என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு யானைகள்"

    • வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகளவில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
    • 2 குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் சுற்றி திரிவது வழக்கம்.

    இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையையொட்டிய வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகளவில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

    அவ்வப்போது இந்த யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே சாலைகளில் செல்லும் போதும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறையும் அறிவுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று, 2 குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டன. அப்போது வாகனங்களின் சப்தத்தை கேட்டதாலும், அதிக மக்கள் இருந்ததாலும் யானைகள் ஓட்டம் பிடிக்க துவங்கின.

    இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு சிலா் அதிக கூச்சலிட்டு யானைகளை புகைப்படம் எடுத்தனா். இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச், தொண்டியாளம், இரும்புபாலம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. உப்பட்டியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் அம்ரூஸ்வளைவு அருகே குட்டிகளுடன் 4 காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன. சாலையில் நடந்து சென்றதோடு, வாகனங்களை வழிமறித்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

    மேலும் அருகே தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவ் தலைமையில், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மீண்டும் ஊருக்குள் நுழையாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • யானைகளை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.
    • சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக சென்று மண் பாதை வழியாக காட்டுக்குள் சென்றது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி குன்னுார் சுற்றுப்புற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றது.

    இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கெத்தை பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தது.

    இந்நிலையில் காட்டு யானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பியுள்ளது. கடந்த 2 தினங்களாக 6 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகிறது.

    சம்பவத்தன்று மாலை கோவையில் இருந்து பில்லூர் பகுதிக்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சை முள்ளி பிரிவு அருகே குட்டியுடன் காணப்பட்ட 5 காட்டு யானைகள் வழிமறித்தது. யானைகளை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.

    அப்போது மஞ்சூர் பகுதியில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் வாகனங்களும் காட்டு யானைகளை கண்டு ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது. காட்டு யானைகளை கண்ட பயணிகள் பீதி அடைந்து வாகனங்களுக்குள் அமர்ந்திருந்தனர்.

    இந்நிலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக சென்று மண் பாதை வழியாக காட்டுக்குள் சென்றது. இதன்பிறகே அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதேபோல் நேற்றும் அரசு பஸ் மற்றும் வாகனங்களை குட்டியுடன் வந்த காட்டு யானைகள் வழிமறித்தன. அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் சென்றதும், வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    மஞ்சூர்-கோவை சாலையில் காட்டுயானைகள் மீண்டும் நடமாடி வருகிறது. 2 குட்டிகளுடன் யானைகள் நடமாடுவதால் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். வழியில் யானைகள் எதிர்பட்டால் வாகனங்களை தொலைவிலேயே நிறுத்த வேண்டும். யானைகளை கண்டவுடன் கூச்சலிடுவது, வாகனங்களில் இருந்து இறங்கி செல்போன்களில் போட்டோ மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. யானைகள் சம்பவ இடத்தில் இருந்து வனப்பகுதிக்குள் செல்வதை உறுதி செய்த பிறகே வாகனங்களை எடுத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 3 யானைகளும் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • நேற்று இரவு யானைகளை மேலுமலை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அடித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி அருகே பனகமுட்லுவை ஒட்டிய வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டிருந்தன. அவை பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

    நேற்று முன்தினம் இரவு இந்த 3 யானைகளும் இடம் பெயர்ந்து குல்நகர் வழியாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் முகாமிட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 3 யானைகளும் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் டோல்கேட் அருகே சுற்றிதிரிந்தது.

    ஒரு பக்கம் ஆறு உள்ளதாலும், மறுபக்கம் தேசிய நெடுஞ்சாலை உள்ளதாலும் எந்த பக்கமும் செல்லாமல் யானை அலைந்து கொண்டு இருந்தது.

    நேற்று இரவு யானைகளை மேலுமலை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதி குடியுருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.

    • சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
    • நடுரோட்டில் துள்ளி விளையாடியதை பார்த்தது புது அனுபவமாக இருந்தது என்றனர்.

