சினிமா (Cinema)

மும்பையில் பிரியங்கா சோப்ரா ரூ.100 கோடிக்கு பங்களா வாங்கினார்

Published On 2016-10-29 09:59 GMT   |   Update On 2016-10-29 09:59 GMT
நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் ரூ.100 கோடிக்கு ஆடம்பர பங்களா வீடு விலைக்கு வாங்கி இருக்கிறார்.
‘தமிழன்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 2002-ல் இருந்து படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

முதல் இடத்தில் இருக்கும் கங்கனா ரணாவத் சம்பளம் ரூ.11 கோடி. பிரியங்கா சோப்ரா ரூ.9 கோடி வாங்குகிறார். இவருக்கு 34 வயது ஆகிறது. இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. மும்பையில் ரூ.100 கோடிக்கு பிரியங்கா சோப்ரா ஆடம்பர பங்களா வாங்கி இருப்பதாக இந்தி பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகைக்கு பங்களா வீடு வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலமான கட்டிட நிறுவனத்திடம் இருந்து இந்த பங்களா வீட்டை அவர் வாங்கி இருப்பதாகவும் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த பங்களாவை அவர் தனது கனவு இல்லமாக உருவாக்கி வருகிறார். பிரியங்கா சோப்ராவின் ஆலோசனைப்படியே வீட்டை வடிவமைத்து கட்டி வருகிறார்கள். ஒவ்வொரு அறையும் அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாகிறது. பங்களாவின் தோற்றம் அரண்மனை போல் இருக்கவேண்டும் என்று கட்டுமான நிறுவனத்திடம் அவர் கூறி இருக்கிறார். உள் அலங்காரங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்கி குவிக்கிறார்கள்.

விரைவில் இந்த பங்களாவில் பிரியங்கா சோப்ரா குடியேற இருக்கிறார். ரூ.100 கோடிக்கு வீடு வாங்கிய விவரத்தை சக நடிகர்-நடிகைகளுக்கு தெரிவிக்காமல் அவர் ரகசியமாகவே வைத்து இருந்தார். ஆனால் இப்போது அது வெளிச்சத்துக்கு வந்து விட்டது. பிரியங்கா சோப்ரா கட்டும் ஆடம்பர பங்களா வீட்டை பார்க்க இந்தி நடிகர்-நடிகைகள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Similar News