சினிமா
நடிகை காஜல் அகர்வால்

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சினிமாவை விட்டு விலக மாட்டேன்: காஜல் அகர்வால்

Published On 2016-06-15 04:04 GMT   |   Update On 2016-06-15 04:04 GMT
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சினிமாவை விட்டு விலக மாட்டேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘சாகசங்களில் ஈடுபடுவது எனக்கு பிடிக்கும். சினிமாவுக்கு வரும் முன்பே அது எனக்குள் இருந்தது. அந்த துணிச்சல்தான் நடிகையாக மாறவும் உதவியது. புதுபுது விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும், முடியாததை செய்து முடிக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். மும்பையில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். கல்லூரியில் படித்த காலத்தில் 3 கிலோ மீட்டருக்கு தள்ளி இருக்கும் ஊர் பற்றிய விவரங்கள் எனக்கு தெரியாது.

வீடு, அதை சுற்றி இருக்கும் மக்கள்தான் என் உலகம் என்று இருந்தேன். வெளி உலகம் பற்றிய அறிவு இல்லை. அப்போதுதான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனது இடத்தில் வேறு யார் இருந்தாலும் நடிக்க சம்மதித்து இருக்க மாட்டார்கள். பயந்து ஒதுங்கி இருப்பார்கள். ஆனால் எனக்கு இயற்கையாகவே இருந்த துணிச்சல் சினிமாவுக்கு இழுத்து வந்தது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கவும் தூண்டியது. தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. எனக்கு மொழி தெரியாது. வேறு மாநிலங்களில் படப்பிடிப்புகளுக்காக சுற்ற வேண்டி இருந்தது. அந்த கஷ்டங்களை எல்லாம் மீறி இப்போது முன்னணி கதாநாயகியாக நிலைத்து இருப்பதற்கு என்னிடம் இருக்கும் தைரியம்தான் காரணம். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சினிமாவை விட்டு போகக்கூடாது என்ற உறுதியான மனநிலையில் இப்போது நான் இருக்கிறேன்.

எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டேன். சினிமாவில் தினமும் புதிது புதிதாக கற்றுக்கொண்டு இருக்கிறேன். இன்னும் நிறைய சாதிப்பேன்.’’

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

Similar News