    கூடலூர்,

    முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி வனப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 2 காட்டு யானைகள் வந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பசுந்தீவனங்களை காட்டு யானைகள் தின்றது. சிறிது நேரத்தில் சாலையில் நின்றவாறு காட்டு யானைகள் விளையாடியது. இதனை சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் இருந்தவாறு கண்டு ரசித்தனர். மேலும் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, சாதாரணமாக சாலையோரம் வனவிலங்குகள் நடந்து செல்லும். ஆனால், திடீரென காட்டு யானைகள் நடுரோட்டில் துள்ளி விளையாடியதை பார்த்தது புது அனுபவமாக இருந்தது என்றனர்.

    • காந்தவயல் உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளளன.
    • நீர்த்தேக்கத்தில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட லிங்காபுரம், காந்தவயல் உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளளன.

    வனத்தில் இருந்து சிறுத்தை, காட்டுப்பன்றி, மான், குரங்கு, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு, விளைநிலங்களில் ஊடுருவி வருகின்றன.

    லிங்காபுரம்-காந்தவயல் இடையே பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதி உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க அடிக்கடி வந்து செல்வது வழக்கம். லிங்காபுரம்-காந்தவயல் இடையேயுள்ள உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் காந்தவயல், உலியூர், மேலூர், ஆளுர் ஆகிய கிராம மக்கள் போக்குவரத்திற்கு பரிசல், மோட்டார் படகில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை லிங்காபுரத்தில் இருந்து பரிசல் செல்லும் இடத்திற்கு செல்லும் சாலையில் 2 காட்டுயானைகள் நடமாடி வந்தன. இதையடுத்து வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் காட்டுயானைகள் வனப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. லிங்காபுரம்-காந்தவயல் சாலையின் இடையே காட்டுயானைகள் நடமாடி வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  

    • 3 காட்டு யானைகள் முகாமிட்டு விலை நிலங்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    • இரவு நேரங்களில் மீண்டும் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே யுள்ளது மாமரத்துப்பள்ளம்.

    ஒகேனக்கல் வனப்பகு தியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டு விலை நிலங்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    வனத்துறையினர் அந்த யானைகளை வனப்பகுதிக்கு விரட்டி விட்டாலும் இரவு நேரங்களில் மீண்டும் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சத்துடன் உள்ளனர்.

    யானைகள் வருவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
    • வன பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள வன பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டன.

    அப்பகுதியிலேயே சில நாள்கள் சுற்றித்திரிந்த யானைகள் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றன.

    இந்நிலையில், குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் டபுள்ரோடு, ரன்னிமேடு இடையே உள்ள தேயிலை தோட்டம், சோலைப் பகுதிகளில் பல்வேறு விதமான பழங்கள் விளைந்துள்ளன.

    இவற்றை உண்பதற்காக அப்பகுதியில் 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகள் சாலைக்கு வராமல் தடுக்க 6 போ் கொண்ட வன ஊழியா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

    இந்நிலையில் நேற்று இரவு ரன்னிமேடு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வாழைகளை சேதப்படுத்தி உள்ளது.

    டபுள் ரோடு அருகே முகாமிட்டுள்ள யானைகளை பட்டாசுகள் வெடித்தும், தகரங்களை தட்டியும் விரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த காட்டு யானைகள் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வருடந்தோறும் உணவு தேடி நீலகிரி மாவட்டம் பகுதிக்கு வருவது வழக்கம் தான்.

    இருப்பினும், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்

    • காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனக்குழுவினரிடம் கேட்டறிந்தார்.
    • தாசம்பட்டி வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்டியடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    பென்னாகம்,

    கர்நாடகா மற்றும் ஓசூர் வனப்பகுதிகளில் இருந்து வழி தவறிய மக்னா மற்றும் ஆண் யானை உள்ளிட்ட இரண்டு காட்டு யானைகள் தருமபுரி மாவட்டம் சஞ்சீவராயன் மலை வழியாக பிக்கிலி வனப்பகுதியை ஒட்டியுள்ள நாகதாசம்பட்டி அருகே தொட்டில்பள்ளம் கிராமப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ளது.

