search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேமலதா விஜயகாந்த்"

    • தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது.
    • மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.

    பழனி:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பழனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் முக்கியமானது 5000 விவசாயிகளை தேர்ந்தெடுத்து ஜப்பான், சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வரவேற்கத்தக்கது. இதே போல் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்பது உள்பட பல அறிவிப்புகளை தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் கடந்த 2006ம் ஆண்டே விஜயகாந்த் வெளியிட்டார்.

    அதனை தற்போது தமிழக அரசு செயல்படுத்த முயற்சி எடுத்ததற்கு நன்றி. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போல் பொத்தாம்பொதுவாக கூறாமல் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உண்மை தொண்டர்களாகிய நீங்கள் இருக்கும் வரை இந்த கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
    • நம்முடைய தொண்டர்கள் நேர்மையாகும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.

    கிள்ளியூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் தே.மு.தி.க. குடும்ப விழாவும், நலத்திட்ட உதவி வழங்கும் விழாவும் நடந்தது. விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா பங்கேற்று பேசியதாவது:-

    இயற்கை எழில் சூழ்ந்த குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதியாக புதுக்கடை பகுதி விளங்குகிறது.

    குமரி மாவட்டம் தாய்த்தமிழகத்தோடு இணைவதற்கு முக்கிய களமாற்றிய பகுதியாக புதுக்கடை உள்ளது. இந்த புதுக்கடையில் உங்களைப் பார்க்கும்போது எனக்கு ஒரு கேள்வி வருகிறது. நீங்கள் அனைவரும் கேப்டன் எப்படி இருக்கிறார் என்பது கேட்பது போல் இருக்கிறது. கேப்டன் சிறப்பாக இருக்கிறார். நலமாக இருக்கிறார். இன்றைக்கு சென்னை ஏர்போர்ட்டில் வந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

    உண்மை தொண்டர்களாகிய நீங்கள் இருக்கும் வரை இந்த கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையினுடைய இரு பக்கங்களாகும். குறுகிய காலகட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் என்று அந்தஸ்தை பெற்ற கட்சி தே.மு.தி.க. ஆகும்.

    தற்பொழுது தொய்வை சந்தித்தாலும் மீண்டும் எழுவோம் புதுக்கடையில் கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. இது நேர்மையானவர்கள், அரசியல் தூய்மையானவர்கள் இருக்கக்கூடிய கட்சியினுடைய கூட்டம். பல்வேறு நிகழ்வுகளில் செல்வதற்காக வந்தபோது போலீசார் இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூ டாது என அனுமதி மறுத்தனர். எதற்கு இப்படி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை நாங்கள் அதை எதிர்த்து போலீசாரிடம் பேசி இந்த விழாக்களை நடத்தி உள்ளோம்.

    10-க்கும் மேற்பட்ட உபசரிப்பு நிகழ்வுகள் நடந்தது. நம்முடைய தொண்டர்கள் நேர்மையாகும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள். நான் நல்லவர்களாக இருந்தது போதும் இனி வல்லவர்களாக மாற வேண்டும். நல்லவர்களை எளிதில் ஏமாற்றி விடுகிறார்கள் முதுகில் குத்துவிடுகிறார்கள்.

    இதனால் நம்மால் பெரிய அளவு சோபிக்க முடியவில்லை. குமரி மாவட்டத்தில் வலுமிக்க கட்சிகளாக விளங்கும் காங்கிரஸ், பாஜக கட்சிகள் குமரி மாவட்டத்தை சீரழித்து வருகிறது.

    பல்வேறு ஊழல்களால் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. தற்பொழுது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் கட்சியாக பாஜக உள்ளது.

    குமரியில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்கோளாறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார்.
    • விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.

    அந்த வகையில் தே.மு.தி.க.வும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய தே.மு.தி.க. தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது.

    தேர்தல் களத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வரும் தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கேற்ப முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்துக்கான தேதி பொங்கலுக்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதியை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அடுத்த வாரம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள் இப்போதே மேற்கொண்டு வருகிறார்கள்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்கோளாறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார். தற்போது பொருளாளராக பதவி வகித்து வரும் பிரேமலதாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதையொட்டி தே.மு.தி.க.வில் செயல் தலைவர் பதவி என்கிற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதில் பிரேமலதா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறார். அவரை இளைய கேப்டன் என கட்சியினர் அழைத்து வருகிறார்கள். தே.மு.தி.க.வில் இளைஞர் அணியில் விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவியை வழங்குவது பற்றியும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் எந்த மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த கட்சி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • தே.மு.தி.க நேர்மையான கட்சி நல்லவர் ஆரம்பித்த கட்சி.
    • எங்கள் தொண்டர்களின் வியர்வையில் சம்பாதித்த காசில்தான் நாங்கள் உதவி செய்கிறோம்.

