சினிமா செய்திகள்

எமர்ஜென்சி படத்திற்கு தடை விதிக்க கோரி சென்சார் போர்டுக்கு சிரோன்மணி அகாலிதளம் நோட்டீஸ்

Published On 2024-08-31 03:30 GMT   |   Update On 2024-08-31 07:23 GMT
  • எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார்.
  • வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி எமெர்ஜென்சி படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடமானது 1977 மார்ச் 21 ஆம் தேதி வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையாக வைத்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி.

இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படத்தில் சீக்கியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் இப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழை ரத்து செய்து படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சிரோன்மணி அகாலிதளம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் பரம்ஜித் சிங் சர்னா, மத்திய சென்சார் போர்டு தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

மேலும் எமர்ஜென்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சீக்கியர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கங்கனா, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகளை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என்று முன்பு விமர்சித்திருந்தார்.

அண்மையில், நாளிதழுக்குபேட்டி அளித்த கங்கனா ரனாவத், விவசாயிகள் போராட்டம் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அதில், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்காவிட்டால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும் என தெரிவித்திருந்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News