    இந்த இரண்டு காட்டு யானைகளும் இரவு நேரங்களில் தொட்டில் பள்ளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தொட்டில் பள்ளம் பகுதிக்கு வந்த வனத்துறையினர் பட்டாசு மற்றும் தகர பெட்டிகளைக் கொண்டு அதீத ஒலியின் எழுப்பியவாறு காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டியுள்ளனர். இவ்விரு யானைகளும் பகலில் வனப்பகுதியிலும், இரவு நேரங்களில் மீண்டும் கிராமப் பகுதிக்குள் நுழைகின்றது.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் கிராமப் பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பாலக்கோடு வனத்துறையின் சார்பில் வனவர்கள் முனுசாமி, கனகராஜ் ஆகியோருடன் 8 வனத்துறையினர் அடங்கிய குழுவினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினரின் நடவடிக்கைகளை உதவி வன பாதுகாப்பு அலுவலர் வில்சன் பார்வையிட்டு, காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனக்குழுவினரிடம் கேட்டறிந்தார்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்:- கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவ்விரு காட்டு யானைகளும் பாப்பாரப்பட்டி, சுரக்காய் பட்டி, மண்ணேரி, தாசம்பட்டி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் அடிக்கடி உணவு தேடி நுழைந்தது. காட்டு யானைகளை வனக் குழுவினர் தாசம்பட்டி வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    பின்னர் மீண்டும் நாகதாசம்பட்டி தொட்டில்பள்ளம் கிராம பகுதிக்குள் உணவு தேடி நுழைந்துள்ளது. தற்போது காட்டுயானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காட்டு யானைகளை மொரப்பூர் பீட் தாசம்பட்டி வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்டியடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் உணவு தேடி தொட்டில்பள்ளம் கிராம பகுதிக்குள் நுழைந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால் எவ்வித உயிரிழப்பு நிகழ்வதற்கு முன்பு

    வனத்துறையினர் யானைகளை மீண்டும் கிராமப் பகுதிக்குள் நுழையாதவாறு அடர் வனப்பகுதிக்கு கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் மின்வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • அதிகாலையில் யானைகள் முழுவதும் சென்ற பின்னர் கட்டிடத்தில் இருந்த 4 போலீஸ்காரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை மின்நிலையம். குந்தா அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக ராட்சத குழாய்கள் மூலம் இங்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதற்காக பென்ஸ்டாக் பகுதியில் சர்ஜ்சாப்(காற்று போக்கி) அமைக்கப்பட்டுள்ளது. குழாய் பராமரிப்பு பணிகளுக்கு செல்லும் ஊழியர்களின் பயன்பாட்டிற்கு வின்ச் உள்ளது.

    இந்த பகுதியில் வெளியாட்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசார் மின்வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சம்பவத்தன்று இரவு 4 போலீஸ்காரர்கள் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் வெளியில் இருந்து சத்தம் வந்தது.

    உடனடியாக போலீசார் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தனர். அப்போது வெளியே 2 குட்டிகளுடன் காட்டு யானைகள் நின்றிருந்தன.

    இதனால் அதிர்ச்சியான போலீஸ்காரர்கள் மின் விளக்குகளை அணைத்து விட்டு போலீஸ் கண்ட்ரோல் அறைக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து யானை நிற்கிறதா என்பதை பார்த்து கொண்டே இருந்தனர்.

    யானைகள் அங்கிருந்து நகராமல் அங்கேயே நின்றிருந்ததுடன், கட்டிடத்தை சுற்றி நின்று கொண்டது.

    இதனால் உள்ளே இருந்த போலீசாருக்கு பயம் ஏற்பட்டது. இதற்கிடையே தகவலின் பேரில் மஞ்சூர் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் வனத்துறையை சேர்ந்த துரையுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அங்கு கட்டிடத்தை சுற்றி யானைகள் நின்றிருந்ததை பார்த்ததும் அதிர்ச்சியாகினர். உள்ளே இருப்பவர்களை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக யானையை விரட்டி பட்டாசு வெடித்தனர்.