    கோவை:

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவை வடக்கு மாவட்டத்தின் சார்பில் கணபதி பகுதியில் 5 ஆயிரம் பேருக்கு பொங்கல் பொருட்களான கரும்பு, வெல்லம், பச்சரிசி,முந்திரி பருப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் அங்கு பொங்கல் பானையில் அரிசி போட்டு பொங்கல் வைத்தார்.

    பின்னர் நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    சாதி, மதம், இனம் மொழிக்கு அப்பாற்பட்டது தே.மு.தி.க நாங்கள் பொங்கலும் கொண்டாடுவோம், ரம்ஜானும் கொண்டாடுவோம் கிறிஸ்துமஸ்சும் கொண்டாடுவோம். சின்ன கவுண்டர் படம், வானத்தைப்போல படம் போன்றவற்றில் கொங்கு மண்டலத்தை காட்டியது விஜயகாந்த். மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்றவர் விஜயகாந்த். ரேஷன் பொருள் உங்கள் வீடு தேடி வரும் என்று சொன்னவர் விஜயகாந்த். யாரும் மறந்து விடாதீர்கள்.

    தே.மு.தி.க நேர்மையான கட்சி நல்லவர் ஆரம்பித்த கட்சி. என்றும் தவறான வழியில் தே.மு.தி.க செல்லாது. எங்கள் தொண்டர்கள் எங்கும் வசூல் செய்தது இல்லை. எங்கள் தொண்டர்களின் வியர்வையில் சம்பாதித்த காசில்தான் நாங்கள் உதவி செய்கிறோம்.

    அ.தி.மு.க.வை வெட்கக்கேடாக நினைக்கிறேன். தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் விழா அ.தி.மு.க. கொண்டாடவில்லை.

    தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாருக்கு தி.மு.க நிர்வாகிகள் வன்கொடுமை செய்துள்ளனர்.பெண் போலீசாரை துன்புறுத்திய தி.மு.க நிர்வாகியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க வேண்டும்.

    சர்க்கரையை கொண்டு பொங்கல் நடத்தும் ஆட்சி தி.மு.க ஆட்சி. சர்க்கரை பொங்கல் என்றால் சர்க்கரை போடுகிறீர்களா. வெல்லத்தை கொண்டு செய்வது தான் பொங்கல் கலாசாரம். விவசாயிகள் வயிறு எரிகின்றனர். கரும்பு விளைவிப்பவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும்.

    பொங்கல் தொகுப்பில் 2500 ரூபாய் மக்களுக்கு கொடுத்து இருக்க வேண்டும்.ஆயிரம் ரூபாய் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டனர்.

    தமிழக அரசியல் வரலாற்றில் கவர்னர் முதன்முறையாக வெளிநடப்பு செய்த நிகழ்வு தலைகுனிவு நாளாக கருப்பு தினமாக பதியப்பட்டிருக்கிறது.கவர்னர் சாதித்துக் காட்டிருக்க வேண்டும். கவர்னருக்கு தே.மு.தி.க கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. அன்று சட்சபையில் நடைபெற்றது முழுவதும் நாடகம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன் பின்னர் அவர் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

    • உண்மையான உழைப்பு, வாக்குறுதிகளை வழங்கி நேர்மையான முறையில் தேர்தலை சந்திப்போம்.
    • விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது. ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் வேட்பாளராக களமிறங்குகிறார். உண்மையான உழைப்பு, வாக்குறுதிகளை வழங்கி நேர்மையான முறையில் தேர்தலை சந்திப்போம். தேமுதிக வேட்பாளர் எப்போது வேட்புமனு தாக்கல் செய்வார் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

    ஒட்டுமொத்த கழகத்தின் ஒப்புதலுடன் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கழக வேட்பாளரின் வெற்றிக்காக உழைப்போம். தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    தற்போதைய சூழ்நிலையில் தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே 2021ல் எங்கள் கட்சி வென்ற தொகுதி.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு இன்றைய கூட்டத்தில் இரங்கல் தெரிவித்துள்ளோம். ஈவிகேஎஸ் இளங்கோவன் கேப்டனின் நல்ல நண்பர். அவரது புதல்வர் இன்று நம்மிடையே இல்லை.

