல்லாம். இது எல்லாருக்கும் தான் சொல்றேன். 10 மாதம் தான் இருக்கு... களத்துல இறங்கணும். வெறி வரணும். கோபம் வரணும்... என்றார் மீண்டும் அதே நிர்வாகியிடம் வருமா? என கேட்டு பின், உன் முகத்த பார்த்தா வெறி வர மாதிரி தெரியலயே எனக்கு... களத்தில் இறங்குகள். இரண்டில் ஒன்று பார்த்துக்கலாம். என்று சொல்லிக்கொண்டு மற்றொரு நிர்வாகியின் பெயரை குறிப்பிட்டு என்ன கோவம் வந்துருச்சா என கேட்டார்.

    இதனிடையே, பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அருகருகே அமர்ந்தும் ராமதாஸ்- அன்புமணி பேசிக்கொள்ளவில்லை. கடந்த மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலேயே இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க. கள ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
    • சென்னை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி கள ஆய்வு நடக்கிறது.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழகத்தில் இன்று காலை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி வியூகம், அ.தி.மு.க. மேற்கொண்டு வரும் பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க. கள ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. சென்னை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி கள ஆய்வு நடக்கிறது. இது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், பா.வளர்மதி, மாதவரம் மூர்த்தி , ரமணா, அப்துல் ரஹீம், மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆதி ராஜாராம்,கே.பி. கந்தன்,பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, வி.என்.ரவி, சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன், தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், அலெக்சாண்டர், அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ, அண்ணா தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.. வி.எஸ்.பாபு, மைத்ரேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க தலைமை கழகத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். எடப்பாடியார் வாழ்க , வருங்கால முதல்வர் வாழ்க, என கோஷங்கள் எழுப்பினார்கள். கட்சி நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    • ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரம் வாக்காளர்களை கவர்வதற்காக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • தி.மு.க. இளைஞர் அணியினரும் தமிழக அரசின் சாதனைகளை சொல்லி தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    ஆளும் கட்சியான திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதனை மனதில் வைத்து தி.மு.க. தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மக்களை மீண்டும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரம் வாக்காளர்களை கவர்வதற்காக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு தலைமை தாங்குபவராக ஒருவர் இருப்பார். அவருக்கு கீழே 10 பேர் செயல்படுவார்கள்.

    இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில வீடுகளை கணக்கெடுத்து அந்த வீடுகளில் வசித்து வரும் ஆயிரம் வாக்காளர்களை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு குழுவினரிடமும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    இதன்படி இந்த 11 பேர் கொண்ட குழு தீவிரமாக களமிறங்கி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சென்று வாக்களிப்பவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களிடம் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மீண்டும் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள்.

    தமிழக அரசின் சாதனைகள் தொடர்வதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சி நீடிப்பதற்கும் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்பது போன்ற பிரசாரங்களை இப்போதே மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதே போன்று தி.மு.க. இளைஞர் அணியினரும் தமிழக அரசின் சாதனைகளை சொல்லி தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக ஒவ்வொரு பகுதிகளிலும் இளைஞரணி நிர்வாகிகளின் கூட்டத்தை போட்டு அவர்களுக்கு முக்கிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

    மாவட்ட செயலாளர்களின் ஆலோசனையின் பெயரில் தமிழகம் முழுவதும் இது போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    இளைஞர் அணியில் உள்ள இளம் வயது உடைய வாலிபர்கள் தங்களது பகுதிகளில் உள்ள இளம் வாக்காளர்களையும் பெண்கள், முதியவர்களையும் கவரும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி தி.மு.க. இளைஞர் அணியினர் பம்பரமாக சுழன்று பணியாற்றத் தொடங்கி இருக்கிறார்கள். இப்படி 2026-ம் ஆண்டு தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற கணக்கை போட்டு தி.மு.க. நிர்வாகிகள் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கி இருக்கிறார்கள்.

    இதன் மூலம் தி.மு.க. நிர்வாகிகள் முன்கூட்டியே சுறுசுறுப்புடன் தேர்தல் பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
    • நேற்றைய சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். இதையடுத்து கட்சி பணிகளில் தீவிர காட்டிவந்த விஜய் தவெக-வின் முதல் மாநில மாநாட்டில் பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    கட்சி தொடங்கியதில் இருந்து நடைபெற்ற எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பணிகளை விஜய் தீவிரப்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில், பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து, இன்று தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் 2-ம் நாளாக விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த ஆலோசனையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே திமுகவுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்து திமுகவின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளார். மேலும் தேசிய அளவில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது.
    • இன்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபைக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மேலும் அதற்கான வியூகங்கள் வகுக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. அரசியல் கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்திக்க உள்ள விஜய், தேர்தலை சந்திப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

    அதன்படி, நேற்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஒப்பந்தம் போட்டுள்ளார். இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து இன்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், விஜயை நேற்று சந்தித்து பேசிய பின்னர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நேற்றிரவு எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க.விற்காக பணி செய்ய சென்னை வந்துள்ள IPAC அணியினரையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போதைக்கு அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணியில் உள்ளது.
    • தேர்தலுக்கு முன்பு எது வேண்டுமானாலும் மாறலாம்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வரவுள்ள தேர்தலை எதிர்நோக்கி பலரும் காத்து உள்ளனர். இதற்கு நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பதே காரணம். விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பர், அவருக்கு மக்களின் ஆதரவு எந்தளவிற்கு இருக்கும் என பல கேள்விகள் எழுந்துள்ளது. இதனிடையே தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை விஜய் வகுத்து வருகிறார்.

    இந்த நிலையில், விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும் என்று விஜயகாந்தின் மகனும், பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டவருமான விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக விஜய பிரபாகரன் மேலும் கூறியதாவது:- விஜயகாந்த் 2005-ல் கட்சி தொடங்கி தேர்தலில் 12 சதவீத வாக்குகள் பெற்று அரசியலில் தன்னை நிரூபித்தார். அதே போல் விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும்.

    விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவருடன் கூட்டணி வைப்பதா இல்லையா என தேமுதிக முடிவு செய்யும். தற்போதைக்கு அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணியில் உள்ளது. தேர்தலுக்கு முன்பு எது வேண்டுமானாலும் மாறலாம் என்றார். 

    • தமிழ்நாட்டில் கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை மாற்றம் இல்லை.
    • அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்திருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா டுடே-சி வோட்டர் மூட் ஆப் தி நேஷன் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

    இந்த கருத்துக்கணிப்பின் படி, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வாக்குகள் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. பா.ஜ.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் 3 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் வாக்கு 3 சதவீதம் சரிந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.



    கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 18 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அ.தி.மு.க. கூட்டணி 23 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

    இந்த நிலையில், இப்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 5 சதவீதம் உயர்ந்து 52 சதவீதம் ஆக அதிகரித்திருக்கும்.

    பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வாக்குகள் 3 சதவீதம் அதிகரித்து 21 சதவீதம் ஆகி இருக்கும். அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்திருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியது. இதில் தி.மு.க. 22 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. இப்போது தேர்தல் வைத்தாலும் அதே நிலை தான் நீடிக்கும். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விஜய், 2026 சட்டசபை தேர்தலில் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் இருப்பார். பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் விஜய் கட்சி ஆகியவை இணைந்து ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே தி.மு.க.வுக்கு சவாலாக மாற முடியும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×