    வெடி சத்தம் கேட்டதும் யானைகள் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றன. அதிகாலையில் யானைகள் முழுவதும் சென்ற பின்னர் கட்டிடத்தில் இருந்த 4 போலீஸ்காரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    போலீசார் அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு மீண்டும் அந்த பகுதிக்கு வந்த காட்டுயானைகள் அங்கு இருந்த பொருட்களை மிதித்து சேதப்படுத்தியது.

    யானைகள் நடமாடத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக ரேஞ்சர் சீனிவாசன் தெரிவித்தார்.

    கெத்தை மின்நிலையத்தில் போலீஸ்காரர்களை விடிய விடிய காட்டு யனைகள் சிறைபிடித்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யானைகளுக்கு பயந்து பெரும்பாலான தேயிலை தொழிலாளா்கள் பணிக்கு செல்லாமல் உள்ளனா்.
    • தகரங்களைத் தட்டி ஓசை எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூா்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் டபுள் ரோடு, ரன்னிமேடு வனப்பகுதிக்கு 2 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த மாதம் 16-ந் தேதி வந்தது.

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் உலிக்கல், சின்னக்கரும்பாலம், கிளன்டேல் ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மாறி மாறி முகாமிட்டு வருகின்றன.

    இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.

    யானைகளுக்கு பயந்து பெரும்பாலான தேயிலை தொழிலாளா்கள் பணிக்கு செல்லாமல் உள்ளனா்.

    தொடர்ந்து யானை நடமாட்டம் இருப்பதால் மக்களும் வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.

    இந்த யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விடாமலும், சாலை பகுதிகளுக்குள் வந்துவிடாமலும் தடுப்பதற்காக வனத்துறையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

    தகரங்களைத் தட்டி ஓசை எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    • 9 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது.
    • தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

    குன்னூர்,

    குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் கடந்த 30 நாட்களாக சமவெளி பகுதிகளில் இருந்து வந்த 9 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. அவை தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பிலும் உலா வந்தன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்தநிலையில் குன்னூர் நான்சச் தொழிலாளர்கள் குடியிருப்பை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானைகளை பக்காசூரன் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர். இருப்பினும், காட்டு யானைகள் மீண்டும் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
    • வனத்திற்குள் செல்லாமல் அடம் பிடித்து நின்றது.

    வடவள்ளி

    கோவை தொண்டா முத்தூர் அருகே தாளியூர் பகுதியில் இன்று அதிகாலையில் குட்டிகளுடன் 5 யானைக்கூ ட்டங்கள் வனத்தை விட்டு வெளியே வந்தது. இதனையடுத்து யானைக்கூட்டங்கள் முடுவு வனப்பகுதியில் இருந்து விளை நிலங்களுக்கு புகுந்தது.

    மேலும் தாளியூர் பள்ளம் வழியாக கருப்பராயன் கோவில் வரை யானை கூட்டம் முகாமிட்டு நின்றது. யானை கூட்டத்தின் சத்தம் கேட்டு அந்த வழியாக நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் வாகன ஓட்டிகள் சிலர் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். 1 மணி நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை சுடுகாட்டு பள்ளம் வழியாக துரத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேர போராட்டத்திற்க்கு பிறகு யானை கூட்டத்தை வனத்துறையினர் விரட்டினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டத்தை வனத்திற்கு விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் வனத்திற்குள் செல்லாமல் அடம் பிடித்து நின்றது. யானை கூட்டத்தை கண்ட ஊர் பொதுமக்கள் சிலர் தங்களது செல்போனில் புகை படம் மற்றும் வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.

    மேலும் அட்டுகள் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக அங்குள்ள ஜெயபிரகாஷ் தோட்டம், ஓவியக் கல்லூரி ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×