    இடைத்தேர்தலை இவ்வளவு அவசரமாக அறிவித்ததில் எங்களுக்கு மனவருத்தம் உள்ளது. அவர் இறந்த சுவடே இன்னும் மறையவில்லை. அதற்குள் அடுத்து அங்கு வெற்றி பெறுவது யார்? என்ற பரபரப்பை கொண்டு வந்ததில் எங்களுக்கு மனவருத்தம். மனிதாபிமான அடிப்படையில் குறைந்தது 3 மாதம் கழித்து இடைத்தேர்தல் கொண்டு வந்திருக்கலாம். இப்போது தேர்தலை அறிவித்துவிட்டார்கள். அறிவித்தது அறிவித்ததுதான். எனவே, அரசியலில் இதையெல்லாம் சந்தித்துதான் ஆகவேண்டும். எனவே, தேமுதிக தனியாக களம்காண்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
    • தமிழகத்தில் பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் பேனா போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று தெரியவில்லை.

    திருச்சி:

    விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி டி.கரிகாலன்-தே.மு.தி.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் கொ.தங்கமணி இல்ல திருமண விழா இன்று திருச்சியில் நடந்தது.

    விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முதன்முதலாக வேட்பாளரை தே.மு.தி.க. களம் இறக்கியது. அவரும் கழக உறுப்பினர்களுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். மக்கள் மத்தியில் அவருக்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

    அவரை பார்க்கும் போது விஜயகாந்தை பார்ப்பது போல் மக்கள் எண்ணுகிறார்கள். அதனால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தே.மு.தி.க.வின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் சொல்லும்.

    இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது. அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது.

    தே.மு.தி.க. பல தேர்தல்களை தனித்து களம் கண்டிருக்கிறது. எங்களது கட்சியை யாரும் பின் நின்று இயக்கவில்லை. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மட்டுமே இயக்குகின்றார். தமிழகத்தில் பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் பேனா போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று தெரியவில்லை.

    பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியா? கூட்டணியா என்பதை அந்த நேரத்தில் அறிவிப்போம். தே.மு.தி.க.வுடன் ஒத்துப்போகும் பல கட்சிகள் இருக்கின்றன. ஆகவே தான் 2011-ல் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்தது. பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்துவிட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, இது குறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும், உரிய நேரத்தில் விஜயகாந்த் அதனை அறிவிப்பார் என்றார்.

    முன்னதாக திருமண விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது, மணமக்கள் தங்களது பெற்றோரை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு விட்டுக் கொடுத்து 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். எனக்கும் கேப்டனுக்கும் சீர்திருத்த திருமணத்தினை கலைஞர் கருணாநிதி-மூப்பனார் ஆகியோர் நடத்தி வைத்தார்கள்.

    ஒட்டு மொத்த பேரும் நல்லவர் என கேப்டன் ஒருவரை மட்டுமே சொல்வதை இந்த உலகம் அறியும். கடவுள் அருளால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க. வெற்றி பெறும். அந்த வெற்றியின் மூலம் மீண்டும் இயக்கம் விஸ்வரூப வெற்றியை அடையும் என்றார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் டிவி கணேஷ், சன்னாசிப்பட்டி பாரதிதாசன், குமார், பகுதி செயலாளர் என் எஸ் எம் மணிகண்டன், சாதிக் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
    • பிரேமலதா விஜயகாந்த் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சூறாவளி பிரசாரம் செய்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வீதி, வீதியாக சென்று சூறாவளி பிரசாரம் செய்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

    • பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தே.மு.தி.க.வின் ஆதரவு எப்போதும் உண்டு.
    • ஜனநாயகத்திற்கு முற்றிலுமாக ஒரு தேர்தல் நடந்தது என்றால் அது ஈரோடு இடைத்தேர்தல் தான்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆவின் பால் பிரச்சினைக்கு எதிர்க்கட்சி மேல் பழியை போடாமல் அமைச்சர் நாசர் மற்றும் தமிழக அரசுதான் விவசாயிகள் பிரரச்சினையை தீர்த்து ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தே.மு.தி.க.வின் ஆதரவு எப்போதும் உண்டு. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

    தேர்தல் நேரத்தில் நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று கூறிய உதயநிதி தற்போது அனிதா பெயரில் மருத்துவமனையில் பெயர் பலகை திறந்தால் போதும் என்று நினைக்கிறார். இது கண்டனத்துக்குரியது.

    அகில இந்திய அளவில் நீட் தேர்வுக்கு ஆதரவு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ரத்து செய்ய முடியுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை குழப்பாமல் தமிழக அரசு நீட் பிரச்சினையில் நிலையான, தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிட பயந்து பல கட்சிகள் இருந்தபோது தைரியமாக தே.மு.தி.க. போட்டியிட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தலே கிடையாது. இதுவரை தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களை மிஞ்சும் அளவிற்க்கு முறைகேடுகள் நடந்துள்ளது. தே.மு.தி.க. எவ்வளவோ இடைத்தேர்தலை சந்தித்துள்ளது.

