2-வது நாளாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் விஜய்
- நடிகர் விஜய் நேற்று மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- இந்த ஆலோசனையில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நடிகர் விஜய் 234 தொகுதியில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மாலை 5.30 மணி வரை நடந்தது. இதில் 50 சதவீத மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
விஜய்யை சந்தித்த நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் விஜய்யிடம் தீவிர அரசியலுக்கு வரும்படி வலியுறுத்தினார்கள். அவர்களிடம் சிரித்த படியே முதுகில் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசிய விஜய், பரிசு பெறுவதற்கான மாணவ-மாணவிகளை நல்ல முறையில் அழைத்து வந்து பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சேர்த்தீர்கள். உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
அதற்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய்யிடம் உங்களது விருப்பத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம். எங்களது அனைவரின் ஒரே நோக்கமும் விருப்பமும் நீங்கள் விரைவில் தீவிர அரசியலுக்கு வந்து தமிழகத்துக்கும், மக்களுக்கும் நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்நிலையில், விஜய் 2-வது நாளாக இன்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, ஈரோடு, கடலூர், வேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிவகங்கை, தர்மபுரி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.