    ஆனால் இதுபோன்ற இடைத்தேர்தலை நாங்கள் பார்த்தது இல்லை. மக்களை ஆடு, மாடுகள் போல பட்டியில் அடைத்து வைத்து கோடி கோடியாக செலவழித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தேர்ந்தெடுக்க வைத்துள்ளனர்.

    தற்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கேள்விப்படும்போது மனது வருத்தமாக உள்ளது. நான் போட்டியிடவில்லை, எனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் கூறியபோதும் வம்படியாக இளங்கோவனை தேர்தலில் நிற்க வைத்து உள்ளது தி.மு.க.

    ஜனநாயகத்திற்கு முற்றிலுமாக ஒரு தேர்தல் நடந்தது என்றால் அது ஈரோடு இடைத்தேர்தல் தான். தேர்தல் ஆணையம் உள்ளதா என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது.

    சொந்த கட்சி நிர்வாகிகளே காவல் நிலையத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்குவது, சொந்த கட்சி எம்.பி. வீட்டையே தாக்குதலுக்கு உள்ளாக்குவது தான் திராவிட மாடல். கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்குமா? இதற்கு முதலமைச்சர் பதில் கூற வேண்டும்.

    ஏற்கனவே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியதுபோல் தற்போது புதுச்சேரியில் பெண் குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வைப்புத்தொகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர். அமைச்சர்கள் பலரும் மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு அவர்கள் நடவடிக்கை உள்ளது, இதுதான் திராவிட மாடல்.

    பேராசிரியர் ஒருவரை நடுரோட்டில் அடித்து இழுத்துச் சென்று அவர்களிடம் இருந்து நகைகளை பறித்து செல்லும் சம்பவமும் நடந்துள்ளது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

    அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பது கட்சியை பலவீனப்படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு அ.தி.மு.க., பா.ஜ.க. விமர்சனம் செய்து கொள்வது இரண்டு கட்சியின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும்.

    பன்னிரண்டாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்களுக்கு மேல் தேர்வு எழுத வராதது குறித்து, அதுவும் தமிழ் தேர்வு எழுத வராதது குறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை வைத்து அரசியல் செய்யும் அனைத்து அரசியல்வாதிகளும், அரசும் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மக்கள் மத்தியில் தேர்தல் குறித்த நம்பகத்தன்மை குறைந்து வருவது போல், மாணவர்கள் மத்தியில் தேர்வு குறித்த நம்பகத்தன்மை குறைந்து வருவதால் தான் தற்போது 12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுது வராமல் உள்ளனர். அரசு 100 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்த வரை கட்சியும் ஆரோக்கியத்துடன் காணப்பட்டது.
    • நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிக மோசமான தோல்வியை தழுவியது.

    சென்னை:

    தமிழக அரசியல் களத்தில் விஜயகாந்தின் வருகையும் தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சியும் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் நடந்தது நேர்மாறாக அமைந்துவிட்டது.

    திரை உலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்த விஜயகாந்த் அரசியலிலும் கருப்பு எம்.ஜி.ஆர். என்ற அறிமுகத்தோடு வந்தார்.

    2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை அவர் தொடங்கியதும் அவர் அறிவித்த திட்டங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. மாற்று அரசியலுக்கான துவக்கமாகவே மக்கள் எதிர்பார்த்தார்கள்.

    2006-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார்கள். விருதாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.

    அதேநேரம் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உருவானது. 2009 பாராளுமன்ற தேர்தலிலும் அனைத்து தொகுதியிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. ஆனால் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

    அரசியல் களத்தை உணர்ந்த விஜயகாந்த் 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால் அ.தி.மு.க.வுடன் அமைக்கப்பட்ட கூட்டணி நீடிக்கவில்லை.

    அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வென்றது.

    அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைமையில் மக்கள் நல கூட்டணி உருவானது. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனாலும் அந்த கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார்கள். அதுவும் கைகொடுக்கவில்லை.

    இதற்கிடையில் விஜயகாந்தின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. சரியாக பேச முடியவில்லை. எழுந்து நிற்கவும் சிரமப்பட்டார். வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் எதிர்பார்த்த பலன் இல்லாமல் போனது.

    அதைதொடர்ந்து கட்சியில் பொருளாளராக இருக்கும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியை வழிநடத்தினார். அவரது மகன் விஜயபிரபாகரனும் கட்சி பணியில் இறங்கினார்.

    நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிக மோசமான தோல்வியை தழுவியது. சுமார் ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றது. விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்த வரை கட்சியும் ஆரோக்கியத்துடன் காணப்பட்டது.

    மீண்டும் கட்சியை வலிமைப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள்.

    பிரேமலதாவை கட்சியின் செயல் தலைவராகவும், விஜயபிரபாகரனுக்கு இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பு வழங்கியும் கட்சியை முன்னெடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்துகிறார்கள். விரைவில் கூட்டப்பட இருக்கும் பொதுக்குழுவில் இதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

    தே.மு.தி.க. பா.ஜனதா கூட்டணியில் இருந்து இதுவரை வெளியேறவில்லை. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியா? தி.மு.க. கூட்டணியா? என்று யோசித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு வருகிற 28-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மக்கள் நலனுக்காக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்தும், அனுமதி பெற்ற அளவைவிட ஆயிரம் மடங்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க கோரியும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு வருகிற 28-ந் தேதி காலை 11 மணி அளவில் தே.மு.தி.க. சார்பில் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இதில் ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மக்கள் நலனுக்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
    • 2,000 ரூபாய் ஒழிப்பால் எந்த பிரயோஜனமும் இல்லை.

    காரைக்கால் :

    தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தனது இளைய மகன் சண்முக பாண்டியனுடன் நேற்று திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் எந்த கருப்பு பணமும் ஒழிக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ஊழல் தான் நடந்துள்ளது. 2,000 ரூபாய் ஒழிப்பால் எந்த பிரயோஜனமும் இல்லை. இதெல்லாம் கண் துடிப்பு நாடகம். பொதுவாக ஒரு மாநிலத்தில் ஒரு ஆட்சி இருந்தால், அடுத்த முறை வேறொரு ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்கள். அந்த வகையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

    காங்கிரஸ் கட்சி தேர்தலின் போது ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. அந்த வாக்குறுதிகளை மக்கள் நலன் கருதி படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தே.மு.தி.க. தயாராக உள்ளது. என்ன நிலைபாடு, எந்த தொகுதியில் போட்டி என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முறைப்படி அறிவிப்பு செய்வோம்.

    தமிழகத்தில் கள்ள சாராய சாவு மிகப்பெரிய கொடுமையானது. தி.மு.க.வானது தேர்தல் நேரத்தில் ஒரு நிலைப்பாடு, தேர்தலுக்குப் பிறகு ஒரு நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் தி.மு.க. கவுன்சிலர்களால் கள்ளச் சாராயம் அதிக புழக்கத்தில் உள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக புழங்கி வருகிறது.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுத்தது போல் மது மற்றும் கஞ்சா ஒழிப்பிற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறிப்பாக சொல்லப் போனால், மது மற்றும் கஞ்சாவிற்கு எதிராக இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மது மற்றும் கஞ்சா இல்லாத மாநிலமாக புதுச்சேரி, தமிழகத்தை அந்தந்த மாநில கவர்னர்கள் மாற்ற வேண்டும். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் உள்ளார். எந்த நேரத்தில் வெளியே வர வேண்டுமோ அப்போது நிச்சயம் வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா?
    • கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்தை கண்டித்தும், கேரளாவிற்கு தென்காசி வழியாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி ஆலங்குளத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    அவருக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் தயாளலிங்கம் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் மாலதி, துரை, பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது. இதுகுறித்து கேட்டால் எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி மாறி குறை சொல்கிறார்கள். இதை தட்டிக்கேட்ட ஒரு நியாயமான அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது எந்த வகையில் நியாயம்?. உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வி.ஏ.ஓ. குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.1 கோடி அறிவித்துள்ளார். இதனால் போன உயிர் வந்துவிடுமா. நியாயமாக உழைக்கும் அதிகாரிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?.

    3 மருத்துவ கல்லுரிகளின் உரிமம் ரத்து செய்து இருக்கிறார்கள். ஸ்டான்லி கல்லூரி உரிமத்தை ரத்து செய்தது தமிழகத்திற்கு ஒரு தலை குனிவு. பள்ளிக்கூட கட்டிடம் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடை ஒரு தெருவுக்கு 10 திறக்கப்பட்டுள்ளது.

    புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு வாழ்த்துக்கள். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள் இன்று. நல்ல ஒரு விஷயம் நாட்டிற்காக நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஜனாதிபதியை அழைத்து இருக்க வேண்டும். அந்த நல்ல நிகழ்வை வரவேற்போம். தமிழகத்தில் இருந்து செங்கோல் அங்கு அமைவது ஒட்டு மொத்த தமிழருக்கு கிடைத்த பெருமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு ஆலங்குளத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.

    ×